Friday, December 4, 2009

வாழ்வில் வெற்றி

‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது


ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் தொடர்பு உண்டு என்பதை வேதாந்திகள், சித்தாந்திகள்
மட்டுமல்ல, மனத்தத்துவ ஆராய்ச்சி வல்லுனர்களும் கூறுகின்றனர். ஆத்மா என்பது என்ன?
ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் இடையேயுள்ள உறவும் தொடர்பும் என்னென்ன? என்பதைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஏக இறைவன் பற்றிய எண்ணம் வராமல் போகாது.

மனித உடல், அதனுள் குடிகொண்டிருக்கும் ஆத்மா இவை இரண்டையும் படைத்து, இயக்கியும் வரும் இறைவன் ஆகிய மூவற்றிற்கும் இடையேயுள்ள பந்தத்தைச் சுற்றி எழுந்தவைதான் உலகின் மதங்கள் அனைத்தும். உடல் என்றோ ஒருநாள் மாய்ந்து கட்டையாகி விடுகின்றது. உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பு மரணத்தோடு முடிந்து விடுகின்றது. பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்ந்த பின்னர் இறப்பதும் இயற்கையின் நியதிகள் என்றால் உடலோடு தொடர்பு கொண்டிருக்கும் ஆன்மாவிற்கும் மரணம் உண்டா?

ஆன்மா இறப்பதில்லை என்பது இஸ்லாமியக் கோட்பாடு. அங்ஙனமாயின் முடிவு என்ன? மரணம் என்பது மறு உலக வாழ்வுக்குப் புகும் வாயில். மரித்தபின் ஆன்மாவிற்கு வாழ்வு உண்டு. நரகம், சொர்க்கம் என்பதைப் பற்றிய தத்துவார்த்தங்கள் எல்லாம் ஆன்மாவைப்பற்றி நிற்பனவையே.

நபிபெருமானார் அவர்களிடம் ஆன்மா எத்தன்மையானது என்று ஒரு சமயம் கேட்கப்பட்டபோது அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்:

"ஆன்மா என்னுடைய 'அம்ரி'ல் உள்ளது."

இவ்வாறு விடை கூறும்படி திருநபியவர்களுக்கு இறைவன் அறிவித்தான். 'அம்ர்' - அம் என்ற பதத்திற்கு கட்டளை, மட்டுதிட்டம் இல்லாதது, விவரிக்க முடியாதது, சூக்கும உலகத்தைச் சார்ந்தது என பலபொருள்கள் உள்ளன. இப்பொருள்களிலிருந்து ஆன்மா இத்தன்மையதுதான் என விவரிக்க முடியாததாகப் படலாம், ஆனாலும் திருகுர்ஆனின் மற்றொரு திருவசனம், "நாம் அதில் 'மனித சரீரத்தினுள்' நம்முடைய உயிரை ஊதினோம்" என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நபிபெருமான் அவர்களும் ஆண்டவன் ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார்கள். இங்கு சிந்திப்பவர்களுக்கு ஓருண்மை புலப்படுகின்றது. "தன்னுடைய உருவத்தில்" என்பது மனித சரீரத்தைக் குறிப்படுவதல்ல. ஏனனில் இறைவன் அரூபி; மட்டுதிட்ட மில்லாதவன்.

மேற்கூறிய திருகுர்ஆனின் திருவசனத்தையும் திருநபியவர்களின் திருமொழியையும் இணைத்துப் பார்த்தால் ஆன்மா இறைவனுடைய அம்சத்தின்பால் பட்டதென்பதும் அவனோடு மிக நெருங்கிய பந்தமுள்ள தென்பதும் தெரியவரும். இத்தகைய ஆன்மா உயிரென்றும் "ரூஹ்" என்றும் பேசப்படுகின்றது.

இத்தகைய ஆன்மா மனித சரீரத்தினுள் குடி கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மாவின் தீராத வேட்கைதான் எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டுமென்பது. ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதும், அடக்கி ஆள்வதும் அதன் வருங்கால வாழ்விற்கு வழிகோலுவதும், மனித உடலின், மனித மனத்தின் கடமைகளாகும். ஆன்மாவோ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சுதந்திரம் பெற்றிருப்பது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் அரும்பாடு படவேண்டும். அதைக் கட்டுப்படுத்தி பரிசுத்தப் படுத்துவதற்கோ மனிதன் மிகப் பெரும்பாடு படவேண்டும். ஐம்புலனாசைகளை அடக்கி உலக இச்சைகளை ஒதுக்கி இவ்வுலக வாழ்வைத் துறந்தும், துறவறம் பூண்டும் உடலையும் மனத்தையும் ஒழுங்குபடுத்தி ஆன்மாவை பரிபக்குவப்படுத்த வேண்டுமென்பது ஒரு மார்க்கத்தின் கொள்கை.

இஸ்லாமோ துறவறத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எண்ணம், சொல், செயல், மூன்றையும் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து நித்திய வாழ்க்கையை நடத்தி சில சித்தாந்தங்களில் உறுதியான நம்பிக்கை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஆதி ஒருவன், தொழுகை ஐவேளை, நோன்புடைமை, போதியநல் ஏழைவரி, ஹஜ் ஆகியவை எல்லாம் இவ்வுலக வாழ் விலிருந்துகொண்டே மன, மொழி, மெய்களை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவருவதற்கே. மனிதன் எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவனாக இருப்பினும் அவன் ஆற்றல்கள் அனைத்தையும் மிஞ்சி நிற்கும் சக்தியொன்று அவனை ஆட்டுவிக்கின்றது. அச்சக்தியே அல்லாஹ். அவனின் அன்பைப் பெறுவதற்கு, அவனை அணுகி அணுகி அவன் பக்கமாக வர முயல்பவன் ஆன்மாவை பரிபக்குவப்படுத்தி அவன் வருங்கால சுக வாழ்விற்கு அடிகோலுபவனாவான்.

இவ்வுலக வாழ்வில் இறைவன் வழி நிற்பவன் மறுமை வாழ்வில் நற்பலன் எய்துகிறான். இங்கு தீய கர்மம் செய்தவன் மறு உலகில் தண்டனையையும், வேதனையையும் அனுபவிக்கிறான். "(இறைவா!)உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம், நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவ்வழி அவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதப்பியவர்களோ சென்ற வழியல்ல."

இறைவனை நேசிப்பது ஒன்றின் மூலமாகவே ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தமுடியும். "ஒருவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு கெஜம் அளவு என்னை நெருங்கினால் நான் இரண்டு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்வேன்." என இறைவன் நபிபெருமானவர்களுக்கு அறிவித்திருக்கிறான். இறைவனிடம் உண்மை அன்பிருந்தால் ஒருவன் மற்றெல்லாவற்றையும் விட இறைவனையே மிக மிக நேசிப்பான். அவன் ஒவ்வொரு செயலும் இறைவனின் கருத்தின்படியே நடக்கும். இறைநாட்டத்தில் நடப்பதன்றி வேறு எண்ணம் அவனிடம் இருக்காது. "உங்கள் பிதாக்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும். உங்கள் மனைவியரும், நீங்களும் முயன்று சேகரித்த பொருட்களும் குறைந்துபோகுமென நீங்கள் அஞ்சுகின்ற உங்கள் வியாபாரங்களும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் உங்கள் வாசஸ்தலங்களும் ஆண்டவனை விடவும், அவனுடைய இரசூலைவிடவும், அவனின் பாதையில் முயற்சி செய்வதை விடவும் உங்களுக்கு அதிகம் பிரியமுள்ளதாக இருப்பின், இறைவனுடைய கட்டளை வருவதை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். இறைவன் வரம்பு மீறுகிறவர்களை நேர்வழியில் நடத்திச் செல்வதில்லை" என்று இறைவன் கூறுகிறான்.

மனிதன் இறையன்பு காரணமாக நேர்வழி செல்லத் தவறிவிட்டால் அவன் தன் ஆன்மாவிற்கு, அவன் தன் வருங்கால வாழ்வுக்கு ஊறு விளைவித்தவனாக ஆகிவிடுகின்றான். ஆன்மாவைப்
பக்குவப்படுத்தும் வழி வகைகளிலிருந்து தவறி விட்டவனாகிவிடுகின்றான். "முஹாசபா" வையும், "முராக்கபா" வையும், "முஷாஹிதா" வையும் கடைபிடிக்கத் தவறியவனாகி விடுகின்றான். இத்தகையவர்களின் ஆத்மா, மனித சரீரம் இறந்துவிட்டபின்னர் தான் பெறவேண்டிய உயர் பதத்திற்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதாக மாட்டாது.

"எவன் தன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றியடைந்து
விட்டான்; எவன் அதை பாவத்தில் புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்" என்பது திருமறையின் வசனம். "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவனிடம் செல், அவனிடம் நீ திருப்தி கொள், உன்மீது அவன் திருப்தியடைகிறான், நீ நல்லடியார்கள் குழுவில் சேர்ந்து என் சொர்க்கத்திடம் நீ நுழைந்து விடு" என இறைவன் கூறுவான் என்பது திருகுர்ஆனின் மற்றோரிடத்தில் வரும் வசனங்களாகும்.

இவ்வுலக வாழ்வில் சன்மார்க்கத்தின் வழிநின்று இறை நேசத்தால் பரிபக்குவப்படுத்தப்பட்ட
ஆன்மாவைப் பெற்றுவிட்டவர்களின் மரணம் எப்படி சம்பவிக்கும் என்பதை கவி அல்லாமா இக்பால் அவர்கள் ஓரிடத்தில் கூறுகிறார்:

"மூமின் என்பதைப் பற்றிய ஓரு அடையாளம் நான் சொல்லுகிறேன்
மரணம் அண்டி வருங்காலை அவன் உதட்டில் புன்னகைத் தழுவும்."


தூக்கம்போல் சாக்காடு என்பார்களல்லவா? இஸ்லாம் தூக்கத்தையும் ஒருவித மரண நிலை என்றே கருதுகிறது. இரவு துயில் சென்று காலை எழுவதற்கும், மரித்தபின் ஆன்மா விழித்தெழுவதற்கும், உலக வாழ்வில் கண்துயில்வதையும் பிற்றை நாள் உயிர்த்தெழுவதையுமே உவமானமாக சுட்டிக் காட்டுகின்றனர் இஸ்லாமிய ஆன்ம ஞான வல்லுனர்கள்.

நல்வாழ்வு வாழ்ந்து இறைபக்தியின் மூலம் ஆத்மாவைக் கட்டுப்படுத்தி மறுமை வாழ்வுக்குத்
தன்னை பக்குவப்படுத்தி இறைவனின் 'அம்ர்' என்ற ஆன்மா இறைவனின் பக்கமாக மிக மிக
அண்டிவரச் செய்து கொண்டவர்களின் மரணம் இன்பகரமானது, அல்லாதார் மரணம் துன்பமிக்கது.

இந்த தத்துவார்த்தங்களையெல்லாம், ஆன்னமஞான உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி நிற்கின்றது தக்களை பீர்முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்களின் பக்திப் பரவசமிக்க ஆன்ம விசாரணை விருத்தப்பாவொன்று:


"ஆதியொருவனை மறந்துலகில்
அனேகம் பிழைகள் செய்தி றந்தாலங்கண்
நீதிபெறுமுயிர் தனையோ விண்ணோர்
நெறிசேருடலையோ கேட்பார் பின்னே
சோதியருட்படி நரகிலிட்டுச்
சுடும்போபடுந்துயரவனோ நாமோ
ஓதியுணர்ந்தோர்களடியேன் சொன்ன
வுண்மை யறிந்துரை சாற்று வீரே."



ஆதி ஒருவனை மறந்துவிட்டால் பிழைகள் யார்தான் செய்யமாட்டார்கள்? பிழைகள் அனேகம் செய்திருந்தால் மறுமையில் நீதி பெறும் உயிர்தனையோ பின்னர் நெறிசேர் உடலையோ விண்ணோர் கேட்பர். இரண்டையுமே கேட்கக்கூடும். உலக இச்சைகளின்பால் பட்டழிந்து ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தாதவரின் உடலுக்கும் இங்கே விமோசனமில்லை. ஆங்கே உயிருக்கும் விமோசனமில்லை. பின் எதற்குத்தான் விமோசனம்? ஓதியுணர்ந்தோர் உண்மையறிய வேண்டும்; விளக்கம் தரவேண்டும் என்று தம்மை 'அடியேன்' நிலையில் வைத்து சூஃபிஞானக் கவிஞர் பீர் முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் பாடலில் கேட்கும் கேள்வியில் ஒரு அலாதி பாவம் சுடர்விடுகிறது.


நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது
பாவலர் பதிப்பகம் - சென்னை

Sunday, November 22, 2009

ஹஜ்ஜு பெருநாள்

கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.

ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை)

தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.

அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும்.

அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.

பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)

குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம்.

தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது.

இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.

அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.

மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று.

குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது.

ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும்.


***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி

***
சுட்டி :

ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)

Friday, November 13, 2009

ஞானியார் அப்பா(ரஹ்)

அழியா வெற்றி
‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது


‘பணமில்லாதவனுக்கு இவ்வுலகில்லை’ என்று சொல்லுகிறார்கள். பணத்தை ஒருவன் சம்பாதித்துவிடுகிறான். பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் குவித்து விடுகிறான். வீடு, மனை, நிலபுலன்கள், இன்னும் பரந்த சொத்துக்களுக்கு அதிபனாகி குபேர சம்பத்துப் படைததவனாகவும் ஆகிவிடுகிறான். தன் மனைவி மக்களுக்கு மட்டுமல்ல, தன் பிள்ளைகள், தன் பிள்ளைகளின் பிள்ளைகள் அனைவருக்கும், ஜன்ம ஜன்மத்திற்குச் சுகபோகத்தில் சுகித்திருக்கும் அளவுக்கு தனபாக்கியத்தை விட்டுச் செல்கிறான். அத்தகைய ஒருவனை வெற்றிகரமாக வாழ்ந்தவன், உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆயினும் நம்மிடையே வேறு சிலர் இருக்கின்றனர், இவர்கள் செல்வத்தால் வரும் வெற்றியை வெற்றி என்று கருதுவதில்லை. இவ்வுலக இன்பங்களில் திளைத்து உண்டு, உடுத்தி, உறங்கி பின்னொரு நாள் மறைந்து போகும் எந்த மனிதனும் வாழ்வில் வெற்றி கண்டவனல்லன் என்பது இவர்கள் கருத்து. இந்த பிரபஞ்சமே மாயை, இந்த மாயையில் சிக்குண்டு மண்ணில் வாழ்ந்து மடிந்து விடுபவர் பிறவிப் பயன் எய்தாதவராகி விடுகின்றனர். ஆகவே வாழ்வில் உண்மை வெற்றி காண விழைகிறவர் ஆசாபாசங்களைத் துறந்து, மண்ணுலக வாழ்க்கையை மறந்து மனிதப் பிறப்பெடுத்த பெரும்பயனை அனுபவிக்க , ஜன்ம சாபல்யம் பெற, யோகத்தில் ஆழ்ந்து விடவேண்டும்; நிஷ்டையில் இருந்துவிட வேண்டும்; வாழ்வின் பிறப்பினின்று விடுபட்டு, உலக பந்தங்களை அறுத்தொதுக்கி எங்கோ காட்டிலோ, மலையிலோ, குகையிலோ தவமிருந்து “நான்” எனும் அகந்தையை மாய்த்து இந்த கட்டையைத் தேயவிட்டுத் தேயவிட்டு முக்தி பெறவேண்டும். பரமாத்மா ஜீவாத்மாவோடு ஐக்கியமுற வேண்டும். இந்த ஐக்கியம் கைவரப் பெற்றவனே வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றவனாவான் என்று கருதுகின்றனர் பக்தரும், முக்தரும், சித்தரும், போதருமாகி, ஐம்புலன் அவித்து யோகத்திலும் ஞானத்திலும், சித்தாந்த, வேதாந்த வைராக்கிய, ஆன்மீகத் தத்துவார்த்த விசாரணையிலும் மூழ்கித் திளைக்கும் இந்த சிலவித்தகர்.

வாழ்வைத் துறந்து விடுவதையும், ஐம்புலன்களையும் அவித்துவிட்டு, சந்நியாசத்தை மேற்கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. பதி, பசு, பாசத் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சூஃபி ஞானிகளின் கோட்பாடுகளைக்கூட இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானவை என்று வைதீக இஸ்லாமிய ஞானிகள் எதிர்த்த சரித்திரம் உலகறிந்தது. ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹி காலம் தொடங்கி ஜலாலுதீன் ரூமி, இமாம் கஜ்ஜாலி, முஹைதீன் இபுனு அரபி அவர்கள் காலம் வரையுள்ள சூஃபி ஞான மேதைகளின் ஆன்மீகத் தத்துவங்கள் எவ்வாறு இறுதியில் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கும் இதர இஸ்லாமிய புனித கருத்துக்களுக்கும் இயைந்தவாறு அமைந்துகொண்டன என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளன.

இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஜீவாத்மா பரமாத்வாவோடு ஐக்கியப்படுவதென்பது இயலாத காரியம். ஏக இறைவன் வேறு, தனி மனிதனின் ஆன்மா வேறு, ஒன்றேதான் தெய்வம். அந்த ஒன்றோடு இன்னொன்று கலத்தல் என்பது என்றுமே சாத்தியமில்லை. ஒன்றோடு ஒன்று இயைந்து இரண்டாக முடியாது. ஏக தெய்வத்தைப் பொருத்தமட்டில் ஒன்றை இரண்டாகவோ அல்லது ஒன்றையும் இரண்டையும் சேர்த்து மூன்றாக்கி ஏக தெய்வத்திற்குப் பங்கம் விளைக்கும் பல தெய்வ தத்துவத்திற்கோ இஸ்லாம் இடம் கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது.

இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்த வரையில் இறைஞான காரியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுலக மனிதனுக்கு ஆன்மீகக் காட்சி வேண்டுமாயின் ஒருகால் சித்திக்கலாம். ஆனால் தனி மனிதனின் ஆன்மா இறைவனோடு கலந்து விடுவதென்பது மட்டும் ஒருபோதும் முடியாத காரியம்.

இந்த பின்னணியில் பார்க்கும்போதுதான் உலக வாழ்வில் உண்மையில் வெற்றி எனப்படுவது எது என்ற கேள்வி கூர்மையும் முனைப்பும் பெறுகிறது. மனிதராகிய நம் வாழ்வில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றையும் உண்மையான வெற்றி எனக் கருதிகிறோமே, அவை ஒவ்வொன்றும் உண்மையில் வெற்றி எனக் கொள்ளத்தக்கவைதாமா?

எது வெற்றி? திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகி இவ்வுலக வாழ்வை இன்ப லாகிரியாக்கி, தன் மனைவி மக்கள், சுற்றம் கிளையனைத்தும் சுகமாக வாழ வழி செய்துவிட்டுச் செல்கிறானே அவன் வெற்றி வெற்றியா? வறுமையில் சிக்கிச் சுழன்று வாழ்வதாக நினைத்து தினமும் செத்து செத்துக் கொண்டிருக்கிறானே அவனும் அவனைச் சார்ந்தோரும் வாழும் வாழ்வு வெற்றியின் அடைப்படையில் அமைந்ததா? உலகம் பொய், வாழ்வு மாயை என நினைத்து தெய்வத்தோடு கலந்துவிட துறவறம் பூண்டு கடுந்தவம் செய்கிறார்களே அவர்கள் வாழ்வு வெற்றி தர வல்லதா?

இஸ்லாமிய ஏகத்துவ வழிபாட்டின் அடிப்படையிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் பார்த்தால் மேற்கூறிய எவையும் உண்மையில் வெற்றிகள் ஆகமாட்டா.

தனக்காக, தன் குடும்பத்தினருக்காக, தன் ஊரார், நாட்டாருக்காக, தன்னலத்தையே அகத் தளத்திற்கு கொண்டு செயலாற்றும் எந்த தனி மனிதனின் சாதனையையும் இஸ்லாம் வெற்றி என ஏற்றுக் கொள்ளாது. இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி நோக்கின் தனிப்பட்டவனின் வெற்றி இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். உலகம் முழுவதற்குமே ஏற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் குறிக்கோளை நிறைவேற்றி அவனின் மகிமைகளை விளக்குவதாக மிளிர வேண்டும். மனிதன்பால் இறைவன் வைத்திருக்கும் அருள் நோக்கை அர்த்தமுள்ளதாக்கி தனி மனிதனுக்கு இறவா வாழ்வளிக்கத்தக்க தன்மைத் தானதாக வெற்றி விளங்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடித்துவிட்டு அதை நாம் முனைந்து பெற்ற வெற்றியென்றும் மற்றதெல்லாம் தோல்வி என்றும் கருதுவது போன்ற தவறு உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. வஞ்சனைக்கு வித்தூன்றி வரும் விளைவை வெற்றியெனக் கொள்வது நமது புத்தியின்மையையே காட்டும். மண் நாடி, பொன் நாடி, புலன் நாடும் பெண்நாடி பெறும் சுகத்தை வெற்றியென்று சொல்ல இயலுமா? சிந்தித்துப் பார்ப்போமாயின் வெற்றியின் தன்மை நமது சிந்தையில் எழும் எண்ணத்தின் தன்மையைப் பொறுத்தது. எண்ணம் சிறந்ததாக, உயர்ந்ததாக, இறைவனுக்கு உகந்ததாக இல்லாத வரையில் அவ்வெண்ணத்தின் விளைவை வெற்றி என்று கொள்ள இயலாது. எண்ணத்தில் ஈசன் ஒளி இல்லையெனில் வெற்றி இல்லை, எண்ணத்தில் நேர்மை இன்றேல் என்றைக்கும் எதிலுமே வெற்றியில்லை. எண்ணம் ஒரு பரம்பொருளாய், இதயம் ஒரு விண்ணகமாய் மாறாத வரையில் இந்த உலகில் எதிலும் வெற்றியில்லை. ஆகவே எண்ணத்தில் ஈசன் ஒளி ஏறிவிடில் தோல்வி இல்லை வெற்றிக்கு. தோல்வி இல்லாத வெற்றி சாகாத வெற்றி இந்தத் தரணியில் வேண்டும் எனில் நம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் தன்மைபெறப் பாடுபட வேண்டும். பரம்பொருளின் தன்மை பெற ஓயாமல் பாடும்படும் பொழுது நம்மை அறியாமலே நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வ குணங்கள் குடிபுகுந்து விடுகின்றன. தெய்வகுணம் குடிபுகுந்த இதயத்திலிருந்தெழும் எண்ணங்கள் நம்மை அழியாத வெற்றிக்கு இழுத்துச் செல்லுகின்றன.

இஸ்லாமிய ஏகத்துவத்தின்படி என்னதான் மனிதன் பாடுபட்டாலும், தவங்கிடந்தாலும் அவன் இறையோடு கலக்க முடியாது; ஐக்கியமாகிவிட முடியாது. ஆனால் அளவற்ற அருளாளனின் அடியார்களாக, சேவகர்களாக, அடிமைகளாக அந்த ஒப்பற்ற இறைவனின் அருள் வழியில் செயலாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, தொல்லையும் குழப்பமும் நிறைந்த உலகில் சாந்தியையும் ஒழுங்கமைதியையும் நிலை நாட்டி, மன்பதை உய்ய வழிவகுப்போமானால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக நம்மை ஆண்டவன் பக்கம் உயர்த்திக் கொண்டவர்களாகிறோம்.

மனிதன் தனிப்பட்டவன்; தனித்தவன். ஆண்டவனும் தனித்தவனே, அவன் ஏகன், தன்னந்தனியன். ஆனால் தனித்தியங்குவோருள் எல்லாம் முற்ற முற்ற முழுமை பெற்ற பூரணன் என இமாம் அஹமது இப்னு ஹன்பல் அவர்களின் வியாக்கியானம் சொல்லுகிறது. மனிதன் தனியன், தனித்தியங்குபவன் எனினும் முழுமை பெற்றவனல்லன். பூரணமாகத் தனித்தியங்கும் வழி வகையறியாது தயங்கித் தயங்கித் திகைத்திருப்பவன். இந்த பூரணத்துவத்தை நோக்கிச் செயலாற்றுவதே அவனது இலட்சியமாக இருக்க வேண்டும். இதுவே இயற்கையின் நியதியும் உயிர்வாழ்க்கையின் தாத்பரியமுமாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவன் தன் எண்ணத்தால், சொல்லால், செயலால், முயன்று முயன்று முன்னேற வேண்டும் என்ற வெறியால் முழுமை பெறும் இலட்சியத்தின் பக்கமாக முனைகிறானோ அந்த அளவிற்கு ஆண்டவன் பக்கமாக அண்டி அண்டி வருகிறான். எந்த அளவிற்கு அவன் இந்த இலட்சியத்தினின்றும் பிறழ்ந்து பின்னோக்கிச் செல்லுகிறானோ அந்த அளவிற்கு அவன் ஆண்டவனை விட்டும் வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுகிறான். ஆண்டவனுக்கு அவனுக்கு இடைவெளி, தூரம், அதிகரிக்க அதிகரிக்க அவன் கீழ்படியின் கீழ்ப்படியினருகே நிற்கும் தாழ்ந்த மனிதனாகி, பஞ்சை மனிதப் பதராகி, தரத்தில் குறைந்து மிகச் சாதாரண வெறும் மனிதனாகி விடுகிறான். அத்தககயவனால் சாகா வரம் பெற முடியாது, அழியா வெற்றியை அடையவும் முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறுகியும் அற்றும் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படியின் மேற்படியை நோக்கி உயர்கிறான்; முழுமையின் பக்கமாக வருகிறான். ஆண்டவனின் அண்மையிலும் அண்மை வந்துவிடப் பார்க்கிறான். காலத்தை வென்று சாகா வரம் பெற்று அழியா வெற்றியையும் பெற்றுவிடுகிறான்.

‘தெய்வ குணங்களையும் பண்புகளையும் உன்னுள் நீ சிருஷ்டித்துக்கொள், உண்டு பண்ணிக்கொள்’ என்னும் தத்துவம் தொனிக்க நம் நபிகள் கோமானும், “தகல்லஹு ஃபீ அக்லாக்கல்லாஹ்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இப்படி பரம் பொருளின் தன்மைபெற பாடுபட்டு, பாடுபட்டு நம்மை நாம் தெய்வத்தின் பக்கமாக உயர்த்திக் கொள்ளும்போது நாம் அந்த ஏகத் தனி இறைவனோடு கலந்துவிட முடியாது. ஆனால் இறையோனின் தன்மைகளை, பண்புகளை, கல்யாண குணங்களை, அம்சங்களை ஓரளவாவது நம்முள் வருவித்துக் கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் இயலும். அவற்றுள் தோய்ந்து நாம் சுகிர்தமடையவும் கூடும்.

இவ்வித கடவுள் தன்மை பெற பாடுபடுவது நமது சுயநலத்திற்காக அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இயற்கையையும் அதன் சக்திகளையும் வென்று, பஞ்ச பூதங்களையும் வெற்றிகொண்டு, மனித குலத்தின் சுபிட்சத்திற்கு வழிகோலுவதன் மூலம் இறைவனுக்குப் பணியாற்றுவதைவிட சிறந்த சேவை இருக்க முடியாதல்லவா? பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்ன? ஜடப்பொருள்களின் உள்ளுறைந்திருக்கும் இரகசியங்கள், அற்புதங்கள் யாவை? இவைபற்றி முழுவதும் அறியாது நாம் திகைத்திருந்தோம். இன்னும் திகைத்து நின்றோம். அணுவைத் துளைத்தோம், தகர்த்துத் தகர்த்துப் பிரித்தோம், பிளந்தெறிந்தோம். இதை மானிடத்தின் வெற்றி என்றும் கண்டோம்; கொண்டோம். இருப்பினும் காற்று, நீர், நெருப்பு, மண், வெளி ஆகியவற்றுள் மறைந்திருக்கும் சிருஷ்டியின் இரகசியங்கள் அனைத்தையும் நாம் அறிந்துவிட்டோம் என்றில்லை. அறியாத வரையில் அச்சக்திகள் அனைத்தும் மன்பதையின் முன்னேற்றத்திற்கும் உய்வுக்கும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. மனிதகுலம் இத்தடைகளைத் தகர்த்தெறிய இயற்கையின் கட்டுகளை அறுத்தொதுக்கி வெற்றி கொள்ள செயல்கள் செய்வின் அச்செயல் இறைவனின் மாண்பினையே காட்டும் அல்லவா? மனிதன் நெருப்பை இரவின் இருளுக்கு ஒளியேற்றும் விளக்காக மாற்றினான். நஞ்சை நோய் தீர்க்கும் அருமருந்தாக மாற்றுவித்தான். வெறுங் கல்லினுள் சுடர் திணித்து மணியாக்கினான், களிமண்ணை அடித்தெடுத்துக் குடமாக்கினான். சிருஷ்டித்தான். தான் எனும் அகந்தையை வளர்த்து, பஞ்ச பூதங்களையும் வெல்லும் முயற்சியில் ஆண்டவனின் மாட்சியையும் அருள் ஞானத்தையும் பறைசாற்றினான். இன்றோ பூமியின் இழுப்புச் சக்தியையே தாண்டிப்போய் இங்கிருந்து நாம் சந்திரனையும் உடுக்களையும் பார்ப்பதுபோல் வானவெளியில் நின்று பூமியையே பார்க்கும் பாக்கியம் அவனுக்கு சித்தித்திருக்கிறது. நாமும் சிருஷ்டிக்கிறோம் இறைவனால் ஏவப்பட்டு, அவனின் சேவகர்களாக, அடிமைகளாக சிருஷ்டிக்கிறோம். “சிருஷ்டி கர்த்தாக்களுள் எல்லாம் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா மாட்சி மிக்க ஆண்டவனே” என்னும் பொருள் தரும் திருமறையின் வசனம் நம்மை செயலாற்றத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அச்செயலினால் நாம் வெற்றி பெறுகிறோம். இறைமாண்பின் அடிப்படையில் தோன்றும் இவ்வெற்றி அழியா வெற்றி. இந்த வெற்றிக்காக நாம் ‘நான்’ என்ற நம்முள் அடங்கிக் கிடக்கும் சக்திகள வெளிக் கொணருகிறோம். நாம் உணர்வையும் அறிவையும் வளர்க்கிறோம். நம் உணர்ச்சிகள் வலுவடைகின்றன. நம் அறிவு கூர்மைப் பெறுகிறது. அசாதாரண அறிவும் அபரிமிதமான ஆற்றலும் பெற்று நாம் அதியுன்னத அமானுஷ்யமான மனிதர்களாக ஆகிவிடுகிறோம். காலத்தையே வென்று சாகா வரமும் பெற்றுவிடுகிறோம். இத்தகைய பண்புகள் பெற்றவர்களாக மனிதகுலத்தின் ஒவ்வொருவரும் மாறிவிடும் பொழுது இலட்சிய உலகமே தோன்றிவிடுகிறது. இறைவனின் இலட்சியமும் வெற்றிபெறுகிறது. இறைவனுக்கு உகந்த இந்த வெற்றிச் சாதனைக்காய்த் தன்னையே அடக்கி ஆண்டும், கட்டுப்படுத்தியும், தன்னுள்ளே உறைந்தும் மறைந்தும் இருக்கும் சக்திகளை வெளிக் கொணர்ந்தும் அதியுன்னத மானிடனாக மாறி வையத்தை உய்விப்பவன், என்றும் மாளாத முழுமை பெற்றவன். அத்தகையவனை இறைவனின் பிரதிநிதி என்றும் ‘கலீபா’ என்றும் கொள்ளலாம் அல்லவா?

இயற்கையின் சக்திகளை ஆட்கொண்டு ஆண்டவனின் அடியானாக இருந்து அவனின் பேரருள் கொடையை நிதர்சனமாக்கிக் காட்டவல்ல செயற்கரிய காரியங்கள் செய்து அதியுன்னத மனிதனாகி இறவா வரம் தரும் அழியாத வெற்றிக்காக தவம் கிடக்கிறார் முஸ்லிம் ஞானி ஒருவர். இவ்வுலக வாழ்க்கை எனும் சிறையில் சிக்கி இலட்சியத்தையும் குறிக்கோளையும் மறந்து கேவலம் பஞ்சை மனிதனாக உழன்று இவ்வுலக வாழ்வில் தன்னை இழந்து விடுகிறவர்களை இந்த ஞானியார் வெறுக்கிறார். அழியாத வெற்றி பெறுகிறவன் தன்னைத் தான் இழந்து விடமாட்டான். ஆனால் இந்த உலகம் தன்னை அவனில் இழந்து விடும் என்று கூறுகிறவர் இந்த ஞானியார். தன் உள்ளத்திலும் உடலிலும் தன்னுள் எங்கும் அந்த ஒப்பற்ற ரஹ்மானின் அருள் நிறைந்து ததும்ப வேண்டும்; அவனின் அருள் ஞான போதத்தால் ஆண்டவவனின் அடியானாகிய தான் அழியாத வெற்றி பெற வேண்டும் என்று தவிக்கிறார் இவர். நிலையாத காயத்திற்கு ரஹ்மான் துணை கொண்டு நித்தியத்துவம் அளித்து காலத்தையும் வென்று “பகுமானம்” மிக்க புத்தி நுட்பம் பெற்று அழியாத வெற்றிபெற இந்தக் கோட்டாற்று ஞானியார் சாஹிப் அவர்கள் அருளாளனிடம் எப்படி வரம் கேட்கிறார் பாருங்கள்:

‘ரஹுமானே யென்னுள் மணியா யுருண்டு
நினைவாகி யெங்கும் நிறைவாய்
நிலையாத காய மதிலே நிறைந்து
நிலைகொண்டு நின்ற பொருளே
பகுமான மென்ற திகழாத புந்தி
பலபேத மாயுன் னடியேன்
பரஞான ஜோதி யருளான வின்பம்
பரவாத பாவி யானுஞ்
செகமீதி லிந்த முறையா விருந்து
திருடான பாவ வலையுள்
தினமூழ்கி வந்து மதினூ டுழைந்து
சிறைபட் டிருந்த வடியேன்
அகமீதி லுன்றன் அருள்ஞான போதம்
அடியார்க்கு ளீந்து னருளால்
அழியாத வெற்றி தரவேணு மென்னுள்
அருள்வா யெழுந் தருள்வாய்’


கன்னியா குமரி மாவட்டத்தில் இன்றைக்கு 280 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் ஹஜ்ரத் ஷெய்கு ஞானியார் சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்கள். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்கள். தன் ஞான குருவிடத்திருந்து கிடைத்த அகக் காட்சியின் விளைவாக எழுந்த நூற்றுக் கணக்கான பக்தி ரசப் பாடல்களை தமிழில் தந்தவர்கள். இப்பாடல்கள் ‘திருமெஞ்ஞான திருப்பாடல் திரட்’டாக வெளியிடப்பட்டு இறைஞான நூலாகத் திகழ்கின்றது.

இந்த சூஃபி ஞான வள்ளலார் மாபெரும் முஸ்லிம் முனிவராக விளங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி தம் காலத்து முஸ்லிம்களாலும் அல்லாதாராலும் ஞானியார் சாஹிப் எனப் போற்றப்பட்டு வாழ்ந்தவர்கள். மாபெரும் ஷெய்காகவும் இறைநேசராகவும் விளங்கி தமிழ் நாட்டில் தீன் பயிர் வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர்களின் மக்பரா கோட்டாற்றில் உள்ளது. இவர் வம்சத்தினர் ஞானியார் குடும்பத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். காலஞ்சென்ற மகாமதி, சதாவதானி ஷெய்கு தம்பி பாவலர் அவர்கள் ஞானியார் அப்பா வழிதோன்றலே.

இவர்களது பக்தி ஞானப் பாடல்கள் அனைத்தையும் படித்துணர்ந்து பொருள் தெரிந்து கொண்டவர்களாக சொல்லத்தக்க முஸ்லிம்கள் இன்று எத்தனைபேர் இருக்கிறார்கள் ?

நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது
பாவலர் பதிப்பகம் - சென்னை

Friday, November 6, 2009

அண்ணாவியார் புலவர் - 6

செய்யது முஹம்மது அண்ணாவியார்
(இரண்டாம் செய்யது முஹம்மது)


கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடற்கரையோரங்களில் நுழைந்து கால தாமதமில்லாது உள் நாட்டிலும் பரவி நின்றது. கேரளத்தில் கொடுங்கல்லூரில் ஹஜ்ரத் மாலிக் பின் தினார்(ரலி) அவர்கள் வந்த அதே காலம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் ஹஜ்ரத் தமீமுல் அன்சாரி(ரலி) அவர்களும் ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களும் வந்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

[நபிமணித் தோழர்களான ஹழரத் உக்காஷா (ரலி) மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிப்பேட்டையிலும், ஹழரத் தமீமுல் அன்சாரி (ரலி) சென்னையை அடுத்த கோவளத்திலும், ஹழரத் வஹப் (ரலி) சீனத் துறைமுகமான காண்டன் நகரத்திலும் நல்லடக்கம் பெற்றுள்ளனர். இச்செய்தி மௌலானா அக்பர்ஷாஹ்கான் நஜீப் ஆபாதி எழுதிய ஆயினயே ஹகீகத்துன் நாமா (உண்மையான வரலாற்றுக் கண்ணாடி) எனும் உருது நூலில் (பக். 47&48) குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நஃபீஸ் அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘Saints of India’ (இந்தியாவின் துறவிகள்) எனும் ஆங்கில நூலிலும் (ப. 137) இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேரா.சா.அப்துல்ஹமீது குறிப்பிடுகிறார்.]

ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்கக்கூடிய 'முஜத்திது'கள் வருவார்கள என்ற நபி மொழிக்கேற்ப நபித்தோழர்களின் வருகைக்குப் பிறகு தென் இந்தியாவில் இசுலாம் பரவி நின்றாலும் அதன் பிறகு தன் வலுவிழந்திடாமல் இருக்க இறைநேசர்கள் வந்தார்கள். அவர்கள் வெறும் மார்க்கத்துடன் நின்று விடாமல் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்ற இறை சொல்லிற்கேற்ப எல்லா மதத்தவரையும் அரவணைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

தாம் பெற்ற ஞானத்தை சுவைத்து, அனுபவித்து பின் மக்களுக்கும் பகிர்ந்துக்கொடுத்தோடு நின்றுவிடாமல் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை வகுத்துக் கொடுத்து இஸ்லாத்திற்கு தங்கள் வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்த இறைநேசர்களை நினைவுகூறுவது சான்றோர்களின் பண்பாகும். இது மனித கலாச்சாரத்தில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகும்.

இதன் விளைவாக வந்ததுதான் மவுலிது, பைத்து, முனாஜாத்து, கஸீதா, பாமாலை போன்றவை. தமிழ் இலக்கியத்திற்கு சற்றும் சளைக்காத வண்ணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நின்று நிலவுகிறது. சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் வரை தமிழக முஸ்லிம்களால் சுபுஹான மவுலிது, முஹையிதீன் மவுலிது இன்னபிற பைத்துக்களும் ஓதப்பட்டு வந்தன. ஆனால் இன்று அவற்றைக் காணோம். "ஏட்டுச் சுரக்காய் ஆலிம்களின் வருகையால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இளையசமுதாயம் ஒருவித மாயையில் சிக்கி எங்கே இருக்கிறோம் என்றுகூட தெரியாமல் ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் சிக்கிய கலம் போல அல்லாடிக் கொண்டிருக்கிறது".

எனினும், உண்மை உணர்ந்த அறிஞர்கள் இந்த சலசலப்பைக் கண்டு அஞ்சாமல் தம் பணியை அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேட்டத்திற்குத் தகுந்தாற்போல் அறிவை ஊட்டி வருகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் தமிழ் புலமை நிறைந்திருந்தது. எனவே அப்போதைய ஆலிம்களும் புலவர்களாக இருந்தனர். அந்த வகையில் பரம்பரை ஞானத்துடன் வாழ்ந்தவர்தான் செய்யது முகம்மது அண்ணாவியார்(இரண்டாம் செய்யது முகம்மது). இவர். நவரத்தின கவி காதிர் முஹையிதீன் அண்ணாவியாரின் மூத்தப் புதல்வர். இவருக்கு ஹபீப் முகம்மது அண்ணாவியார் என்ற இளவல் உண்டு. இவர் 1857 நவம்பரில் பிறந்து 77 ஆண்டுகாலம் வாழ்ந்து 1934 செப்டம்பர் மாதம் இறையடி சேர்ந்தார்.

'கவிஞன் பிறக்கிறான் அறிஞன் உருவாக்கப் படுகிறான்' என்ற சொல்லிற்கேற்ப தம் முன்னோர் போலவே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். 'சரம கவிதை', 'வ,ழிநடைச் சிந்து', நபிகள் நாயகம் ரசூல்(சல்) அவர்கள் பெயரால் 'கீர்த்தனைகள்' போன்றவைகளை இயற்றியிருக்கிறார்கள்.

சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்துக்குச் சொந்தக்காரர்களாகி புலமைச் சிகரத்தில் கொடிக்கட்டிப் பரக்கவிட்டவர்கள் அண்ணாவியார் மரபினர் என்றால் அது மிகையாகாது. முத்துப்பேட்டை நாயகம் செய்கு தாவுதொலி மீது இவர் தந்தை, 'பிள்ளைத் தமிழ்' பாடி இருக்கிறார்களென்றால் பிள்ளையான இவர் நாகூர் நாயகத்தின் மீது 'புகைரதச் சிந்து' பாடியிருக்கிறார்கள்.

நாகூர்பதி வாழும் சாஹுல் ஹமீதொலி பாதுஷா நாயகம் மீது பாடாத புலவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்றும் பலர் பா இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுஷா நாயகத்தை தரிசிக்க ஒருவர் நாகூர்பதி செல்கிறார், ஆங்கு அவருக்கு சில அனுபவங்கள் ஏற்படுகின்றன, அந்த அனுபவத்தில் சுவைத்த உணர்ச்சியை பாடலாக வடித்தார். அவர் வேறு யாருமல்ல, பாமர முஸ்லிகள் உள்ளங்களில் பக்திக்கனலெழுப்பிய அப்துல் காதர் என்ற பழுத்த ஆலிமாக இருந்து பின் மஸ்தானாக மாறிய குணங்குடியார்.

'திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிங்காசனாதிபர்கள் அதையேந்தியே வந்து
ஜெயஜெயா வென்பர் கோடி
அக்கனருள் பெற்றபெரி யோர்கள்ஒலி மார்கள்அணி
அணியாக நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத்திட்டமெய் ஞானிகள்
அனைந்தருகு நிற்பர் கோடி
மக்கநகராளும் முஹம்மது ரசூல்தந்த
மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும் உம்
மகிமை சொல் வாயுமுண்டோ
தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!
தயையைவைத் தென்னையாள் சற்குணங்குடி
சாகுல் ஹமீத் அரசரே!'

நாளை மகுஷரில் நரக வாயிலில் நின்று இபுலீசை நொந்துக்கொள்ளும் நிலை நேராதிருக்க வேண்டுமெனில் கலி(குறை, அதர்மம்) தீரவேண்டும், கருத்தில் இபுலீசின் வலி தீரவேண்டுமெனில்-மறுமையில் நலம் சேரவேண்டுமெனில் துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தில் வாழும் நாகை துரையவர்களை நாம் என்னாளும் உயிர் துணையாகக் கொண்டாடிடுவோம். அவர்களை இயக்கிவைத்த இலட்சியம் நம்மையும் இயக்கட்டும்; நாமும் புனிதம் பெறுவோம் என சவ்வாது புலவர் பாடுகிறார்.

'கலிதீர வேண்டும் கருத்தில் இபுலீஸ்
வலிதீர வேண்டுமென வந்தால்-ஒலியான
நாகைத் துரையார்எந் நாளும் உயிர்துணையார்
நாகைத் துறையார் நமக்கு.'

இப்படி புலவர்களும், புரவலர்களும், பாமரர்களும் போற்றிப் புகழும் நாகூர் நாயகத்தை தரிசிப்பதற்காக நாயகன் தன் நாயகியுடன் செல்கிறார். அது கந்தூரி காலம், அப்போதுதான் இருப்புப் பாதைப் போடப்பட்டிருக்கிறது, எனவே புகை வண்டியில் செல்கிறார்கள். பயணம் செய்வது வேறு அந்த பயணத்தின் சுவையை அனுவித்துக்கொண்டு செல்வது வேறு. பயணத்தை சுவைப்பதென்றால் ஒன்று கப்பல் பயணமாக இருக்க வேண்டும் அல்லது ரயில் பயணமாக இருக்கவேண்டும். இரண்டுமே இரு வேறு வகையான இன்பத்தைத் தரக்கூடியது. அலைகடலில் அசைந்து செல்லும்போது கூடவே நம்முடைய அசைவும் ஒருவித மயக்கத்தைத் தரவல்லது; நான்கு திசைகளிலும் எங்கு பார்த்தாலும் தண்ணீர், அது திகிலை ஊட்டும்; பெரிய பெரிய மீன்கள் செல்லும் காட்சி, அதுவும் டால்ஃபின்கள் கூட்டமாக சென்றால் ஒரு கல்யாண ஊர்வலமோ! என்ற தோற்றத்தை அளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆனால் ரயில் பயணம் வேறு, அதன் சுவையை புலவர் பெருமானே சொல்கிறார், அவர் கொடுத்திருக்கும் தலைப்போ 'நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்து'. தலைப்பிலிருந்தே தெரிகிறது புலவர் கோமான் பயணத்தை மிக்க இன்பத்துடன் ஒயிலாக அனுபவித்திருக்கிறார் என்று. அவர் படைத்துள்ள விருந்தை நாமும் சுவைப்போமா?

'மேனகை ரம்பைமின் மானே - நாகை
மாநகர் பார்ப்போம் வா தேனே'


என நாயகன் நாயகியை அழைத்துக்கொண்டு ரயில் நிலயத்திற்கு வந்து டிக்கட் எடுக்கின்றர். சற்று நேரத்தில் ரயிலும் வருகிறது. ரயில் வருவது அச்சத்தைத் தருகிறதாம்; நெளிந்து நெளிந்து வருவது காட்டு மரவட்டை ஊர்ந்து வருவதுபோல் காட்சி அளிக்கிறதாம்; நூற்றுக்கணக்கான அதன் சக்கரங்கள் மரவட்டையின் கால்கள் போலுள்ளனவாம்; பாலைவனத்து கொள்ளிவாய் பிசாசு போல ஊளையிட்டுக்கொண்டு வருகிறதாம்; காதைத் துளைக்கும் கோடை இடி போல் அதன் 'கடபடா' ஒலி அச்சத்தைத் தருகிறதாம்; எனவே அஞ்சாமல் இருக்க தலைவியை தேற்றும் பாணியை பார்ப்போம்....

'கானுறு மட்டையின் கால்கள் எனவுருள்
ககனந்தூர்தல்இஞ் சீனே-கொடுங்
கனன்மலிந்திடும் பாலையின் கொள்ளிவாய்க்
கணத்தின் மூச்சிதோ தானே-கோடை
வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு
மயங்காதே மைடியர் மானே'


உவமான உவமேயங்களைக் கையாள்வதில் புலவர் பெருமக்களை விஞ்ச யாராலும் முடியாது. பெண்ணின் முகத்தை வெண்நிலவுக்கு ஒப்பிடும் புலவர்கள் அச்சம் தரக்கூடியதை பேய்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிப்பர். அரேபிய பாலைவனத்தின் கொடுமையைச் சித்தரிக்கும் பொறுப்பு உமறு புலவருக்கு வந்தபோது பாலை நிலத்து மரங்களை பேய்களாகவும், மரப்பொந்துக்களை பேய்களின் வாய்களாகவும் அவ்வாய்களிலிருந்து வெளிவருவதை பாலைவனப் பாம்புகளாகவும் காட்டி சித்தரிக்கிறார்.

'வற்றிப்பேய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே'

அதுபோன்றே அண்ணாவியார் புலவர் அவர்களும் ரயில் இஞ்சின் வருகைக்கு பாலைவனத்துக் கொள்ளிவாய்ப் பிசாசு என்ற உவமானத்தைக் கையாண்டிருக்கிறார்.

ரயிலும் வந்தது, தலைவன் தலைவிக்குக் கிடைத்ததோ முதல் வகுப்புப் பெட்டி, ஆனால் தலைவிகோ எப்போது சென்றடைவோம் என மனதுக்குள் ஓர் தவிப்பு; அதை தலைவன் தீர்த்து வைப்பதை புலவர் பெருமான் தீட்டுகிறார் கவிதையில்.

'பஸ்டுக் கிளாஸான வண்டியும் வாய்த்தது
மானே செல்லிநகர் ஸ்டேஷன் கழித்தது
மயிர் சூடிய
மலர் வாடுமுன்
ஒயில் நாகையில்
ரயில் ஏகிடும்'


அதிவீர ராமப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரயில் நாகூரை வந்தடைவதற்குள் எத்தனை ஊர்களில் ஸ்டேஷன்கள் இருக்கின்றன, எந்தெந்த ஆறுகள் குறுக்கிடுகின்றன என்று வரிசைப் படுத்தும் புலவர் சில முக்கிய ஊர்களின் சிறப்புகளையும் சொல்கிறார். திருவாரூர் ஜங்ஷனுக்குப் பிறகு அடியக்கமங்களம், கூத்தூர், கீவலூர், சிக்கல், நாகப்பட்டினம் எனக் குறிப்பிடும் புலவர் வெளிப்பாளையம் நாகூருக்குமிடையில் காடம்பாடி என்றொரு ஸ்டேஷன் இருந்ததை(இப்போதில்லை) இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. அதுபோல் சிக்கலுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அந்தனப்பேட்டை இருக்கிறது, அதை காணமுடியவில்லை,
ஆனால் அது மஞ்சக்கொல்லை வாழ்ந்த முஸ்லிம் தனவந்தர்களின் கடும் முயற்சியால் பின்னால் வந்தது.

நன்நாகை வந்தடையும் நாயகனும் நாயகியும் அங்கிருந்து புறப்படும் கந்தூரி ஊர்வலத்தைப் பார்வை இடுகின்றர். இப்போது நடப்பது போலவே அப்போதும் சிறப்பாக நடந்திருக்கிறது. கொடியூர்வலத்தில் செட்டிப் பல்லக்கு என்ற ஒரு அலங்கார வண்டி சற்றுத் தாமதமாகத் தனியே வரும், அது ஒரு தனிப்பட்ட செட்டியார் குடும்பத்தால் செய்யப்படுகிறது, எவ்வளவு காலமாக நடத்திவருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஒருவேளை அந்த குடும்பத்தாருக்குக்கூட தெரியுமா என்பது சந்தேகம், அது நூறு வருடங்களுக்கு மேலாக நடத்திவருகின்றனர் என்பதை பாட்டின்மூலம் அறியமுடிகிறது.

'கோட்டுச் சிமிழ்க்கிண்ண மாமுலை மாதே
கொடியலங் காரத்தின் வருக்கம்- வெகு
கூட்டத்து டன்செட்டிப் பல்லக்கு வேடிக்கை
குஞ்சரத் திரளின் நெருக்கம்- புகை
போட்டுகளுங் கப்பற்சீனக் கண்ணாடிப்
பொழுதை யளக்குறார் சுருக்கம்- ரத்ன
ஷேட்டுத் தெருவெங்குங் கோலியும் நாகூரு
செல்வழியை நோக்கிப் போவதையும் பாரு'


கும்பினிகளின் ஆட்சிக் காலத்தில் நாகையும் தரங்கம்பாடியும் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்தது, இடையிலுள்ள காரைக்கால் பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்தது. எனவே நாகைக்கும் நாகூருக்கும் பலர் வந்து போய்க் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாகூருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்ததாகப் புலவர் பெருமான் குறிப்பிடுகிறார் இங்கே..

'பாரிசு மக்கா மதிநா றூம் மிசுறு
பைத்துல் முக்கத்திசு வாசி- சீனா
பங்காளங் கொச்சி மலையாள மும்டில்லி
பம்பாய் மைசூர் மதராசி- என்னும்

ஊர்பல வாசிகள் வந்து ஹத்தம் மௌ
லூதுக ளோதியுங் காசி- இதோ
உண்டியல் போடுங் குடங்கள் நிறைந்தங்கு
ஓய்வில்லை பார்மக ராசி- ஒலி

வாரிசு செய்யிது செய்குமார் சடையர்
வாணருந் தாயிராக் கூட்டமும் மிடியர்
சாரிசன் வில்லை வெள்ளித் தடிக் காரியர்

சனமுந் தரி
சனமும் விமோ
சனமும் பெறத்
தினமும் வரும்'


சிந்து இலக்கியம் நாட்டுப்புற இலக்கிய வகையை சார்ந்ததாக இருப்பதால் அப்பகுதி மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவைகளை எடுத்துக்கூறுகிறது. தவிர பெண்கள் மல்லிகை, முல்லை, சண்பகம், தாமரை, ரோசா முதலிய மலர்களை சூடும் செய்தி நமக்கு கிடைக்கிறது. மேலும் நெற்றியில் பதியும் நெற்றிச் சுட்டி, நெற்றியை சுற்றி பூட்டப்படும் வட்டவணி, தலையில் இருபுறமும் சூட்டும் பிறைச் சுட்டிகள், காதுக் கொம்பிலிருந்து கொண்டை வரை மாட்டப்படும் மயிர் மாட்டி, இன்றைய வாளியரசலை போன்ற அணிகலன்கள், கொடிபோன்ற காதணியான வள்ளை வல்லிடை, ஒன்னப்பூ, ஜிமிக்கி, தொங்கல், மூக்கில் சிறு வளையம்போல் அணியும் நத்து, புல்லாக்கு, கழுத்தில் அணியும் பதக்கம், கண்டிகை, முத்துமாலை, பூசாந்தரத் தாலி, புயத்தில் பூட்டும் கடகம், மணிக்கட்டி அணியும் கங்கணம், கைவளையல்கள், மோதிரம், கால்களில் அணியப்படும் காப்பு போன்ற தண்டை, ஒலிக்கும் சிலம்பு, பொன்னால் செய்யப்பட்ட கொலுசு, கால் விரலில் அணியும் சல்லா எனப்படும் மெட்டி ஆகிய நகைகளை தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கடற்கரை நகரங்களில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. அவைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள் இன்றும் நம் பெண்கள் அணிகின்றனர்.

கந்தூரி விழா எப்படி நடக்கிறது, என்னென்ன வேடிக்கைகள் இருக்கின்றன, எத்தனை வகையான கனிவர்க்கங்கள் முதல் உணவு வகைகள் வரை கிடைக்கின்றன என்பதை புலவரவர்கள் தவறாமல் குறிப்பிடுவது ஒரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித்தெளித்து படிப்பவர்களைப் பரவசமூட்டுவது மற்றொரு சிறப்பு.

அறுபத்தாறு பாடல்கள் கொண்ட இந்நூல் நாகூர் மீரான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் அவர்கள் தர்பாரில் நற்றமிழ் அறிஞர் குலாம் காதிறு நாவலர் முன்னிலையில் 1902 ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது.

'காரண நாயகர் தர்ஹாமகாவித்வான்
கற்றோர் துதிக்கும் உஸ்தாது- குலாம்
காதிறு நாவலர் தரிசனத் தில்நம்
கவியறங் கேற்று மாது- புகழ்

தாரணி மாணிக்கப் பூர்ஹஸன் குத்தூசு
சந்ததி ஷாஹுல் ஹமீது- அவாள்
சன்னி தானத்தினும் ஈசுபொலி மக்காம்
சியாரத் தோதி வா இப்போது- நித்தம்

சீரணித் திலங்கும் செய்யது முகம்மது
செந்தமிழ் பாடியும் வந்தோம் ரயில்மீது
பேரணி யூர்அதி வீர ராமன் இது

பிந்தா தர
விந்தந்திரு
எந்தன்மனை
வந்தேயிரு'


என்று புலவர் பெருமானே கூறி தம்முடைய 'நாகூர் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்தை' முடிக்கிறார். அன்னவர்களைப் பாராட்டி....

'இனம்பெருகும் படைப்(பு) எவைக்குங் கருவானார்
குலமணியாய் இலங்கு தாய
மனம்பெருகும் ஒலிகள்பிரான் அமர்நாகைப்
பதியேகி வருமோர் சிந்தாய்க்
கனம்பெருகு பெரும்புலமைப் பரம்பரையிற்
பெயர்தாங்கிக் கல்வி ஆய்ந்த
தனம்பெருகு செல்லிநகர் செய்யிது
முகம்மதென்பார் சாற்றன் மாதோ'

என்று அதிவீரராமப் பட்டினம் லெ.மு. முஹையிதீன் பக்கீர் அவர்களும்

'செந்தமிழில் வழிநடையாஞ் சிந்தெனவோர்
பூமாலை திரட்டி வாயால்
தந்தவலான் அவனெவனென் உசாத்துணைவன்
நல்லன்பன் தன்மைக் கேற்பப்
பந்தமுளான் செய்துமுகம் மதுவெனும்பே
ராகியருள் பன்னும் வாக்கிற்
சந்தமுளான் செல்லிநகர் சொந்தமுளான்
யாவர்மெச்சுந் தகைமை யோனே'

என்று இராமநாதபுரம் முத்தண்ண பிள்ளை அவர்களும்

'பூதலமெ வாம்புகழும் ஹமீதொலிசந்
நிதிகாணப் புகழ்ந்து பேசிக்
காதலனுங் காரிகையும் ரெயிலேறிப்
பலசிறப்புங் காட்டி வந்த
தீதகலும் வழிச்சிந்தை யெடுத்துரைத்தான்
செல்லிநகர் சீர்பெற் றோங்கு
மாதவன்செய் யிதுமுகம்ம துரைதெரிந்த
வானவரு மகிழ்கொள் வாரே'

என்று இளையான்குடி பண்டிதம் முகம்மது அபூபக்கர் அவர்களும்

'தரார் வளர்நாகை ஷாஹுல்ஹமீ தண்ணல்மேற்
பேரார் நடைச்சிந்து பேசினார்- சீராருஞ்
செல்லிநகர் ஓங்குகவி செய்யித் முகம்மதெனும்
வல்லபுகழ் சேர்நா வலர்'

என்று ப.கா. பண்டிதம் செய்யிது அப்துல் காதிர் அவர்களும்

'நவரத்தி னக்கவிஞர் நற்குலம தோங்கும்
தவரத்ன மாகவந்த தக்கோர் - புவனத்திற்
செய்யதிரு நாகைவழிச் சிந்தினிய தாய்விளம்பும்
செய்யித் முகம்மதெனுஞ் சேய்'

என்று செல்லிநகர் அ.ரு. கந்தசாமி உபாத்தியாயர் அவர்களும் சாற்று கவிகள் பாடி பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நாம் எப்படி பெருமைப் படுத்தமுடியும்?

'இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய
ஆலிம்களெல்லாம்
கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கோ
கற்றதில் ஐயம்
கல்லாததில் தெளிவு'


குறிப்பு:

அண்ணாவியார் புலவர்களைப் பற்றி எழுதுவதற்கு ஏதுவாக குறிப்புக்களும், செய்திகளும், நாகூர் புகைரதச் சிந்தும் தந்துதவிய அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித் அவர்களுக்கும், அப்புத்தகத்தின் தோரணவாயில் எழுதிய புலவர் அதிரைப் புலவர் அ. அஹமது பஷீர் எம்.ஏ.,பி.எட் அவர்களுக்கும், ஆய்வு முன்னுரை எழுதிய பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கும், 'இஸ்லாமிய ஆய்வு இலக்கியத் திரட்டு' எழுதிய அதிரை தாஹா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர இரண்டாம் செய்யது முகம்மது அண்ணாவியாரின் இளவல் ஹபீபு முகம்மது அண்ணாவியார் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன் கிடைத்ததும் தொடரப்படும். - ஹமீது ஜாஃபர்

Friday, October 30, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 5

நவரத்தினகவி
காதிர் முஹையிதீன் அண்ணாவியார்

பதினோறாம் நூற்றாண்டில் இசுலாம் நலிந்து வந்துக்கொண்டிருந்த சமயம், ஈரானியப் பகுதியான தெற்கு காஸ்பியன் கடற்கரை நகரமான ஜிலான் என்ற நகரில் ஹிஜிரி 470(கி.பி.1077) பிறந்து இசுலாத்திற்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த கௌதுல் அஃலம் என்ற சிறப்பைப் பெற்ற ஹஜ்ரத் முஹையிதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களின் பெயரைத் தாங்கிய நவரத்தின கவியவர்கள் முதலாம் அண்ணாவியரான அமுத மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியாரின் இரண்டாம் புதல்வர் நூர் முகம்மது அண்ணாவியாரின் புதல்வர் ஆவார்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒழுக்க சீலராக, மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தார் மட்டுமல்ல மார்க்க சட்டங்களை கசடறக் கற்றவராகவும் விளங்கினார். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கிணங்க தாம் கற்றவற்றை மற்றோரும் பெற்றுக் கொள்ளவேண்டும் என விருப்பம் கொண்டார். மக்களின் நல்வாழ்வுக்கு இசுலாத்தின் சட்டத்திட்டங்கள் அடங்கிய
'ஃபிக்ஹு' என்ற நூலை எளிய தமிழில் யாத்து 'ஃபிக்ஹு மாலை' என்ற திருப்பெயர் சூட்டி இசுலாமிய உலகிற்களித்தார்.

இன்று ஒரு சட்டத்தை அமுல் படுத்திவிட்டு ஓராண்டுக்குள் பல இடைச் செருகல்களும் திருத்தங்களும் செய்யப்படும் பொதுச் சட்டமல்ல மார்க்க சட்டம். அது திருத்தப்படாதது, திருத்தமுடியாதது. மக்களிடம் சென்றடையும் அந்நூலில் சற்றும் தவறு வந்துவிடக்கூடாது, அப்படி வந்துவிட்டால் நாளை இறைவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற அச்ச உணர்வு பெற்றவர்களாக, அப்போது அதிராம்பட்டினத்தில் மார்க்க மேதைகளாக விளங்கிய அல்ஹாஜ் முகம்மது அபுபக்கர் ஆலிம் சாகிபு, அல்ஹாஜ் கோஜ் முகம்மது ஆலிம் சாகிபு ஆகிய இரு அறிஞர்கள் துணையுடன் கவியவர்கள் ஹிஜ்ரி 1280 ரபியுல் அவ்வல் பிறை 12 (28-8-1863) வெள்ளிக்கிழமை 'ஃபிக்ஹு மாலை' எழுதத் தொடங்கி சிறப்புற முடித்தார்கள்.

இரண்டு மார்க்க அறிஞர்கள் துணையுடன் ஃபிக்ஹு மாலையை எழுதி முடித்துவிட்டார்கள்; அது சரியாக இருக்கிறதா , இல்லை தம்மை அறியாமலே ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். எனவே அக்காலை அங்கு வாழ்ந்த இமாம், முகம்மது அப்துல் காதிர் ஹாஜி ஆலிம் சாகிப் என்ற மார்க்க அறிஞர் அரபு மொழியில் எழுத்திலக்கணம்(சறுபு), சொல் இலக்கணம்(நஹ்வு), யாப்பிலக்கணம்(அறுலு), அணியிலக்கணம்(பதீரு), எதுகை மோனை உணர்த்தும்(கவாபி), பொருள் இலக்கணம்(மஆனி), உரையிலக்கணம்(பயானி), தருக்க சாத்திரம்(மன்திக்கு) முதலானவற்றை ஐயம் திரிபறக் கற்று சிறந்த அறிஞராக விளங்கினார். அரபியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாண்டித்தியமுள்ளவராகத் திகழ்ந்தார். இத்தகைய அறிஞரிடம் அந்நூல் சரிபார்க்கப்பட்டது; நற்றமிழ் நாவலர், மதுரை தமிழ் சங்கப் புலவர், ஆஸ்தான கவி நாகூர் குலாம் காதிர் நாவலர் உரை எழுதினார்கள். கல்வியின் காதலர், காதிர் முஹைதீன் கல்லூரி நிறுவனர், புரவலர் அல்ஹாஜ் காதிர் முஹையிதீன் மரைக்காயர் நிதி உதவியுடன் கி.பி.1900 ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் 'ஃபிக்ஹு மாலை' அரங்கேற்றம் செய்யப்பட்டது.

சிறப்பு மிக்கப் பேரறிஞர்கள், மார்க்க மேதைகள், தமிழ் வல்லுனர்கள் கண்காணிப்பில் வெளிவந்த சட்டநூலான 'ஃபிக்ஹு மாலை' பாமரமக்கள் முதல் படித்த மேதைகள் வரை அனைவரது கைகளிலும் தவழவேண்டிய நூல் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

புகழ்மிக்க இந்நூலில் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவம்(தவ்ஹீது) பற்றியும் இறை நம்பிக்கை(ஈமான்) பற்றியும் விளக்கிக் கூறி, 'முஸ்லிம்கள் எல்லோரும் முக்தி பெறும் பொருட்டே இஸ்லாத்தின் இயல் கூறுவேன்' என்று பக்தியூட்டும் அண்ணாவியாரின் சிந்தனை, சமுதாய நன்மைக்கு எந்த அளவுக்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார் என்று வெள்ளிடை மலையாகக் காட்டுகிறது!

இஸ்லாத்தின் ஐந்து தூண்களாக விளங்கும் கலிமாவை சொல்லும் முறை, தொழுகைக்குரிய சங்கைகளை சொல்லும் பாணி, நோன்பு வைக்கும் முறைகளையும் மாண்பினையும், ஹலால்(கொள்ளல்) , ஹராம்(தள்ளல்) செய்திகளையும், இன்னும் அன்றாட நெறிகளையும் அழகாகச் சொல்லும் கவிமன்னர் குர்ஆனில் சொல்லப்பட்ட இருபத்தைந்து நபிமார்களின் திருப்பெயர்களை ஒரே பாட்டில் மிக அற்புதமாக அமைத்திருக்கிறார்.

'ஆதம் இதிரீசு நூஹுமூசா

ஐயூபு ஹாரூன் அல்எஸவு

ஹூது இபுறாகீம் லூத்து

எஹ்கூபு தாவூது சுலைமானபி

ஓதுமிசுமாயீல் துல்கி புலி

யூனூசெ ஹியா சுஐபுஈசா

சாதுறும் ஸாலிஹ் இஸ்ஹாக்இல்யாஸ்

ஜக்கரியா யூசுப் முஹம்மதாமே!'


சட்டத்தை யார் உருவாக்குகிறார்களோ, யார் பாதுகாக்கிறார்களோ அது அரசாக இருந்தாலும் சரி அல்லது அமைப்பாக இருந்தாலும் சரி, அதன்படி நடக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை வைத்தால், இல்லை என்ற பதில்தான் விஞ்சி நிற்கும். தனி மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அண்ணாவியார் அவர்களோ ஃபிக்ஹு மாலையை உலகுக்கு மட்டும்
தந்துவிடவில்லை, தம் வாழ்விலும் பேணி மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தார்கள். அண்ணல் எம்பெருமான் ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைத் தம் வணிகத்திலும் பின்பற்றினார்கள். 'வணிகத்தில் பொருளை விற்போர் நேர்மையுடன் விற்றோம் என்கிற திருப்தியும், வாங்குவோர் வாங்கிய பொருள் சரியான விலை கொடுத்தே வாங்கியுள்ளோம் என்ற மன நிறைவையும் பெறவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். 'இறைவன்மீது சத்தியம் செய்துவிட்டு அதை முறிப்பது மாபெரும் பாவம் என்பதையும், அப்பாவத்தைப் போக்க எழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற இசுலாமியக் கொள்கையில் பிடிவாதமாக இருந்து வாழ்ந்துக் காட்டினார்கள்.

குன்றின் மேல் விளக்கான குணசீலர் அண்ணாவியார் அவர்களை பாவண்ணர்கள் பாராட்டி நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள். இங்கே....

சற்குணங்குடி கொண்ட பாதுஷாவான சாஹுல் ஹமீதரசர் ஆளும் நாகூர்பதி வித்தகர் குலாம் காதிர் நாவலர் அவர்கள்,

'குணத்தாலும் குலத்தாலும்
குறியாலும் நெறியாலும் குறைவில்லாத
பணத்தாலும் உயர் முஹம்மதப்துல்காதி
ரென்று பகரும் ஆலிம்'
- என்றும்

'சீரார் காதிர் முகய்யதீன் அண்ணாவியார் என்றும் கவி வல்லரே' - என்றும்

'இசுலாமிய சங்கைமிகு சட்டங்களை எளிய இனிய பாடல்களில் யாத்தளித்தார்' - என்றும் புகழ்கின்றார்.

'வளை புகழ் சிறந்த வித்வ சீவரத்தின கவியெனும் செய்யது முகம்மது அண்ணாவியார் செய்தவக் குலக் கொழுந்து' என்று பிச்சை இபுறாஹிம் புலவர் போற்றுகிறார்.

'வேண்டிய முறையின் விழைந்துணர் சிந்தையர்' என அசனா லெப்பை புலவர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

'சொல்லரிய வியற்றமிழ் பால் கல்யுணர்ந்து தீங்கவி நீர் சொரியும் மேகம்... கதிர் முகிய்யிதீன் என்பானே' என்று யாழ்ப்பாண மகாவித்வான் சுலைமான் லெப்பை அவர்கள் பாராட்டுகின்றார்.

இப்படி புலவர்கள் போற்றும் புலவரை நாம் எப்படி போற்றப்போகிறோம்?

நன்றி:
1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்
3. சரமகவி

Monday, October 26, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 4

சொர்னகவி
நெய்னார் முஹம்மது பாவா புலவர்


அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் (முதலாம் செய்யது முஹம்மது) அவர்களின் மகள் வயிற்று பேரன் ஆவார். இவர்கள் தந்தை பெயர் கிடைக்கவில்லை. அவர்கள் எழுதிய பாடல்கள் ஏதாவதொன்றில் இருக்கலாம். எல்லாம் ஓலைச் சுவடிகளாக இருப்பதால் தேடிஎடுப்பது சாதாரண விசயமல்ல. இவர்களும் தம் பாட்டனார் போல் இறைவன்மீது பேரன்பு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல்மூலம் மழையை வரவழைப்பதென்றால் சாதாரண செயலல்ல. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் to hypnotise a particular inanimate body to serve the requirments சாதாரண செயல் அல்ல. அதற்கென்று சில பிரத்தியேகப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியில் தேர்ச்சிபெற்றால் மாத்திரமே இத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும். ஒரு பாடல் மூலம் மழை வந்தது, இது சித்து வேலையல்ல சிந்திக்கவேண்டிய விசயம். விஞ்ஞான அறிவை வைத்துக்கொண்டு மேலெழுந்தவாரியாக சிந்தித்தால் குழப்பத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. அப்பழுக்கற்ற மனத்துடன் ஆழ்ந்து சிந்தித்தால் சிந்திப்பவர்களின் தரத்தைப் பொறுத்து விடை கிடைக்கலாம்.

ஹிஜ்ரி 1272 ம் வருடம் மூன்றாண்டுகள் நாடெங்கும் பஞ்சமேற்பட்டு மக்கள் துயருற்றனர்; எங்கு நோக்கினும் வரட்சி; கால் நடைகள் மடிந்தன; அதுபோழ்து தொண்டி நகரைச் சேர்ந்த பெரியவர் செய்கு சுலைமான் லெப்பை சாகிபு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சொர்ணகவி மழை வேண்டி மழைப்பாட்டுப் பாடினார்கள் என்று அதிரை தாஹா அவர்கள் 'இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இது ஹிஜ்ரி ஆண்டுக்குச் சரியான கி.பி.1855-56 ம் ஆண்டு வருகிறது. ஆனால் மழைப் பாட்டை புத்தகமாக வெளியிட்ட ஹாஜி. க. செ. செய்யது முஹம்மது அண்ணாவியார் , முகவுரையில் 1862 வரை என்று குறிப்பிடுகிறார்கள்.

1862 ம் வருடத்துக்குச் சரியான காளயுக்தி வருடம் வரையில் இத்தேசத்தில் ஏறக்குறைய மூன்றாண்டுகள் மழை பெய்யாதிருந்தது. ஒரு நாள் வெள்ளிக்கிழமை 'ஜும்ஆ' தொழுகைக்குப் பிறகு, அங்கு வந்திருந்த தொண்டி நகரைச் சேர்ந்த செய்கு சுலைமான் லெப்பை சாஹிப் என்ற பெரியார் எழுந்து நின்று அங்கிருந்த சொர்ணகவி அவர்களை, 'விழித்தெழுவீர்! சர்வதயாபரனாகிய அல்லாஹுத்தஆலாவிடம் மழை பொழிய மனமுவந்து சில 'முனாஜாத்து'க் கவிதை களியற்றி யருளவேணும்' எனக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிசைந்த கவியவர்கள் கவிதை இயற்றி பாராயணம் செய்து மறு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தபிறகு இறைநாமம் ஓதி உமறு புலவர் சீறாவில் பாடிய 'நபி மழை அழைத்த படலம்' பாடி முடித்தபின் தம்முடைய பாடலைப் பாடத்தொடங்கினார்கள். கடைசிப் பாடலைப் பாடிமுடிப்பதற்குமுன் மழை பொழியத்தொடங்கி ஒரு வாரம் வரை நீடித்ததாக 'மழைப் பாட்டின்' முகவுரையில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் குறிப்பிடுகிறார்.

கருத்துச் செறிவும், இறை பக்தியும் நிறைந்த பாடல்கள் சில:

'சீருலாவி யருள் வளந் திருச்

சிந்தையிற் குடிதங்குந் தயாபரா

பாருலாவிய ஜீவசராசரம்

பண்பதாகவே யாவும் விளங்கவே

நேருலாவிய நீயலதாரிநீ

நீதிமானே யின்னேர மிரங்கியே

காருலாவிய நீண்மழை தந்தருள்

காணொணா வடிவே யெங்கள் நாயனே'


என்று வல்லோனைப் புகழ்ந்து, இறையருளை வேண்டி நிற்கும் கவியரசர் தொடர்ந்து வரும் மற்ற பாடல்களில் மக்கள் படும் துன்பங்களக் கூறி ஈருலக ரட்சகர் நபிகள் கோமானின் பொருட்டால் துயர் துடைக்கவேண்டும் என்று கூறுகிறார். இதோ இங்கே:

'நாடுதோறும் பயிர்முகம் நாடியே

நந்திவாடுகிறார் பயிரிட்டவர்

வீடுதோறுள மாதர்கண் மக்களின்

வேடங்கண்டுளம் வாடிமெலிகிறார்

வாடைமா மணம்வீசு முகம்மது

வள்ளற்காக யெங்கள் துயரோடவே

மூடிமாரி விடாது சொரிந்திட

முத்திதந் தருள்வாயெங்கள் நாயனே'


கார்மேகம் வந்து வந்து போகிறது ஆனால் மழை பொய்த்துவிடுகிறது. இதோ காரிருள் இப்போது மழை பெய்விக்கும் காய்ந்திருக்கும் பயிர்கள் பசுமையுறும், நாடு செழிப்படையும், நாமும் வளம்பெறுவோம் என்று ஆவலுடன் இருப்பவர்கள் ஏமாந்துப் போவது எப்படி இருக்கிறதென்றால் நல்ல பசியுடன் இருப்பவனுக்கு அறுசுவை உணவை காட்டிக் காட்டிப் பறிப்பதுபோலிருக்கிறது என்று அழகிய உவமை நயத்துடன் பாடுகிறார் கவிராயர்.

'தேட்டமாம் பசியுள்ளவர் முன்பிலே

தின்னஞ்சோறு கறிகளை யின்பமாய்

காட்டிக் காட்டிப் பறிப்பவர் போலவே

கறுத்தமேகம் வெளுத்துக் கலங்குதே

மூட்டமாயொரு மூசாப்பதாகவே

மூடிமாரி விடாது சொரிந்திட

நாட்டம்வைத் தனைவோரையும் காத்தருள்

நந்திலாமணியே யெங்கள் நாயனே'


புலவர் அவர்கள் மழைப் பாட்டுத் தவிர 'கியாமத்து மாலை', 'திருமண வாழ்த்து', 'கொம்புரவ்வு இல்லாத வண்ணம்', 'பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து', 'செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ்' முதலிய வேறு பல நூல்களையும் யாத்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்கள்.

மனித மனம், பலவற்றின் மீது அன்பு வைத்திருக்கும். ஆனால் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. குறிப்பாகத் தந்தையைக் காட்டிலும் தாய் வைத்திருக்கும் அன்பு சொல்லில் அடங்காது. தன் கணவன் விடும் குறட்டையோ ஏழு வீடுகளுக்கப்பால் எதிரொலிக்கும், அவளோ ஏதும் அறியாமல் உறங்கிக்கொண்டிருப்பாள். ஆனால் தன் குழந்தை சினுங்கினால் போதும் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்துவிடுவாள். தாய் உறங்கினாலும் தாய்மை உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கும். ஆகவே தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் கவனம் வைத்திருக்கும் அவள் குழந்தை துன்பப்படுபோது பரிதவிப்பாள், சிரிக்கும்போது பூரித்து மகிழ்வாள்.

இத்தகைய குழந்தைப் பருவத்தைச் சிறப்பித்துப் பெருமை சேர்த்துள்ள புலவர் பெருமக்கள் இறைவனையோ அல்லது சிறப்புப் பெற்ற பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவதே 'பிள்ளைத்தமிழ்'. இது தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் மரபு, இசுலாமியப் புலவர்களுக்கும் இது பொருந்தும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகையாகப் பாடப்படுகிறது. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமையும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் கடைசிப் பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேருக்குப் பதிலாக நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் அடங்குகின்றன.

ஆன்றோர்கள் மறைந்த பின்னரும் அவர்கள் மீதிருக்கும் மரியாதை, அன்பு காரணமாகப் பாடப்படுவதுண்டு. அவ்வகையில் செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ், முத்துப்பேட்டையில் அடங்கியுள்ள ஹக்கீம் செய்கு தாவுது வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்டதாகும்.

குழந்தையின் பருவங்களில் நடை பருவம் முக்கியமானது. குழந்தை எழுந்து தன் பிஞ்சு கால்களை ஒவ்வொரு அடியாகத் தத்தித் தத்தி எடுத்து வைக்கும்போது தாய் சற்றே தூரத்தில் தன் இரு கைகளையும் நீட்டி 'வா வா' என்றழைப்பாள். இதனை 'வருகை'ப் பருவம் அல்லது 'வாரானைப் பருவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதோ நம் புலவரின் கற்பனை வளத்தைப் பார்ப்போம்..

'செம்பொற் கலசத் திருவருக

தெவிட்டா வமுதத் தேன்வருக

சித்தாந் தவர்கட் குயிர்வருக

தீண்டா மணிச்செஞ் சுடர்வருக

அம்பொற் கிரண மலைவருக

அலையா தாசைக் கடல்வருக

அறிவோ ரிருகண் மணிவருக

அவுலி யாக்கள் இனம்வருக

நம்புற் றவர்க்கன் பருள்வருக

நாவல் லவர்கள் நாவருக

நலஞ்சே ரறிவின் நிலைவருக

நன்றே விளைக்கும் பொருள்வருக

உம்பர்க் கலைமா மதிவருக

வோங்குந் தவத்துள் ளகம்வருக

ஒளிசேர் செய்கு தாவுதெனும்

ஒலியே வருக வருகவே!'



நன்றி:
1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்
3. செய்கு தாவுதொலி பிள்ளைத் தமிழ்
4. புலவர் அ. பஷீர் அஹமது அவர்களின் முன்னுரை

Thursday, October 22, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 3

கலம்பகம் பாடிய
ஜீவரத்தினகவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார்


அண்டகோடிகளைப் படைத்து அவற்றுள் உயிரனங்கள் வாழ்வதற்கான தகுதியை பூமிக்களித்து மனிதன் உள்பட எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்த இறைவன் , மனிதனை மட்டும் மிக அழகாகப் படைத்தேன் என்று கூறுகிறான். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய பிரதிநிதி என்ற மிகப் பெரிய கௌரவத்தையும் கொடுத்தான். தன்னுடைய பொறுப்பை
வானத்திடமும் பூமியிடமும் கொடுத்தபோது அவைகள் ஏற்க மறுத்தன, ஆனால் மனிதன் மட்டும் அந்த மகத்தான பொறுப்பை, உன்னதமான அமானிதத்தை ஏற்றுக்கொண்டான். அதன் காரணத்தினாலெயே அகம்பாவம், செருக்கு, பெருமை இவனது தலைக்கேறியதால் தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாகிவிட்டான் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இதை உணர்ந்த ஒரு சிலர் மட்டும் அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை இவைகளை கடைபிடித்து தம் சொல், செயல் அனைத்தையும் இறைவணக்கமாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் தனக்கென்றில்லாமல் பிறருக்காகவும் வாழ்ந்து சமுதாய
சீர்திருத்தத்திற்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். இறைநேசர்கள் என்று சிறப்பிக்கப்படும் இவர்கள் சிறந்த வீரர்களாகாவும், தளபதிகளாகவும், மன்னர்களாகவும், மருத்துவர்களாகவும், புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்து முத்திரைப் பதித்திருப்பதை வரலாற்றில் காணமுடிகிறது. இறைவனால் நேசிக்கப்பட்ட இவர்கள் சொல்வது நடக்கும். வேறு வார்த்தையில் சொன்னால் எது நடக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். எனவே அற்புதங்கள் விளையும் தோட்டமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

சாதி மதங்களைக் கடந்து சந்தமிகு பாடல்களை யாத்தளித்த செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களுக்கு இரண்டு மைந்தர்களும் மகளும் உள்ளனர். மூத்தவர் செய்யது மீரான் லெப்பை, இளையவர் நூர் முஹம்மது இவ்விருவரும் அண்ணாவியர்களே. மகளைப் பற்றிய குறிப்பு இல்லை.

புலிக்குப் பிறந்தது பூனையாகமுடியாது. 'முத்தின் கருவிலிருந்து மாணிக்கம் பிறந்தது' என பாடிய அமிர்தகவிக்கு பிறந்த மாணிக்கமான மீரான் லெப்பை அண்ணாவியாருக்கு ஞானம் பிறந்தது சுவைமிகு நிகழ்ச்சியாகும். தம் தந்தையின் ஆற்றலில் பெருமைகொண்டோ என்னவோ மீரான் லெப்பை அண்ணாவியார் எழுத்தறியாமல் படிப்பறியாமல் ஏன் பள்ளிக்கூட வாசல் பக்கம் மழைக்கூட ஒதுங்காமல் பெற்றோர் சொல் கேளாமல் சோக்காளியாக வாழ்ந்து வந்தார். ஆனால் இளையவரோ அதற்கு மாற்றமாக இருந்தார். கல்வியறிவற்ற மூத்த மைந்தன்மீது வெறுப்புற்ற தந்தை இளைய மகன் நூர்முஹம்மது மீது அன்பு செலுத்தி வந்தார்.

வருடங்கள் கடந்தன, மூப்பெய்து பிணியுற்ற அமிர்தகவி கவிபாடும் திறத்தை தம் இளையமகன் நூர் முஹம்மதுக்கு கற்று தர எண்ணி தம் இளைய மகனை அழைத்துவர ஆள் அனுப்பினார். ஆனால் மகனாரோ தம் தந்தையின் பிணி நீக்க மூலிகைத் தேடி எங்கோ சென்றுவிட்டார். சென்ற இடம் யாருக்கும் தெரியவில்லை நாட்கள் நகர்ந்தன, பிணி தன் பணியை காண்பிக்க ஆரம்பித்தது. நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த கவியவர்கள் கலங்கினார். ஒரு பக்கம் கல்வியறிவில்லாத மூத்தமகன் இன்னொரு பக்கம் எல்லாம் அறிந்த இளையமகன் அருகிலில்லாத நிலை, செய்வதறியாமல் திகைத்தார். தாம் பெற்ற ஞானம்
யாருக்கும் பயனில்லாமல் போய்விடுமோ என்றஞ்சியவராக ஒரு முடிவுக்கு வந்தார்.

உதவாக்கரை என்றொதுக்கிய மூத்த மகன் மீரான் லெப்பையை வரவழைத்து தம்மருகே இருத்தினார். கூடியிருந்த உறவினர் சீடர்கள் அனைவரையும் புறமேற்றினார், கதவு தாழிடப்பட்டது. தனித்துவிடப்பட்ட மகன் செய்வதறியாமல் தந்தையை நோக்கினார். பெற்றோர் சொல் கேளாமல் வாழ்நாள் பூராவும் தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்தல் மனத்தை அரிக்க கூனிக் குறுகி நின்றார். தந்தையோ ஒரு முடிவுக்கு வந்தவராக மகனை துளைக்கும் பார்வையுடன் உற்று நோக்கினார். தந்தையின் பார்வையை எதிர்கொள்ள சக்தியற்றவராக தன்னை இழந்து தந்தையின் கட்டுக்குள் அடங்கினார். மகனை தம் அருகே
அழைத்தார். இறை நாமத்தை உச்சரித்தவண்ணம் ஒரு சில நொடி இரு கண் மூடி எல்லாம் வல்ல அல்லாஹ்வை தியானித்து தம் உமிழ்நீரை மைந்தரின் நாவில் உமிழ்ந்து விழுங்கச்செய்து நா திருத்திய அந்நொடியில் தம்பணி முடிந்த மனநிறைவுடன் இறைவனடி சேர்ந்தார். தமிழுலகம் ஒரு அண்ணாவியாரை இழந்தது.

