Wednesday, September 16, 2009

மஹான் ஷிப்லி பாவா(ரஹ்)




வாழ்வும் நிகழ்வுகளும் (புத்தகச்சுருக்கம்)
ஆக்கியோன்: மஞ்சை ஜாஃபர்


'துணையாளன் துணை, துணையாளன் துணை' இப்படி ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. குரல் வந்த திசையை நோக்கிச் சென்று குரலுக்குரியவரிடம் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சலாம் சொன்னால்..... அடுத்த வினாடி தங்குத்தடையின்றி எந்தவித சலனமுமில்லாமல் "இவனுக்கு சலாம் சொல்லாதீர்கள்" என்ற பதில் வரும்.

இதன் பொருள்...........?

சலாம் என்பது புனிதமான ஒன்று, அது உள்ளத்திலிருந்து வரவேண்டும் உதட்டிலிருந்தல்ல, 'இறைவன், உங்களது உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்' என்பது நபி மொழி. மக்களில் பெரும்பாலோர் உதட்டின் நுனியிலிருந்தே சொல்கிறார்கள், அத்தகைய சலாத்தினை ஏற்றுகொள்ளும் நிலையில் நானில்லை என்பதா? அல்லது நான் சொல்லும் பதில்சலாம் வலிமை வாய்ந்தது அதை ஏற்றுகொள்ளும் தகுதி உனக்கில்லை என்பதா? உன் போன்றவர்களுக்கு சொல்லும் பதில் விழலுக்கிறைத்த நீர், எனவே நீ சலாம் சொல்லி என்னை நிர்பந்திக்காதே என்பதா? ஒன்றும் புரியாத புதிர்!

ஆம்.. புதிர்தான்! அந்த புதிருக்குரியவரும் புதிர்தான், அவர் பேச்சு செயல் எல்லாமே எல்லோருக்கும் புதிர், ஆனால் புரிந்தவர்களுக்கல்ல. அந்த புதிரின் பிறப்பிடம் -'பாவா' என்று எல்லோராலும் மரியாதையாகவும் அன்பாகவும் அழைக்கப்பட்ட ஞானக் கடல், குத்துபு ஜமான் மஹான் முஹம்மது ஷிப்லி பாவா (ரஹ்) அவர்கள்.


உள்ளமும் உருவமும்

'ஒருவருடைய உள்ளத்தில் ஆன்மீகம் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தால் அவருடைய முகத்திலும் ஆத்மிகம் சுடர் வீசிக்கொண்டிருக்கும்' என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய கூற்றுக்கு மிகப் பொருத்தமாக இருந்தார்கள்.

சில நாட்களில் தடித்தும் சில நாட்களில் மெலிந்தும் இல்லாமல் என்றும் ஒரே மாதிரியான மெலிந்த தேகம், உணவை நிரப்ப முடியாத ஒட்டிய வயிறு, வெள்ளையும் கருப்புமில்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மா நிறம், நடுத்திரமான உயரம், இடுப்பில் ஒரு வெள்ளை கைலி, சில சமயங்களில் கைவைத்த பணியன், உடம்பை நன்றாகப் போர்த்திக்கொள்ளும் அளவுக்கு தோளில் ஒரு தடித்த சால்வை, அடர்த்தியான மீசை, அளவான தாடி, ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான பார்வை, புதிரானப் பேச்சு, ஆங்கிலத்தில் 'ஆரா(AURA)' என்று சொல்லக்கூடிய தேஜஸ் - அவர்கள் முகத்தில் மட்டுமல்ல உடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை புறக்கண்ணால் பார்க்கும்படியான அழகிய தோற்றம்.


சிங்களமும் தமிழகமும்

சிங்களத்து மண்ணில் கண்டி-கேகாளெ என்ற ஊர், அங்கு வாழ்ந்த ஹபீப் முஹம்மது காசிம் என்ற பெரியவருக்கு நெய்னார் முஹம்மது என்ற பாலகர் பிறந்து ஆரம்ப கல்வியும் கூடவே யுனானி மருத்துவமும் பயின்றார். கற்ற கல்வி தன் மகனுக்கு மன நிறைவைத் தரவில்லை என்பதை உணர்ந்த தந்தை; அவருக்கு மார்க்க அறிவைப் புகுட்ட தமிழகத்திலுள்ள வேலூரை நாடி வந்தார்.

வேலூர் என்றாலே நினைவுக்கு வருவது 'பாக்கிஹாத்துஸ் ஸாலிஹாத்' மதரஸா. ஆம், ஹஜ்ரத் அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் அரிய முயற்சியினால் கடந்த பத்தொன்பதாம் நூற்றாடின் இறுதியில் உருவான இம்மதரஸா நூறு வயதைக் கடந்து பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதனை தமிழகத்தின் தாய் மதரஸா என்று பெருமைப்பட கூறுவதுண்டு.

அத்தகைய பெருமைமிகு மதரஸாவில் சிங்கள நாட்டிலிருந்து வந்த நெய்னார் முஹம்மது படித்துப் பட்டம் பெற்று ஆலிமானார். பாக்கவியாக வெளி வந்த அவரின் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அந்த தேட்டம் தாய் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தைத் தரவில்லை.

ஆத்மிக அறிவைப்பெற மனம் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார் நெய்னார் முஹம்மது. எங்கே செல்வது? யாரிடம் கேட்பது? இது கடையில் விற்கும் பொருளல்லவே, கேட்டால் கிடைக்குமா? தாம் பெற்ற அறிவை தருவார்களா? உண்மையான ஞானத்தை எங்கே பெறுவது? என்ற கேள்விகள் மனதை துளைக்க நீண்ட சிந்தனைக்குப் பின் ஒரு முடிவுக்கு
வந்தவராகப் பயணத்தைத் தொடங்கினார்.

ராமனாதபுரத்திற்கு பத்து மைல் கிழக்கே பாடல் பெற்ற ஓர் ஊர் - இங்கு ஷரகுப் புலி சதக்கத்துல்லாஹ் அப்பாவும், செத்தும் கொடுத்த செம்மல் சீதக்காதியும் வாழ்ந்த சிறப்புமிக்க ஊர் கீழக்கரை. அங்கு முதன் முதலில் கல்விக்காக தைக்கால் உண்டாக்கிய தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் பேரரும் ஹஜ்ரத் மாப்பிள்ளை லப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின்
புதல்வருமாகிய கல்வத்து ஆண்டகை என்று அழைக்கப்பட்ட செய்யது அப்துல் காதர் என்ற ஞானி வாழ்ந்துவந்தார்கள்.

தமக்கு ஆன்மீக அறிவை அளிக்கவல்லவர் அவர்கள்தான் என்று உறுதியான முடிவுடன் கீழக்கரையை அடைந்து கல்வத்தாண்டகையை சந்தித்தபோது........

"ஆலிம்சாவின் சேவைக்கு சமுதாயம் காத்துக்கிடக்கிறதே! நீங்கள் பணிபுரிய வேண்டாமா? நீங்கள் மார்க்கப்பணியும் வைத்தியமும் செய்யுங்கள்; உங்களுக்குத் திருமணம் நடக்கும், உங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண்மகவாக இருக்கும், அவருக்கு முஹம்மது ஷிப்லி என்று பெயர் வையுங்கள், அவர் எம்மைச் சேர்ந்தவர், அவரை எம்மிடம் அனுப்பி வையுங்கள், நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள்." என்று வாழ்த்தி அனுப்பிவைத்தார்கள்.


மஸ்தான் லப்பை ஆலிம்

தரீக்கா என்பது ஷரீஅத்துக்கு புறம்பானது அல்ல. முன்னது நோய்க்கு மருந்து என்று சொன்னால் பின்னது உடலுக்குத் தேவையான உணவு. மருந்து நோய்உள்ளவர்களுக்குத்தானே தவிர எல்லோருக்குமல்ல, ஆனால் உணவு அப்படியல்ல, அனைவருக்கும் தேவையான ஒன்று அத்தியாவசியமானதும்கூட, இஃது இல்லையென்றால் நிலமை என்னவாகும் என்று நான் சொல்லத்தேவை இல்லை.

எனவே ஷரீஅத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும், எண்ணத்திலும், செயலிலும் - ஏன் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்திருக்கவேண்டும், அதேசமயம் தரீக்கா என்பது ஆன்மிக ஆசை உள்ளவர்களிடம் இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்த பெரியோர்களில் ஒருவர் பொரவச்சேரியை சேர்ந்த மேதை மஸ்தான் லப்பை ஆலிம் அவர்கள்.

இவர்கள் நாகூர் சென்று பாதுஷா நாயகத்தை ஜியாரத் செய்வதை தமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஒரு நாள் வழக்கப்படி ஜியாரத் செய்ய சென்றபோது, அங்கு பள்ளிவாசலில் ஒருவர் மார்க்கப் பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார். அவரின் சொல்லாற்றலால் கவரப்பட்ட மேதை, பிரசங்கம் முடிந்ததும், பிரசங்கம் செய்தவரை அனுகி..........

"இவ்வளவு அழகாகப் பிரசங்கம் செய்யும் தாங்கள் யார்? எந்த ஊர்? என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் தெரிந்துக்கொள்வதில் தவறில்லையே!"

"என் பெயர் நெய்னார் முஹம்மது, பிறந்தது சிங்கள மண்ணில் ஆரம்பக் கல்வி அங்கேதான், மௌலவி பட்டம் பெற்றது வேலூரில், கூடவே வைத்தியமும் தெரியும், இதற்குமுன் சிறிதுகாலம் பணி புரிந்தது தோப்புத்துறையில், இப்போது உங்கள் முன் இருக்கிறேன்."

"தாங்கள் எங்கள் ஊருக்கு வந்து பணியாற்ற முடியுமா? நாங்கள் தங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துத் தருகிறோம். தாங்கள் வந்தால் அதை பெரும் பாக்கியமாகக்கருதுவோம், தாங்களின் சம்மதம் தேவை."


ஆண்டகையின் வாக்கு பலித்தது

மஸ்தான் லப்பை ஆலிம் அவர்களின் அழைப்பையேற்று பொரவச்சேரியில் வேலையை ஒப்புக்கொண்ட ஆலிம்சா இமாமத் பணியோடு வைத்திய தொழிலையும் பார்த்துவந்தார்கள். ஜும்வில் மட்டுமல்லாது அவசியம் ஏற்படும்போதெல்லாம் மற்ற நாட்களிலும் சொற்பொழிவாற்றி வந்தார்கள்.

இவர்களின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சுயநலம்காணா மருத்துவத் தொண்டிலும் மகிழ்ந்த அவ்வூர் மக்கள் இவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதோடல்லாமல் நிரந்தர வாழ்க்கையை அமைத்துத்தர எண்ணி பெண் பார்த்தனர்.


தாயார் செய்யது மீரான் உம்மா

விவசாயத்தில் சிறந்து விளங்கிய குடும்பங்களில் ஒன்று 'செய்பு வீடு.' அந்த வீட்டில் வசித்த செய்யது மீரான் உம்மா என்ற பெண்ணை ஆலிம்சாவுக்கு மணமுடித்தனர்.


பிறப்பின் பெருமை

ஒருவர் பிறப்பினால் பெருமை அடைவதில்லை, அவர் தம் வாழ்வில் செய்யும் சாதனைகளாலும், அதன்மூலம் சமுதாயம் அடையும் பயன்களாலும்தான் அவர் பெருமை அடைகிறார். அந்த பயன்கள் எந்த அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவருக்கு பெருமையும் சேருகிறது. அந்த பெருமையினால் அவரைச் சார்ந்த மக்கள், அந்த ஊர், ஏன் அந்த நாடுகூட பயன்களைப் பெறுகிறது. அவர் பிறந்த மண், இடம், நாள், இவை எல்லாம் போற்றப்படுகின்றன.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்"

என்று வள்ளுவன் சொன்னால்கூட அந்த தாய்மட்டுமல்ல சமுதாயமும் சேர்ந்து மகிழ்ச்சி அடைகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆம் அப்படித்தான் பாவாவின் பிறப்பும். ஆலிம்சா நெய்னார் முஹம்மதுக்கும் செய்யது மீரான் உம்மாவுக்கும் திருமணம் முடிந்தபின் வீடு ஒன்றை கட்டி அதில் தம்பதிகளுக்கு வாழ்க்கையையமைத்துக் கொடுத்தனர். அவர்கள் சிறப்பாக வாழ்ந்த காலத்தில், செய்யது மீரன் உம்மா கருவுற்றார்.

ஹிஜ்ரி 1330 -ம் வருடம் துல் காயிதா மாதம் பிறை 9 (19-10-1912) சனிக் கிழமை ஞாயிற்று கிழமை இரவு 12-00 மணிக்கு (சிலர் 12.30 மணி என்று கூறுகின்றனர்.) அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த குழந்தைக்கு முஹம்மது ஷிப்லி என்ற பெயரை சூட்டினர்.


தாயாரின் மரணம்

பாவா அவர்கள் செய்பு வீட்டில் வளர்ந்து வந்தவேலையில் தாயார், அப்துல் காதர் என்ற மகனையும், முஹம்மது யூசுஃப் என்ற மகனையும் பெற்றார்கள். மூன்றாவது மகன் முஹம்மது யூசுஃப் ஐந்தாறு மாத குழந்தையாக இருந்தபோது தாயார் செய்யது மீரான் உம்மா இறைவனடி சேர்ந்தார்கள். தமது அமைக் குழந்தைகளப் பராமரிக்க தந்தை ஆலிம்சா அவர்கள் ஹாஜிரா உம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள்.

இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொருப்பு அதிகமானது வாழ்க்கைச் சக்கரம் கரடு முரடானப் பாதையில் செல்லத் தொடங்கியது தனது பொருளாதாரத்தை சீர் செய்ய தனது மூத்த மனைவியின் சகோதரி வாழ்ந்த பொரவச்சேரிக்கு அடுத்த மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் குடியேறினார்.


நாலரை டிக்கட் கீழக்கரை செல்லுதல்

ஹிஜ்ரி 1331 / 1913 ம் ஆண்டு கல்வத்தாண்டகை அவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தார்கள். இது பாவா பிறந்த மறு வருடம் நடந்தது. அதன்பின் பதினோரு ஆண்டுகள் கழிந்தன.1924-ம் ஆண்டு ஒரு நாள் ஆலிம்சாவை சந்திக்க கல்வத்தாண்டகையின் மருமகனார் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் மற்றும் மூன்று பேரும் மஞ்சக்கொல்லைக்கு வந்தனர். ஆலிம்சாவை சந்தித்து நலம் விசாரித்தபின் கல்வத்தாண்டகையின் உத்திரவுக்கிணங்க சிறுவர் முஹம்மது ஷிப்லியை அழைத்துப்போக வந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

எதுவானாலும் முதல் குழந்தை என்னைச் சார்ந்தது எம்மிடம் அனுப்பி வைய்யுங்கள் என்று ஆண்டகை முன்பு சொன்ன சொல்லிற்கிணங்க தந்தை ஆலிம்சா மெத்த மகிழ்ச்சியுடன் சம்மதத்தை அளித்தார்கள். பாவாவும் அவர்களுடன் சிக்கலிலிருந்து புகைவண்டி ஏறி ராமனாதபுரம் பயணமாகி அங்கிருந்து கீழக்கரை அடைந்தனர்.

இந்த சம்பவத்தை, "நாலரை டிக்கட் சிக்கலில் ரயிலேறி ரமனாதபுரம் சென்றது" என்று பாவா சில சமயங்களில் குறிப்பிடுவார்கள். அப்போது பாவாவுக்கு வயது பண்ணிரண்டு.


வளர்ப்பு தந்தையும் தாயாரும்

கீழக்கரை அடைந்த பாலகரை ஆண்டகையின் மருகர் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் அவர்களின் துணைவியார் ஆயிஷா உம்மாவும் தங்களது பிள்ளைபோல் வளர்த்தனர் என்பதைவிட குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார்கள். அந்த வளர்ச்சி சாதாரணமாக இல்லை. ஆம்! மார்க்க அறிவையும் உலக அறிவையும் பெற்றுகொண்டே கிராம வேலைகளையும், விவசாயப் பணிகளையும் செவ்வனே கவனித்ததோடல்லாமல் வளர்ப்பு தந்தையின் இரும்புக்கடையில் வணிகத்தையும் திறம்படச் செய்தார்கள்.


மஞ்சக்கொல்லையில் திருமணம்

பதினெட்டாண்டு காலம் கீழக்கரையில் வளர்ந்தாலும் தந்தையுடன் தொடர்பு இருந்தே வந்தது. முப்பது வயதைக் கடந்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற ஆவல் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. தாய் வழி உறவினர்களில் ஒருவர் முஹம்மது இபுறாஹிம் என்ற வணிகர். இவரது நான்காவது மகள் கலிமத்து நாபிஹா பீவியை பாவாவுக்கு மணமுடித்தனர்.

இனிமையான இல்லற வாழ்க்கையில் மூன்றாண்டுகள் உருண்டோடியபின் அழகிய பெண் மகவை கலிமத்து நாபிஹா பீவி பெற்றார்கள் - பாவா தந்தையானார்கள். அக்குழந்தைக்கு தனது வளர்ப்புத் தாயாரின் பெயரையும் அவர்களின் மகளாரின் பெயரையும் சேர்த்து ஆயிஷத்து ஜெய்லானி என்ற பெயரைச் சூட்டி அன்பையும் பாசத்தையும் கொட்டி
வளர்த்தார்கள். மனிதர்களுடைய ஆசைகளைவிட இறைவனுடைய நாட்டம் மேலானது, அவனது நாட்டப்படி அக்குழந்தை தனது ஆறாவது வயதில் இறைவனடி சேர்ந்தது.


கொழும்புக்கு பயணம்

பெண் மகவை ஈன்ற சில காலத்திற்குபின் தனது உள்ளகிடக்கையில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த ஞான வேட்கையால் உந்தப்பட்டு கல்வத்தாண்டகையின் தர்பார் நோக்கி மீண்டும் கீழக்கரை பயணமானார்கள். அங்கு மீண்டும் பழைய பணிகளை கவனித்து வந்தார்கள். இது வளர்ப்பு தந்தைக்கு மன நிறைவைத் தரவில்லை. தமது மகன் மீது அக்கரைக்கொண்ட அவர்கள் கொழும்பிலுள்ள தமது நவரத்தின கற்கள் விற்கும் கடைக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஆன்மீக வாழ்வில் ஆசை கொண்ட ஒருவருக்கு தனக்கு முன்னால் இருக்கும் எந்த ஒன்றும் துச்சமாகத் தெரியும். தனக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடை வந்தாலும் அதனை உடைத்தெரிந்துவிடுவார்கள். இத்தகையவர்களின் மனம், எண்ணம், மூச்சு அனைத்தும் இறைவனையே சுற்றிக்கொண்டிருக்கும்.

வியாபரத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மீண்டும் கீழக்கரைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்கள்.


மீண்டும் மஞ்சைக்கு வருகை

சிறிது காலம் கீழக்கரையில் இருந்தாலும் அங்கும் அதே நிலை தொடர்ந்தது, தன்னுடைய நிலைக்கொல்லாமை ஒருபுறம் தாக்க மறுபுறம் தனது குடும்பத்தைக் காண மனம் நாடியது. எனவே அங்கிருந்து புறப்பட்டு மஞ்சக்கொல்லை வந்தடைந்தார்கள். தனது அருமை மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் மனம் மட்டும் இறைவனையே
நாடிக்கொண்டிருந்தது. என்றாலும் பள்ளிவாசலே கதி என்றில்லாமல் கிட்டுப் பிள்ளை என்பவர் வைத்திருந்த நெல் அறவை மில்லில் இரண்டு அணா(பதிமூன்று பைசா) தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார்கள்.

அங்கும் அவர்களால் சரியாக வேலை செய்யமுடியவில்லை, நெல் கொட்டவேண்டிய இடத்தில் அரிசியையும் அரிசி கொட்டவேண்டிய இடத்தில் நெல்லையும் கொட்டிய சம்பவம் பல தடவை நிகழ்ந்து. இதனை உற்று கவனித்துவந்த கிட்டுப் பிள்ளை, இவர்களின் நிலையை புரிந்து கடிந்துக்கொள்ளாமல் "ஏம்பா! இப்படி ரெண்டணாவுக்காக தலைகீழா வேலை செய்யும் உனக்கு ஒரு குடும்பம் தேவையா?" என்று வேடிக்கையாகக்கேட்டதுமுண்டு.

தனது நிலையை அறிந்துங்கூட தொடர்ந்து வேலையில் வைத்திருந்த அவரை, பாவா அவர்கள் எப்போதும் முதலாளி என்றே கூப்பிட்டுவந்தார்கள். எந்த சமயத்திலும் வேறு வார்த்தை எதையும் சொல்லி ஒரு முறைகூட அழைத்ததே இல்லை.


நஃப்ஸ் - ஆவல்

'நான் மறைவான புதையலாக இருந்தேன். என்னை அறியப்படவேண்டி படைப்புகளை படைத்தேன்.' என்று இறைவன் ஹதீஸு குதுஸியில் சொல்கிறான். தாத்துல் கிப்ராயாவில் மறைவாக இருந்த இறைவனுக்கு முதன்முதலில் உண்டான ஆசையின் தூண்டுதல் - இதனை, தாத்து முதன்முதலில் அசைந்த அசைவை அல்லது அதன் முந்திய அலையை 'நஃப்ஸ்' என்று ஆரிஃபீன்கள் அழைக்கிறார்கள். அந்த நஃப்ஸ்தான் 'நான்' என்று சொல்வதும் இந்த உடம்பில் 'நான்' என்று இச்சிப்பதுமாயிருக்கும். என்று ஹஜ்ரது மஹ்மூது பஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைவனின் பிரதிநிதியான மனிதன், தன்னுள் பொதிந்து கிடக்கும் நஃப்ஸின் உண்மைப் பொருளையறியாமல் மனம்போன போக்கில் நடக்கிறான். இவன் சிறுவனாக இருக்கும்போது பட்டம் வாங்கி விளையாட ஆசைப்படுகிறான். அவன் வளர்ந்து வாலிபனானபின் கார் வாங்கவேண்டும் என்றும் பங்களா கட்டவேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். இது அறிவின் வளர்ச்சியையும் அந்தஸ்தின் உயர்வையும் காட்டுகிறது. ஆனால் ஆசையின் தன்மை அப்படியே இருக்கிறது.

ஒருவனை அரியாசனத்தில் ஏற்றவும் அதிலிருந்து அவனை இறக்கவும் இதுதான் மூலக்காரணம். இதை ஒடுக்கி முறையாக செயல்படவைத்தால் ஆத்மீகப்பாதை திறக்கும் என்பதை ஞானிகள் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தனர்.


தனிமையும் தியானமும்

'மன் அரஃப நஃப்சஹு ஃபக்கது அரஃப ரப்பஹு' - 'எவன் தன்னை உணர்ந்துக்கொண்டானோ, அவன் தன் நாயனை உணர்ந்துக்கொண்டான்' என்பது நபிகளாரின் வாக்கு. 'ஃபிக்குருக்க ஃபீக்க யக்ஃபி' - 'உன்னை உற்றுபார் அது உனக்குப் போதுமானது' என்பது சூஃபியாக்களின் வாக்கு.

சத்தமும், சந்தடியும் நிறைந்த பரபரபுக்கு பஞ்சமில்லா இவ்வுலகில் அமைதியைத் தேடுவதென்றால் சாதாரண காரியமல்ல. அமைதிக்குத் தனிமை அவசியம். இதை உணர்ந்த பாவாவும் தன் துணைவியாரிடம் ஒரு கோப்பை பால் கொண்டுவரச் சொல்லி அதனை அருந்திவிட்டு தனிமையில் தியானத்தில் அமர்ந்துவிட்டார்கள். நாற்பது நாட்கள் சில்லாவுக்குப் பின்.............


1948 க்குப் பின்

நாற்பது நாட்கள் தியானத்திற்குபின் வெளிவந்த அவர்களின் பேச்சிலும் செயலிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தமிழில் பேசினாலும் அது பரிபாசை போன்று புதிராகவே இருந்தது. எதையோ இழந்ததைப்போல் காணப்பட்டார்கள். உடைக்கும் உணவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இத்தகைய மாற்றங்கள் பார்ப்பவர்களுக்கு விந்தையாக இருந்தது. சுருங்கச் சொன்னால் விலாயத் என்ற நிலை வெளிப்படத் தொடங்கிது. இதை யாரும் புரிந்துக்கொள்ளவில்லை.

1953-ல் ஒரு நாள் காக்காவைக் காணவில்லை என்று ஊரே அல்லோலப்பட்டது, மூன்று நாட்கள் ஆகியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, இந்நிலையில் பாவா ஒருவர் சங்கமங்கலத்தில் (சிக்கலிலிருந்து வடக்கே இரண்டுகல் தொலைவிலுள்ளது) இட்லி தோசைகளைக் கொடுத்து வியாதிகளை குணப்படுத்துகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு அங்கு
சென்று பார்த்தபோது இவர்கள் இருப்பதைக் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


கறாமத் எனும் அற்புதம்

இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியை தாரமாக வைத்து தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற மாயையில் முஃஜிஜாத்தையோ கறாமத்தையோ இன்றய சமுதாயத்தினர் சிலர் நம்ப மறுக்கின்றனர். எதைச் சொன்னாலும் ஆதாரம் இருக்கிறதா? நிரூபிக்க முடியுமா? என்று கேட்கின்றனர்.

ஈமானின் அடிப்படையே, முதலில் அப்படியே நம்பவேண்டும். 'ஆமன்துபில்லாஹி..' என்பதின் பொருளையே மறந்துவிட்டார்கள். 'அன்னாசு அஃதாவுல் லிமா ஜஹிலு' - 'புரியாத அறிவுக்கு மக்கள் எதிரானவர்கள்' என்ற அரபி பழமொழிக்கு உதாரணமாக இருக்கிறார்களேயொழிய புரிந்துக்கொள்ள முயற்சிப்பதில்லை. கறாமத்தை மேஜிக் என்று தவறாக நம்புகிறார்களேயொழிய அது உண்மைதானா என்று தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை.

கறாமத்தும் மேஜிக்கும் ஒன்றுபோல் தோன்றினாலும் அவை இரண்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. பிரத்தியோகப் பயிற்சி, சில உபகரணங்கள், பார்ப்பவர்களை மயக்கும் பேச்சு, செயலில் காட்டும் வேகம் இவை நான்கையும்
தாரமாகக்கொண்டு காண்பவர்களுக்கு ஒரு தற்காலிகத் தோற்றத்தை ஏற்படுத்துவது அல்லது இருப்பதை மறைத்து மீண்டும் தோன்ற செய்வது மேஜிக்.

கறாமத் அப்படியல்ல, ஒருவரோ அல்லது ஒரு சமுதாயமோ நன்மை பெறும் பொருட்டு முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை மிகச் சுலபமாக செய்வது. இதற்கென்று தனி பயிற்சியோ, உபகரணமோ, மதி மயக்கும் பேச்சோ தேவை இல்லை. சதா இறைச்சிந்தனையில் மூழ்கி இருக்கும் ஒருவர் தியானம், திக்று, ரியாலத் போன்ற பிரத்தியேக
வணக்கங்களினால் படிப்படியாக நிலை உயர்ந்து விலாயத் என்ற தரஜாவை(படித்தரத்தை) அடையும்போது கறாமத் என்ற அற்புத செயல் தானாக உண்டாகும்.


முன் அறிவிப்புகள்

என் தந்தைக்கு அறிவித்தது

ஒரு காரியம் நடப்பதற்குமுன் சொல்வது என்பது எல்லோராலும்சாத்தியப்படுவதல்ல, குறி சொல்பவர்கள் சாத்திரம், ஜோசியம் சொல்பவர்கள் நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்னாலும் அது சரியாக நடக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. சில நடக்கவும் செய்யலாம் சில நடக்காமலும் போகலாம். ஆனால் விலாயத் பெற்றவர்கள் சொன்னால் அது
மிகச் சரியாக நடக்கும். நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் அவர்கள் எதையும் நேரடியாக சொல்லமாட்டார்கள், வேறு ஒன்றை குறிப்பிட்டு மறைமுகமாகச் சொல்வார்கள்.

ஆம் அப்படித்தான் பாவாவும் சொன்னார்கள். 1960-ம் ஆண்டு ஒரு நாள் எனது தந்தை பஸ் ஏறுவதற்காக செல்லும்போது "பள்ளிவாசல் தெருவில் நாலு தென்னைமரம் சாயப்போவுது" என்று கூறினார்கள். இது என் தகப்பனாருக்குப் புரியவில்லை. "நான் போகும்போது பள்ளிவாசல் தெருவில் நாலு தென்னைமரம் சாயப்போவுது என்று காக்கா இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார்கள், ஒருவேளை புயல் எதுவும் வரப்போகுதோ என்னவோ தெரியவில்லை ஒருகால் நம் வீட்டு மரம் விழுந்து வீட்டுக்கு சேதம் வராமலிருந்தால் அல்லாஹ் செய்யும் கைராயிருக்கும்" என்று என் தாயாரிடம் சொன்னார்கள்.

நாலு தென்னைமரம் என்று சொன்னது நான்கு பேர்களை குறிக்கும் என்று அப்போது புரியவில்லை. ஆம்! அவர்கள் சொல்லி சில தினங்களில் என் பாட்டனார் மாரடைப்பால் காலமானார்கள். அவர்கள் இறந்து நாற்பது நாட்களுக்குள் என் தந்தையின் பெரிய தகப்பனார் இறந்தார்கள், அவர்கள் இறந்து ஏழு நாட்களுக்குள் அவர்களின் மனைவி இறந்தார்கள், அதன்பின் என் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரி இறந்தார்கள். இப்படி எங்கள் குடும்பத்தில் நான்கு பேர்கள் மூன்று மாதங்களில் ஒருவர்பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தார்கள்.


கிருஷ்ணன் ஆசாரிக்கு எச்சரிக்கை

ஒரு நாள் அதிகாலை சுமார் மூன்று அல்லது நான்கு மணியளவிருக்கும் கிட்டுப்பிள்ளை மில்லருகே ஒரு ஒதுங்கிய இடத்தில் 'அக்க யோக' நிலையில் ஆழ்ந்த தியானத்திலிருந்தார்கள். அவ்வழியே வந்த கிருஷ்ண ஆசாரி பாவாவை கண்டதும் அங்கேயே நின்றுவிட்டார். அவர்கள் தியான நிலையிலிருந்து மீண்டதும், "டீ வாங்கிவருகிறேன் பாவா" என்று பவ்வியமாக கேட்டபோது "அப்பனே! இவனுக்கு சுடுகாட்டுக்குப்போகும் நாள் நெருங்கிவிட்டது, தாங்கள் போங்கள்" என்றார்கள்.

இது, தனது மரணத்தைக் குறிக்கும் வார்த்தை என அவருக்குப் புரியவில்லை. அவர்கள் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது நாற்பத்தொன்பது.


ஆபத்தைத் தடுத்தது

1981 அல்லது 82 ம் வருடத்தில் ஒரு நாள் சஹீது பாய் என்ற பெரியவர் வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். பாவாவின் வீட்டை கடந்தபோது.........

"இந்தாங்க பஸ்ஸுக்கு போறவங்களே! இங்கே வாங்க" என்ற பாவாவின் குரல் கேட்டுத் திரும்புகிறார்.

"உங்களெத்தான், இங்கே வந்து உக்காருங்க" என்று சொன்னதும், காக்கா எதோ சொல்லப்போகிறார்கள் என்ற சிந்தனையுடன் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்க்காருகிறார். நேரம் கடக்கிறது, காக்கா என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர்களோ எதும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்கள்.

அரை மணிநேரமாகியும் காக்கா ஒன்றும் சொல்லவில்லையே, குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியாதே இன்னும் எவ்வளவு நேரம் இருக்கவேண்டுமோ தெரியவில்லையே என்று தவிப்பில் இருந்துக்கொண்டிருந்தபோது, "சரி போங்க" என்று உத்தரவிடுகிறார்கள்.

ஒன்றும் சொல்லாமல் இப்படி நம்மை அனுப்பிவிட்டார்களே, சரி எதாவது ஒரு நன்மை இருக்கும், வேறு பஸ்ஸில் போகலாம் என்ற நினைவோடு புறப்பட்டு அடுத்த பஸ்ஸில் போகிறார். சிறிது தூரம் பயணம்செய்தபின்புதான் உண்மை புரிந்தது, தான் செல்லவிருந்த பஸ் அங்கு விபத்துக்குள்ளாகி இருந்ததும் அந்த விபத்திலிருந்து காப்பாற்றதான் தன்னை காக்கவைத்தார்கள் என்பதும்.

இதனை, இறைவனின் நாட்டம் இப்படி இருந்தது, ஒவ்வொருவரின் பிறப்பையும் இறப்பையும் அவனே நிர்ணயம் செய்துள்ளான், அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் அவர்களின் பயணத்தை வேறு காரணங்கள் தடை செய்யவில்லை. மாறாக புறப்பட்டு சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பாவா, இறைவனின் அறிவிப்பு என்றாலும் அது அவர்களது உதிப்பில் தோன்றி நடக்கவிருக்கும் ஆபத்தை மிகத்தெளிவாக முன்னதாகவே அறிந்து அதிலிருந்து காப்பாற்றியது அவர்கள். இது தெளிவான சிந்தனை உள்ளவர்களுக்கு நன்றாக புரியும்.

இப்படி சம்பவம் நடக்குமுன்பே சொல்லப்பட்ட அறிவிப்புகள் ஏராளம். சில சமயம் வெளியூர் சென்று அங்கும் குறிப்புகளும் அறிவிப்புகளும் சொல்லியிருக்கிறார்கள். இதனை அறிந்த மக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு வழி கேட்டும் வியாதிகளுக்கு நிவாரணம் தேடியும் வரத்தொடங்கினர். வருகிறவர்கள் எதோ வந்தோம் போனோம் என்றில்லாமல் இரவு பகல் பாராது காத்திருந்தனர், சிலர் பல நாட்கள் தங்கியிருந்து தங்களது குறைகளுக்கு வழி கேட்டுச் சென்றுள்ளனர்.

தன்னை நாடி வருகிறவர்களை வெறுங்கையோடு திருப்பியனுப்பியதில்லை, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துவந்தார்கள். ஒருவருடைய பிரச்சனை மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் இவர்களது பேச்சும் எழுத்தும் அமைந்திருந்தது.


பலர் உயிரைக் காத்தார்கள்

பக்கத்து ஊரில் ஒரு கல்யாணம். தேவை சற்று பெரியது. கல்யாணம் என்றால் விருந்து அதில் மிக முக்கியம் வாய்ந்தது. எதாவது ஒரு சிறிய குறை இருந்தாலும் எல்லாருடைய வாயும் மெல்லும். இது எல்லா ஊர்களிலும் உள்ள வழக்கம். ஊர் மக்களும் உறவினர்களும் வரத்தொடங்க விருந்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தபோது பாவா அவர்கள் வேகமாக சோறாக்கிய பந்தலுக்குச் சென்று தாளிச்சா சட்டியை கவிழ்க்கச் சொன்னார்கள். என் பெயர் கெட்டுவிடும் தேவைக்காரர் அவமானப்பட நான் காரணமாகிவிடுவேன் என்று பண்டாரி மறுக்கிறார். பாவா கவிழுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். இதை அறிந்த தேவைக்காரர் பாவா சொன்னதை செய்யுங்கள், விருந்துக்கு தாளிச்சா இல்லாமல்போனால் பரவாயில்லை என்று உத்திரவிட்டவுடன் சட்டி கவிழ்க்கப்பட்டது. ஆறு போல் ஓடிய தாளிச்சாவில் காய்கறிகளுக்கிடையில் ஒரு நல்ல பாம்பு சுருண்ட நிலையில் செத்து கிடந்தது. ஆம்! எப்படியோ நல்ல பாம்பு விழுந்து விட்டது. அதை உண்டிருந்தால் நிலமை என்னவாகிருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அருகில் நின்று சமையல் செய்த பண்டாரிக்கும் கை ஆட்களுக்கும் பாம்பு விழுந்தது தெரியவில்லை, எங்கோ இருந்த பாவாவுக்கு தெரிந்தது. அது எப்படி சாத்தியம்? சிந்தித்துப் பாருங்கள்!

ஆனால் இதற்கு சான்று உள்ளது; இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தனது 'கீமியாய சதாத்'தில் இப்படி விளக்கம் கூறுகிறார்கள். 'நுபுவத்தும் விலாயத்தும் கல்பின் மகிமையினால் உண்டாகிறது. அதில் சித்தியாவது மூன்று குணங்கள், (1)ஜனங்களுக்கு கனவில் உண்டாவது இவர்களுக்கு விழிப்பில் உண்டாகும். (2)ஜனங்களுக்கு கல்பு அவர்களின் சரீரத்தில் மட்டும் தங்கும், இவர்களது கல்பு மற்ற எல்லோருடைய சரீரங்களிலும் தங்கி நேர்வழிப்படுத்தும். (3)ஜனங்கள் மற்றவர்கள் மூலம் அறிவைப் பெறுவார்கள், இவர்களுக்கு அறிவு தனக்குத்தானே உண்டாகும்.' இத்தகைய அறிவுக்கு 'இல்மு லத்துன்னி' என்று பெயர்.


நிலைகள்

பாவா ஊரில் இருந்தாலும் வெளியூர் சென்றாலும் அவர்கள் நின்றாலும், அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும் எல்லோரும் செய்வதுபோல் இருக்காது, முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அவர்கள் இருந்த நிலையில் சாதாரணமாக ஒரு மனிதரால் ஐந்து நிமிடங்களுக்குமேல் இருக்க முடியாது.

நிற்கும்போது ஒரு கையை இடுப்பில் கொடுத்து மறு கையை சுவற்றில் சாய்த்து தலையை சுவற்றில் முட்டுக்கொடுத்தவாறு நீண்ட நேரம் நிற்பார்கள். அதே போன்று உட்கார்ந்திருக்கும்போதும் ஒரு காலை மறுகால் தொடையிலும் ஒரு கையை தரையில் ஊன்றியபடியும் மறு கையை கண்ணத்தில் வைத்தும் நீண்ட நேரம் இருப்பார்கள். படுத்திருந்தாலும் ஒரு காலை மடக்கி மறு காலை நீட்டி ஒரு கையை தலைக்கு வைத்து மறு கையை தரையில் ஊன்றியோ அல்லது தொடைமீது வைத்தோ பல மணிநேரம் உறங்குவார்கள். அது உறங்குவதுபோல் தோன்றுமேதவிர உறக்கமல்ல, 'முராக்கபா' வின் நிலையில் இருப்பார்கள்.


ஆன்மீகத்தின் எட்டு நிலைகள்

ஆன்மீகத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட பெரியோர்கள் எட்டுவிதமான நிலைகளை அடைகிறார்கள். அவைகளை ஆரிஃபீன்கள் எட்டு 'மீம்' களைக்கொண்டு வரிசைப்படுத்தியுள்ளார்கள். அவை 'முஹாசபா, முஆபிதா, முதாகிரா, முஹாரிபா, முஜாஹிதா, முராக்கபா, முஷாஹிதா, முஆயினா' என்பன.

பாவா அவர்கள் முராக்காபா அல்லது முஷாஹிதா அல்லது முஆயினா நிலைகளில் இருப்பதை மற்றவர்களால் அறிய முடியாது, வெளி உலகத்திற்கும் காண்பிக்கவும் மாட்டார்கள். உறங்குவது போன்றோ அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போன்றோ தோன்றும், ஆனால் அது உறக்கமும்மல்ல சிந்தனையுமல்ல.

சில நேரங்களில் சீடர்களும் அவர்கள்மீது அன்பு வைத்திருப்பவர்களும் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும்போது அசையாமல் அப்படியே இருப்பார்கள். அது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றும், உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்கள் எவரும், நாமும் பிடித்துவிடுவோம் என்றெண்ணி முயற்சி செய்தால் அடுத்த வினாடி அவர் கை தொடும்முன்பே எழுந்து "அவரவர் தரஜாவில்(நிலையில்) இருந்துக்கொள்ளவேண்டும்" என்று கண்டிப்பார்கள். இது அவர்கள் உறங்கவில்லை என்பதையும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதையும் காட்டுகிறது.



வசீலா

எல்லா உயிர்களும் மரணத்தை சுவைக்கக்கூடியதே (அல் குர்ஆன் 21:35) என்று இறைவனின் வாக்கு. படைக்கப்பட்ட அனைத்தும் அழியக்கூடியது உயிரைத் தவிர. ஆம்; உயிர்! அது படைக்கப்படவில்லை, அது அருளப்பட்டது! எம்முடைய உயிரிலிருந்து ஊதினோம் (அல் குர்ஆன் 17:85) என்று இறைவன் கூறுகிறான். உயிர் பிரிந்தது என்று கூறுவதின் பொருள் இதுதான். ஆனால் உயிரைத் தாங்கும் உடம்பும் மற்ற சடப்பொருள்களும் அழியக்கூடியது. அவைகளில் சில விரைவாக அழியும் வேறு சில பல நூறு வருடங்கள் கழித்து அழியும். பல கோடி வருடங்களுக்கு முன் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் ஒரு காலத்தில் அழியக்கூடியது என்று குர்னின் வார்த்தையை விஞ்ஞானம் பின் தொடர்கிறது. இந்த பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள பூமியில் வாழ்கின்ற மனிதர்களில் சிலர் சாதனைப் படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் சாதனைகள் அவர்கள் மறைந்தாலும் நிலைத்து நிற்கின்றன. அவர்களுக்கென்று தனி மரியாதையும் மதிப்பும் என்றென்றும் உண்டு, அவர்களின் பெயர் நினைவு கூறப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெருமானார் அவர்களுக்குப் பின் வந்த இறைநேசச் செல்வர்கள் மனித சமுதாயத்திற்கு பெரும் அருட்கொடையாக இருந்திருக்கிறார்கள். 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதற்கொப்ப தானும் நேர்வழியில் நடந்து சமுதாயத்தையும் நேர்வழி படுத்திய இவர்கள் இறந்தபின் ஜியாரத்(சந்திப்பு) செய்வதற்காகவும் வசீலா(உதவி, வழி) தேடுவதற்காகவும் தனி இடத்தில் அடக்கம் செய்வது பெரும்பாலான நாடுகளில் இருந்து வரும் பழக்கம்.

அவர்கள் இறந்துவிட்டார்களே, அவர்களிடம் எப்படி கேட்கமுடியும்? உயிருள்ளவர்களிடம் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது, மரித்தவர்களிடம் கேட்டால் என்ன கிடைக்கும்? என்பது சிலரின் கேள்விக்கனைகள். "அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம், உயிருடன்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உணவை நாம் அளிக்கிறோம்" (அல் குர்ஆன் 3:169) என்று கூறியுள்ள இறைவேதம் "ஓ விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து அவனிடம் செல்வற்குரிய வழியை(வசீலா) தேடிக்கொள்ளுங்கள்" (அல் குர்ஆன் 5:35) பிரிதோரிடத்தில் கூறுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள வழி(வசீலா) என்ன என்பதற்கு பெருமானார் அவர்களின் வாக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது.

பாவா ஆதம்(அலை) அவர்கள் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைக்கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டதாக இமாம் ஹாக்கிம்(ரஹ்) அவர்கள் முஸ்தத்ரக்கில் (vol.II page.751) குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களும் இமாம் பைஹக்கி(ரஹ்) அவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் ஹஜ்ரத் ஃபாத்திமா பின்த் ஹசன் இறந்தபின் அடக்கம் செய்யும்போது அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கபுர் விசாலமாக இருக்கவேண்டும் என்று பெருமானார் அவர்கள் தன்னைக் கொண்டும் தனக்கு முன் தோன்றிய நபிமார்களைக்கொண்டும் இறைவனிடத்தில் வசீலா தேடியதாக இமாம் தபராணி அவர்கள் முஃஜமுல் கபீர், முஃஜமுல் அவ்சத் என்ற நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மதினா ஒருமுறை வரட்சியால் பாதிக்கப்பட்டபோது ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களின் வசீலாவைக்கொண்டு மழைக்காகப் பிரார்த்தனை செய்து மழை பெய்ததாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை புகாரி ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை கறி துண்டை விழுங்கியதால் வேதனை ஏற்பட்டு நண்பர் ஒருவரின் லோசனையின்பேரில் "யா முஹம்மதா" என்று கூவியபோது அந்த வலி உடனே நீங்கியதாக இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் தனது அல் கலிமத்து அல் தையிப் என்ற நூலில் (பக்கம்-165) குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலரை கர்பலா யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டு திமிஷ்கிலுள்ள(டெமாஸ்கஸ்) யஜீதுடைய நீதி மன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் முன்னால் இடப்பட்டுள்ள திரையை நீக்கி தன் முன்னிலையில் நிறுத்துமாறு யஜீது உத்தரவிட்டான். அப்போது அவர்களுடனிருந்த ஹஜ்ரத் சய்யிதா ஜைனப் (ரலி) என்ற பெண் "யா முஹம்மதா" என்று அழுதபடி இந்த கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றுமாறு பெருமானார் அவர்களிடம் உதவி தேடினார்கள். சற்று நேரத்தில் யஜிது தன்முன் நிறுத்தப்படும் உத்தரவை ரத்து செய்து அவர்கள் அனைவரும் மதினா நகருக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க உத்தரவிட்டான். அதன்படி அனுப்பிவைக்கப்பட்டனர்.

கடைசி மூன்று நிகழ்வுகளும் பெருமானார் அவர்கள் மறைந்தபின் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நேரம் நெருங்கியது

மௌத்து எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, மௌத்து வந்தால் எவரும் இருக்கமாட்டார்கள். இறைநேசச் செல்வர்களான குத்துபுமார்களும் வலிமார்களும் தங்களது மௌத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதை நினைத்து துக்கப்பட்டதுமில்லை இவ்வுலக வாழ்வைப் பற்றி சந்தோஷப்பட்டதுமில்லை. இறைவன்மீது மாறாத காதல் கொண்ட அவர்களுக்கு வாழ்வும் சாவும் ஒன்றாகவே தெரிந்தன. வேறுவார்த்தையில் சொன்னால் 'மறுமையின் வாழ்க்கை உயர்வானது நிலையானது' (அல் குர்ஆன் 86:17) என்பதை மிகத் தெளிவாக அறிந்துவைத்திருந்தாகள். இதை அவர்கள் தங்களது சீடர்களுக்கும் மாறாத அன்பு வைத்திருந்தவர்களுக்கும் நனவில் மட்டுமல்ல கனவிலும் குறிப்பால் உணர்த்தி வந்த வரலாறுகள் உண்டு.

தான் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தைக்காலுக்கு சென்று, இப்போது ஒலு செய்வதற்கான தண்ணீர் தொட்டி இருக்குமிடத்தில் ஒரு வட்டம் அதன் கீழ் பாகம் தடித்த கோடு பார்ப்பதற்கு இரண்டுமூன்று நாட்களில் மறையப்போகும் பிறை போன்ற அமைப்பில் வரைந்தார்கள். அதன் பின் ரஜபு பிறை 26, 27 மிஃராஜ் இரவு என்று அடிக்கடி கூறிவந்தார்கள்.

நான்கு நாட்களுக்குமுன், நான்குபேரை அழைத்து தான் வழக்கமாகப் படுக்கும் கட்டிலை தூக்கி வெளியே வைக்கச் சொன்னார்கள். பலர் அதை பிடித்தபோது நான்குபேர் மட்டும்தான் பிடிக்கவேண்டும் என்று உத்திரவிட்டார்கள்.

மூன்று நாட்களுக்குமுன், மயிலாடுதுறை சங்கரன்பந்தலைச் சேர்ந்த மஸ்ஹூதா என்ற பெண் பாவாவை அடிக்கடி பார்க்க வருபவர்களில் ஒருவர். அவரிடம் தனது மூன்று விரலை காட்டி மௌத்து மௌத்து என்று கூறின்னார்கள். அதன்பின் அம்மயத்து சூராவிலுள்ள 38வது வசனமான "யவ்ம யக்கூ முர்ரூஹு வல்மலாயிகத்து சஃப்பன் லா யத்த கல்லமூன இல்லாமன் அதினலஹுர் ரஹ்மானு வ கால சவாபா" என்ற ஆயத்தை ஓதினார்கள். இதை ஏன் ஓதினார்கள் எதை குறிப்பால் உணர்த்தினார்கள் என்பது அப் பெண்ணிற்கு அப்போது தெரியவில்லை. வஃபாத்தான பிறகுதான் இந்த செய்தி தெரியவந்தது.

இரண்டு நாட்களுக்குமுன் தான் சாப்பிடுவதற்காக உபயோகிக்கும் பீங்கான் தட்டையை "இனி இதற்கு உபயோகமில்லை" என்று சொல்லி கவிழ்த்து வைத்துவிட்டார்கள்.

ஒரு நாளைக்குமுன், தன்னைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சீடர்களில் ஒருவரான கொரடாச்சேரி அப்துல் காதர் ஊருக்குத் திரும்ப உத்தரவு கேட்டபோது, "போகவேண்டாம், நாளைக்கு விருந்து இருக்கிறது அதை முடித்துவிட்டு போங்கள்" என்று சொல்லி தங்கவைத்துவிட்டார்கள். இதல்லாமல் மற்ற எல்லா சீடர்களையும் எங்கும் போகவேண்டாம் இங்கேயே இருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.


கடிகாரம் நின்றது

1989 ம் ஆண்டு மார்ச் திங்கள் 4 ம் நாள் சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு பாவா, 'அல்லாஹும்ம சல்லி அலா செய்யிதினா வ நபீயினா வ மௌலானா முஹம்மதின் வ அலா ஆலி செய்யிதினா முஹம்மதின் வ பாரிக் வ சல்லிம் அலைஹ்' என்ற சலவாத்தை ஓத தொடங்கி தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். மேலும் உடனிருந்த சீடர்களையும் நிறுத்தாமல் ஓதிவரும்படி உத்தரவிட்டார்கள்.

அன்றிரவு முழுவதும் சீடர்கள் அனைவரும் அவர்களுடனே இருந்தனர். சிறிது உறங்கியபின் எழுந்து சுவற்றில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இது மறு நாள் 5-3-1989(ஹிஜ்ரி 1409 ரஜப் 26) ஞாயிற்று கிழமை சுபுஹு வரை நீடித்தது. எழுதி முடித்தபின் தனது இறுதி காலத்தில் பெறிதும் உதவியாக இருந்த தலைஞாயிறு முஹம்மது காசிம் என்ற சீடரின் மடியில் தலைவைத்துப் படுத்துவிட்டார்கள். மரணத்திற்கு சற்று முன்பாக தன் உடனிருந்த அனைவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு மனைவியையும் உறவினரையும் அழைத்தார்கள். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் அவர்களின் நிலை மாறிக்கொண்டிருந்தது, மூச்சு மெதுவாக ஓடத் தொடங்கியது. இதை கண்ட உறவினர்கள் பாவாவை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தனர். அப்போதும் சீடர் முஹம்மது காசிம் அவர்களின் மடியில் தலைவைத்து படுத்திருந்தார்கள். மனைவி கலிமம்மாவும் மருமகன் நிஜாமுதீனும் அருகில் இருந்தபடி தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு என்ன
செய்வதென்று புரியாமல் மன இருக்கத்துடன் அமைதியாக சுற்றி நின்றுகொண்டிருந்தனர். எல்லோர் முகத்தையும் சோகம் அப்பிக்கொண்டுவிட்டது.

அமைதியின் வடிவமாக முகம் பிரகாசிக்க ஒளிமயமான சரீரத்துடன் படுத்திருந்த பாவா கண்ணை திறந்து தன் துணைவியரையும் சுற்றி இருந்த உறவினரையும் ஒரு முறை பார்த்து "இவனுக்கு என்ன நேர்ந்தது" என்று முனுமுனுத்த ஒரு சில நொடிகளில் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார்கள்.

சரியாக காலை 8-46 மணி; மூச்சு நின்றது. 76வருடம் 4மாதம் 17நாட்கள் இடையறாது துடித்துக்கொண்டிருந்த இருதயம் நிரந்தர ஓய்வு பெற்றது. "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்." அவர்களது மூச்சு மட்டும் நிற்கவில்லை, இதயம் மட்டும் நிற்கவில்லை, அவர்களது மறைவை காண விரும்பாத அவர்கள் வீட்டில் ஒடிக்கொண்டிருந்த
கடிகாரமும் நின்றுவிட்டது. சீடரின் மடியிலேயே அவர்களின் ரூஹு பிரிந்தது.


திறந்து மூடிய கண்கள்

அடுத்த வினாடி கூடியிருந்த எல்லோர் இதயத்திலும் அழுத்தம், நெஞ்சினில் பாரம், துக்கம் பீரிட்டு "ஓ" என்ற அலறல், ஆளுக்கொருபுறமாக அடக்கமுடியாத துக்கத்தை அழுது வெளியிட்டுக்கொண்டிருக்க "எஜமானே! என்னை அனாதையாக்கிவிட்டீர்களே என்னை விட்டு போய்விட்டீர்களே கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்களேன்" என்று அரற்றியபடி
கலிமம்மா கதறியழ இறந்தவர்கள் ஒரு வினாடி கண்ணைத் திறந்து மூடினார்கள். இதை மனைவி கலிமம்மா மருமகன் நிஜாமுதீன் ஆகிய இருவர் மட்டுமே பார்த்தனர். வேறு யாரும் பார்க்கவில்லை.

ஒரு சில நிமிடங்களில் ஊர் முழுவதும் செய்தி பரவியது. மக்கள் வருவதற்குமுன் ஜனாசாவை அவர்கள் வீட்டில் வைத்தனர். கூட்டம் அதிகமாகும் என்பதால் சற்று நேரத்தில் அருகிலுள்ள மைத்துனர் அலாவுதீன் வீட்டிற்கு மாற்றினர். கூட்டம் அதிகரிக்கவே இனி இங்கு வைத்திருந்தால் வருகிறவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதை கருத்தில்கொண்டு தைக்காலுக்கு எடுத்து சென்று தற்போது அடக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்தனர்.

அரை மணித்துளிக்குள் வெளியூர் மட்டுமல்ல வெளி நாடுகளுக்கும் செய்தி பரவியது, அகில இந்திய வானொலியின் திருச்சி நிலையம் செய்தி அறிவித்தது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டு போகவே மஞ்சக்கொல்லை வழியாக செல்லும் அனைத்து பேரூந்துக்களும் நின்று போயின, விரைவு வண்டிகள் அனைத்தும் நின்றன, நாகை மற்றும்
திருவாரூரிலிருந்து சிறப்பு பேரூந்துக்கள் இயக்கப்பட்டன. அவர்களின் ஜனாசாவை பார்த்துவிட்டுபோன ஜனங்கள் சுமார் ஐம்பதாயிரத்திற்கு மேலிருக்கும். இறுதிவரை இருந்த ஜனங்கள் சுமார் இருபதாயிரத்திற்கு மேலிருக்ககூடும். வந்திருந்தவர்களில் சிலர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர், வேறு சிலர் சலவாத்து ஓதிக்கொண்டிருந்தனர், மற்றும் சிலர் எல்லோருக்கும் வழிகாட்டிக்கொண்டிருந்த குத்துபு ஜமானை இழந்து விட்டோமே இனி என்ன செய்வது? யாரிடம் போவது? எவர் வழிகாட்டுவார்? என்ற ஏக்கத்தை உள்ளத்தில் அடக்கிவைத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.


அடக்கம்

மறு நாள் 6-3-89 திங்கட் கிழமை மாலை 4-00 மணிக்கு அவர்களின் பூத உடலை அடக்கம் செய்தனர். அதாவது இறந்து 31 மணி நேரம் கழித்து அடக்கம் செய்யப்பட்டது. சாதாரணமாக ஒருவர் இறந்த சற்று நேரத்தில் உடம்பு விரைத்துவிடும். சில மணித்துளிகளில் உடம்பு வீங்கத் தொடங்கும் பின் சிறிது சிறிதாக துர்நாற்றம் வீச ரம்பிக்கும். இதை தவிர்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் (Freezer) வைத்து மூடவேண்டும்.

ஆனால் அவர்களின் உடம்பை எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் சாதாரணமாக வைத்திருந்தனர். உடம்பில் சுறுக்கமோ வீக்கமோ ஏற்படவில்லை. இறந்தபோது எப்படி உறங்குவதுபோல் காட்சியளித்தார்களோ அதே நிலைதான் இறுதிவரை நீடித்திருந்தது. 'கபன்' இடுமுன் குளிப்பாட்டும்போது கை கால்கள் மிக சாதாரணமாக மடக்க முடிந்தது, செருப்பு
அணியாமல் நடக்கும் பழக்கத்தையுடைய இவர்களின் பாதம் மிருதுவாக இருந்தது.

பாவா அடக்கம் செய்யப்பட்டார்கள். தம் வானாளில் பெரும்பகுதியை ஆன்மீகத்துறைக்கு அர்பணித்துவிட்ட அவர்கள் பலர் நெஞ்சங்களில் நிறைந்து நின்றாலும் மறைந்தபின் ஏற்பட்ட இருளை அவர்கள் வீட்டில் ஓயாமல் எரிந்துக்கொண்டிருக்கும்
அந்த விளக்கினால் அகற்றமுடியவில்லை.

-------------00000------------

புத்தகம் கிடைக்குமிடம்:

A. MOHAMMED NIJAMUDEEN,
KALIMA AMMAL TRUST,
5/64, MASTHAN MARAICAR STREET,
MANJAKKOLLAI - 611 106,
NAGAPATTINAM - DIST,
PH. 04365 - 224692.

Saturday, September 5, 2009

சூபியின் குழப்பம்








ஹமீது ஜாஃபர்



சென்ற நவம்பர் 24 ம் தேதி திண்ணையில் வந்த திருக்குர் ஆனில் மனுதர்மமா.......வைப் படிக்கும்போது இரண்டு விசயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர். மற்றொன்று அவரின் தெளிவில்லாமை.


திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க ஒரு ஹமீது ஜாஃபரோ அல்லது ஒரு இபுனு பஷீரோ தேவை இல்லை. ஏன் எந்த ஒரு மனிதனாலும் அது முடியாத காரியம். அதற்கு ஆதாரம் அதுவேதான்.


“நம்முடைய அடியாருக்கு அருளிய இவ்வேதத்தில் நீங்கள் சந்தேகங்கொண்டு (அவர் இதை தாமாகவே கற்பனை செய்து கூறுகிறார் என்று கூறுகிற) நீங்கள் உண்மையாளர் களாகவும் இருந்தால் - அல்லாஹ்வைத் தவிர - உங்களுடைய உதவியாளர்களையும் நீங்கள் துணைக்காக அழைத்துக்கொண்டு இதைப்போன்ற ஒரு அத்தியாயத்தை அமைத்துக்கொண்டு வாருங்கள்.” (அல் குர்ஆன் 2:23)


“மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப்போன்ற ஓர் குர்ஆனை உண்டாக்க அவர்கள் முயற்சித்த போதிலும் அவர்களால் அவ்வாறு உண்டாக்கவே முடியாது; அவர்களில் சிலர் பிறருக்கு உதவி செய்த போதிலும் சரியே.” (அல் குர்ஆன் 17:88)


இந்த இரண்டு வசனங்களுமே மனித குலத்திற்கு சவால் விடுகிறது. இது மனிதனின் செயலல்ல என்று பல அறிஞர்களும் கூறியபிறகும் சூபி முகமதுக்கு சந்தேகம் இருந்தால் சூபியும் அவரைச் சார்ந்தவர்களும் இதை போன்ற ஒரு வசனத்தை உண்டாக்குங்களேன். இறைவனின் சவாலை ஏற்றுக்கொள்ளுங்களேன்!


“கல்வி, கேள்வி அறிவுகளால் இறைவனை அறியமுடியாது” என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள், இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். குர்ஆன் எல்லோருக்குமுள்ள நூல் அல்ல; அது இறை மறுப்பாளர்களுக்கு அருளப்பட்டதல்ல; இது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும், விசுவாசம் உள்ளவர்களுக்கும் அருளப்பட்டது.


“இது வேதநூல்; இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்” (அல் குர்ஆன் 2:2) என்று கூறும் குர்ஆன் நம்பிக்கையும் பக்தியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அதுவே விளக்குகிறது.


“அவர்கள் மறைவானவற்றை விசுவாசம் கொள்வார்கள்......” (அல் குர்ஆன் 2:3)


எனவே யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் இதை அனுகட்டும். நம்பிக்கை இல்லையா? எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை ஆராயட்டும். தேவையற்றதில் மனதை நுழைத்து குழம்பிக்கொண்டிருக்கவேண்டாம்.



தடுமாற்றம் தீரவில்லை


விஞ்ஞானம் எத்தனையோ விசயங்களில் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. BIG BANG THEORY யை ஒரு சாராரால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தவிர ஆராயப்பட வேண்டிய விசயங்கள் அனேகம் இருக்கின்றன. திருக்குர்ஆன் இயற்கை விஞ்ஞானமுமல்ல; அது எதனையும் பார்த்து அறிந்து பிரதிபலிக்கவுமில்லை. QURA’N IS NOT A SCIENCE; IT IS SIGN OF SCIENCE.

---o0o---


Thursday December 7, 2006 திண்ணை



Tuesday, September 1, 2009

வஹி - ஒரு விளக்கம்



ஹமீது ஜா·பர்



கடந்த அக்டோபர் திங்கள் 12 தேதி திண்ணையில் திரு H.G.ரசூல் எழுதிய “திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை, மறு வாரம் நண்பர் இபுனு பஷீரின் மறுப்பும் அதை தொடர்ந்து சென்ற வாரத்திற்கு முதல் வாரம் H.G.ரசூலின் ·பத்வா, சென்ற வாரம்(3-11-2006) தன்னுடைய கூற்றை நிலை நாட்ட சில முயற்சிகளை எடுத்துக்கொண்டிருகிறார். கட்டுரை வரம்பு மீறி இருப்பதோடு மட்டுமல்லாமல் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது.


அவரது கட்டுரை இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு புரிந்துவைத்திருக்கிற முஸ்லிமுக்கும், புரியாமல் இருக்கிற மாற்று மதத்தவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறதே தவிர வேறு ஒரு காரியத்தையும் செய்யவில்லை.


முதலாவதாக, “புனிதம் சார்ந்த கற்பிதம்” என்றாலே குர்ஆன் உண்மையற்றது; கற்பனையானது என்று பொருள் கொள்ளவேண்டியுள்ளது. கற்பிதம் என்றால் கற்பனையானது; that which is fictitious என்று பொருள் (ஆதாரம்: கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி). எனவே குர்ஆன் கற்பனை நிறைந்த நூல் என்பது அவரது முடிவு.


இரண்டாவதாக, அதனை இரண்டுவிதமாகப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒன்று, வரலாறு சார்ந்த அறிவு ரீதீயாக அணுகுதல், மற்றொன்று மூடநம்பிக்கையுடன் அணுகுவது.


அறிவு வரலாறு சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பது அவரைப் பொருத்தது என்றாலும் மூடநம்பிக்கை என்று எதை குறிப்பிடுகிறார் என்பதற்கு அவரே விளக்கம் அளிக்கவேண்டும். இஸ்லாத்தில் “ஆமன்துபில்லாஹி வ மலாயிகத்ஹி வ குத்துபிஹி......” -“அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவன் வேதங்களையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும், மரணத்திற்குப் பின்னால் எழுப்பப்படுவதையும் நம்புகிறேன்” என்று ஈமான் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் விதிக்கப்பட்டக் கடமை. அப்படி இல்லை என்றாலோ, அதில் சந்தேகம் வந்தாலோ அவன் முஸ்லிம் அல்ல என்பது சட்டம். யாரும் அல்லாஹ்வையும் பார்த்ததில்லை அவனது மலக்குகளையும் பார்த்ததில்லை. அப்படி இருந்தும் ஈமான் கொண்டிருப்பதால் அது மூடநம்பிக்கையா? ரசூல்ஜி, அல்லாஹ்வையும் மலக்குகளையும் பார்த்துதான் ஈமான் கொண்டுள்ளாரோ என்னவோ?


“பி ஃகைர ச்சுவன்ச்சரா, இத்திபா கர்னா,” இத்திபா கர்னா என்றால் பின் பற்றுவது என்று பொருள். ஏன் எவ்விடம் என்று கேட்காமல் பின்பற்றவேண்டும். தகுதியும் அறிவும் இருந்தான் காலம் உனக்கு விளக்கும், இதுதான் இஸ்லாம். ராணுவத்தில், அதிகாரிகளிடமிருந்து வரும் உத்திரவை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும். ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை; YES ஐ தவிர NO என்ற பேச்சுக்கே இடமில்லை. இதே கொள்கைத்தான் இஸ்லாத்தில் ஈமான் கொள்வதிலும்.


மூன்றாவதாக, நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்ட வசனங்கள் ஒலி வடிவானவை, பின்னரே எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது. ஒலிவடிவம் எழுத்துவடிவமாகும்போதே ஒரு மாற்றத்துக்குள்ளாகிறது என்பது முதல் உண்மை?


வஹி மட்டுமல்ல எந்த மொழியும் பேசும்போது ஒலிவடிவமும் படிப்பதற்காகப் பதியப்படும்போது எழுத்துவடிவமும் பெறுகிறது இதையெல்லாம் மாற்றம் என்றால் இதற்கு மேலாக கம்ப்யூட்டரிலும் டேப் ரிக்கார்டரிலும் பதியப்படும்போது மூன்றாவதாக ஒரு வடிவம் பெறுகிறதே அதை எந்த மாற்றத்தில் சேர்ப்பது?


இப்போது ஜபல் அல் நூர் என்று அழக்கப்படும் ஹிரா குகையில் தனிமையில் இறைவணக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முதல் வஹி வருகிறது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தோன்றி 'இக்ரஉ' - 'ஓதுவீராக' என்று கூறுகிறார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் 'மா அன காரியீன்' - 'எனக்கு ஓத தெரியாதே' என்கிறார்கள். ஜிப்ரயீல்(அலை) பெருமானாரைக் கட்டி அணைத்து மீண்டும் ஓதுவீராக என்று சொன்னபோது மீண்டும் அதே பதிலையே சொல்கிறார்கள். இவ்வாறாக மூன்று முறை கட்டி அணைத்து ஓதுவீராக என்று சொன்னபோது ஓதினார்கள். 96 ம் அதிகாரத்திலுள்ள முதல் ஐந்து வசனங்கள் முதலாவதாக இறங்குகின்றன.


இங்கே ஒன்றை கவனிக்கவேண்டும். கட்டி அணைத்தார்கள் என்றால் ஜிப்ரயீல்(அலை) மனித உருவில் அல்லது அதற்கும் மேலான ஓர் உருவில் தோன்றி இருக்கவேண்டும். நிச்சயமாக ஒளி வடிவில் இருக்கமுடியாது. அடுத்து “இக்ரஉ” என்று சொல்லும்போது அங்கு எதோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் “குல்” (சொல்வீராக, கூறுவீராக) என்று சொல்லியிருந்தால் உள் மனத்திலிருந்து வந்தது என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அப்படி இல்லை. (நான் படிப்பறிவற்றவனாயிற்றே எனவே)எனக்கு ஓத தெரியாதே என்று கூறியுள்ளார்கள்.


எல்லோராலும் மதிக்கப்படுகிற “King James Version” ல் இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது: “AND THE BOOK IS DELIVERED TO HIM THAT IS NOT LEARNED, SAYING, READ THIS, I PRAY THEE: AND HE SAITH, I AM NOT LEARNED.” (THE HOLY BIBLE, Isaiah 29:12.)


புனிதக்குர்ஆன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வழியாக நபிகளாருக்கு இறக்கப்பட்டது என்பது முதல் கருத்துமட்டுமல்ல முடிவான கருத்தும்கூட, மாற்றமுடியாத ஒரே கருத்தும் ஆகும். அல்லாஹ்வின் அருளால் நபிகளாரின் உள்மனத்தூண்டல் மூலமாக வெளிப்பட்டது என்பதும், குர்ஆன் நபிகளாரின் வார்த்தை; ஹதீஸ் நபிகளார் பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி தொகுப்பு என்பதெல்லாம் கருத்தல்ல; பேத்தல்கள், பிதற்றல்கள். அது யார் சொன்னாலும் சரி! அவர் கொய்ன்ராட் எல்ஸ்ட்டாக இருந்தாலும் சரி, சர் சையத் அஹமத் கானாக இருந்தாலும் சரி, குலாம் அஹமது பர்வேஸாக இருந்தாலு சரி, H.G.ரசூலாக இருந்தாலும் சரி இல்லை அவரைச் சார்ந்தவர்கள் வேறு யாராக இருந்தாலும் சரி.


இவர்களெல்லாம் யார்? தன் வாழ்நாள் முழுவதையும் குர்ஆனுக்காக அர்பணித்து வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் அளித்த முபஸ்ஸிரீன்களா? அல்லது, இந்த உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லை, இறைஞானமாகிய இர்·பான் என்ற கடலில் மூழ்கி முத்துக் குளித்த இறைநேசர்களா? குர்ஆனுடைய அறிவைக்கொண்டு தங்களின் அறிவை உரசிப் பார்த்திருக்கவேண்டும். மாறாக தங்களுடைய உலகக் கல்வியைக்கொண்டு குர்ஆனை உரசிப் பார்த்திருக்கிறார்கள், நிச்சயமாக தெளிவைத் தராது.


இப்படிப்பட்டவர்கள் இந்த காலத்தில்மட்டுமல்ல பெருமானார் அவர்கள் காலத்திலும் இருந்தார்கள். இது கவிஞனுடைய கூற்று என்று கூறினர்; பேய் பிடித்தவனின் பிதற்றல் என்றனர்; கற்பனை வெளியீடு என்றெல்லாம் கூறினர்.


ஆகவே அல்லாஹ்வே இதற்கு பதில் சொல்கிறான். “மேலும், நம் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) மீது நாம் இறக்கிவைத்த (வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால், (அவர் தம் புறத்திலிருந்தே இதனைக் கூறுகிறார் என்பதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் நீங்கள் கொண்டுவாருங்கள்;” (அல் குர்ஆன் 2:23)


மேலும் கூறுகிறான், “(எதையும் தம்) மன விருப்பப்படி அவர் பேசுவதுமில்லை, அது (அவருக்கு) அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறில்லை, வல்லமை மிக்க(ஜிப்ரயீலான)வர் (அவருக்கு) அதனைக் கற்றுக்கொடுத்தார். (அவர்)உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில் நம் ரசூல் முன்)நேராக வந்து நின்றார்.” (அல் குர்ஆன் 53:2-6)


உள்மனத்தூண்டல் - இல்ஹாம்

“மன் அமில பிமா அலிம, அல்லமஹுல்லாஹு மாலம் யஃலம்” ஒருவன் உள்ள அறிவை வைத்துக்கொண்டு செயல்பட்டால் (அது தொடர்பான)புரியாத அறிவுகளையும் அல்லாஹ் சொல்லிக்கொடுப்பான். இது நபிகளாரின் வாக்கு.


ஒருவன் எதைப்பற்றி சிந்திக்கிறானோ, அந்த சிந்தனை அடிமனத்தில் இறங்கி அவனுக்குத் தேவையான செய்தியை தேடிக்கொண்டிருக்கும். எப்போது accurate thought ஏற்படுகிறதோ அப்போது divine force அங்கு கலக்கும், அப்படி கலந்த பிறகு எதற்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கிறானோ அந்த விடை அவன் உள்ளத்திலிருந்து வெளிவரும். இதற்கு “இல்ஹாம்” - இறை உதிப்பு என்று பெயர். அவன் எந்த மொழியில் சிந்திக்கிறானோ அந்த மொழியிலேயே வரும், மாறுபட்ட மொழியில் வராது. எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதைப் பற்றிய செய்தி வரும். அதற்கு மாறுபட்ட வேறொன்று வராது.


உதாரணமாக ஒருவன் ஒரு பொருளை எங்கோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறான், வைத்த இடத்தை மறந்துவிட்டான், பொருள் மிக முக்கியமானது. எங்கெல்லாமோ தேடுகிறான்; தேடாத இடமில்லை, அண்ணன் தம்பி என்று யார் யாரிடமோ கேட்கிறான்; கேட்காத ஆளுமில்லை. களைத்துப்போய் உட்கார்ந்துவிடுகிறான், கவனம் வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. சற்று நேரத்தில் திடீரென்று “இந்த இடத்தில் வைத்தோம்” என்று தோன்றுகிறது. அந்த ஒரு வினாடி, உலகமே திரண்டுவந்து “இங்கே வைக்கவில்லை” என்று சொன்னால் அவன் நம்பமாட்டான், அங்கேதான் வைத்தேன் என்று ஆணித்தரமாகச் சொல்லி அதை எடுத்துக்கொண்டும் வருவான். அந்த தோன்றலுக்கு; அந்த மன உதிப்புக்கு இல்ஹாம் என்று பெயர். நீங்கள் படித்தவர்களாயிற்றே என்ன சொல்வீர்கள்? STRIKE ஆனது என்பீர்கள்.


பெருமானார் அவர்கள் சிந்திச்சுக் கிந்திச்சுக்கொண்டல்லாம் இருந்ததில்லை. தங்களது தோழர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள், வஹி வரும், அப்போது அவர்களது நிலை மாறும் அதாவது அவர்களது நெற்றி வியர்க்கும், உடம்பு கனக்கும். அது அவர்களுக்கு மணி ஓசைப்போல் கேட்கும்; சில சமயங்களில் ஜிப்ரயீல்(அலை) தன் சுயத்தில் தோன்றுவார்கள்; சில நேரங்களில் மனித உருவில் பெரும்பாலும் திஹியத்துல் கல்பி என்ற நபித் தோழர் உருவத்தில் தோன்றி வஹியை அளிப்பார்கள். அதை அப்படியே மனதில் ஏற்றி தம் தோழர்களிடம் சொல்லி இந்த வசனத்தை இன்ன இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள் என்று வரிசைப் படுத்துவார்கள்.


ஒரு சமயம் பெருமானார் அவர்கள் ஒட்டகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது வஹி வந்தது. அப்போது ஒட்டகம் சுமையின் காரணமாக நடக்கமுடியாமல் அமர்ந்துவிட்டது. வஹி ஒரு பொருள் என்றால் அதன் கனத்தை ஒட்டகத்தினால் சுமக்க முடியவில்லை; வஹி ஒரு நெருப்பு என்றால் அதன் உஷ்ணத்தை பெருமானார் அவர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ளமுடிந்தது. உள்மனத்தூண்டல் என்றால் தூல உடம்பில் மாற்றங்கள் ஏற்படாது.


ஆரம்பத்தில் ஜிப்ரயீல்(அலை) வஹியைச் சொல்லச் சொல்ல கூடவே பெருமானார் அவர்களும் சொன்னதால் இறைவனிடமிருந்து எச்சரிக்கை வந்தது. “(நபியே! ஜிப்ரயீல் வஹியை ஓதிக்காட்டும்போது நீர் அவசரப்பட்டு, அதனை ஓத நீர் நாவை அசைக்காதீர். ஏனென்றால் அதனை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம் மீதுள்ள கடமையாகும். ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதிக் காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீர் பின் தொடர்ந்து ஓதும்.” (அல் குர்ஆன் 75:16-18)


உள்மனத்தூண்டல் என்றால் இப்படி நாவை சுழற்றவேண்டிய அவசியமில்லை.உள்மனம் வெளிமனத்துக்குச் சொல்கிறது. அதை வார்த்தைகளாக வடிப்பதில் என்ன சிரமம் ஏற்படப் போகிறது? ஒரு கட்டத்தில் சில கிறுஸ்துவர்கள் “அஸ்ஹாபுல் கஹ்ஃப்” - குகை மனிதர்களைப் பற்றி பெருமானார் அவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் அப்போது அவர்களின் உள்மனம் உறங்கிக்கொண்டிருந்ததா?


நடந்தது இப்படி - பெருமானார் அவர்கள் தம் தோழர்களுடன் இருக்கும்போது சில கிறுஸ்துவர்கள் வந்தார்கள். 'முஹம்மதே! குகை மனிதர்களைப் பற்றி எங்கள் பைபிளிள் முன்னூறு வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் உங்கள் குர்ஆனில் முன்னூறு வருடமும் பின் ஒன்பது வருடமும் ஆக மூன்னூற்றி ஒன்பது வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. எங்களிடமுள்ள பைபிளும் அல்லாஹ் கொடுத்ததுதானே, எங்களிடம் ஒருமாதிரியும் உங்களிடம் ஒருமாதிரியும் அல்லாஹ் சொல்கிறானே! அது எப்படி சொல்லலாம்? அப்பொ நீங்கள் சொல்லும் இஸ்லாம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?' என்று கேட்க ரசூல்(ஸல்) அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை, பதில் தெரியவில்லை; வஹி வந்தால்தானே சொல்வார்கள், வஹி வரவில்லை. பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிப் பெற்றுகொண்டு சொன்னார்கள்: 'சூரியனைப் படைத்தவனும் அவன்தான், சந்திரனைப் படைத்தவனும் அவன்தான்; உங்களுக்கு சூரியக் கணக்குப்படி சொன்னான், எங்களுக்கு சந்திரக் கணக்குப்படி சொன்னான் ஆண்டவன்' என்றார்கள்.


எந்த வகையில் பார்த்தாலும் குர்ஆன் அல்லாஹ்வின் அருள் நபிகளாருக்கு உள்மனத்தூண்டலால் வெளிப்பட்டது என்பதற்கு குர்ஆனில்கூட ஆதரமில்லை. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மூலமாக இறக்கப்பட்டது என்பதுதான் உறுதியானது; ஆதாரப்பூர்வமானது.


ஹதீஸ்

நான்காவதாக ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும் என்ற மூன்றாவது கருத்து. இப்போது புத்தகங்களாக கிடைக்கின்றனவே அதற்குப் பொருந்தும்; “சஹி சித்த” என்ற ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் இருக்கின்றனவே அவற்றிற்குப் பொருந்தும். அதல்லாமல் வேறு எதற்கும் பொருந்தாது.


ஹதீஸ் என்றால் என்ன? நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னது; செய்தது; இது இரண்டிலுமில்லாமல் பிற நபித்தோழர்கள் செய்ததை அங்கிகரித்தது. இவை மூன்றும் நபி வழி ஆகும்.


ஏன் அவர்கள் காலத்தில் இவை எழுதப்படவில்லை? எழுதியிருந்தால் குர்ஆனும் ஹதீஸும் இரண்டரக் கலந்து குர்ஆன், தன் தனித்தன்மை இழந்துவிடும் என்பதால் “வஹியை எழுதிக்கொள்ளுங்கள், நான் சொல்வதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.” என்று பெருமானார் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். “லா தக்தூப அன்னி” என்னைத் தொட்டும் எதையும் எழுதாதீர்கள் என்று நவின்றுள்ளார்கள். ஆனால் குர்ஆன் நிறைவுபெற்ற பிறகு கடைசி காலத்தில் தாம் சொல்வதை குறித்துக்கொள்ள அனுமதித்துள்ளார்கள்.



திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதம்........? அடுத்துப் பார்ப்போம்.


அருஞ் சொற்கள்:

மலக்குகள்: வானவர்கள்; தேரர்கள்.

ஈமான்: உறுதியான விசுவாசம்; நம்பிக்கை (Dynamic Belief)

வஹி: இறை அறிவிப்பு

இல்ஹாம்: இறை உதிப்பு

ஜிப்ரயீல்: வானவத் தலைவர்

முபஸ்ஸிரீன்: குர்ஆன் விரிவுரையாளர்கள்

(ஸல்): ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்

(சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)

(அலை): அலைஹிஸ்ஸலாம் (சாந்தி உண்டாவதாக)

(ரலி): ரலியல்லாஹு அன்ஹு (இறைவன் பொருத்திக்கொள்வானாக)

---o0o---



Friday November 10, 2006 திண்ணை











தெளிவுபெறவேண்டும்



நேச குமார் தெளிவுபெறவேண்டும்

ஹமீத் ஜாஃபர்



'நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்' (அல் குர்ஆன்; 3:103)


யாரையும் மிரட்டவேண்டும் என்ற எண்ணம் நமக்கில்லை, மாறாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும், சமத்துவமும் அமைதியும் தழைக்கவேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதுதான் இஸ்லாத்தின் குறிக்கோளுமாகும். நேசத்துடன் வரும் கரத்தை பாசமென்ற கயிற்றால் பிணைத்தால் எவராலும் பிரிக்கமுடியாது என்பதே அதன் பொருள். திரு நேச குமார் தவறாகப் புரிந்துக்கொண்டார்.


'சுனாமி' வந்தபிறகு மனித நேயத்தை முன்வைப்பதின் அவசியத்தை உணர்ந்துள்ள திரு நேச குமாரை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் அதன் அவசியமே இல்லை. மனிதநேயமும் சகோதரத்துவமும் எங்கும் போய்விடவில்லை முன்னால்தான் நின்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை மறைத்திருக்கும் திரையை கிழித்துவிட்டால் போதும். ஒற்றுமையும் மனிதநேயமும் காலாகாலமாக இருந்து வரும் ஒன்று. கும்பினிகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற் காக செய்த சூழ்ச்சியில் அடிமைப் பட்டு, அதுவே உண்மை, அதுவே வரலாறு என்று நம்பிக்கொண்டு தன் வயிறு வளர்க்கும் ஒரு சில புல்லுருவிகளைக் கொண்ட அமைப்புக்களால் ஒட்டு மொத்த சமுதாயம் பாதிக்கப்பட்டு சகோதரத்துவத்தை சிறுகச்சிறுக இழந்துக்கொண்டிருக்கிறது என்பதை திரு நேச குமார் புரிந்துக்கொள்ளவேண்டும். 'மனிதர்கள் யாவரும் ஏக சகோதரர்களே எனும் தத்துவம் இஸ்லாத்தில் தேசிய, இன எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஓர் உயரிய கொள்கையாக இயங்குகிறது என்பதை நாம் மறுக்கவியலாது.' என்று நம் நாட்டின் இரண்டாம் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.


நான், எனது சொந்த விமரிசனங்களையோ அல்லது குறைகளையோ இந்து மதத்தின்மீது வைக்கவில்லை, உங்களால் எழுதப்பட்ட புராணங்களில் ஒரு சில பகுதிகளை சுட்டிக் காட்டினேன். வள்ளலார் ஐயா குறிப்பிடுவதுபோல்'....பிண்ட லச்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மை அறியாது அப்படியே கண்ணைமூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஒரு வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை, அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை...' ((ஆதாரம்: சித்திவளாகப் பேருபதேசம்))


மெய்நிலை கண்ட ஞானிகள்:


வள்ளலார் ஐயா அவர்களை 'மெய்நிலை கண்ட ஞானி' என நான் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டதன் மூலம், இன்னும் நீங்கள் மதங்களை புரிந்துக் கொள்ளவே இல்லை என்பதை தெளிவாகக்காட்டியுள்ளீர்கள். ஐயா அவர்கள் மட்டுமல்ல ராமகிருஷ்ண பரமஹம்சரும், கருவூராரும், திருவாரூர் தட்சிணா மூர்த்தி சுவாமிகளும் மெய்நிலை கண்ட ஞானிகள்தான். இஸ்லாத்தைப் புரியாமலே இஸ்லாத்தைப் பற்றி அவதூராக எழுதும் அன்பரே! ஏக இறை கொள்கையை எவர் ஏற்றுகொண்டு அதன்படி நடக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் விசுவாசிகள்(முஃமின்கள்)தான்.


'A Muslim, in the original meaning of the word, is someone who submits to the ONE AND ONLY GOD, regardless of whether he calls himself

a Jew, a Christian, or a Muslim.' - Religion on the Rise, by: Murad Wilfried Holfmann


'விசுவாசிகளாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாக விசுவாசித்து, நற்கருமத்தைச் செய்தார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி அவர்கள் இறைவனிடத்தில்
நிச்சயமாக உண்டு. மேலும் அவர்களுக்கு எந்தவித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.' (அல் குர்ஆன் 2:62)


இங்கு முஸ்லிம் என்று கூறவில்லை, விசுவாசிகள் (முஃமின்கள்) என்று இறை ஆவேசம் [நேச குமார் அகராதிபடி] கூறுகிறது. அதாவது எவர் எப்படி தன் இறைவனை பகவான் என்றோ அல்லது கர்த்தர் என்றோ அல்லது அருட்பெரும் ஜோதி என்றோ அல்லது அல்லாஹ் என்றோ நினைத்து அதில் கிஞ்சிற்றும் மாறாமல் ஓர் இறைக் கொள்கையுடன் இருக்கிறாரோ அவருக்கு நற்கூலி உண்டு என்பதே இதன் பொருள். பெயர் மாறினாலும் பெயரிடப்பட்டப் பொருள் மாறாது.


இருண்ட கண்டத்தில் அன்பர் இருந்துக்கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை என்னவென்றே புரியாமல் எதையெதையோ திரித்துக்கொண்டிருக்கிறார். நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு வெளியே இறைஞானிகள் இருக்க வாய்ப்பில்லை, மெய்நிலை காண வழியே இல்லை என்று இஸ்லாம் எங்கே சொல்லியிருக்கிறது ?


இஸ்லாத்தின் தோற்றம்:


இஸ்லாத்தை நபிகள் நாயகம் தோற்றுவிக்கவில்லை, எப்போது முதல் மனிதர் இவ்வுலகில் தோன்றினாரோ அப்போதே இஸ்லாமும் தோன்றிவிட்டது. மக்கள் பெருகப் பெருக இஸ்லாமியம் மறக்கப்பட்டு தான்தோன்றிதனமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நேர்வழிப்படுத்தவே அவ்வப்போது இறைதூதர்கள் தோன்றினார்கள்.


நபிகள் நாயகத்தால் தன் பெரிய தந்தையை கடைசி வரை திருத்த முடியவில்லை, தமது சொந்தக் கூட்டத்தாரை மாற்ற முடியவில்லை, மதினாக்காரர்களையே மாற்றமுடிந்தது, கடைசியில் வாளின் துணைகொண்டே குறைஷிகளை மனம் மாறவைக்க முடிந்தது என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள்.


நான், உங்களை நல்ல சிந்தனையாளர் என்று நினைத்திருந்தேன். இப்போது புரிகிறது தங்களுக்கு சிந்திக்கவும் தெரியவில்லை என்று. நோய் உள்ளவனுக்கு நோய் குணமாகவேண்டுமானால் மருத்துவர் கொடுக்கும் மருத்துவத்தையும் மருந்தையும் ஏற்றுகொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை வேண்டும். இதில் எதுவுமே இல்லையென்றால் நோய் குணமாகாது. சுருக்கமாகச் சொன்னால் வாதத்துக்கு மருந்து உண்டு குணப்படுத்திவிடலாம், பிடிவாதத்தை குணப்படுத்தமுடியாது என்று நான் சொல்லி நேசகுமார் தெரிந்துக்கொள்ளவேண்டிய நிலையிலில்லை என்று நினைக்கிறேன். இப்போது புரியும் ஏன் தன் பெரியதந்தையைத் திருத்தமுடியவில்லை என்று.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?:


இறை தூது வருவதற்குமுன்வரை 'அல் அமீன், அல் அமீன்' ('நேர்மையாளர்') என்று சொல்லிக்கொண்டிருந்த மக்கத்து குறைஷியர்கள் நுபுவத்து(இறைதூது) வந்தபின் நபிகளாரை ஏற்கமறுத்தனர் ஒரு சிலரைத்தவிர, ஆனால் மதினாவாசிகள் அவர்களை ஏற்று கொண்டனர். வாளின் துணைகொண்டு குறைஷிகளை மாற்ற முடிந்தது என்று யார் சொன்னார்கள்? ஐயா, நபிகளார் செய்த யுத்தங்கள் தற்காப்பு யுத்தங்களே என்று ஏற்கனவே சலாஹுதீன் அவர்கள் திண்ணையில் எழுதியிருந்தார்கள். இன்னும் மூன்றுகால் என்ற நிலையிலேயே இருக்கிறீர்கள். உங்களை ஒருவர் தாக்க வருகிறார், நீங்கள் என்ன சும்மாவா இருப்பீர்கள்? அவன் கை ஓங்குவதற்குமுன்பே உங்கள் கை ஓங்கிவிடுமில்லையா? அப்படி செய்தால் நீங்கள் செய்வது யுத்தமாகுமா?


நீங்கள் சொல்வதுபோல் யுத்த வசனங்களே குர்ஆனில் பெரும்பாலும் உள்ளன, நபிகள் நாயகம் யுத்த சிந்தனை உள்ளர்களாக இருந்தார், வாளினால்தான் இஸ்லாம் பரவியது என்று சொன்னால், இவர்கள் எதிரிகள் இருந்த இடத்திற்கு சென்று யுத்தம் செய்திருக்கவேண்டும். மாறாக எதிரிகளல்லவா இவர்கள் இடத்திற்கு வந்தனர். இவர்கள் சந்தித்த யுத்தங்களில் பிரசித்திவாய்ந்தது மூன்று யுத்தம். முதல் யுத்தமான பதுரு என்ற இடத்தில் நடந்த பதுருயுத்தம். (1) இது மக்காவுக்கு அருகில் இல்லை, மதினாவுக்கு அருகிலுள்ள இடம். (2) இவர்களின் படைபலம்: 313 வீரர்கள், 6 எஃகு கவசங்கள், 8 வாட்கள், 70 ஒட்டகங்கள், 5 குதிரைகள். (3) எதிரியின் படைபலம்: 1000 வீரர்கள், 700 ஒட்டகங்கள், 100 குதிரைகள், 600 கவசங்கள் மற்றும் ஆயுதங்கள், படையினருக்கு உற்சாகமூட்ட பாட்டுப்பாடும் பெண்கள் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி - ஜமால்)). இப்போது சொல்லுங்கள் யார் முதலில் வாளேந்தினார்கள், யாருக்கு வெற்றி கிடைத்தது ?


'THE MORE I STUDY THE MORE I DISCOVER THAT THE STRENGTH OF ISLAM DOES NOT LIE IN THE SWORD' - மஹாத்மா காந்தி யங் இந்தியாவில்


உம்ரா செய்ய நபிகள் கோமான் 1400 தோழர்களுடன் மக்கா வந்தபோது, அதை தடுத்த மக்கத்து குறைஷிகளுடன் ஹுதைபியா என்ற இடத்தில் தங்களுக்கு பாதகமான உடன்படிக்கையை செய்துக்கொண்டு உம்ரா செய்யாமல் திரும்பினார்களே! உங்கள் கூற்றுப்படி போர் குணம் கொண்டவராக இருந்தால் சண்டை செய்திருக்கலாமே!


இஸ்லாத்தை அரபு நாட்டிற்கப்பால் பரவச் செய்ய எண்ணிய நபிகளார் பெரும்படையை அனுப்பவில்லை. மாறாக ஐந்து பேர்களை (நபித்தோழர்கள்)தெரிவு செய்து ரோமானியப் பேரரசர் ஹெராக்ளியஸ், பாரசீக மாமன்னர் குஸ்ரு பர்வேஸ், அபிஸினிய மன்னர் நஜ்ஜாஷி, எகிப்திய மன்னர் முகெகிஸ், யெமன் நட்டரசன் ஆகியவர்களுக்கு ஐந்து கடிதங்களை அனுப்பிவைத்தார்கள். அதில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவில்லயானால் பெரும்போரை சந்திக்கவேண்டி வரும் என்று எழுதவில்லை. அவர்கள் எழுதியிருந்தது இதுதான்: 'ஹெராக்ளியஸ் பேரரசருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதியது, இஸ்லாத்தை ஏற்று ஈடேற்றம் பெறுங்கள் என்று தொடங்கி 'வேதத்தை உடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் (சம்மதமான) ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக! (அதாவது:) 'நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் ஆண்டவனாக எடுத்துக்கொள்ளோம்' (விசுவாசிகளே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களை நோக்கி) 'நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்கள் என்று நீங்கள் சாட்சியங் கூறுவீர்களாக!' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.' என்ற அல் குர்ஆனின் 3 ம் அத்தியாத்தின் 64 வது வசனத்தையும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இந்த கடிதம் இன்றும் இஸ்தான்புல் டப்காபி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.


நபிகளார் செய்தது மாற்றமல்ல சீர்திருத்தம்:


நபிகள் நாயகம் தொடர்ந்து தமது மார்க்கத்தில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியே வந்திருக்கிறார். வரலாற்றினூடே நபியவர்களைப் பார்க்கும்போது விஷமிட்டு கொலையுண்டிருக்காவிட்டால் அவர் காட்டிச் சென்ற இஸ்லாத்தில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், அதை அவரே செய்திருப்பார் என்று தோன்றுகிறது என்று உங்கள் அறிவில் தோன்றியதை காட்டியிருந்தீர்கள்.


இதிலிருந்து வரலாறும் தெரியவில்லை என்று தெரிகிறது. கைபரில் நபிகளாருக்கு யூதர்கள் அளித்த விருந்தில் ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால் ஒரு இறைச்சித் துண்டை வாயில் வைத்தவுடன் அருவருப்புடன் உடனே துப்பிவிட்டு, உணவில் விஷம் கலந்திருக்கிறது யாரும் உண்ணவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். ஆனால் பிஷர் இப்னு பராபின் மஃரூர் என்ற தோழர் மட்டும் அவர்கள் தடுக்குமுன்பே சிறிய துண்டை விழுங்கிவிட்டால் நொடிப்பொழுதில் இறந்துவிட்டார் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி - ஜமால்))


நபிகள் நாயகம் ஒருபோதும் மார்க்கத்தில் மாற்றம் செய்யவில்லை, சீர்திருத்தமே செய்துவந்துள்ளார்கள். ஆரம்ப காலத்தில் இருந்துவந்த மது அருந்துவது போன்ற சில செயல்களை சிறிது சிறிதாக தடை செய்து முற்றிலுமாக ஒழித்தார்கள். தன் மறைவுக்கு பிறகு மார்க்கம் நலிந்துவிடும் என்று தெரிந்துதான் 'ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்க ஒரு சீர்திருத்தவாதி(முஜத்திது-Mujaddid) வருவார். ' [நூல்: அபுதாவுத்] என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அரேபியாவில் இப்னு தைமிய்யா, அபு ஹஸன் ஷாதுலி ஈராக்கில் முஹைய்யிதீன் அப்துல் காதர் ஜெய்லானி, அபு ஹாமித் அல் கஜ்ஜாலி, பாரசீகத்தில் மொலானா ரூமி, அபு பயாசித் புஸ்தாமி, மலாயாவில் துவான் பட்ரா கரவான், இந்தியாவில் காஜா முயினுதீன் சிஷ்தி, சாஹுல் ஹமீது பாதுஷா இன்னும் பலர். ((ஆதாரம்: 1.Religion on the rise, by: Murad Wilfried Hofmann. 2.Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, by: Shu'ayb))


ஏன் இந்து மதத்தில் வரவில்லையா? வந்தார்கள், அவர்களை கண்டுகொள்ளவில்லை. வள்ளலாருக்குத்தான் எத்தனை தொல்லை! வள்ளலார் அருட்பா பாடியபோது அது அருட்பா இல்லை மருட்பா என்று ஆறுமுக நாவலரின் மாணாக்கர்களும், கதிர்வேல் பிள்ளை, திரு. வி. க. போன்றோர்கள் எதிர்ப்பு காட்டியபோது சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்கள் கதிர்வேலருக்கு எதிர்வேல் தொடுத்து அருட்பாவை கண்டனக்கணையிலிருந்து மீட்டு பெருமை காத்தது மறந்துபோன விசயமாக இருக்கலாம். ((ஆதாரம்: இஸ்லாம் - தமிழ் சில பண்பாட்டுக் கூறுகள் என்ற ஆய்வு நூலில், பேராசிரியர் டாக்டர் சே.மு.மு.முஹம்மது அலி)) பட்டினத்தார்கூட (ஆன்மிகம் என்ற) 'கடைவிரித்தேன் வாங்குவாரில்லை, கடை எடுத்தேன் கேட்பாரில்லை' என்று கூறுகிறார்.


ஆக எல்லாமதங்களிலும் அதன் தூய்மை கெடாதிருக்க பாதுகாவலர்கள் தோன்றாமலிருக்கவில்லை. சுய விமரிசனமில்லாத அத்தகைய ஞானிகளை பைத்தியக்காரர்கள் என்று முத்திரை குத்தி ஓரங்கட்டிவிட்டு போலிகளை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவது மக்களின் தலைவிதியாகிவிட்டது. எல்லா மதங்களும் தனக்கென ஒரு கோட்பாட்டை வரையறுத்து வைத்துள்ளது. அவற்றை தெரிந்துகொள்ளாமல் இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் அவற்றை திரித்து சொல்வதுதான் வேதனைக்குறியது. அதனால்தான் மனிதநேயம் கெட்டுவருகிறது. மனிதநேயத்துக்கு முன்கையெடுத்து விளக்கங்கள் அளித்தால்கூட அது பயங்கரவாதம் என்று இஸ்லாத்தின்மீது முத்திரை குத்துவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.


இறைவணக்கம்


(நபியே நீர் கூறும்)'நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரைப் படைத்து போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. ' (அல் குர்ஆன் 6:162)


இறைவணக்கத்தின்போது அனுசரிக்கப்படும் செயல்களுக்கு காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கை பூராவும் தேடுதலில் இருக்கநேரிடும். அதேசமயம் அவற்றுக்கு காரணமில்லாமலில்லை, நமக்கு தெரியவில்லை. தெரிந்தபிறகுதான் செய்வேன் என்றால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கிடைக்கும் பதில் மிக சாதாரணமானதாக இருக்கும்பட்சத்தில் இதற்கு இத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லயே என்று தோன்றும். 'அல்லாஹ் சொன்னான் செய்கிறோம். பெருமானார் சொன்னார்கள் செய்துகாட்டினார்கள், பின்பற்றுகிறோம்' என்பதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு. இது மூட நம்பிக்கை அல்ல, இது ஈமானின் (நம்பிக்கை) ஒருபகுதி. அறிவும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு காரணம் தனக்குத் தானாகத் தெரியும்.


ஹஜ் செய்வது என்பது நபிகளார் பிறப்பதற்குமுன்பே அரபு மக்களிடையே நடந்துவந்த வணக்கமாகும். கி.பி. 605 ம் ஆண்டு, அப்போது பெருமானாருக்கு 35 வயது, நபித்துவம் வருவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஃபத்துல்லாஹ்வை சீர்படுத்திக்கொண்டிருந்தபோது ஹஜ்ருல் அஸ்வத் என்று சொல்லப்படும் கருப்புக் கல்லை யார் வைப்பது என்று நான்கு கோத்திரக்காரர்களுக்கிடையே சர்ச்சை நடந்தது. அதன் தீர்ப்பை நபிகளாரிடம் விட்டபோது அவர்களின்முடிவுப்படி நான்கு கோத்திரத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஒருமித்து எடுத்துவந்து அதன் உரிய இடத்தில் பெருமானார் பதித்தார்கள். அது கஃபாவின் வெளியே இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் உள்ளே அல்ல. மக்கா வெற்றிக்குப் பிறகு கஃபாவின் உள்ளே இருந்த அனைத்து விக்ரஹங்களையும், ஓவியங்களையும் அழித்தார்கள். அந்த கல் இருக்குமிடத்திலிருந்துதான் தவாஃப் செய்வது தொடங்கப்படுகிறது. அப்படி இல்லையானால் ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய இடத்திலிருந்து தொடங்குவார்கள். அதேபோன்றுதான் தொழுகையும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் கஃபாவை நோக்கித்தான் தொழவேண்டும். எதிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும் என்ற கொள்கையே தவிர சிலை வணக்கமல்ல. சிந்திப்பவர்களுக்கு தானாகப் புரியும்.


ஹஜ்ஜின்போது குர்பானி கொடுப்பது, சாத்தானுக்கு கல்லெறிவது போன்ற அனைத்து காரியங்களும் அடையாளமாக (Symbolic) செய்யப்படுபவைகளாகும். குர்பானி கொடுப்பது இறைவனுக்கு சாப்பாடு போடுவதோ அல்லது அபிஷேகம் பண்ணுவதோ அல்ல. நபி இபுறாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வுக்கு மரியாதை செய்வதாகும். இப்போதும் ஹஜ்ஜின்போது குர்பானி கொடுக்கப்படும் மிருகங்களின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.


கிப்லா


குறிப்பிட்ட இடத்தில் இருப்பிடத்தை(கிப்லா) உடைய இறைவன் என்று இடைதலைப்பு கொடுத்து, அதில் ....நபிகள் நாயகம் தம்மைப் பின் பற்றியவர்களை ஜெருசலேம் நகரில் உள்ள இந்த இறைவனை நோக்கி தொழச் செய்தார், என்று எழுதி மீண்டும் உங்கள் இந்துத்துவாவை திணிக்கப் பார்க்கிறீர்களே! நேச குமார் ஐயா! சூரியனை மறைக்க முயற்சிக்கிறீர்கள், அது முடியாத காரியம்.


எங்கும் நிறைந்திருக்கும் சர்வசக்தனாகிய இறைவனை நோக்கி எந்த முஸ்லிமும் தொழவில்லை. தொழுவது கஃபாவை முன்நோக்கி. 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே(உரியன). - (அல் குர்ஆன் 2:115)


கிப்லாவை ஏன் மாற்றினேன் என்ற காரணத்தையும் அவனே தன் திருமறையில் 2: 144, 148 வசனங்களில் கூறுகிறான். மேலும் உங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு...'(நபியே! 'முஸ்லிம்கள் முன்னர்) நோக்கிவந்த 'கிப்லா'விலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?' என, மனிதர்களில் அறிவீனர்கள் சிலர் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் விரும்பியவர்களை (மேலான) நேரான வழியில் செலுத்துவான்.' (அல் குர்ஆன் 2:142) என்று பதிலையும் அவனே சொல்லிவிட்டான். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வேண்டுமென்றே கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.



வர்ணாசிரமம்


ஒரு மனிதர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர் மருத்துவர், பொறியாளர், விவசாயி என்று அழைக்கப்படுகிறார். அதுபோன்று எந்த சமயத்தைச் சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த சமயத்தின் பெயரால் பிரிக்கப்படுகிறார். இது மனிதன் பிறந்தபிறகு நடப்பவை. அதல்லாமல் மனு சாஸ்திரம் சொல்வதுபோல் படைக்கப்படும்போதே வர்ணம் பூசி ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் மனிதனைப் படைக்கவில்லை. 'மனிதன், (தான்) எதனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றான் என்பதை சிறிது கவனிக்கவும். குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரைக்கொண்டே சிருஷ்டிக்கப்பட்டான்' (அல் குர்ஆன் 86:5,6) என்று கூறும் இறைவன், 'அவனுடைய துர்நடத்தையின் காரணமாக பின்னர்தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக ஆக்கிவிடுகின்றோம்' (அல் குர்ஆன் 95:5) என்றும் கூறுகின்றான். இறைவன் கருணையாளன், அருள்புரிபவன், கொடையாளன்தான் அதேநேரம் கண்டிப்பவன், தண்டிப்பவன், அடக்கியாள்பவன்கூட. நீங்கள் அன்பு பாராட்டும் உங்கள் பிள்ளை தவறு செய்தால் கண்டிப்பீர்களா? இல்லை கண்டுக் கொள்ளாமலிருப்பீர்களா? நான் எல்லாதவறுகளும் செய்வேன் ஆனால் அவன் தண்டிக்கக்கூடாது, கருணைக்காட்டிக்கொண்டிருக்கவேண்டும். இதுதான் உங்கள் கூற்றா? முடிவில் 'சர்வசித்தியுடைய கடவுள்' கோட்பாடக இது தென்படவில்லை என்று உங்கள் அறியாமையை நன்றாக வெளிப்படுத்திவிட்டார்கள்.


வஹி என்ற இறைதூது


அதை பற்றிய ஒரு பெண்ணிற்கு பிரசவம் இன்பவேதனையா அல்லது துன்பவேதனையா அல்லது அது எப்படிப்பட்டது என்று பிரசவமே ஆகமுடியாத மலடிக்குத் தெரியாது. இது எந்தமாதிரியான வேதனை என்று பெண்களாலும் சொல்லமுடியாது, எழுத்தில் வடிக்கவும் முடியாது. அதுபோன்றுதான் வஹி என்ற இறைதூதும். அதை விளக்கி எழுதமுடியாது, ஆன்மிகத்துடன் தொடர்புகொண்ட அதை, அந்த அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். மாம்பழத்தின் சுவை மறத்துப்போன நாவிற்கு தெரியாது.


குர்ஆனின் வசனங்கள்


திருகுர்ஆன் வசனங்களுக்கு பொருள் பார்க்கும்போது, அதன் காலகட்டத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பொருள் விளங்கும். தவிர குர்ஆனின் மொழி பெயர்ப்பை மட்டும் பார்க்கக்கூடாது, விரிஉரையிலும் கவனம் செலுத்தி விளக்கம் பெறவேண்டும். அரபு மொழியிலிருக்கும் குர் ஆனுக்கு அதே மொழியில் இருபதுக்கும்மேற்பட்ட விரிஉரைகள் உள்ளன. எனவே குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமில்லை,நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் திரு குர்ஆனில் 24-ம் அதிகாரத்தில் மூன்றாவது வசனம். இது விபச்சாரத்தைப் பற்றியது. நான்கு திருமணங்கள் வரை செய்துகொள்ள அனுமதிக்கும் இஸ்லாம் விபச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறது, அதற்கு கடுமையான தண்டனையும் வழங்குகிறது. அதன் பொருள்: '(கேவளமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை, அல்லது இணைவைத்து வணங்குபவளை அன்றி (மற்றெவளையும்) மணந்துகொள்ளமாட்டான். (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவளமான) ஒரு விபசாரனை, அல்லது இணைவைத்து வணங்குபவனை அன்றி (மற்றெவனையும்) மணந்துகொள்ளமாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. '


அப்போது அரபு நாட்டில் விபச்சாரம், குடி, அடிமைத்தனம் போன்றவைகள் மலிந்துகிடந்த காலம், அந்த காலகட்டத்தில் இது அருளப்பட்டது. அதை மறந்துவிட்டு மாற்று மதத்துப் பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பொருள் கொள்வது அபத்தமாகும். அதுபோன்றே இரண்டாம் அதிகாரம் 106 ம் வசனமும்.

'திருகுர்ஆனை அல்லாஹ் அருளும்போது பல சமயங்களில் ஏற்கனவே தாம் தெரிவித்ததை மாற்றிவிடுகிறார்' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு ஆதாரமாக இரண்டாம் அதிகாரத்தில் 105 ம் வசனத்தை காட்டியுள்ளீர்கள். அது 105 ம் வசனமல்ல 106 ம் வசனமாகும். அதன் பொருள்:


'(நபியே! முந்திய வேதங்களில் இருந்த) யாதொரு வசனத்தை நாம் மாற்றிவிடுவோமாயினும் அல்லது அதை மறக்கடித்து விடுவோமாயினும், அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிட சிறந்ததை (இவ்வேதத்தின் மூலம்) நாம் கொண்டுவருவோம். அல்லாஹ், எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையோன் என்பதை நீர் அறியவில்லையா?'


முந்திய வேதமென்பது, முந்திய நபிமார்களான மூசா(Moses அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்கு தெளறாத்(Torah)வேதத்தையும், தாவுத்(David அலை)அவர்களுக்கு ஜபூர்(Psalms)வேதத்தையும், ஈசா(Jesus அலை) அவர்களுக்கு இன்ஜில்(Gospel)வேதத்தையும் அருளிய இறைவன் அதைவிட சிறந்ததை இவ்வேதத்தின் மூலம் கொண்டுவருவோம் என்று கூறுகிறான். நீங்கள் குற்றம் சாட்டுவதுபோல் குர்ஆனை மாற்றவுமில்லை, தாமருளியதை திரும்பப்பெறவுமில்லை. அந்தந்த காலத்தில் இருந்த சமுதாயங்களின் நிலமைக்கும் அவசியத்திற்கும் ஏற்பவே வேதங்கள் அருளப்பட்டன.


போதிய நேரமில்லாமை காரணமாக உங்களுடைய சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் அளிக்கமுடியவில்லை, என்றாலும் நான் கொடுத்துள்ள இந்த சிறிய விளக்கம் உங்களை திருப்திப்படுத்தாது என்பது நிச்சயமாக தெரியும். உங்களுடைய எழுத்தில் குழப்பங்களும், முன்னுக்குப்பின் முரணான செய்திகளும் மலிந்து கிடக்கின்றன. வேண்டுமென்றே திரித்து கூறப்பட்ட செய்திகளும் இதிலடங்கும். ஏடுகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து புறப்படும் சந்தேகங்களுக்கு கற்றறிந்த சான்றோர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வதுதான் அறிவுடமை, அதல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் திண்ணையிலும் இணைய தளத்திலும் எழுதினால் தெளிவு கிடைக்காது. மாறாக குழப்பமும், வேதனையும்தான் மிஞ்சும்.



'ஓம்.. பஹோர் பஹாவ பஸுஹா,

ஒம்.. தஸய்யா விதுர்வானீனம், பஹர்க்கஹோ,

தேவ்ஸத்யா தீமஹய்ய தீமஹவு,

பர்ச்ச வதாயத.'


என்ற பிரணவ மூலமந்திரம் அல்லது காயத்ரி மந்திரத்திற்கு தெளிவான விளக்கம் எப்போது உங்களுக்குத் தெரியவருமோ, அப்போது இந்து மதமும் தெரியும் இஸ்லாமும் புரியும்.


'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு'


இவண்,

Hameed jaffer,



குறிப்பு:- குர்ஆன் வசனங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு: அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் தர்ஜுமதுல் குர்ஆன்.



Friday Jan 21, 2005 திண்ணை




மறுமலர்ச்சி

மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்


திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம் வெளியிட்ட திரு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


பெண்களை ஓரங்கட்டும் போக்கையும், ஆணாதிக்கத்தன்மையையும், வஹாபியிஸ அடிப்படை வாதத்தின் பாதிப்பையும் எதிர்த்து புரட்சி செய்துக்கொண்டிருக்கும் திருமதி ஆஸரா நொமானி பங்கேற்கும் 16 மற்றும் 18 தேதி நிகழ்ச்சிகளை வரவேற்காமல் இருக்கமுடியாது.


எத்தனை காலத்திற்கு ஆண்கள் பின்னால் தனி இடத்தில் நின்று தொழுவது? நாங்கள் என்ன அடிமைகளா? இல்லை பிள்ளை பெறும் எந்திரங்களா? போதும் பதிநான்கு நூற்றாண்டுகள் பட்ட அவதி. எங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. இனி நாங்கள் முன் நின்று தொழுகை நடத்துவோம், எங்களுக்குப் பின்னால் ஆண்கள் நிற்கட்டும் என வீறுகொண்டு வேங்கை என சீறி வரும் மாதர்குல மாணிக்கங்களை வருக! வருக!! வரவேற்போம்.


நடக்கவிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்மூலம் உலக இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படப்போவதை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. மகிழ்ச்சியில் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.



அதற்குமுன் சில வார்த்தைகள்....


எந்த ஒரு காரியத்தையும் சொல்வது சுலபம். அதை செய்யும்போதுதான் அதன் தன்மை, இடர்பாடு, பொருப்பு, சிரமம், பலன்கள் புரியும். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் எல்லோராலும் செய்ய முடியாது. அதற்கென்று சில தகுதியும் வலிமையும் வேண்டும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு இஸ்லாத்தில் சில காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 'இமாமத்' என்று அழைக்கப்படும் முன் நின்று தொழ வைப்பதுவும் ஒன்று.


ஆணும் பெண்ணும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை, ஒரு நேர தொழுகையை விட நேர்ந்தால் அடுத்த நேர தொழுகையின்போது விட்டத்தொழுகையை நிறைவேற்றவேண்டும் என்பது சட்டம். ஆனால் உபாதையுள்ள அந்த ஆறு நாட்களிலும், பிரசவ காலங்களிலும் விடுபடும் தொழுகையை பின்பு நிறைவேற்றவேண்டும் என்ற சட்டம் பெண்களுக்கு இல்லை. இத்தகைய இயற்கை அமைப்பு பெண்களுக்கு அமைந்திருப்பதாலும் இமாமத் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



இஸ்லாத்தில் மட்டும்தானா? மற்ற மதங்களில் இல்லையா....?


இஸ்லாத்தில் மட்டும் இந்த தடையா? மற்ற மதங்களில்... ஏன் இந்து மதத்தில் அர்ச்சகர்களாகவோ பூசாரிகளாகவோ பெண்கள் எந்த கோவிலிலாவது இருக்கிறார்களா? ஏன், கற்பகிரஹத்துக்குள் பெண்கள் செல்ல முடியுமா? அங்கு செல்ல அனுமதி கிடையாதே! பெண் தெய்வமாகிய மீனாட்சி அம்மனாக இருந்தாலும் சரி அல்லது மாரியம்மனாக இருந்தாலும் சரி அபிஷேகம் செய்யவும் அலங்காரம் செய்யவும் ஆண்களுக்கே அனுமதி உண்டு. பெண் தெய்வம், நாங்கள்தான் செய்வோம் என்று எந்த பெண்ணும் குரல் எழுப்ப முடியாது.


இந்து மதத்தில் இப்படி என்றால் கிருஸ்துவ மதத்தில் ஒரு பெண் பாதிரியாரையோ, ஒரு பெண் பிஷப்பையோ காட்டமுடியுமா? அது எவாஞ்சலிக்களாகட்டும் பெந்தகொஸ்தேயாகட்டும் அல்லது மார்த்தோமாவாகட்டும், ஜாக்கோபைட்டாகட்டும் அல்லது ரோமன் கத்தோலிக்காகட்டும் சிரியன் கத்தோலிக்காகட்டும் எந்த பிரிவிலாவது காட்டமுடியுமா?


அப்படியானால் இந்து மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பால் வேற்றுமை காட்டப்படுகிறதா? இல்லை பெண்கள் அடக்கியாளப்பட்டு ஆணாதிக்கம் ஓங்கி நிற்கிறதா? இல்லை பெண்கள் அடிமைப் படுத்தப்படுகிறார்களா? இல்லையில்லை, அங்கேயெல்லாம் கிடையாது இஸ்லாத்தில் மட்டும்தான் பெண்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள்.


அறிவின் ஆணவம் ஆஸ்ரா நொமானியின் கண்ணை மறைத்திருக்கிறது, பட்ட பிறகுதான் ஞானம் பிறக்கும். யாராவது எங்கேயாவது இஸ்லாத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் போதும் திரு. ஆசாரகீனனுக்கு அல்வா தின்பதுபோலாகிவிடும். உடனே வஹாபியையும் இடது சாரியையும் கூடவே மவுண்ட் ரோடு மா(ஒ)வையும் மென்று துப்புவது பழக்கமாகிவிட்டது. இதில் அவருக்கு சந்தோஷம் இருக்குமென்றால் அதை கெடுக்க நான் விரும்பவில்லை. நன்றாகவே மென்று துப்பட்டும். இதிலாவது அவரது மனம் அமைதி பெறட்டும், வாழ்த்துக்கள்!


இவண்,

ஹமீது ஜாஃபர்.

Friday March 11, 2005 திண்ணை

அஸ்ரா நொமானி

அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை

ஹமீது ஜாஃபர்





இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.


இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம்! அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.


தமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.


மொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த 'தீனே இலாஹி' யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.


இப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.


இறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி!


இது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.


எனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. 'What they are today in the result of what they were yesterday'.

---o0o---


Friday April 8, 2005 திண்ணை