Sunday, November 22, 2009

ஹஜ்ஜு பெருநாள்

கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.

ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை)

தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.

அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும்.

அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.

பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)

குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம்.

தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது.

இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.

அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.

மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று.

குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது.

ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும்.


***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி

***
சுட்டி :

ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)

No comments: