Friday, October 30, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 5

நவரத்தினகவி
காதிர் முஹையிதீன் அண்ணாவியார்

பதினோறாம் நூற்றாண்டில் இசுலாம் நலிந்து வந்துக்கொண்டிருந்த சமயம், ஈரானியப் பகுதியான தெற்கு காஸ்பியன் கடற்கரை நகரமான ஜிலான் என்ற நகரில் ஹிஜிரி 470(கி.பி.1077) பிறந்து இசுலாத்திற்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த கௌதுல் அஃலம் என்ற சிறப்பைப் பெற்ற ஹஜ்ரத் முஹையிதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களின் பெயரைத் தாங்கிய நவரத்தின கவியவர்கள் முதலாம் அண்ணாவியரான அமுத மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியாரின் இரண்டாம் புதல்வர் நூர் முகம்மது அண்ணாவியாரின் புதல்வர் ஆவார்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒழுக்க சீலராக, மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தார் மட்டுமல்ல மார்க்க சட்டங்களை கசடறக் கற்றவராகவும் விளங்கினார். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கிணங்க தாம் கற்றவற்றை மற்றோரும் பெற்றுக் கொள்ளவேண்டும் என விருப்பம் கொண்டார். மக்களின் நல்வாழ்வுக்கு இசுலாத்தின் சட்டத்திட்டங்கள் அடங்கிய
'ஃபிக்ஹு' என்ற நூலை எளிய தமிழில் யாத்து 'ஃபிக்ஹு மாலை' என்ற திருப்பெயர் சூட்டி இசுலாமிய உலகிற்களித்தார்.

இன்று ஒரு சட்டத்தை அமுல் படுத்திவிட்டு ஓராண்டுக்குள் பல இடைச் செருகல்களும் திருத்தங்களும் செய்யப்படும் பொதுச் சட்டமல்ல மார்க்க சட்டம். அது திருத்தப்படாதது, திருத்தமுடியாதது. மக்களிடம் சென்றடையும் அந்நூலில் சற்றும் தவறு வந்துவிடக்கூடாது, அப்படி வந்துவிட்டால் நாளை இறைவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற அச்ச உணர்வு பெற்றவர்களாக, அப்போது அதிராம்பட்டினத்தில் மார்க்க மேதைகளாக விளங்கிய அல்ஹாஜ் முகம்மது அபுபக்கர் ஆலிம் சாகிபு, அல்ஹாஜ் கோஜ் முகம்மது ஆலிம் சாகிபு ஆகிய இரு அறிஞர்கள் துணையுடன் கவியவர்கள் ஹிஜ்ரி 1280 ரபியுல் அவ்வல் பிறை 12 (28-8-1863) வெள்ளிக்கிழமை 'ஃபிக்ஹு மாலை' எழுதத் தொடங்கி சிறப்புற முடித்தார்கள்.

இரண்டு மார்க்க அறிஞர்கள் துணையுடன் ஃபிக்ஹு மாலையை எழுதி முடித்துவிட்டார்கள்; அது சரியாக இருக்கிறதா , இல்லை தம்மை அறியாமலே ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். எனவே அக்காலை அங்கு வாழ்ந்த இமாம், முகம்மது அப்துல் காதிர் ஹாஜி ஆலிம் சாகிப் என்ற மார்க்க அறிஞர் அரபு மொழியில் எழுத்திலக்கணம்(சறுபு), சொல் இலக்கணம்(நஹ்வு), யாப்பிலக்கணம்(அறுலு), அணியிலக்கணம்(பதீரு), எதுகை மோனை உணர்த்தும்(கவாபி), பொருள் இலக்கணம்(மஆனி), உரையிலக்கணம்(பயானி), தருக்க சாத்திரம்(மன்திக்கு) முதலானவற்றை ஐயம் திரிபறக் கற்று சிறந்த அறிஞராக விளங்கினார். அரபியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாண்டித்தியமுள்ளவராகத் திகழ்ந்தார். இத்தகைய அறிஞரிடம் அந்நூல் சரிபார்க்கப்பட்டது; நற்றமிழ் நாவலர், மதுரை தமிழ் சங்கப் புலவர், ஆஸ்தான கவி நாகூர் குலாம் காதிர் நாவலர் உரை எழுதினார்கள். கல்வியின் காதலர், காதிர் முஹைதீன் கல்லூரி நிறுவனர், புரவலர் அல்ஹாஜ் காதிர் முஹையிதீன் மரைக்காயர் நிதி உதவியுடன் கி.பி.1900 ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் 'ஃபிக்ஹு மாலை' அரங்கேற்றம் செய்யப்பட்டது.

சிறப்பு மிக்கப் பேரறிஞர்கள், மார்க்க மேதைகள், தமிழ் வல்லுனர்கள் கண்காணிப்பில் வெளிவந்த சட்டநூலான 'ஃபிக்ஹு மாலை' பாமரமக்கள் முதல் படித்த மேதைகள் வரை அனைவரது கைகளிலும் தவழவேண்டிய நூல் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

புகழ்மிக்க இந்நூலில் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவம்(தவ்ஹீது) பற்றியும் இறை நம்பிக்கை(ஈமான்) பற்றியும் விளக்கிக் கூறி, 'முஸ்லிம்கள் எல்லோரும் முக்தி பெறும் பொருட்டே இஸ்லாத்தின் இயல் கூறுவேன்' என்று பக்தியூட்டும் அண்ணாவியாரின் சிந்தனை, சமுதாய நன்மைக்கு எந்த அளவுக்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார் என்று வெள்ளிடை மலையாகக் காட்டுகிறது!

இஸ்லாத்தின் ஐந்து தூண்களாக விளங்கும் கலிமாவை சொல்லும் முறை, தொழுகைக்குரிய சங்கைகளை சொல்லும் பாணி, நோன்பு வைக்கும் முறைகளையும் மாண்பினையும், ஹலால்(கொள்ளல்) , ஹராம்(தள்ளல்) செய்திகளையும், இன்னும் அன்றாட நெறிகளையும் அழகாகச் சொல்லும் கவிமன்னர் குர்ஆனில் சொல்லப்பட்ட இருபத்தைந்து நபிமார்களின் திருப்பெயர்களை ஒரே பாட்டில் மிக அற்புதமாக அமைத்திருக்கிறார்.

'ஆதம் இதிரீசு நூஹுமூசா

ஐயூபு ஹாரூன் அல்எஸவு

ஹூது இபுறாகீம் லூத்து

எஹ்கூபு தாவூது சுலைமானபி

ஓதுமிசுமாயீல் துல்கி புலி

யூனூசெ ஹியா சுஐபுஈசா

சாதுறும் ஸாலிஹ் இஸ்ஹாக்இல்யாஸ்

ஜக்கரியா யூசுப் முஹம்மதாமே!'


சட்டத்தை யார் உருவாக்குகிறார்களோ, யார் பாதுகாக்கிறார்களோ அது அரசாக இருந்தாலும் சரி அல்லது அமைப்பாக இருந்தாலும் சரி, அதன்படி நடக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை வைத்தால், இல்லை என்ற பதில்தான் விஞ்சி நிற்கும். தனி மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அண்ணாவியார் அவர்களோ ஃபிக்ஹு மாலையை உலகுக்கு மட்டும்
தந்துவிடவில்லை, தம் வாழ்விலும் பேணி மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தார்கள். அண்ணல் எம்பெருமான் ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைத் தம் வணிகத்திலும் பின்பற்றினார்கள். 'வணிகத்தில் பொருளை விற்போர் நேர்மையுடன் விற்றோம் என்கிற திருப்தியும், வாங்குவோர் வாங்கிய பொருள் சரியான விலை கொடுத்தே வாங்கியுள்ளோம் என்ற மன நிறைவையும் பெறவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். 'இறைவன்மீது சத்தியம் செய்துவிட்டு அதை முறிப்பது மாபெரும் பாவம் என்பதையும், அப்பாவத்தைப் போக்க எழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற இசுலாமியக் கொள்கையில் பிடிவாதமாக இருந்து வாழ்ந்துக் காட்டினார்கள்.

குன்றின் மேல் விளக்கான குணசீலர் அண்ணாவியார் அவர்களை பாவண்ணர்கள் பாராட்டி நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள். இங்கே....

சற்குணங்குடி கொண்ட பாதுஷாவான சாஹுல் ஹமீதரசர் ஆளும் நாகூர்பதி வித்தகர் குலாம் காதிர் நாவலர் அவர்கள்,

'குணத்தாலும் குலத்தாலும்
குறியாலும் நெறியாலும் குறைவில்லாத
பணத்தாலும் உயர் முஹம்மதப்துல்காதி
ரென்று பகரும் ஆலிம்'
- என்றும்

'சீரார் காதிர் முகய்யதீன் அண்ணாவியார் என்றும் கவி வல்லரே' - என்றும்

'இசுலாமிய சங்கைமிகு சட்டங்களை எளிய இனிய பாடல்களில் யாத்தளித்தார்' - என்றும் புகழ்கின்றார்.

'வளை புகழ் சிறந்த வித்வ சீவரத்தின கவியெனும் செய்யது முகம்மது அண்ணாவியார் செய்தவக் குலக் கொழுந்து' என்று பிச்சை இபுறாஹிம் புலவர் போற்றுகிறார்.

'வேண்டிய முறையின் விழைந்துணர் சிந்தையர்' என அசனா லெப்பை புலவர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

'சொல்லரிய வியற்றமிழ் பால் கல்யுணர்ந்து தீங்கவி நீர் சொரியும் மேகம்... கதிர் முகிய்யிதீன் என்பானே' என்று யாழ்ப்பாண மகாவித்வான் சுலைமான் லெப்பை அவர்கள் பாராட்டுகின்றார்.

இப்படி புலவர்கள் போற்றும் புலவரை நாம் எப்படி போற்றப்போகிறோம்?

நன்றி:
1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்
3. சரமகவி

Monday, October 26, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 4

சொர்னகவி
நெய்னார் முஹம்மது பாவா புலவர்


அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் (முதலாம் செய்யது முஹம்மது) அவர்களின் மகள் வயிற்று பேரன் ஆவார். இவர்கள் தந்தை பெயர் கிடைக்கவில்லை. அவர்கள் எழுதிய பாடல்கள் ஏதாவதொன்றில் இருக்கலாம். எல்லாம் ஓலைச் சுவடிகளாக இருப்பதால் தேடிஎடுப்பது சாதாரண விசயமல்ல. இவர்களும் தம் பாட்டனார் போல் இறைவன்மீது பேரன்பு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல்மூலம் மழையை வரவழைப்பதென்றால் சாதாரண செயலல்ல. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் to hypnotise a particular inanimate body to serve the requirments சாதாரண செயல் அல்ல. அதற்கென்று சில பிரத்தியேகப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியில் தேர்ச்சிபெற்றால் மாத்திரமே இத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும். ஒரு பாடல் மூலம் மழை வந்தது, இது சித்து வேலையல்ல சிந்திக்கவேண்டிய விசயம். விஞ்ஞான அறிவை வைத்துக்கொண்டு மேலெழுந்தவாரியாக சிந்தித்தால் குழப்பத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. அப்பழுக்கற்ற மனத்துடன் ஆழ்ந்து சிந்தித்தால் சிந்திப்பவர்களின் தரத்தைப் பொறுத்து விடை கிடைக்கலாம்.

ஹிஜ்ரி 1272 ம் வருடம் மூன்றாண்டுகள் நாடெங்கும் பஞ்சமேற்பட்டு மக்கள் துயருற்றனர்; எங்கு நோக்கினும் வரட்சி; கால் நடைகள் மடிந்தன; அதுபோழ்து தொண்டி நகரைச் சேர்ந்த பெரியவர் செய்கு சுலைமான் லெப்பை சாகிபு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சொர்ணகவி மழை வேண்டி மழைப்பாட்டுப் பாடினார்கள் என்று அதிரை தாஹா அவர்கள் 'இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இது ஹிஜ்ரி ஆண்டுக்குச் சரியான கி.பி.1855-56 ம் ஆண்டு வருகிறது. ஆனால் மழைப் பாட்டை புத்தகமாக வெளியிட்ட ஹாஜி. க. செ. செய்யது முஹம்மது அண்ணாவியார் , முகவுரையில் 1862 வரை என்று குறிப்பிடுகிறார்கள்.

1862 ம் வருடத்துக்குச் சரியான காளயுக்தி வருடம் வரையில் இத்தேசத்தில் ஏறக்குறைய மூன்றாண்டுகள் மழை பெய்யாதிருந்தது. ஒரு நாள் வெள்ளிக்கிழமை 'ஜும்ஆ' தொழுகைக்குப் பிறகு, அங்கு வந்திருந்த தொண்டி நகரைச் சேர்ந்த செய்கு சுலைமான் லெப்பை சாஹிப் என்ற பெரியார் எழுந்து நின்று அங்கிருந்த சொர்ணகவி அவர்களை, 'விழித்தெழுவீர்! சர்வதயாபரனாகிய அல்லாஹுத்தஆலாவிடம் மழை பொழிய மனமுவந்து சில 'முனாஜாத்து'க் கவிதை களியற்றி யருளவேணும்' எனக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிசைந்த கவியவர்கள் கவிதை இயற்றி பாராயணம் செய்து மறு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தபிறகு இறைநாமம் ஓதி உமறு புலவர் சீறாவில் பாடிய 'நபி மழை அழைத்த படலம்' பாடி முடித்தபின் தம்முடைய பாடலைப் பாடத்தொடங்கினார்கள். கடைசிப் பாடலைப் பாடிமுடிப்பதற்குமுன் மழை பொழியத்தொடங்கி ஒரு வாரம் வரை நீடித்ததாக 'மழைப் பாட்டின்' முகவுரையில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் குறிப்பிடுகிறார்.

கருத்துச் செறிவும், இறை பக்தியும் நிறைந்த பாடல்கள் சில:

'சீருலாவி யருள் வளந் திருச்

சிந்தையிற் குடிதங்குந் தயாபரா

பாருலாவிய ஜீவசராசரம்

பண்பதாகவே யாவும் விளங்கவே

நேருலாவிய நீயலதாரிநீ

நீதிமானே யின்னேர மிரங்கியே

காருலாவிய நீண்மழை தந்தருள்

காணொணா வடிவே யெங்கள் நாயனே'


என்று வல்லோனைப் புகழ்ந்து, இறையருளை வேண்டி நிற்கும் கவியரசர் தொடர்ந்து வரும் மற்ற பாடல்களில் மக்கள் படும் துன்பங்களக் கூறி ஈருலக ரட்சகர் நபிகள் கோமானின் பொருட்டால் துயர் துடைக்கவேண்டும் என்று கூறுகிறார். இதோ இங்கே:

'நாடுதோறும் பயிர்முகம் நாடியே

நந்திவாடுகிறார் பயிரிட்டவர்

வீடுதோறுள மாதர்கண் மக்களின்

வேடங்கண்டுளம் வாடிமெலிகிறார்

வாடைமா மணம்வீசு முகம்மது

வள்ளற்காக யெங்கள் துயரோடவே

மூடிமாரி விடாது சொரிந்திட

முத்திதந் தருள்வாயெங்கள் நாயனே'


கார்மேகம் வந்து வந்து போகிறது ஆனால் மழை பொய்த்துவிடுகிறது. இதோ காரிருள் இப்போது மழை பெய்விக்கும் காய்ந்திருக்கும் பயிர்கள் பசுமையுறும், நாடு செழிப்படையும், நாமும் வளம்பெறுவோம் என்று ஆவலுடன் இருப்பவர்கள் ஏமாந்துப் போவது எப்படி இருக்கிறதென்றால் நல்ல பசியுடன் இருப்பவனுக்கு அறுசுவை உணவை காட்டிக் காட்டிப் பறிப்பதுபோலிருக்கிறது என்று அழகிய உவமை நயத்துடன் பாடுகிறார் கவிராயர்.

'தேட்டமாம் பசியுள்ளவர் முன்பிலே

தின்னஞ்சோறு கறிகளை யின்பமாய்

காட்டிக் காட்டிப் பறிப்பவர் போலவே

கறுத்தமேகம் வெளுத்துக் கலங்குதே

மூட்டமாயொரு மூசாப்பதாகவே

மூடிமாரி விடாது சொரிந்திட

நாட்டம்வைத் தனைவோரையும் காத்தருள்

நந்திலாமணியே யெங்கள் நாயனே'


புலவர் அவர்கள் மழைப் பாட்டுத் தவிர 'கியாமத்து மாலை', 'திருமண வாழ்த்து', 'கொம்புரவ்வு இல்லாத வண்ணம்', 'பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து', 'செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ்' முதலிய வேறு பல நூல்களையும் யாத்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்கள்.

மனித மனம், பலவற்றின் மீது அன்பு வைத்திருக்கும். ஆனால் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. குறிப்பாகத் தந்தையைக் காட்டிலும் தாய் வைத்திருக்கும் அன்பு சொல்லில் அடங்காது. தன் கணவன் விடும் குறட்டையோ ஏழு வீடுகளுக்கப்பால் எதிரொலிக்கும், அவளோ ஏதும் அறியாமல் உறங்கிக்கொண்டிருப்பாள். ஆனால் தன் குழந்தை சினுங்கினால் போதும் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்துவிடுவாள். தாய் உறங்கினாலும் தாய்மை உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கும். ஆகவே தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் கவனம் வைத்திருக்கும் அவள் குழந்தை துன்பப்படுபோது பரிதவிப்பாள், சிரிக்கும்போது பூரித்து மகிழ்வாள்.

இத்தகைய குழந்தைப் பருவத்தைச் சிறப்பித்துப் பெருமை சேர்த்துள்ள புலவர் பெருமக்கள் இறைவனையோ அல்லது சிறப்புப் பெற்ற பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவதே 'பிள்ளைத்தமிழ்'. இது தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் மரபு, இசுலாமியப் புலவர்களுக்கும் இது பொருந்தும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகையாகப் பாடப்படுகிறது. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமையும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் கடைசிப் பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேருக்குப் பதிலாக நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் அடங்குகின்றன.

ஆன்றோர்கள் மறைந்த பின்னரும் அவர்கள் மீதிருக்கும் மரியாதை, அன்பு காரணமாகப் பாடப்படுவதுண்டு. அவ்வகையில் செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ், முத்துப்பேட்டையில் அடங்கியுள்ள ஹக்கீம் செய்கு தாவுது வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்டதாகும்.

குழந்தையின் பருவங்களில் நடை பருவம் முக்கியமானது. குழந்தை எழுந்து தன் பிஞ்சு கால்களை ஒவ்வொரு அடியாகத் தத்தித் தத்தி எடுத்து வைக்கும்போது தாய் சற்றே தூரத்தில் தன் இரு கைகளையும் நீட்டி 'வா வா' என்றழைப்பாள். இதனை 'வருகை'ப் பருவம் அல்லது 'வாரானைப் பருவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதோ நம் புலவரின் கற்பனை வளத்தைப் பார்ப்போம்..

'செம்பொற் கலசத் திருவருக

தெவிட்டா வமுதத் தேன்வருக

சித்தாந் தவர்கட் குயிர்வருக

தீண்டா மணிச்செஞ் சுடர்வருக

அம்பொற் கிரண மலைவருக

அலையா தாசைக் கடல்வருக

அறிவோ ரிருகண் மணிவருக

அவுலி யாக்கள் இனம்வருக

நம்புற் றவர்க்கன் பருள்வருக

நாவல் லவர்கள் நாவருக

நலஞ்சே ரறிவின் நிலைவருக

நன்றே விளைக்கும் பொருள்வருக

உம்பர்க் கலைமா மதிவருக

வோங்குந் தவத்துள் ளகம்வருக

ஒளிசேர் செய்கு தாவுதெனும்

ஒலியே வருக வருகவே!'



நன்றி:
1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்
3. செய்கு தாவுதொலி பிள்ளைத் தமிழ்
4. புலவர் அ. பஷீர் அஹமது அவர்களின் முன்னுரை

Thursday, October 22, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 3

கலம்பகம் பாடிய
ஜீவரத்தினகவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார்


அண்டகோடிகளைப் படைத்து அவற்றுள் உயிரனங்கள் வாழ்வதற்கான தகுதியை பூமிக்களித்து மனிதன் உள்பட எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்த இறைவன் , மனிதனை மட்டும் மிக அழகாகப் படைத்தேன் என்று கூறுகிறான். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய பிரதிநிதி என்ற மிகப் பெரிய கௌரவத்தையும் கொடுத்தான். தன்னுடைய பொறுப்பை
வானத்திடமும் பூமியிடமும் கொடுத்தபோது அவைகள் ஏற்க மறுத்தன, ஆனால் மனிதன் மட்டும் அந்த மகத்தான பொறுப்பை, உன்னதமான அமானிதத்தை ஏற்றுக்கொண்டான். அதன் காரணத்தினாலெயே அகம்பாவம், செருக்கு, பெருமை இவனது தலைக்கேறியதால் தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாகிவிட்டான் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இதை உணர்ந்த ஒரு சிலர் மட்டும் அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை இவைகளை கடைபிடித்து தம் சொல், செயல் அனைத்தையும் இறைவணக்கமாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் தனக்கென்றில்லாமல் பிறருக்காகவும் வாழ்ந்து சமுதாய
சீர்திருத்தத்திற்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். இறைநேசர்கள் என்று சிறப்பிக்கப்படும் இவர்கள் சிறந்த வீரர்களாகாவும், தளபதிகளாகவும், மன்னர்களாகவும், மருத்துவர்களாகவும், புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்து முத்திரைப் பதித்திருப்பதை வரலாற்றில் காணமுடிகிறது. இறைவனால் நேசிக்கப்பட்ட இவர்கள் சொல்வது நடக்கும். வேறு வார்த்தையில் சொன்னால் எது நடக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். எனவே அற்புதங்கள் விளையும் தோட்டமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

சாதி மதங்களைக் கடந்து சந்தமிகு பாடல்களை யாத்தளித்த செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களுக்கு இரண்டு மைந்தர்களும் மகளும் உள்ளனர். மூத்தவர் செய்யது மீரான் லெப்பை, இளையவர் நூர் முஹம்மது இவ்விருவரும் அண்ணாவியர்களே. மகளைப் பற்றிய குறிப்பு இல்லை.

புலிக்குப் பிறந்தது பூனையாகமுடியாது. 'முத்தின் கருவிலிருந்து மாணிக்கம் பிறந்தது' என பாடிய அமிர்தகவிக்கு பிறந்த மாணிக்கமான மீரான் லெப்பை அண்ணாவியாருக்கு ஞானம் பிறந்தது சுவைமிகு நிகழ்ச்சியாகும். தம் தந்தையின் ஆற்றலில் பெருமைகொண்டோ என்னவோ மீரான் லெப்பை அண்ணாவியார் எழுத்தறியாமல் படிப்பறியாமல் ஏன் பள்ளிக்கூட வாசல் பக்கம் மழைக்கூட ஒதுங்காமல் பெற்றோர் சொல் கேளாமல் சோக்காளியாக வாழ்ந்து வந்தார். ஆனால் இளையவரோ அதற்கு மாற்றமாக இருந்தார். கல்வியறிவற்ற மூத்த மைந்தன்மீது வெறுப்புற்ற தந்தை இளைய மகன் நூர்முஹம்மது மீது அன்பு செலுத்தி வந்தார்.

வருடங்கள் கடந்தன, மூப்பெய்து பிணியுற்ற அமிர்தகவி கவிபாடும் திறத்தை தம் இளையமகன் நூர் முஹம்மதுக்கு கற்று தர எண்ணி தம் இளைய மகனை அழைத்துவர ஆள் அனுப்பினார். ஆனால் மகனாரோ தம் தந்தையின் பிணி நீக்க மூலிகைத் தேடி எங்கோ சென்றுவிட்டார். சென்ற இடம் யாருக்கும் தெரியவில்லை நாட்கள் நகர்ந்தன, பிணி தன் பணியை காண்பிக்க ஆரம்பித்தது. நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த கவியவர்கள் கலங்கினார். ஒரு பக்கம் கல்வியறிவில்லாத மூத்தமகன் இன்னொரு பக்கம் எல்லாம் அறிந்த இளையமகன் அருகிலில்லாத நிலை, செய்வதறியாமல் திகைத்தார். தாம் பெற்ற ஞானம்
யாருக்கும் பயனில்லாமல் போய்விடுமோ என்றஞ்சியவராக ஒரு முடிவுக்கு வந்தார்.

உதவாக்கரை என்றொதுக்கிய மூத்த மகன் மீரான் லெப்பையை வரவழைத்து தம்மருகே இருத்தினார். கூடியிருந்த உறவினர் சீடர்கள் அனைவரையும் புறமேற்றினார், கதவு தாழிடப்பட்டது. தனித்துவிடப்பட்ட மகன் செய்வதறியாமல் தந்தையை நோக்கினார். பெற்றோர் சொல் கேளாமல் வாழ்நாள் பூராவும் தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்தல் மனத்தை அரிக்க கூனிக் குறுகி நின்றார். தந்தையோ ஒரு முடிவுக்கு வந்தவராக மகனை துளைக்கும் பார்வையுடன் உற்று நோக்கினார். தந்தையின் பார்வையை எதிர்கொள்ள சக்தியற்றவராக தன்னை இழந்து தந்தையின் கட்டுக்குள் அடங்கினார். மகனை தம் அருகே
அழைத்தார். இறை நாமத்தை உச்சரித்தவண்ணம் ஒரு சில நொடி இரு கண் மூடி எல்லாம் வல்ல அல்லாஹ்வை தியானித்து தம் உமிழ்நீரை மைந்தரின் நாவில் உமிழ்ந்து விழுங்கச்செய்து நா திருத்திய அந்நொடியில் தம்பணி முடிந்த மனநிறைவுடன் இறைவனடி சேர்ந்தார். தமிழுலகம் ஒரு அண்ணாவியாரை இழந்தது.

என்ன விந்தை! தந்தை உமிழ்ந்த அமுதத்தை விழுங்கிய அந்தகனம் விவரிக்கமுடியாத எதோ ஒரு உணர்ச்சி உடம்பு முழுவதும் வியாபிப்பது போன்று உணர்ந்தார், சில நொடி தன்னிலை மறந்தார். அன்று முதல் செய்யது மீரான் லெப்பை கற்றோர் போற்றவும், கேட்டோர் வியக்கவும் நற்றமிழில் சொற்சுவை, பொருட்சுவை மிக்க ஞானப்பாடல்களைப் பொழியத் தொடங்கினார்; கவிமழையில் அனைவரையும் நனையச் செய்தார்; தந்தையையும் விஞ்சும் அளவுக்கு சீரிய தொண்டுகள் ஆற்றினார்.

அகிலத்திற்கும் அருட்கொடையாக வந்த திருநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் பற்றி பாடாத புலவர்கள் இல்லை. இசுலாத்தை ஏற்று முதன் முதலில் மிஃராஜு மாலை இயற்றிய ஆலி புலவர் முதல் இப்போது வாழுகின்ற புலவர் வரை நபிகள் பிரானைப் பற்றி புகழாதவர் யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை; இல்லவே இல்லை என்ற விடைதான் கிடைக்கும்.

இமாம் பூசரி(ரஹ்) அவர்கள் நோய்வாய்பட்டு மருத்துவம் கிடைக்காமல் புருதா ஷரீஃபை இயற்றியபோது 'ஃப மபுளஃகுள் இல்மி ஃபி அன்னஹு பஷருன்...' என்ற அடிக்குப் பிறகு அடுத்த அடி வராமல் சிந்தனையிலேயே உறங்கிவிட்டர்கள். நபிகள் கோமான் கனவில் தோன்றி 'வ அன்னஹு ஃகைர ஃகல்கில்லாஹி குல்லிஹிமி' என்று எடுத்தோதி இமாமவர்கள் மீது போர்வை ஒன்று போர்த்தி நோய் தீர்த்ததாக வரலாற்றுச் செய்தி உண்டு.

ஆலிம்கவிஞர் சிராஜ் பாக்கவி அவர்கள் தாம் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நபிமணி' என்ற கவிதைத் தொகுப்பை கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் துணையுடன் எம்பெருமானார் அவர்களின் 'ரவ்ளா ஷரீஃப்' முன்அமர்ந்து அரங்கேற்றம் செய்தார்கள்.

ஹிஜ்ரி 1177- ல் (கி.பி.1764) மறைந்த காசிம் புலவர் திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்று இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார். ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் 'என்னால் பாட முடியும்' என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.

'பகருமுருவிலி அருவிலி வெருவிலி' எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப்
பாராட்டினார்.

முஸ்தபா(சல்) அவர்களை நெஞ்சேற்றிய கவிராயரின் நெஞ்சமும் முஹப்பத்தால் நிறைந்து நின்றது. நபிகள் கோமானைப் பற்றி பாடாமலிருந்தால் தம்முடைய ஞானத்திற்கே இழுக்கு என்றுணர்ந்த அண்ணாவியார் நபிகள் பிரானை நாயகராகக் கொண்டு கவித்திறன்மிக்கோர் பாடவல்ல மதங்கு, அம்மானை, சம்பிரதம், தவம், மறம், சிந்து போன்ற பதினெட்டு உறுப்புக்கள் பொருந்துமாறு நால்வகைப் பாக்களும் பாவினங்களும் கொண்டு 'கலம்பகம்' பாடி எட்டுத் திக்கும் புகழ் பரப்பினார். அதுவே 'மதீனக் கலம்பகம்' ஆகும்.

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப்பிரபந்தவகைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். இலக்கண நெறி பிசகாமல் சந்தம் சரியாமல் கலம்பகத்தை பாடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜீவரத்தின கவிராயர் அவர்கள்.

மறுமை நாளில் ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்டு மகுஷரில் மக்கள் மயங்கி நிற்கும்காலை 'யா நஃப்ஸி - என் ஆன்மாவே' என்று யாவரும் தம்மை நினைத்து நொந்து அழும்போது 'யா உம்மத்தீ - என் கூட்டத்தினரே' என்று தேடித்தவிக்கும் பெருமானாரின் பேரருளை புலவரகள் நெஞ்சம் நெகிழப் பாடுகின்றார்.

'தியங்கி யவரவர் புலம்பி அழுது அழுது
இடைந்து மகுஷரின் மயங்கு பொழுதெதிர்
சீரோங்கி இலங்கும் பரம்பரன்
நீர்தான் துணை என்று புகழ்ந்துயர்
திருவருள் கொடுபர கதிபெற மிகுதுயர்
திகழடி மைகளை யழைக்கச் சிறந்தன'

மதீனக் கலம்பகத்தில் ஒவ்வொரு பாடலும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. சொர்க்கப்பதி திறப்பது, சுகமளிப்பது, சுடர்தருவது. உலகத்தின் ஏனைய மொழிக் கவிஞர்களும் புதுப்புது சந்தத்தில்-வண்ணத்தில், அமைப்பில் பாலை மணலில் உலவும் நபி(ஸல்) அவர்களை பாடி களித்தனர், களிப்பேற்றினர். கவிமாரி பொழியும் சீவரத்தின சிங்கம் பாடும் பாணியே தனி; முத்துப் பரல்கள் கோர்த்து வித்தை காட்டும் வித்தகர் தம் பாடலில் பல சித்துவேலைகளைப் புரிகிறார் தக்கலை வாழ் பீர்முஹம்மது அப்பா போல.

எட்டு யானைகளை ஒரு குடத்தில் அடைப்பாராம்; அண்டங்கள் ஏழினையும் ஒரே கைக்குள் அடக்க வருவாராம்; நாற்பத்திரண்டு மலைகளைப் பெயர்த்து கையிலேந்தி வருவாராம்; இரும்பை வெள்ளியாக மாற்றுவாராம்; பூனையைப் பிடித்து பானையை பிட்டுப் பிட்டு உண்ணச்செய்வாராம்; ஆர்ப்பரிக்கும் ஏழ்கடலையும் சிற்றெரும்பைக்கொண்டு பருகச்செய்வாராம்; வானில் தவழும் வெண்ணிலாவை வாளால் வெட்டுவாராம்; கைவிரலால் கதிரவனை சுற்றி எறிவாராம்; தாரகைகளைக் கோர்த்து மாலையாக ஆக்கிக்காட்டுவாராம்; இவ்வளவு சித்து வேலைகள் செய்யும் இவருக்கு ஒன்று மட்டும் முடியாதாம்! அது, காதம் கமழ் மணக்கும் கஸ்தூரி மேனியார் மிஃராஜ் நாயகர் நபிகள் நாயகம்(சல்) அவர்களை புகழ்ந்து நாளெல்லாம் பாடலாமென்றால் முடியாத காரியமாம்! இந்நிலை மருத்துவத்தில் வித்தகன் என்று சொல்லிச்சென்ற ஒருவர் நாடி அறிய முடியாமல் தவிப்பதைப் போல் இருக்கின்றதாம்! இதோ இங்கே....

'ஆனையெட்டு குடத்தினில் அடைப்பேன் ஏழு
அண்டமது கையுள் வைப்பேன்
ஆறேழு மலையைக் கையேந்தி வருவேன்
அயந்தனை வெள்ளியாகக் குவிப்பேன்
பூனைதான் பனையைப் பிட்டுப்புசித்து நான்
போகச் சொல்வேன்; எறும்பைப்
புனிதமுடன் ஏழ்கடலை உண்டிடச் செய்வனம்
புலியை வாளால் வெட்டுவேன்
தானென் விரலால் பருதியைச்சுற்றி யெறிவேன்
தகுமான வான் மீன்களை
தான்கோவை யேசெய்து மாலையில் தெரிய
வைப்பே எனன்சமர்த் திதல்லால்
ஞானபோதக மதினாநாதர் காதங் கமழும்
நானதே கத்தர் நவமே
நவிதலுக்கரிய தெனிரசூல் சரண நாளுமே
நாடி யறியாச் சித்தனே!'

இத்தகைய உவமை நயமிக்க மதீன கலம்பகமல்லாமல் மனை யலங்காரம், மகுடி நாடகம், வாள் விருத்தம், பரிவிருத்தம், யானைவிருத்தம், வாட்சாராவுத்தர் பவனி, திருமண பவனி முதலிய பல காவிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். இதில் வாள் விருத்தம்,பரிவிருத்தம், யானை விருத்தம் ரசூல்(சல்) அவர்கள் நடத்திய வீரப்போர் பற்றியது. மகுடி நாடகம் மந்திர தந்திர விளையாட்டைப் பற்றியது.

ஒருவர் மந்திர ஆற்றலினால் பொருட்களை கண்ணுக்குப் புலப்படாது மறைத்துவைக்க அவற்றை இன்னொருவர் தன்னுடைய மந்திர வலிமையினால் கண்டெடுப்பதை 'மகுடி' என்று அழைத்துள்ளனர். பெரும்பாலும் பாக்கு, வெற்றிலை, தேங்காய், ஆட்டுக் கடாவின் தலை, முட்டை, வாழைப்பழம், பணம் ஆகியவற்றை மறைத்துவைத்து எடுக்கச் சொல்வது வழக்கம். சில போட்டிகளில் ஒரு வாழை மரத்தையும் நட்டு வைப்பார்கள்.