என்ன விந்தை! தந்தை உமிழ்ந்த அமுதத்தை விழுங்கிய அந்தகனம் விவரிக்கமுடியாத எதோ ஒரு உணர்ச்சி உடம்பு முழுவதும் வியாபிப்பது போன்று உணர்ந்தார், சில நொடி தன்னிலை மறந்தார். அன்று முதல் செய்யது மீரான் லெப்பை கற்றோர் போற்றவும், கேட்டோர் வியக்கவும் நற்றமிழில் சொற்சுவை, பொருட்சுவை மிக்க ஞானப்பாடல்களைப் பொழியத் தொடங்கினார்; கவிமழையில் அனைவரையும் நனையச் செய்தார்; தந்தையையும் விஞ்சும் அளவுக்கு சீரிய தொண்டுகள் ஆற்றினார்.

அகிலத்திற்கும் அருட்கொடையாக வந்த திருநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் பற்றி பாடாத புலவர்கள் இல்லை. இசுலாத்தை ஏற்று முதன் முதலில் மிஃராஜு மாலை இயற்றிய ஆலி புலவர் முதல் இப்போது வாழுகின்ற புலவர் வரை நபிகள் பிரானைப் பற்றி புகழாதவர் யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை; இல்லவே இல்லை என்ற விடைதான் கிடைக்கும்.

இமாம் பூசரி(ரஹ்) அவர்கள் நோய்வாய்பட்டு மருத்துவம் கிடைக்காமல் புருதா ஷரீஃபை இயற்றியபோது 'ஃப மபுளஃகுள் இல்மி ஃபி அன்னஹு பஷருன்...' என்ற அடிக்குப் பிறகு அடுத்த அடி வராமல் சிந்தனையிலேயே உறங்கிவிட்டர்கள். நபிகள் கோமான் கனவில் தோன்றி 'வ அன்னஹு ஃகைர ஃகல்கில்லாஹி குல்லிஹிமி' என்று எடுத்தோதி இமாமவர்கள் மீது போர்வை ஒன்று போர்த்தி நோய் தீர்த்ததாக வரலாற்றுச் செய்தி உண்டு.

ஆலிம்கவிஞர் சிராஜ் பாக்கவி அவர்கள் தாம் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நபிமணி' என்ற கவிதைத் தொகுப்பை கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் துணையுடன் எம்பெருமானார் அவர்களின் 'ரவ்ளா ஷரீஃப்' முன்அமர்ந்து அரங்கேற்றம் செய்தார்கள்.

ஹிஜ்ரி 1177- ல் (கி.பி.1764) மறைந்த காசிம் புலவர் திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்று இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார். ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் 'என்னால் பாட முடியும்' என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.

'பகருமுருவிலி அருவிலி வெருவிலி' எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப்
பாராட்டினார்.

முஸ்தபா(சல்) அவர்களை நெஞ்சேற்றிய கவிராயரின் நெஞ்சமும் முஹப்பத்தால் நிறைந்து நின்றது. நபிகள் கோமானைப் பற்றி பாடாமலிருந்தால் தம்முடைய ஞானத்திற்கே இழுக்கு என்றுணர்ந்த அண்ணாவியார் நபிகள் பிரானை நாயகராகக் கொண்டு கவித்திறன்மிக்கோர் பாடவல்ல மதங்கு, அம்மானை, சம்பிரதம், தவம், மறம், சிந்து போன்ற பதினெட்டு உறுப்புக்கள் பொருந்துமாறு நால்வகைப் பாக்களும் பாவினங்களும் கொண்டு 'கலம்பகம்' பாடி எட்டுத் திக்கும் புகழ் பரப்பினார். அதுவே 'மதீனக் கலம்பகம்' ஆகும்.

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப்பிரபந்தவகைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். இலக்கண நெறி பிசகாமல் சந்தம் சரியாமல் கலம்பகத்தை பாடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜீவரத்தின கவிராயர் அவர்கள்.

மறுமை நாளில் ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்டு மகுஷரில் மக்கள் மயங்கி நிற்கும்காலை 'யா நஃப்ஸி - என் ஆன்மாவே' என்று யாவரும் தம்மை நினைத்து நொந்து அழும்போது 'யா உம்மத்தீ - என் கூட்டத்தினரே' என்று தேடித்தவிக்கும் பெருமானாரின் பேரருளை புலவரகள் நெஞ்சம் நெகிழப் பாடுகின்றார்.

'தியங்கி யவரவர் புலம்பி அழுது அழுது
இடைந்து மகுஷரின் மயங்கு பொழுதெதிர்
சீரோங்கி இலங்கும் பரம்பரன்
நீர்தான் துணை என்று புகழ்ந்துயர்
திருவருள் கொடுபர கதிபெற மிகுதுயர்
திகழடி மைகளை யழைக்கச் சிறந்தன'

மதீனக் கலம்பகத்தில் ஒவ்வொரு பாடலும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. சொர்க்கப்பதி திறப்பது, சுகமளிப்பது, சுடர்தருவது. உலகத்தின் ஏனைய மொழிக் கவிஞர்களும் புதுப்புது சந்தத்தில்-வண்ணத்தில், அமைப்பில் பாலை மணலில் உலவும் நபி(ஸல்) அவர்களை பாடி களித்தனர், களிப்பேற்றினர். கவிமாரி பொழியும் சீவரத்தின சிங்கம் பாடும் பாணியே தனி; முத்துப் பரல்கள் கோர்த்து வித்தை காட்டும் வித்தகர் தம் பாடலில் பல சித்துவேலைகளைப் புரிகிறார் தக்கலை வாழ் பீர்முஹம்மது அப்பா போல.

எட்டு யானைகளை ஒரு குடத்தில் அடைப்பாராம்; அண்டங்கள் ஏழினையும் ஒரே கைக்குள் அடக்க வருவாராம்; நாற்பத்திரண்டு மலைகளைப் பெயர்த்து கையிலேந்தி வருவாராம்; இரும்பை வெள்ளியாக மாற்றுவாராம்; பூனையைப் பிடித்து பானையை பிட்டுப் பிட்டு உண்ணச்செய்வாராம்; ஆர்ப்பரிக்கும் ஏழ்கடலையும் சிற்றெரும்பைக்கொண்டு பருகச்செய்வாராம்; வானில் தவழும் வெண்ணிலாவை வாளால் வெட்டுவாராம்; கைவிரலால் கதிரவனை சுற்றி எறிவாராம்; தாரகைகளைக் கோர்த்து மாலையாக ஆக்கிக்காட்டுவாராம்; இவ்வளவு சித்து வேலைகள் செய்யும் இவருக்கு ஒன்று மட்டும் முடியாதாம்! அது, காதம் கமழ் மணக்கும் கஸ்தூரி மேனியார் மிஃராஜ் நாயகர் நபிகள் நாயகம்(சல்) அவர்களை புகழ்ந்து நாளெல்லாம் பாடலாமென்றால் முடியாத காரியமாம்! இந்நிலை மருத்துவத்தில் வித்தகன் என்று சொல்லிச்சென்ற ஒருவர் நாடி அறிய முடியாமல் தவிப்பதைப் போல் இருக்கின்றதாம்! இதோ இங்கே....

'ஆனையெட்டு குடத்தினில் அடைப்பேன் ஏழு
அண்டமது கையுள் வைப்பேன்
ஆறேழு மலையைக் கையேந்தி வருவேன்
அயந்தனை வெள்ளியாகக் குவிப்பேன்
பூனைதான் பனையைப் பிட்டுப்புசித்து நான்
போகச் சொல்வேன்; எறும்பைப்
புனிதமுடன் ஏழ்கடலை உண்டிடச் செய்வனம்
புலியை வாளால் வெட்டுவேன்
தானென் விரலால் பருதியைச்சுற்றி யெறிவேன்
தகுமான வான் மீன்களை
தான்கோவை யேசெய்து மாலையில் தெரிய
வைப்பே எனன்சமர்த் திதல்லால்
ஞானபோதக மதினாநாதர் காதங் கமழும்
நானதே கத்தர் நவமே
நவிதலுக்கரிய தெனிரசூல் சரண நாளுமே
நாடி யறியாச் சித்தனே!'

இத்தகைய உவமை நயமிக்க மதீன கலம்பகமல்லாமல் மனை யலங்காரம், மகுடி நாடகம், வாள் விருத்தம், பரிவிருத்தம், யானைவிருத்தம், வாட்சாராவுத்தர் பவனி, திருமண பவனி முதலிய பல காவிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். இதில் வாள் விருத்தம்,பரிவிருத்தம், யானை விருத்தம் ரசூல்(சல்) அவர்கள் நடத்திய வீரப்போர் பற்றியது. மகுடி நாடகம் மந்திர தந்திர விளையாட்டைப் பற்றியது.

ஒருவர் மந்திர ஆற்றலினால் பொருட்களை கண்ணுக்குப் புலப்படாது மறைத்துவைக்க அவற்றை இன்னொருவர் தன்னுடைய மந்திர வலிமையினால் கண்டெடுப்பதை 'மகுடி' என்று அழைத்துள்ளனர். பெரும்பாலும் பாக்கு, வெற்றிலை, தேங்காய், ஆட்டுக் கடாவின் தலை, முட்டை, வாழைப்பழம், பணம் ஆகியவற்றை மறைத்துவைத்து எடுக்கச் சொல்வது வழக்கம். சில போட்டிகளில் ஒரு வாழை மரத்தையும் நட்டு வைப்பார்கள்.

மந்திரவாதிகள் இருகூறாக பிரிந்து நின்று கலந்து கொள்ளும் இப்போட்டி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மந்திரவாதிகள் காளி, துர்க்கை, அனுமான் போன்ற தேவதைகளின் துணையைக் கொண்டு பல சித்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறுவர். சில சமயங்களில் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவதும் உண்டு. மந்திரம் ஒரு கலை. அதனை ஒரு இலக்கியப் பொருளாகக் கொண்டு மகுடி நாடகம் உருவாகப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் வாணிபச் சிறப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செய்யது மீரா லெப்பை, அபுபக்கர் மரைக்காயர் ஆகிய இருவருக்குமிடையே நடப்பதாக அமைந்துள்ளது என்று பேராசிரியர் டாக்டர் ஏ. என். பெருமாள் 'மகுடி நாடகம்' ஆய்வு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:
1. இசுலாமிய இலக்கிய மரபில் அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் தாஹா அளித்த செய்தி குறிப்புகள்
3. 'மகுடி நாடகம்' - பதிப்பாசிரியர் கவி கா. மு. ஷரீப்

அண்ணாவியார் புலவர்கள் - 2

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார்(முதலாம் செய்யது முஹம்மது)


கி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் (ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர்) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. 'புல்லாங்குழலை கவனி, அது என்ன சொல்கிறது என்று கேள்' என்ற மௌலானா ரூமியின் கவிதை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. (புல்லாங்குழல்=மனம்;உள்ளறிவு)

ஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் கடமை எனப் புரிந்தாரே தவிர தன் தேட்டம் நிறைவை அடையவில்லை என்பதனை உணர்ந்தார்.

அக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார். அவரது தமிழறிவு யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றலைக்கொடுத்தது.

ஒருபக்கம் மார்க்க அறிவு மறுபக்கம் தமிழறிவு மனநிறைவைத் தரவில்லை. மௌலானா ரூமியின் அந்த வரி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னை மறந்தார், தன் கோலத்தை மறந்தார். உலக வாழ்வில மனம் ஒப்பவில்லை, நீண்ட தலைமுடி , பெரியதாடி துறவிகோலம் பூண்டு மதுக்கூர் விட்டகன்று கடலாடும் நாகூர் வாழும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அருள்வேண்டி பயணமானார். அங்கு , தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக மாறி கஸ்தூரி கமழ் மணக்கும் ஜவ்வாது புலவர் போன்ற மாணிக்கங்களை உருவாக்கிய காலத்தில் , ஷெய்கு வஹாபுதீன் என்ற ஞானச்சுடரின் நட்பு கிடைத்தது.

சடைமுடி தறித்து நின்ற அண்ணாவியாரின் கோலங்கண்ட ஷெய்கு, இசுலாத்தில் துறவறம் வெறுக்கப்பட்டது என அறிவுரைக் கூறி சடையை கலையச்செய்து பொன்னிறமேனிகொண்ட அண்ணாவியாரை கூர்ந்து பார்த்தார்கள். உள்ளத்தை நோட்டம்விட்டர்கள் அங்கு ஆத்மீகத்தின் பொறி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. 'இறைவனது பேரொளி ஒவ்வொரு உள்ளத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறது, ஆனால் துருப்பிடித்த இதயங்கள் அவ்வொளியை ஏற்க மறுக்கின்றன. தூய்மையான உள்ளமோ அப்பேரொளியை உள்வாங்கி பல உள்ளங்களை வெளிச்சமடையச் செய்கிறது' என்ற கருத்தைப் புரிந்த ஷெய்கு வஹாபுதீன் அவர்கள் அந்த நிமிடமே சீடராக ஏற்றுக்கொண்டார்கள். அண்ணாவியாரின் அறிவுக்கூர்மையைக் கண்ட அவர்கள் மெய்ஞான அறிவான 'மஃரிஃபா'வைப் புகட்டி தீட்சையளித்தார்கள். அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த புல்லாங்குழல் தன் இசையை நிறுத்தவும் புல்புல் பறவை சிறகடிக்கவும் கண்ட அண்ணாவியார்,
'உளந்தெளிந்துணர்ந்த வகாபுதீன் சாகிப்
உயர்பதம் சிரசினில் அணிந்தே' - என்று ஞானாசிரியருக்குத் தன் நன்றியைக் காணிக்கையாக்கினார்.

நாகூர்பதியில் ஞானதீட்சைப் பெற்றபின் அறிவுக்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியாதே என்றுணர்ந்தார். தம் குருநாதரின் சொந்த ஊரான வழுத்தூருக்கருகிலுள்ள அய்யம்பேட்டை வந்தடைந்து ஆங்கு ஓர் பள்ளிகூடம் நிறுவி அதில் தானே ஆசானாக இருந்து தமிழறிவுமட்டுமல்லாமல் ஆன்மீக அறிவையும் போதித்து அறியாமையை நீக்கிவந்தகாலை....

'அபாத்து, அத்ரமீ' என்ற பெயரால் அதிராம்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். 'மதுரைச் சரகத்தின் மாநகரம் செல்லி' என்று சுட்டுகிறார் நேர்வழிப் பிரகாசத்தின் ஆசிரியர். 'செல்லிநகர் தனில்வாழுஞ் சீவரத்ன கவிராஜன் செப்பு கின்ற' என்று காதிர் முஹையிதீன் அண்ணாவியாரும், அதிராம்பட்டினத்தை 'செல்லிநகர்' என்று அழைக்கப்பட்டதாக முனைவர் ஏ. என். பெருமாளும் குறிப்பிடுகிறார்கள். மதுரையின் ஆளுகைக்குட்பட்டிருந்த செல்லி நகரத்தை அதிவீர ராமபாண்டியன் கைப்பற்றி ஆட்சி புரிந்ததால் அதிவீர ராமப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு , மருவி , இப்போது அதிராம்பட்டினம் என்று அழைக்கபடுகிறது. அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.

அக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிராம்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. அண்ணாவியார் என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன (கிரியாவின் தமிழ் அகராதி). உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.

தம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள். தமிழறிவை மட்டும் போதிக்கவில்லை தகுதி உள்ளவர்களுக்கு இர்ஃபானுடைய ஞானத்தையும் போதனை மட்டும் செய்யவில்லை அதில் முதிர்ச்சியும் பெற்றுவந்தார்கள்.

'எதுவுமே இல்லை என்று நீ எதை சொல்கிறாயோ அதில் எல்லாமே இருக்கிறது, எல்லாம் இருக்கிறது என்று நீ எதை காண்பிக்கிறாயோ அதில் எதுவுமே நிரந்திரமில்லை'. இதை உணர்ந்தவர்கள்தான் சூஃபியாக்கள் என்ற ஞானிகள். அவர்களின் பயிற்சிப் பாதையில் 'கறாமத்' அல்லது சித்து என்ற அற்புதங்கள் நிகழும். அதனைத் துறப்பவர்களால்தான் 'விலாயத்' என்ற நிலையை அடைந்து இறைவனுடைய 'லிகா' வை தரிசிக்கமுடியும்.

அச்சமயத்தில் கதிர்வேல் உபாத்தியாயர் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் மாந்திரீகக்கலையிலும் சிறந்து விளங்கியவர். 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்ற அவ்வை மொழிக்கேற்ப அண்ணாவியாரின் தமிழறிவைக் கேள்வியுற்று நட்பு பாராட்ட வந்தார். இரண்டு ஒருமித்த கருத்துடைய மனங்களிலிருந்து வெளிப்படும் எண்ணம் நட்பாக பரிணமிக்கும். அந்த நட்பு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு இவைகளைக் கடந்து நிற்கும். அப்படிதான் அவ்விருவருடைய நட்பும் இருந்தது.

கதிர்வேல் உபாத்தியாயருக்கு ஆசை ஒன்று இருந்தது, பழனி மலை செல்ல வேண்டும் அங்கு முருகபெருமானுக்கு காவடி எடுக்கவேண்டும், இது நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்ற காலம் கனிந்துவந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின் தம் ந்ண்பரைக் கண்டு ஆசி பெற நினைத்தார் பயணத்திற்கு ஓரிரு நாள் முன்பாகவே காணவந்தார். வந்தவரை வரவேற்ற அண்ணாவியார் சிறிது நேரம் அளவளாவினர். பின்பு மெதுவாக தன் அவாவை வெளிப்படுத்தினார் உபாத்தியாயர்.

இப்போதுள்ளதுபோல் அக்காலத்தில் வாகன வசதி கிடையாது பெரும்பாலும் கால்நடையாகவே செல்லவேண்டும். வழியில் கள்வர் பயம்வேறு, பல இன்னல்களை அனுபவிக்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு 'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்ற வள்ளுவனின் சொல்லை மெய்ப்படுத்தி, தாங்கள் அங்குதான் செல்லவேண்டுமோ , இங்கு தரிசிக்கக்கூடாதோ என்று கேட்டதற்கு இல்லை அங்கு செல்வதாக உறுதியான முடிவெடுத்து விட்டேன் என்று உபாத்தியாயர் கூறினார்.

'அப்படியானால் முருகபெருமான் இங்கே தரிசனம் தந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறிவிடுமல்லவா?'

'அதெப்படி சாத்தியம்?'

'சாத்தியமில்லாததை நான் சொல்லமாட்டேன். ஆகவே இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்.'
காலம் குறிக்கப்பட்டது தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பூப்பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேல் உபாத்தியாயரும் வந்தார் அண்ணாவியாரும் வந்தார். தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து பாடும் நண்பரே என்றார் அண்ணாவியார்.

'சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்' என்ற பெயர்தாங்கிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற உபாத்தியாயர் தம் கம்பீரக் குரலில் பக்திப்பரவசத்துடன் உளம் உருகி...

"பூவடியினில்லாதி சேஷசயனன் போற்ற
மாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே .... என்று தொடங்கி பதினான்காம் பாடலாகிய

'ஐயனார் கௌரிபயிரவி யாணையேவா
அஷ்ட பாலகராணை யதிசீக்கிரமேவா
மெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா
வீரபத்திர னாணை விரைவாகவேவா
கையேந்தினே னாணை கடுகவேவா
கந்த சுவாமிமே லாணையேவா
ஐயுற்ற மேருமே லாணையேவா
அரனாணை ஹரியாணை யதிசீக்கிரமேவா'

என்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் சுப்ரமணியர் தம்நாயகியருடன் பூரண அலங்காரமாய் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர்.'இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க' என்று கூறி பழனிக்குரிய எழிலர் மறைந்தார்.
இன்நிகழ்ச்சியை 'மகாபாரத அம்மானை' என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இவர்கள் பத்து புராணங்கள் வரை யாத்தளித்துள்ளதாக 'மகாபாரத அம்மானை' என்ற நூலில் தன்னைப் பற்றி கூறும் பாடலில் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் நூர் நாமா, அலி நாமா, சந்தாதி அசுவமகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதல்லாமல் குமார காவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம் முதலிய நூல்களும் உள்ளன.

ஹிஜ்ரி 1167 ( கி.பி. 1753) ம் ஆண்டு சந்தங்களாலும் உவமைகளாலும் சிறப்புற்று விளங்குமாறு 'அலி நாமா'வை இயற்றி அரங்கேற்றம் செய்தார்கள். இது நான்காம் கலிஃபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களைப் பற்றியது. ஏழை ஒருவரின் கடனைத் தீர்க்கவேண்டி ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடிமையாகத் தன்னை ஓர் அரசனிடம் விற்று கடனைத் தீர்க்கிறார். தம் முயற்சியாலும், திறமையாலும் அவ்வரசனின் படையில் சேர்ந்து பல போர்களில் தீரத்துடன் போரிட்டு வெற்றி வீரராகத் திகழ்கிறார். மன்னரின் எதிரிகளை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார். மன்னரின் நன்மதிப்பைப் பெற்ற அலி(ரலி) அவர்கள் மக்களின் நன்மதிப்பையும் பெற்றதால் அரசனுக்குப் பிறகு அரச பொறுப்பை ஏற்று நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்தார். இதனை செந்தமிழில் வடித்த அண்ணாவியார் போர்க்களக் காட்சிகளை போர் நடப்பதுபோலவே நம் கண்முன் கொண்டுவருகிறார்கள்.

எதிர்தோடிவரும் இரண்டு சுறாமீன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்றும்; விரைந்து பின்வாங்கி முன்னேறி மோதிக்கொள்ளும் செம்மறிக்கடா போன்றும்; தேரில் இவர்ந்து வரும் மன்னர்கள் வில்லை இழுத்து விடுகின்ற அம்புகள் இரத்தினம் அழுந்திய கொடிகள், குடைகள், வண்டிகள் முதலியவற்றையும் சிறுநொடியில் பொடி செய்தன. இதோ பாவலர் பாவில்...

'இரதம் உற்றுறு புரவலர் முனையொடும்
எதிர்கு தித்திடும் கயலொடு கயலடி கொளல் போலும்
விரைவில் உற்றிடு தகரொடு தகருகள்
வினைமிகுத்துர மொடும் எதிர் பொருதிடு வதுபோலும்
வரித னுக்கொடு சுடுகணை சொரிதலின்
மணிஅ ழுத்திய கொடி குடைசகடுகள் விடுதோடு
புரவி மற்றவும் ஒருநொடி யளவுபல்
பொடிய டுத்தின எவர்களும் இவைசொல அரிதாமே'

இதே நூலில் ஒரு பாட்டில் தம் பாட்டனர் பெயர் நூருதீன் லெப்பை என்றும் தந்தை பெயர் செய்கு மீரான் என்றும் தனது சொந்த ஊர் தென் மதுரை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது என்று 'காலச்சுவடு' என்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இவர்கள் உ.வே.சாமிநாதய்யருக்கு முற்பட்டவராகவும் 1750 ம் ஆண்டு வாக்கில் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வாழ்ந்ததாகவும் குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடியபின் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் நாட்டின் அமைதிக்கு வேண்டி யாகம் செய்கிறார் இந்த கருப்பொருளை மையமாக வைத்து "சாந்தாதி அசுவமகம்" என்ற காப்பியம் அமிர்தகவி அண்ணாவியாரால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாக கிடைக்காத காலமாதாலால் ஒலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார் என்று 'பெருங்குத்தூசி' என்பவர் குறிப்பிடுகிறார். இது உலக வெற்றி முரசு என்ற வாரப்பத்திரிக்கையில் 2006 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி இதழில் வந்துள்ளது.

தகவல்கள்:

1. அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்

Sunday, October 18, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 1





ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார்
(மூன்றாம் செய்யது முஹம்மது)


அதிவீர ராமப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். அழைக்கப்படுவதோ அதிராம்பட்டினம்; சுருக்கப்பெயர் அதிரை. தமிழகத்தில் இசுலாம் நுழைந்தகாலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் (ANNAVIYAR) என்று அழைக்கப்படும் பெரும் சூஃபி புலவர் குடும்பங்கள் தமிழிலக்கிய உலகிற்கு பெரும்பங்காற்றிருக்கின்றனர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முஹையித்தீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902 ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், பாடும் திறன் பெற்ற பாவலர், இறையருள் பெற்ற தொண்டர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர். இவைகளுக்குமேல் மிகச்சிறந்த மனை நூல் நிபுணர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப் படுத்தியது. அண்ணாவியார் புலவர்களை உலகுக்குக் காட்டிய உத்தமர் இவர்களே ஆவார்.


இவர்களின் அறிய முயற்சியால் வெளிவந்த நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அசுவமேத யாகம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்."

ஜீவரத்தின கவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார் எழுதிய "மதீனக்கலம்பகம், மகுடி நாடகம்."

சொர்ண கவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "மழைப் பாட்டு, செய்கு தாவூதொலி பிள்ளைத்தமிழ், விடுகதை பாடல்கள்."

நவரத்தினகவி காதிர் முஹையிதீன் அண்ணாவியார் எழுதிய "ஃபிக்ஹு மாலை."

செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "ஆலிம் சாஹிபு சமரசகவிகள், நாகூர் புகைரத வழிச்சிங்கார ஒயிற்சிந்து."


வெளிவர இருக்கும் நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அலி நாமா, நூறு நாமா, மகாபாரத அம்மானை, வாட்சா ராவுத்தர் திருமண பவனி."

சொர்ணகவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "கொம்புரவ்வு இல்லாத வண்ணம், பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து."

இன்னும் வரும்.

நன்றி: அண்ணாவியார் பேரர்கள் அப்துல் வாஹித் மற்றும் அஷ்ரஃப் அலி, அதிராம்பட்டினம்.

குறிப்பு: எனக்கு கிடைத்த செய்திகளை வைத்து ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களைப் பற்றி எழுதியுள்ளேன். இவர்கள் ஆற்றிய தொண்டுக்கள் நிறையவே உள்ளன. இவர்கள் அமிர்தகவியின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். தாம் பாட்டனார் எழுதிய கவிதைத் தொகுப்புக்கள் அனைத்தும் ஒலைச் சுவடிகளாகவே உள்ளன. அவற்றை
சேகரித்து, பாதுகாத்து வைத்துள்ளார்கள். அவற்றில் சில புத்தகவடிவமாக ஆக்கப்பட்டதைத் தவிர வேறு சிலவற்றை தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக அளித்துள்ளார்கள். அவற்றுள் சந்தாதி அசுவகம் அல்லாமல் வேறு எவையெல்லாம் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. இவர்களைப் பற்றிய செய்தி "உலக வெற்றி முரசு" என்ற பத்திரிக்கையில் கடந்த 14-2-2006ல் வெளிவந்திருந்தது. அதை தம்பி ஆபிதீன் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை அவர்கள் உறவினரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளேன். அவை கிடைத்ததும் இத்துடன் சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்,
ஹமீது ஜாஃபர்
துபை
21-10-2009.

Wednesday, September 16, 2009

மஹான் ஷிப்லி பாவா(ரஹ்)




வாழ்வும் நிகழ்வுகளும் (புத்தகச்சுருக்கம்)
ஆக்கியோன்: மஞ்சை ஜாஃபர்


'துணையாளன் துணை, துணையாளன் துணை' இப்படி ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. குரல் வந்த திசையை நோக்கிச் சென்று குரலுக்குரியவரிடம் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சலாம் சொன்னால்..... அடுத்த வினாடி தங்குத்தடையின்றி எந்தவித சலனமுமில்லாமல் "இவனுக்கு சலாம் சொல்லாதீர்கள்" என்ற பதில் வரும்.

இதன் பொருள்...........?

சலாம் என்பது புனிதமான ஒன்று, அது உள்ளத்திலிருந்து வரவேண்டும் உதட்டிலிருந்தல்ல, 'இறைவன், உங்களது உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்' என்பது நபி மொழி. மக்களில் பெரும்பாலோர் உதட்டின் நுனியிலிருந்தே சொல்கிறார்கள், அத்தகைய சலாத்தினை ஏற்றுகொள்ளும் நிலையில் நானில்லை என்பதா? அல்லது நான் சொல்லும் பதில்சலாம் வலிமை வாய்ந்தது அதை ஏற்றுகொள்ளும் தகுதி உனக்கில்லை என்பதா? உன் போன்றவர்களுக்கு சொல்லும் பதில் விழலுக்கிறைத்த நீர், எனவே நீ சலாம் சொல்லி என்னை நிர்பந்திக்காதே என்பதா? ஒன்றும் புரியாத புதிர்!

ஆம்.. புதிர்தான்! அந்த புதிருக்குரியவரும் புதிர்தான், அவர் பேச்சு செயல் எல்லாமே எல்லோருக்கும் புதிர், ஆனால் புரிந்தவர்களுக்கல்ல. அந்த புதிரின் பிறப்பிடம் -'பாவா' என்று எல்லோராலும் மரியாதையாகவும் அன்பாகவும் அழைக்கப்பட்ட ஞானக் கடல், குத்துபு ஜமான் மஹான் முஹம்மது ஷிப்லி பாவா (ரஹ்) அவர்கள்.


உள்ளமும் உருவமும்

'ஒருவருடைய உள்ளத்தில் ஆன்மீகம் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தால் அவருடைய முகத்திலும் ஆத்மிகம் சுடர் வீசிக்கொண்டிருக்கும்' என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய கூற்றுக்கு மிகப் பொருத்தமாக இருந்தார்கள்.

சில நாட்களில் தடித்தும் சில நாட்களில் மெலிந்தும் இல்லாமல் என்றும் ஒரே மாதிரியான மெலிந்த தேகம், உணவை நிரப்ப முடியாத ஒட்டிய வயிறு, வெள்ளையும் கருப்புமில்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மா நிறம், நடுத்திரமான உயரம், இடுப்பில் ஒரு வெள்ளை கைலி, சில சமயங்களில் கைவைத்த பணியன், உடம்பை நன்றாகப் போர்த்திக்கொள்ளும் அளவுக்கு தோளில் ஒரு தடித்த சால்வை, அடர்த்தியான மீசை, அளவான தாடி, ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான பார்வை, புதிரானப் பேச்சு, ஆங்கிலத்தில் 'ஆரா(AURA)' என்று சொல்லக்கூடிய தேஜஸ் - அவர்கள் முகத்தில் மட்டுமல்ல உடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை புறக்கண்ணால் பார்க்கும்படியான அழகிய தோற்றம்.


சிங்களமும் தமிழகமும்

சிங்களத்து மண்ணில் கண்டி-கேகாளெ என்ற ஊர், அங்கு வாழ்ந்த ஹபீப் முஹம்மது காசிம் என்ற பெரியவருக்கு நெய்னார் முஹம்மது என்ற பாலகர் பிறந்து ஆரம்ப கல்வியும் கூடவே யுனானி மருத்துவமும் பயின்றார். கற்ற கல்வி தன் மகனுக்கு மன நிறைவைத் தரவில்லை என்பதை உணர்ந்த தந்தை; அவருக்கு மார்க்க அறிவைப் புகுட்ட தமிழகத்திலுள்ள வேலூரை நாடி வந்தார்.

வேலூர் என்றாலே நினைவுக்கு வருவது 'பாக்கிஹாத்துஸ் ஸாலிஹாத்' மதரஸா. ஆம், ஹஜ்ரத் அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் அரிய முயற்சியினால் கடந்த பத்தொன்பதாம் நூற்றாடின் இறுதியில் உருவான இம்மதரஸா நூறு வயதைக் கடந்து பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதனை தமிழகத்தின் தாய் மதரஸா என்று பெருமைப்பட கூறுவதுண்டு.

அத்தகைய பெருமைமிகு மதரஸாவில் சிங்கள நாட்டிலிருந்து வந்த நெய்னார் முஹம்மது படித்துப் பட்டம் பெற்று ஆலிமானார். பாக்கவியாக வெளி வந்த அவரின் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அந்த தேட்டம் தாய் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தைத் தரவில்லை.

ஆத்மிக அறிவைப்பெற மனம் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார் நெய்னார் முஹம்மது. எங்கே செல்வது? யாரிடம் கேட்பது? இது கடையில் விற்கும் பொருளல்லவே, கேட்டால் கிடைக்குமா? தாம் பெற்ற அறிவை தருவார்களா? உண்மையான ஞானத்தை எங்கே பெறுவது? என்ற கேள்விகள் மனதை துளைக்க நீண்ட சிந்தனைக்குப் பின் ஒரு முடிவுக்கு
வந்தவராகப் பயணத்தைத் தொடங்கினார்.

ராமனாதபுரத்திற்கு பத்து மைல் கிழக்கே பாடல் பெற்ற ஓர் ஊர் - இங்கு ஷரகுப் புலி சதக்கத்துல்லாஹ் அப்பாவும், செத்தும் கொடுத்த செம்மல் சீதக்காதியும் வாழ்ந்த சிறப்புமிக்க ஊர் கீழக்கரை. அங்கு முதன் முதலில் கல்விக்காக தைக்கால் உண்டாக்கிய தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் பேரரும் ஹஜ்ரத் மாப்பிள்ளை லப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின்
புதல்வருமாகிய கல்வத்து ஆண்டகை என்று அழைக்கப்பட்ட செய்யது அப்துல் காதர் என்ற ஞானி வாழ்ந்துவந்தார்கள்.

தமக்கு ஆன்மீக அறிவை அளிக்கவல்லவர் அவர்கள்தான் என்று உறுதியான முடிவுடன் கீழக்கரையை அடைந்து கல்வத்தாண்டகையை சந்தித்தபோது........

"ஆலிம்சாவின் சேவைக்கு சமுதாயம் காத்துக்கிடக்கிறதே! நீங்கள் பணிபுரிய வேண்டாமா? நீங்கள் மார்க்கப்பணியும் வைத்தியமும் செய்யுங்கள்; உங்களுக்குத் திருமணம் நடக்கும், உங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண்மகவாக இருக்கும், அவருக்கு முஹம்மது ஷிப்லி என்று பெயர் வையுங்கள், அவர் எம்மைச் சேர்ந்தவர், அவரை எம்மிடம் அனுப்பி வையுங்கள், நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள்." என்று வாழ்த்தி அனுப்பிவைத்தார்கள்.


மஸ்தான் லப்பை ஆலிம்

தரீக்கா என்பது ஷரீஅத்துக்கு புறம்பானது அல்ல. முன்னது நோய்க்கு மருந்து என்று சொன்னால் பின்னது உடலுக்குத் தேவையான உணவு. மருந்து நோய்உள்ளவர்களுக்குத்தானே தவிர எல்லோருக்குமல்ல, ஆனால் உணவு அப்படியல்ல, அனைவருக்கும் தேவையான ஒன்று அத்தியாவசியமானதும்கூட, இஃது இல்லையென்றால் நிலமை என்னவாகும் என்று நான் சொல்லத்தேவை இல்லை.

எனவே ஷரீஅத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும், எண்ணத்திலும், செயலிலும் - ஏன் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்திருக்கவேண்டும், அதேசமயம் தரீக்கா என்பது ஆன்மிக ஆசை உள்ளவர்களிடம் இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்த பெரியோர்களில் ஒருவர் பொரவச்சேரியை சேர்ந்த மேதை மஸ்தான் லப்பை ஆலிம் அவர்கள்.

இவர்கள் நாகூர் சென்று பாதுஷா நாயகத்தை ஜியாரத் செய்வதை தமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஒரு நாள் வழக்கப்படி ஜியாரத் செய்ய சென்றபோது, அங்கு பள்ளிவாசலில் ஒருவர் மார்க்கப் பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார். அவரின் சொல்லாற்றலால் கவரப்பட்ட மேதை, பிரசங்கம் முடிந்ததும், பிரசங்கம் செய்தவரை அனுகி..........

"இவ்வளவு அழகாகப் பிரசங்கம் செய்யும் தாங்கள் யார்? எந்த ஊர்? என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் தெரிந்துக்கொள்வதில் தவறில்லையே!"

"என் பெயர் நெய்னார் முஹம்மது, பிறந்தது சிங்கள மண்ணில் ஆரம்பக் கல்வி அங்கேதான், மௌலவி பட்டம் பெற்றது வேலூரில், கூடவே வைத்தியமும் தெரியும், இதற்குமுன் சிறிதுகாலம் பணி புரிந்தது தோப்புத்துறையில், இப்போது உங்கள் முன் இருக்கிறேன்."

"தாங்கள் எங்கள் ஊருக்கு வந்து பணியாற்ற முடியுமா? நாங்கள் தங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துத் தருகிறோம். தாங்கள் வந்தால் அதை பெரும் பாக்கியமாகக்கருதுவோம், தாங்களின் சம்மதம் தேவை."


ஆண்டகையின் வாக்கு பலித்தது

மஸ்தான் லப்பை ஆலிம் அவர்களின் அழைப்பையேற்று பொரவச்சேரியில் வேலையை ஒப்புக்கொண்ட ஆலிம்சா இமாமத் பணியோடு வைத்திய தொழிலையும் பார்த்துவந்தார்கள். ஜும்வில் மட்டுமல்லாது அவசியம் ஏற்படும்போதெல்லாம் மற்ற நாட்களிலும் சொற்பொழிவாற்றி வந்தார்கள்.

இவர்களின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சுயநலம்காணா மருத்துவத் தொண்டிலும் மகிழ்ந்த அவ்வூர் மக்கள் இவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதோடல்லாமல் நிரந்தர வாழ்க்கையை அமைத்துத்தர எண்ணி பெண் பார்த்தனர்.


தாயார் செய்யது மீரான் உம்மா

விவசாயத்தில் சிறந்து விளங்கிய குடும்பங்களில் ஒன்று 'செய்பு வீடு.' அந்த வீட்டில் வசித்த செய்யது மீரான் உம்மா என்ற பெண்ணை ஆலிம்சாவுக்கு மணமுடித்தனர்.


பிறப்பின் பெருமை

ஒருவர் பிறப்பினால் பெருமை அடைவதில்லை, அவர் தம் வாழ்வில் செய்யும் சாதனைகளாலும், அதன்மூலம் சமுதாயம் அடையும் பயன்களாலும்தான் அவர் பெருமை அடைகிறார். அந்த பயன்கள் எந்த அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவருக்கு பெருமையும் சேருகிறது. அந்த பெருமையினால் அவரைச் சார்ந்த மக்கள், அந்த ஊர், ஏன் அந்த நாடுகூட பயன்களைப் பெறுகிறது. அவர் பிறந்த மண், இடம், நாள், இவை எல்லாம் போற்றப்படுகின்றன.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்"

என்று வள்ளுவன் சொன்னால்கூட அந்த தாய்மட்டுமல்ல சமுதாயமும் சேர்ந்து மகிழ்ச்சி அடைகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆம் அப்படித்தான் பாவாவின் பிறப்பும். ஆலிம்சா நெய்னார் முஹம்மதுக்கும் செய்யது மீரான் உம்மாவுக்கும் திருமணம் முடிந்தபின் வீடு ஒன்றை கட்டி அதில் தம்பதிகளுக்கு வாழ்க்கையையமைத்துக் கொடுத்தனர். அவர்கள் சிறப்பாக வாழ்ந்த காலத்தில், செய்யது மீரன் உம்மா கருவுற்றார்.

ஹிஜ்ரி 1330 -ம் வருடம் துல் காயிதா மாதம் பிறை 9 (19-10-1912) சனிக் கிழமை ஞாயிற்று கிழமை இரவு 12-00 மணிக்கு (சிலர் 12.30 மணி என்று கூறுகின்றனர்.) அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த குழந்தைக்கு முஹம்மது ஷிப்லி என்ற பெயரை சூட்டினர்.


தாயாரின் மரணம்

பாவா அவர்கள் செய்பு வீட்டில் வளர்ந்து வந்தவேலையில் தாயார், அப்துல் காதர் என்ற மகனையும், முஹம்மது யூசுஃப் என்ற மகனையும் பெற்றார்கள். மூன்றாவது மகன் முஹம்மது யூசுஃப் ஐந்தாறு மாத குழந்தையாக இருந்தபோது தாயார் செய்யது மீரான் உம்மா இறைவனடி சேர்ந்தார்கள். தமது அமைக் குழந்தைகளப் பராமரிக்க தந்தை ஆலிம்சா அவர்கள் ஹாஜிரா உம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள்.

இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொருப்பு அதிகமானது வாழ்க்கைச் சக்கரம் கரடு முரடானப் பாதையில் செல்லத் தொடங்கியது தனது பொருளாதாரத்தை சீர் செய்ய தனது மூத்த மனைவியின் சகோதரி வாழ்ந்த பொரவச்சேரிக்கு அடுத்த மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் குடியேறினார்.


நாலரை டிக்கட் கீழக்கரை செல்லுதல்

ஹிஜ்ரி 1331 / 1913 ம் ஆண்டு கல்வத்தாண்டகை அவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தார்கள். இது பாவா பிறந்த மறு வருடம் நடந்தது. அதன்பின் பதினோரு ஆண்டுகள் கழிந்தன.1924-ம் ஆண்டு ஒரு நாள் ஆலிம்சாவை சந்திக்க கல்வத்தாண்டகையின் மருமகனார் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் மற்றும் மூன்று பேரும் மஞ்சக்கொல்லைக்கு வந்தனர். ஆலிம்சாவை சந்தித்து நலம் விசாரித்தபின் கல்வத்தாண்டகையின் உத்திரவுக்கிணங்க சிறுவர் முஹம்மது ஷிப்லியை அழைத்துப்போக வந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

எதுவானாலும் முதல் குழந்தை என்னைச் சார்ந்தது எம்மிடம் அனுப்பி வைய்யுங்கள் என்று ஆண்டகை முன்பு சொன்ன சொல்லிற்கிணங்க தந்தை ஆலிம்சா மெத்த மகிழ்ச்சியுடன் சம்மதத்தை அளித்தார்கள். பாவாவும் அவர்களுடன் சிக்கலிலிருந்து புகைவண்டி ஏறி ராமனாதபுரம் பயணமாகி அங்கிருந்து கீழக்கரை அடைந்தனர்.

இந்த சம்பவத்தை, "நாலரை டிக்கட் சிக்கலில் ரயிலேறி ரமனாதபுரம் சென்றது" என்று பாவா சில சமயங்களில் குறிப்பிடுவார்கள். அப்போது பாவாவுக்கு வயது பண்ணிரண்டு.


வளர்ப்பு தந்தையும் தாயாரும்

கீழக்கரை அடைந்த பாலகரை ஆண்டகையின் மருகர் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் அவர்களின் துணைவியார் ஆயிஷா உம்மாவும் தங்களது பிள்ளைபோல் வளர்த்தனர் என்பதைவிட குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார்கள். அந்த வளர்ச்சி சாதாரணமாக இல்லை. ஆம்! மார்க்க அறிவையும் உலக அறிவையும் பெற்றுகொண்டே கிராம வேலைகளையும், விவசாயப் பணிகளையும் செவ்வனே கவனித்ததோடல்லாமல் வளர்ப்பு தந்தையின் இரும்புக்கடையில் வணிகத்தையும் திறம்படச் செய்தார்கள்.


மஞ்சக்கொல்லையில் திருமணம்

பதினெட்டாண்டு காலம் கீழக்கரையில் வளர்ந்தாலும் தந்தையுடன் தொடர்பு இருந்தே வந்தது. முப்பது வயதைக் கடந்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற ஆவல் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. தாய் வழி உறவினர்களில் ஒருவர் முஹம்மது இபுறாஹிம் என்ற வணிகர். இவரது நான்காவது மகள் கலிமத்து நாபிஹா பீவியை பாவாவுக்கு மணமுடித்தனர்.

இனிமையான இல்லற வாழ்க்கையில் மூன்றாண்டுகள் உருண்டோடியபின் அழகிய பெண் மகவை கலிமத்து நாபிஹா பீவி பெற்றார்கள் - பாவா தந்தையானார்கள். அக்குழந்தைக்கு தனது வளர்ப்புத் தாயாரின் பெயரையும் அவர்களின் மகளாரின் பெயரையும் சேர்த்து ஆயிஷத்து ஜெய்லானி என்ற பெயரைச் சூட்டி அன்பையும் பாசத்தையும் கொட்டி
வளர்த்தார்கள். மனிதர்களுடைய ஆசைகளைவிட இறைவனுடைய நாட்டம் மேலானது, அவனது நாட்டப்படி அக்குழந்தை தனது ஆறாவது வயதில் இறைவனடி சேர்ந்தது.


கொழும்புக்கு பயணம்

பெண் மகவை ஈன்ற சில காலத்திற்குபின் தனது உள்ளகிடக்கையில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த ஞான வேட்கையால் உந்தப்பட்டு கல்வத்தாண்டகையின் தர்பார் நோக்கி மீண்டும் கீழக்கரை பயணமானார்கள். அங்கு மீண்டும் பழைய பணிகளை கவனித்து வந்தார்கள். இது வளர்ப்பு தந்தைக்கு மன நிறைவைத் தரவில்லை. தமது மகன் மீது அக்கரைக்கொண்ட அவர்கள் கொழும்பிலுள்ள தமது நவரத்தின கற்கள் விற்கும் கடைக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஆன்மீக வாழ்வில் ஆசை கொண்ட ஒருவருக்கு தனக்கு முன்னால் இருக்கும் எந்த ஒன்றும் துச்சமாகத் தெரியும். தனக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடை வந்தாலும் அதனை உடைத்தெரிந்துவிடுவார்கள். இத்தகையவர்களின் மனம், எண்ணம், மூச்சு அனைத்தும் இறைவனையே சுற்றிக்கொண்டிருக்கும்.

வியாபரத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மீண்டும் கீழக்கரைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்கள்.


மீண்டும் மஞ்சைக்கு வருகை

சிறிது காலம் கீழக்கரையில் இருந்தாலும் அங்கும் அதே நிலை தொடர்ந்தது, தன்னுடைய நிலைக்கொல்லாமை ஒருபுறம் தாக்க மறுபுறம் தனது குடும்பத்தைக் காண மனம் நாடியது. எனவே அங்கிருந்து புறப்பட்டு மஞ்சக்கொல்லை வந்தடைந்தார்கள். தனது அருமை மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் மனம் மட்டும் இறைவனையே
நாடிக்கொண்டிருந்தது. என்றாலும் பள்ளிவாசலே கதி என்றில்லாமல் கிட்டுப் பிள்ளை என்பவர் வைத்திருந்த நெல் அறவை மில்லில் இரண்டு அணா(பதிமூன்று பைசா) தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார்கள்.

அங்கும் அவர்களால் சரியாக வேலை செய்யமுடியவில்லை, நெல் கொட்டவேண்டிய இடத்தில் அரிசியையும் அரிசி கொட்டவேண்டிய இடத்தில் நெல்லையும் கொட்டிய சம்பவம் பல தடவை நிகழ்ந்து. இதனை உற்று கவனித்துவந்த கிட்டுப் பிள்ளை, இவர்களின் நிலையை புரிந்து கடிந்துக்கொள்ளாமல் "ஏம்பா! இப்படி ரெண்டணாவுக்காக தலைகீழா வேலை செய்யும் உனக்கு ஒரு குடும்பம் தேவையா?" என்று வேடிக்கையாகக்கேட்டதுமுண்டு.

தனது நிலையை அறிந்துங்கூட தொடர்ந்து வேலையில் வைத்திருந்த அவரை, பாவா அவர்கள் எப்போதும் முதலாளி என்றே கூப்பிட்டுவந்தார்கள். எந்த சமயத்திலும் வேறு வார்த்தை எதையும் சொல்லி ஒரு முறைகூட அழைத்ததே இல்லை.


நஃப்ஸ் - ஆவல்

'நான் மறைவான புதையலாக இருந்தேன். என்னை அறியப்படவேண்டி படைப்புகளை படைத்தேன்.' என்று இறைவன் ஹதீஸு குதுஸியில் சொல்கிறான். தாத்துல் கிப்ராயாவில் மறைவாக இருந்த இறைவனுக்கு முதன்முதலில் உண்டான ஆசையின் தூண்டுதல் - இதனை, தாத்து முதன்முதலில் அசைந்த அசைவை அல்லது அதன் முந்திய அலையை 'நஃப்ஸ்' என்று ஆரிஃபீன்கள் அழைக்கிறார்கள். அந்த நஃப்ஸ்தான் 'நான்' என்று சொல்வதும் இந்த உடம்பில் 'நான்' என்று இச்சிப்பதுமாயிருக்கும். என்று ஹஜ்ரது மஹ்மூது பஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைவனின் பிரதிநிதியான மனிதன், தன்னுள் பொதிந்து கிடக்கும் நஃப்ஸின் உண்மைப் பொருளையறியாமல் மனம்போன போக்கில் நடக்கிறான். இவன் சிறுவனாக இருக்கும்போது பட்டம் வாங்கி விளையாட ஆசைப்படுகிறான். அவன் வளர்ந்து வாலிபனானபின் கார் வாங்கவேண்டும் என்றும் பங்களா கட்டவேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். இது அறிவின் வளர்ச்சியையும் அந்தஸ்தின் உயர்வையும் காட்டுகிறது. ஆனால் ஆசையின் தன்மை அப்படியே இருக்கிறது.

ஒருவனை அரியாசனத்தில் ஏற்றவும் அதிலிருந்து அவனை இறக்கவும் இதுதான் மூலக்காரணம். இதை ஒடுக்கி முறையாக செயல்படவைத்தால் ஆத்மீகப்பாதை திறக்கும் என்பதை ஞானிகள் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தனர்.


தனிமையும் தியானமும்

'மன் அரஃப நஃப்சஹு ஃபக்கது அரஃப ரப்பஹு' - 'எவன் தன்னை உணர்ந்துக்கொண்டானோ, அவன் தன் நாயனை உணர்ந்துக்கொண்டான்' என்பது நபிகளாரின் வாக்கு. 'ஃபிக்குருக்க ஃபீக்க யக்ஃபி' - 'உன்னை உற்றுபார் அது உனக்குப் போதுமானது' என்பது சூஃபியாக்களின் வாக்கு.

சத்தமும், சந்தடியும் நிறைந்த பரபரபுக்கு பஞ்சமில்லா இவ்வுலகில் அமைதியைத் தேடுவதென்றால் சாதாரண காரியமல்ல. அமைதிக்குத் தனிமை அவசியம். இதை உணர்ந்த பாவாவும் தன் துணைவியாரிடம் ஒரு கோப்பை பால் கொண்டுவரச் சொல்லி அதனை அருந்திவிட்டு தனிமையில் தியானத்தில் அமர்ந்துவிட்டார்கள். நாற்பது நாட்கள் சில்லாவுக்குப் பின்.............


1948 க்குப் பின்

நாற்பது நாட்கள் தியானத்திற்குபின் வெளிவந்த அவர்களின் பேச்சிலும் செயலிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தமிழில் பேசினாலும் அது பரிபாசை போன்று புதிராகவே இருந்தது. எதையோ இழந்ததைப்போல் காணப்பட்டார்கள். உடைக்கும் உணவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இத்தகைய மாற்றங்கள் பார்ப்பவர்களுக்கு விந்தையாக இருந்தது. சுருங்கச் சொன்னால் விலாயத் என்ற நிலை வெளிப்படத் தொடங்கிது. இதை யாரும் புரிந்துக்கொள்ளவில்லை.

1953-ல் ஒரு நாள் காக்காவைக் காணவில்லை என்று ஊரே அல்லோலப்பட்டது, மூன்று நாட்கள் ஆகியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, இந்நிலையில் பாவா ஒருவர் சங்கமங்கலத்தில் (சிக்கலிலிருந்து வடக்கே இரண்டுகல் தொலைவிலுள்ளது) இட்லி தோசைகளைக் கொடுத்து வியாதிகளை குணப்படுத்துகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு அங்கு
சென்று பார்த்தபோது இவர்கள் இருப்பதைக் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


கறாமத் எனும் அற்புதம்

இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியை தாரமாக வைத்து தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற மாயையில் முஃஜிஜாத்தையோ கறாமத்தையோ இன்றய சமுதாயத்தினர் சிலர் நம்ப மறுக்கின்றனர். எதைச் சொன்னாலும் ஆதாரம் இருக்கிறதா? நிரூபிக்க முடியுமா? என்று கேட்கின்றனர்.

ஈமானின் அடிப்படையே, முதலில் அப்படியே நம்பவேண்டும். 'ஆமன்துபில்லாஹி..' என்பதின் பொருளையே மறந்துவிட்டார்கள். 'அன்னாசு அஃதாவுல் லிமா ஜஹிலு' - 'புரியாத அறிவுக்கு மக்கள் எதிரானவர்கள்' என்ற அரபி பழமொழிக்கு உதாரணமாக இருக்கிறார்களேயொழிய புரிந்துக்கொள்ள முயற்சிப்பதில்லை. கறாமத்தை மேஜிக் என்று தவறாக நம்புகிறார்களேயொழிய அது உண்மைதானா என்று தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை.

கறாமத்தும் மேஜிக்கும் ஒன்றுபோல் தோன்றினாலும் அவை இரண்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. பிரத்தியோகப் பயிற்சி, சில உபகரணங்கள், பார்ப்பவர்களை மயக்கும் பேச்சு, செயலில் காட்டும் வேகம் இவை நான்கையும்
தாரமாகக்கொண்டு காண்பவர்களுக்கு ஒரு தற்காலிகத் தோற்றத்தை ஏற்படுத்துவது அல்லது இருப்பதை மறைத்து மீண்டும் தோன்ற செய்வது மேஜிக்.

கறாமத் அப்படியல்ல, ஒருவரோ அல்லது ஒரு சமுதாயமோ நன்மை பெறும் பொருட்டு முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை மிகச் சுலபமாக செய்வது. இதற்கென்று தனி பயிற்சியோ, உபகரணமோ, மதி மயக்கும் பேச்சோ தேவை இல்லை. சதா இறைச்சிந்தனையில் மூழ்கி இருக்கும் ஒருவர் தியானம், திக்று, ரியாலத் போன்ற பிரத்தியேக
வணக்கங்களினால் படிப்படியாக நிலை உயர்ந்து விலாயத் என்ற தரஜாவை(படித்தரத்தை) அடையும்போது கறாமத் என்ற அற்புத செயல் தானாக உண்டாகும்.


முன் அறிவிப்புகள்

என் தந்தைக்கு அறிவித்தது

ஒரு காரியம் நடப்பதற்குமுன் சொல்வது என்பது எல்லோராலும்சாத்தியப்படுவதல்ல, குறி சொல்பவர்கள் சாத்திரம், ஜோசியம் சொல்பவர்கள் நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்னாலும் அது சரியாக நடக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. சில நடக்கவும் செய்யலாம் சில நடக்காமலும் போகலாம். ஆனால் விலாயத் பெற்றவர்கள் சொன்னால் அது
மிகச் சரியாக நடக்கும். நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் அவர்கள் எதையும் நேரடியாக சொல்லமாட்டார்கள், வேறு ஒன்றை குறிப்பிட்டு மறைமுகமாகச் சொல்வார்கள்.

ஆம் அப்படித்தான் பாவாவும் சொன்னார்கள். 1960-ம் ஆண்டு ஒரு நாள் எனது தந்தை பஸ் ஏறுவதற்காக செல்லும்போது "பள்ளிவாசல் தெருவில் நாலு தென்னைமரம் சாயப்போவுது" என்று கூறினார்கள். இது என் தகப்பனாருக்குப் புரியவில்லை. "நான் போகும்போது பள்ளிவாசல் தெருவில் நாலு தென்னைமரம் சாயப்போவுது என்று காக்கா இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார்கள், ஒருவேளை புயல் எதுவும் வரப்போகுதோ என்னவோ தெரியவில்லை ஒருகால் நம் வீட்டு மரம் விழுந்து வீட்டுக்கு சேதம் வராமலிருந்தால் அல்லாஹ் செய்யும் கைராயிருக்கும்" என்று என் தாயாரிடம் சொன்னார்கள்.

நாலு தென்னைமரம் என்று சொன்னது நான்கு பேர்களை குறிக்கும் என்று அப்போது புரியவில்லை. ஆம்! அவர்கள் சொல்லி சில தினங்களில் என் பாட்டனார் மாரடைப்பால் காலமானார்கள். அவர்கள் இறந்து நாற்பது நாட்களுக்குள் என் தந்தையின் பெரிய தகப்பனார் இறந்தார்கள், அவர்கள் இறந்து ஏழு நாட்களுக்குள் அவர்களின் மனைவி இறந்தார்கள், அதன்பின் என் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரி இறந்தார்கள். இப்படி எங்கள் குடும்பத்தில் நான்கு பேர்கள் மூன்று மாதங்களில் ஒருவர்பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தார்கள்.


கிருஷ்ணன் ஆசாரிக்கு எச்சரிக்கை

ஒரு நாள் அதிகாலை சுமார் மூன்று அல்லது நான்கு மணியளவிருக்கும் கிட்டுப்பிள்ளை மில்லருகே ஒரு ஒதுங்கிய இடத்தில் 'அக்க யோக' நிலையில் ஆழ்ந்த தியானத்திலிருந்தார்கள். அவ்வழியே வந்த கிருஷ்ண ஆசாரி பாவாவை கண்டதும் அங்கேயே நின்றுவிட்டார். அவர்கள் தியான நிலையிலிருந்து மீண்டதும், "டீ வாங்கிவருகிறேன் பாவா" என்று பவ்வியமாக கேட்டபோது "அப்பனே! இவனுக்கு சுடுகாட்டுக்குப்போகும் நாள் நெருங்கிவிட்டது, தாங்கள் போங்கள்" என்றார்கள்.

இது, தனது மரணத்தைக் குறிக்கும் வார்த்தை என அவருக்குப் புரியவில்லை. அவர்கள் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது நாற்பத்தொன்பது.


ஆபத்தைத் தடுத்தது

1981 அல்லது 82 ம் வருடத்தில் ஒரு நாள் சஹீது பாய் என்ற பெரியவர் வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். பாவாவின் வீட்டை கடந்தபோது.........

"இந்தாங்க பஸ்ஸுக்கு போறவங்களே! இங்கே வாங்க" என்ற பாவாவின் குரல் கேட்டுத் திரும்புகிறார்.

"உங்களெத்தான், இங்கே வந்து உக்காருங்க" என்று சொன்னதும், காக்கா எதோ சொல்லப்போகிறார்கள் என்ற சிந்தனையுடன் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்க்காருகிறார். நேரம் கடக்கிறது, காக்கா என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர்களோ எதும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்கள்.

அரை மணிநேரமாகியும் காக்கா ஒன்றும் சொல்லவில்லையே, குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியாதே இன்னும் எவ்வளவு நேரம் இருக்கவேண்டுமோ தெரியவில்லையே என்று தவிப்பில் இருந்துக்கொண்டிருந்தபோது, "சரி போங்க" என்று உத்தரவிடுகிறார்கள்.

ஒன்றும் சொல்லாமல் இப்படி நம்மை அனுப்பிவிட்டார்களே, சரி எதாவது ஒரு நன்மை இருக்கும், வேறு பஸ்ஸில் போகலாம் என்ற நினைவோடு புறப்பட்டு அடுத்த பஸ்ஸில் போகிறார். சிறிது தூரம் பயணம்செய்தபின்புதான் உண்மை புரிந்தது, தான் செல்லவிருந்த பஸ் அங்கு விபத்துக்குள்ளாகி இருந்ததும் அந்த விபத்திலிருந்து காப்பாற்றதான் தன்னை காக்கவைத்தார்கள் என்பதும்.

இதனை, இறைவனின் நாட்டம் இப்படி இருந்தது, ஒவ்வொருவரின் பிறப்பையும் இறப்பையும் அவனே நிர்ணயம் செய்துள்ளான், அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் அவர்களின் பயணத்தை வேறு காரணங்கள் தடை செய்யவில்லை. மாறாக புறப்பட்டு சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பாவா, இறைவனின் அறிவிப்பு என்றாலும் அது அவர்களது உதிப்பில் தோன்றி நடக்கவிருக்கும் ஆபத்தை மிகத்தெளிவாக முன்னதாகவே அறிந்து அதிலிருந்து காப்பாற்றியது அவர்கள். இது தெளிவான சிந்தனை உள்ளவர்களுக்கு நன்றாக புரியும்.

இப்படி சம்பவம் நடக்குமுன்பே சொல்லப்பட்ட அறிவிப்புகள் ஏராளம். சில சமயம் வெளியூர் சென்று அங்கும் குறிப்புகளும் அறிவிப்புகளும் சொல்லியிருக்கிறார்கள். இதனை அறிந்த மக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு வழி கேட்டும் வியாதிகளுக்கு நிவாரணம் தேடியும் வரத்தொடங்கினர். வருகிறவர்கள் எதோ வந்தோம் போனோம் என்றில்லாமல் இரவு பகல் பாராது காத்திருந்தனர், சிலர் பல நாட்கள் தங்கியிருந்து தங்களது குறைகளுக்கு வழி கேட்டுச் சென்றுள்ளனர்.

தன்னை நாடி வருகிறவர்களை வெறுங்கையோடு திருப்பியனுப்பியதில்லை, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துவந்தார்கள். ஒருவருடைய பிரச்சனை மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் இவர்களது பேச்சும் எழுத்தும் அமைந்திருந்தது.


பலர் உயிரைக் காத்தார்கள்

பக்கத்து ஊரில் ஒரு கல்யாணம். தேவை சற்று பெரியது. கல்யாணம் என்றால் விருந்து அதில் மிக முக்கியம் வாய்ந்தது. எதாவது ஒரு சிறிய குறை இருந்தாலும் எல்லாருடைய வாயும் மெல்லும். இது எல்லா ஊர்களிலும் உள்ள வழக்கம். ஊர் மக்களும் உறவினர்களும் வரத்தொடங்க விருந்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தபோது பாவா அவர்கள் வேகமாக சோறாக்கிய பந்தலுக்குச் சென்று தாளிச்சா சட்டியை கவிழ்க்கச் சொன்னார்கள். என் பெயர் கெட்டுவிடும் தேவைக்காரர் அவமானப்பட நான் காரணமாகிவிடுவேன் என்று பண்டாரி மறுக்கிறார். பாவா கவிழுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். இதை அறிந்த தேவைக்காரர் பாவா சொன்னதை செய்யுங்கள், விருந்துக்கு தாளிச்சா இல்லாமல்போனால் பரவாயில்லை என்று உத்திரவிட்டவுடன் சட்டி கவிழ்க்கப்பட்டது. ஆறு போல் ஓடிய தாளிச்சாவில் காய்கறிகளுக்கிடையில் ஒரு நல்ல பாம்பு சுருண்ட நிலையில் செத்து கிடந்தது. ஆம்! எப்படியோ நல்ல பாம்பு விழுந்து விட்டது. அதை உண்டிருந்தால் நிலமை என்னவாகிருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அருகில் நின்று சமையல் செய்த பண்டாரிக்கும் கை ஆட்களுக்கும் பாம்பு விழுந்தது தெரியவில்லை, எங்கோ இருந்த பாவாவுக்கு தெரிந்தது. அது எப்படி சாத்தியம்? சிந்தித்துப் பாருங்கள்!

ஆனால் இதற்கு சான்று உள்ளது; இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தனது 'கீமியாய சதாத்'தில் இப்படி விளக்கம் கூறுகிறார்கள். 'நுபுவத்தும் விலாயத்தும் கல்பின் மகிமையினால் உண்டாகிறது. அதில் சித்தியாவது மூன்று குணங்கள், (1)ஜனங்களுக்கு கனவில் உண்டாவது இவர்களுக்கு விழிப்பில் உண்டாகும். (2)ஜனங்களுக்கு கல்பு அவர்களின் சரீரத்தில் மட்டும் தங்கும், இவர்களது கல்பு மற்ற எல்லோருடைய சரீரங்களிலும் தங்கி நேர்வழிப்படுத்தும். (3)ஜனங்கள் மற்றவர்கள் மூலம் அறிவைப் பெறுவார்கள், இவர்களுக்கு அறிவு தனக்குத்தானே உண்டாகும்.' இத்தகைய அறிவுக்கு 'இல்மு லத்துன்னி' என்று பெயர்.


நிலைகள்

பாவா ஊரில் இருந்தாலும் வெளியூர் சென்றாலும் அவர்கள் நின்றாலும், அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும் எல்லோரும் செய்வதுபோல் இருக்காது, முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அவர்கள் இருந்த நிலையில் சாதாரணமாக ஒரு மனிதரால் ஐந்து நிமிடங்களுக்குமேல் இருக்க முடியாது.

நிற்கும்போது ஒரு கையை இடுப்பில் கொடுத்து மறு கையை சுவற்றில் சாய்த்து தலையை சுவற்றில் முட்டுக்கொடுத்தவாறு நீண்ட நேரம் நிற்பார்கள். அதே போன்று உட்கார்ந்திருக்கும்போதும் ஒரு காலை மறுகால் தொடையிலும் ஒரு கையை தரையில் ஊன்றியபடியும் மறு கையை கண்ணத்தில் வைத்தும் நீண்ட நேரம் இருப்பார்கள். படுத்திருந்தாலும் ஒரு காலை மடக்கி மறு காலை நீட்டி ஒரு கையை தலைக்கு வைத்து மறு கையை தரையில் ஊன்றியோ அல்லது தொடைமீது வைத்தோ பல மணிநேரம் உறங்குவார்கள். அது உறங்குவதுபோல் தோன்றுமேதவிர உறக்கமல்ல, 'முராக்கபா' வின் நிலையில் இருப்பார்கள்.


ஆன்மீகத்தின் எட்டு நிலைகள்

ஆன்மீகத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட பெரியோர்கள் எட்டுவிதமான நிலைகளை அடைகிறார்கள். அவைகளை ஆரிஃபீன்கள் எட்டு 'மீம்' களைக்கொண்டு வரிசைப்படுத்தியுள்ளார்கள். அவை 'முஹாசபா, முஆபிதா, முதாகிரா, முஹாரிபா, முஜாஹிதா, முராக்கபா, முஷாஹிதா, முஆயினா' என்பன.

பாவா அவர்கள் முராக்காபா அல்லது முஷாஹிதா அல்லது முஆயினா நிலைகளில் இருப்பதை மற்றவர்களால் அறிய முடியாது, வெளி உலகத்திற்கும் காண்பிக்கவும் மாட்டார்கள். உறங்குவது போன்றோ அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போன்றோ தோன்றும், ஆனால் அது உறக்கமும்மல்ல சிந்தனையுமல்ல.

சில நேரங்களில் சீடர்களும் அவர்கள்மீது அன்பு வைத்திருப்பவர்களும் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும்போது அசையாமல் அப்படியே இருப்பார்கள். அது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றும், உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்கள் எவரும், நாமும் பிடித்துவிடுவோம் என்றெண்ணி முயற்சி செய்தால் அடுத்த வினாடி அவர் கை தொடும்முன்பே எழுந்து "அவரவர் தரஜாவில்(நிலையில்) இருந்துக்கொள்ளவேண்டும்" என்று கண்டிப்பார்கள். இது அவர்கள் உறங்கவில்லை என்பதையும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதையும் காட்டுகிறது.



வசீலா

எல்லா உயிர்களும் மரணத்தை சுவைக்கக்கூடியதே (அல் குர்ஆன் 21:35) என்று இறைவனின் வாக்கு. படைக்கப்பட்ட அனைத்தும் அழியக்கூடியது உயிரைத் தவிர. ஆம்; உயிர்! அது படைக்கப்படவில்லை, அது அருளப்பட்டது! எம்முடைய உயிரிலிருந்து ஊதினோம் (அல் குர்ஆன் 17:85) என்று இறைவன் கூறுகிறான். உயிர் பிரிந்தது என்று கூறுவதின் பொருள் இதுதான். ஆனால் உயிரைத் தாங்கும் உடம்பும் மற்ற சடப்பொருள்களும் அழியக்கூடியது. அவைகளில் சில விரைவாக அழியும் வேறு சில பல நூறு வருடங்கள் கழித்து அழியும். பல கோடி வருடங்களுக்கு முன் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் ஒரு காலத்தில் அழியக்கூடியது என்று குர்னின் வார்த்தையை விஞ்ஞானம் பின் தொடர்கிறது. இந்த பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள பூமியில் வாழ்கின்ற மனிதர்களில் சிலர் சாதனைப் படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் சாதனைகள் அவர்கள் மறைந்தாலும் நிலைத்து நிற்கின்றன. அவர்களுக்கென்று தனி மரியாதையும் மதிப்பும் என்றென்றும் உண்டு, அவர்களின் பெயர் நினைவு கூறப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெருமானார் அவர்களுக்குப் பின் வந்த இறைநேசச் செல்வர்கள் மனித சமுதாயத்திற்கு பெரும் அருட்கொடையாக இருந்திருக்கிறார்கள். 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதற்கொப்ப தானும் நேர்வழியில் நடந்து சமுதாயத்தையும் நேர்வழி படுத்திய இவர்கள் இறந்தபின் ஜியாரத்(சந்திப்பு) செய்வதற்காகவும் வசீலா(உதவி, வழி) தேடுவதற்காகவும் தனி இடத்தில் அடக்கம் செய்வது பெரும்பாலான நாடுகளில் இருந்து வரும் பழக்கம்.

அவர்கள் இறந்துவிட்டார்களே, அவர்களிடம் எப்படி கேட்கமுடியும்? உயிருள்ளவர்களிடம் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது, மரித்தவர்களிடம் கேட்டால் என்ன கிடைக்கும்? என்பது சிலரின் கேள்விக்கனைகள். "அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம், உயிருடன்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உணவை நாம் அளிக்கிறோம்" (அல் குர்ஆன் 3:169) என்று கூறியுள்ள இறைவேதம் "ஓ விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து அவனிடம் செல்வற்குரிய வழியை(வசீலா) தேடிக்கொள்ளுங்கள்" (அல் குர்ஆன் 5:35) பிரிதோரிடத்தில் கூறுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள வழி(வசீலா) என்ன என்பதற்கு பெருமானார் அவர்களின் வாக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது.

பாவா ஆதம்(அலை) அவர்கள் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைக்கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டதாக இமாம் ஹாக்கிம்(ரஹ்) அவர்கள் முஸ்தத்ரக்கில் (vol.II page.751) குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களும் இமாம் பைஹக்கி(ரஹ்) அவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் ஹஜ்ரத் ஃபாத்திமா பின்த் ஹசன் இறந்தபின் அடக்கம் செய்யும்போது அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கபுர் விசாலமாக இருக்கவேண்டும் என்று பெருமானார் அவர்கள் தன்னைக் கொண்டும் தனக்கு முன் தோன்றிய நபிமார்களைக்கொண்டும் இறைவனிடத்தில் வசீலா தேடியதாக இமாம் தபராணி அவர்கள் முஃஜமுல் கபீர், முஃஜமுல் அவ்சத் என்ற நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மதினா ஒருமுறை வரட்சியால் பாதிக்கப்பட்டபோது ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களின் வசீலாவைக்கொண்டு மழைக்காகப் பிரார்த்தனை செய்து மழை பெய்ததாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை புகாரி ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை கறி துண்டை விழுங்கியதால் வேதனை ஏற்பட்டு நண்பர் ஒருவரின் லோசனையின்பேரில் "யா முஹம்மதா" என்று கூவியபோது அந்த வலி உடனே நீங்கியதாக இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் தனது அல் கலிமத்து அல் தையிப் என்ற நூலில் (பக்கம்-165) குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலரை கர்பலா யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டு திமிஷ்கிலுள்ள(டெமாஸ்கஸ்) யஜீதுடைய நீதி மன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் முன்னால் இடப்பட்டுள்ள திரையை நீக்கி தன் முன்னிலையில் நிறுத்துமாறு யஜீது உத்தரவிட்டான். அப்போது அவர்களுடனிருந்த ஹஜ்ரத் சய்யிதா ஜைனப் (ரலி) என்ற பெண் "யா முஹம்மதா" என்று அழுதபடி இந்த கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றுமாறு பெருமானார் அவர்களிடம் உதவி தேடினார்கள். சற்று நேரத்தில் யஜிது தன்முன் நிறுத்தப்படும் உத்தரவை ரத்து செய்து அவர்கள் அனைவரும் மதினா நகருக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க உத்தரவிட்டான். அதன்படி அனுப்பிவைக்கப்பட்டனர்.

கடைசி மூன்று நிகழ்வுகளும் பெருமானார் அவர்கள் மறைந்தபின் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நேரம் நெருங்கியது

மௌத்து எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, மௌத்து வந்தால் எவரும் இருக்கமாட்டார்கள். இறைநேசச் செல்வர்களான குத்துபுமார்களும் வலிமார்களும் தங்களது மௌத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதை நினைத்து துக்கப்பட்டதுமில்லை இவ்வுலக வாழ்வைப் பற்றி சந்தோஷப்பட்டதுமில்லை. இறைவன்மீது மாறாத காதல் கொண்ட அவர்களுக்கு வாழ்வும் சாவும் ஒன்றாகவே தெரிந்தன. வேறுவார்த்தையில் சொன்னால் 'மறுமையின் வாழ்க்கை உயர்வானது நிலையானது' (அல் குர்ஆன் 86:17) என்பதை மிகத் தெளிவாக அறிந்துவைத்திருந்தாகள். இதை அவர்கள் தங்களது சீடர்களுக்கும் மாறாத அன்பு வைத்திருந்தவர்களுக்கும் நனவில் மட்டுமல்ல கனவிலும் குறிப்பால் உணர்த்தி வந்த வரலாறுகள் உண்டு.

தான் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தைக்காலுக்கு சென்று, இப்போது ஒலு செய்வதற்கான தண்ணீர் தொட்டி இருக்குமிடத்தில் ஒரு வட்டம் அதன் கீழ் பாகம் தடித்த கோடு பார்ப்பதற்கு இரண்டுமூன்று நாட்களில் மறையப்போகும் பிறை போன்ற அமைப்பில் வரைந்தார்கள். அதன் பின் ரஜபு பிறை 26, 27 மிஃராஜ் இரவு என்று அடிக்கடி கூறிவந்தார்கள்.

நான்கு நாட்களுக்குமுன், நான்குபேரை அழைத்து தான் வழக்கமாகப் படுக்கும் கட்டிலை தூக்கி வெளியே வைக்கச் சொன்னார்கள். பலர் அதை பிடித்தபோது நான்குபேர் மட்டும்தான் பிடிக்கவேண்டும் என்று உத்திரவிட்டார்கள்.

மூன்று நாட்களுக்குமுன், மயிலாடுதுறை சங்கரன்பந்தலைச் சேர்ந்த மஸ்ஹூதா என்ற பெண் பாவாவை அடிக்கடி பார்க்க வருபவர்களில் ஒருவர். அவரிடம் தனது மூன்று விரலை காட்டி மௌத்து மௌத்து என்று கூறின்னார்கள். அதன்பின் அம்மயத்து சூராவிலுள்ள 38வது வசனமான "யவ்ம யக்கூ முர்ரூஹு வல்மலாயிகத்து சஃப்பன் லா யத்த கல்லமூன இல்லாமன் அதினலஹுர் ரஹ்மானு வ கால சவாபா" என்ற ஆயத்தை ஓதினார்கள். இதை ஏன் ஓதினார்கள் எதை குறிப்பால் உணர்த்தினார்கள் என்பது அப் பெண்ணிற்கு அப்போது தெரியவில்லை. வஃபாத்தான பிறகுதான் இந்த செய்தி தெரியவந்தது.

இரண்டு நாட்களுக்குமுன் தான் சாப்பிடுவதற்காக உபயோகிக்கும் பீங்கான் தட்டையை "இனி இதற்கு உபயோகமில்லை" என்று சொல்லி கவிழ்த்து வைத்துவிட்டார்கள்.

ஒரு நாளைக்குமுன், தன்னைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சீடர்களில் ஒருவரான கொரடாச்சேரி அப்துல் காதர் ஊருக்குத் திரும்ப உத்தரவு கேட்டபோது, "போகவேண்டாம், நாளைக்கு விருந்து இருக்கிறது அதை முடித்துவிட்டு போங்கள்" என்று சொல்லி தங்கவைத்துவிட்டார்கள். இதல்லாமல் மற்ற எல்லா சீடர்களையும் எங்கும் போகவேண்டாம் இங்கேயே இருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.


கடிகாரம் நின்றது

1989 ம் ஆண்டு மார்ச் திங்கள் 4 ம் நாள் சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு பாவா, 'அல்லாஹும்ம சல்லி அலா செய்யிதினா வ நபீயினா வ மௌலானா முஹம்மதின் வ அலா ஆலி செய்யிதினா முஹம்மதின் வ பாரிக் வ சல்லிம் அலைஹ்' என்ற சலவாத்தை ஓத தொடங்கி தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். மேலும் உடனிருந்த சீடர்களையும் நிறுத்தாமல் ஓதிவரும்படி உத்தரவிட்டார்கள்.

அன்றிரவு முழுவதும் சீடர்கள் அனைவரும் அவர்களுடனே இருந்தனர். சிறிது உறங்கியபின் எழுந்து சுவற்றில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இது மறு நாள் 5-3-1989(ஹிஜ்ரி 1409 ரஜப் 26) ஞாயிற்று கிழமை சுபுஹு வரை நீடித்தது. எழுதி முடித்தபின் தனது இறுதி காலத்தில் பெறிதும் உதவியாக இருந்த தலைஞாயிறு முஹம்மது காசிம் என்ற சீடரின் மடியில் தலைவைத்துப் படுத்துவிட்டார்கள். மரணத்திற்கு சற்று முன்பாக தன் உடனிருந்த அனைவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு மனைவியையும் உறவினரையும் அழைத்தார்கள். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் அவர்களின் நிலை மாறிக்கொண்டிருந்தது, மூச்சு மெதுவாக ஓடத் தொடங்கியது. இதை கண்ட உறவினர்கள் பாவாவை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தனர். அப்போதும் சீடர் முஹம்மது காசிம் அவர்களின் மடியில் தலைவைத்து படுத்திருந்தார்கள். மனைவி கலிமம்மாவும் மருமகன் நிஜாமுதீனும் அருகில் இருந்தபடி தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு என்ன
செய்வதென்று புரியாமல் மன இருக்கத்துடன் அமைதியாக சுற்றி நின்றுகொண்டிருந்தனர். எல்லோர் முகத்தையும் சோகம் அப்பிக்கொண்டுவிட்டது.

அமைதியின் வடிவமாக முகம் பிரகாசிக்க ஒளிமயமான சரீரத்துடன் படுத்திருந்த பாவா கண்ணை திறந்து தன் துணைவியரையும் சுற்றி இருந்த உறவினரையும் ஒரு முறை பார்த்து "இவனுக்கு என்ன நேர்ந்தது" என்று முனுமுனுத்த ஒரு சில நொடிகளில் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார்கள்.

சரியாக காலை 8-46 மணி; மூச்சு நின்றது. 76வருடம் 4மாதம் 17நாட்கள் இடையறாது துடித்துக்கொண்டிருந்த இருதயம் நிரந்தர ஓய்வு பெற்றது. "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்." அவர்களது மூச்சு மட்டும் நிற்கவில்லை, இதயம் மட்டும் நிற்கவில்லை, அவர்களது மறைவை காண விரும்பாத அவர்கள் வீட்டில் ஒடிக்கொண்டிருந்த
கடிகாரமும் நின்றுவிட்டது. சீடரின் மடியிலேயே அவர்களின் ரூஹு பிரிந்தது.


திறந்து மூடிய கண்கள்

அடுத்த வினாடி கூடியிருந்த எல்லோர் இதயத்திலும் அழுத்தம், நெஞ்சினில் பாரம், துக்கம் பீரிட்டு "ஓ" என்ற அலறல், ஆளுக்கொருபுறமாக அடக்கமுடியாத துக்கத்தை அழுது வெளியிட்டுக்கொண்டிருக்க "எஜமானே! என்னை அனாதையாக்கிவிட்டீர்களே என்னை விட்டு போய்விட்டீர்களே கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்களேன்" என்று அரற்றியபடி
கலிமம்மா கதறியழ இறந்தவர்கள் ஒரு வினாடி கண்ணைத் திறந்து மூடினார்கள். இதை மனைவி கலிமம்மா மருமகன் நிஜாமுதீன் ஆகிய இருவர் மட்டுமே பார்த்தனர். வேறு யாரும் பார்க்கவில்லை.

ஒரு சில நிமிடங்களில் ஊர் முழுவதும் செய்தி பரவியது. மக்கள் வருவதற்குமுன் ஜனாசாவை அவர்கள் வீட்டில் வைத்தனர். கூட்டம் அதிகமாகும் என்பதால் சற்று நேரத்தில் அருகிலுள்ள மைத்துனர் அலாவுதீன் வீட்டிற்கு மாற்றினர். கூட்டம் அதிகரிக்கவே இனி இங்கு வைத்திருந்தால் வருகிறவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதை கருத்தில்கொண்டு தைக்காலுக்கு எடுத்து சென்று தற்போது அடக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்தனர்.

அரை மணித்துளிக்குள் வெளியூர் மட்டுமல்ல வெளி நாடுகளுக்கும் செய்தி பரவியது, அகில இந்திய வானொலியின் திருச்சி நிலையம் செய்தி அறிவித்தது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டு போகவே மஞ்சக்கொல்லை வழியாக செல்லும் அனைத்து பேரூந்துக்களும் நின்று போயின, விரைவு வண்டிகள் அனைத்தும் நின்றன, நாகை மற்றும்
திருவாரூரிலிருந்து சிறப்பு பேரூந்துக்கள் இயக்கப்பட்டன. அவர்களின் ஜனாசாவை பார்த்துவிட்டுபோன ஜனங்கள் சுமார் ஐம்பதாயிரத்திற்கு மேலிருக்கும். இறுதிவரை இருந்த ஜனங்கள் சுமார் இருபதாயிரத்திற்கு மேலிருக்ககூடும். வந்திருந்தவர்களில் சிலர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர், வேறு சிலர் சலவாத்து ஓதிக்கொண்டிருந்தனர், மற்றும் சிலர் எல்லோருக்கும் வழிகாட்டிக்கொண்டிருந்த குத்துபு ஜமானை இழந்து விட்டோமே இனி என்ன செய்வது? யாரிடம் போவது? எவர் வழிகாட்டுவார்? என்ற ஏக்கத்தை உள்ளத்தில் அடக்கிவைத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.


அடக்கம்

மறு நாள் 6-3-89 திங்கட் கிழமை மாலை 4-00 மணிக்கு அவர்களின் பூத உடலை அடக்கம் செய்தனர். அதாவது இறந்து 31 மணி நேரம் கழித்து அடக்கம் செய்யப்பட்டது. சாதாரணமாக ஒருவர் இறந்த சற்று நேரத்தில் உடம்பு விரைத்துவிடும். சில மணித்துளிகளில் உடம்பு வீங்கத் தொடங்கும் பின் சிறிது சிறிதாக துர்நாற்றம் வீச ரம்பிக்கும். இதை தவிர்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் (Freezer) வைத்து மூடவேண்டும்.

ஆனால் அவர்களின் உடம்பை எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் சாதாரணமாக வைத்திருந்தனர். உடம்பில் சுறுக்கமோ வீக்கமோ ஏற்படவில்லை. இறந்தபோது எப்படி உறங்குவதுபோல் காட்சியளித்தார்களோ அதே நிலைதான் இறுதிவரை நீடித்திருந்தது. 'கபன்' இடுமுன் குளிப்பாட்டும்போது கை கால்கள் மிக சாதாரணமாக மடக்க முடிந்தது, செருப்பு
அணியாமல் நடக்கும் பழக்கத்தையுடைய இவர்களின் பாதம் மிருதுவாக இருந்தது.

பாவா அடக்கம் செய்யப்பட்டார்கள். தம் வானாளில் பெரும்பகுதியை ஆன்மீகத்துறைக்கு அர்பணித்துவிட்ட அவர்கள் பலர் நெஞ்சங்களில் நிறைந்து நின்றாலும் மறைந்தபின் ஏற்பட்ட இருளை அவர்கள் வீட்டில் ஓயாமல் எரிந்துக்கொண்டிருக்கும்
அந்த விளக்கினால் அகற்றமுடியவில்லை.

-------------00000------------

புத்தகம் கிடைக்குமிடம்:

A. MOHAMMED NIJAMUDEEN,
KALIMA AMMAL TRUST,
5/64, MASTHAN MARAICAR STREET,
MANJAKKOLLAI - 611 106,
NAGAPATTINAM - DIST,
PH. 04365 - 224692.