மந்திரவாதிகள் இருகூறாக பிரிந்து நின்று கலந்து கொள்ளும் இப்போட்டி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மந்திரவாதிகள் காளி, துர்க்கை, அனுமான் போன்ற தேவதைகளின் துணையைக் கொண்டு பல சித்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறுவர். சில சமயங்களில் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவதும் உண்டு. மந்திரம் ஒரு கலை. அதனை ஒரு இலக்கியப் பொருளாகக் கொண்டு மகுடி நாடகம் உருவாகப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் வாணிபச் சிறப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செய்யது மீரா லெப்பை, அபுபக்கர் மரைக்காயர் ஆகிய இருவருக்குமிடையே நடப்பதாக அமைந்துள்ளது என்று பேராசிரியர் டாக்டர் ஏ. என். பெருமாள் 'மகுடி நாடகம்' ஆய்வு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:
1. இசுலாமிய இலக்கிய மரபில் அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் தாஹா அளித்த செய்தி குறிப்புகள்
3. 'மகுடி நாடகம்' - பதிப்பாசிரியர் கவி கா. மு. ஷரீப்

அண்ணாவியார் புலவர்கள் - 2

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார்(முதலாம் செய்யது முஹம்மது)


கி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் (ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர்) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. 'புல்லாங்குழலை கவனி, அது என்ன சொல்கிறது என்று கேள்' என்ற மௌலானா ரூமியின் கவிதை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. (புல்லாங்குழல்=மனம்;உள்ளறிவு)

ஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் கடமை எனப் புரிந்தாரே தவிர தன் தேட்டம் நிறைவை அடையவில்லை என்பதனை உணர்ந்தார்.

அக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார். அவரது தமிழறிவு யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றலைக்கொடுத்தது.

ஒருபக்கம் மார்க்க அறிவு மறுபக்கம் தமிழறிவு மனநிறைவைத் தரவில்லை. மௌலானா ரூமியின் அந்த வரி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னை மறந்தார், தன் கோலத்தை மறந்தார். உலக வாழ்வில மனம் ஒப்பவில்லை, நீண்ட தலைமுடி , பெரியதாடி துறவிகோலம் பூண்டு மதுக்கூர் விட்டகன்று கடலாடும் நாகூர் வாழும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அருள்வேண்டி பயணமானார். அங்கு , தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக மாறி கஸ்தூரி கமழ் மணக்கும் ஜவ்வாது புலவர் போன்ற மாணிக்கங்களை உருவாக்கிய காலத்தில் , ஷெய்கு வஹாபுதீன் என்ற ஞானச்சுடரின் நட்பு கிடைத்தது.

சடைமுடி தறித்து நின்ற அண்ணாவியாரின் கோலங்கண்ட ஷெய்கு, இசுலாத்தில் துறவறம் வெறுக்கப்பட்டது என அறிவுரைக் கூறி சடையை கலையச்செய்து பொன்னிறமேனிகொண்ட அண்ணாவியாரை கூர்ந்து பார்த்தார்கள். உள்ளத்தை நோட்டம்விட்டர்கள் அங்கு ஆத்மீகத்தின் பொறி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. 'இறைவனது பேரொளி ஒவ்வொரு உள்ளத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறது, ஆனால் துருப்பிடித்த இதயங்கள் அவ்வொளியை ஏற்க மறுக்கின்றன. தூய்மையான உள்ளமோ அப்பேரொளியை உள்வாங்கி பல உள்ளங்களை வெளிச்சமடையச் செய்கிறது' என்ற கருத்தைப் புரிந்த ஷெய்கு வஹாபுதீன் அவர்கள் அந்த நிமிடமே சீடராக ஏற்றுக்கொண்டார்கள். அண்ணாவியாரின் அறிவுக்கூர்மையைக் கண்ட அவர்கள் மெய்ஞான அறிவான 'மஃரிஃபா'வைப் புகட்டி தீட்சையளித்தார்கள். அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த புல்லாங்குழல் தன் இசையை நிறுத்தவும் புல்புல் பறவை சிறகடிக்கவும் கண்ட அண்ணாவியார்,
'உளந்தெளிந்துணர்ந்த வகாபுதீன் சாகிப்
உயர்பதம் சிரசினில் அணிந்தே' - என்று ஞானாசிரியருக்குத் தன் நன்றியைக் காணிக்கையாக்கினார்.

நாகூர்பதியில் ஞானதீட்சைப் பெற்றபின் அறிவுக்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியாதே என்றுணர்ந்தார். தம் குருநாதரின் சொந்த ஊரான வழுத்தூருக்கருகிலுள்ள அய்யம்பேட்டை வந்தடைந்து ஆங்கு ஓர் பள்ளிகூடம் நிறுவி அதில் தானே ஆசானாக இருந்து தமிழறிவுமட்டுமல்லாமல் ஆன்மீக அறிவையும் போதித்து அறியாமையை நீக்கிவந்தகாலை....

'அபாத்து, அத்ரமீ' என்ற பெயரால் அதிராம்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். 'மதுரைச் சரகத்தின் மாநகரம் செல்லி' என்று சுட்டுகிறார் நேர்வழிப் பிரகாசத்தின் ஆசிரியர். 'செல்லிநகர் தனில்வாழுஞ் சீவரத்ன கவிராஜன் செப்பு கின்ற' என்று காதிர் முஹையிதீன் அண்ணாவியாரும், அதிராம்பட்டினத்தை 'செல்லிநகர்' என்று அழைக்கப்பட்டதாக முனைவர் ஏ. என். பெருமாளும் குறிப்பிடுகிறார்கள். மதுரையின் ஆளுகைக்குட்பட்டிருந்த செல்லி நகரத்தை அதிவீர ராமபாண்டியன் கைப்பற்றி ஆட்சி புரிந்ததால் அதிவீர ராமப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு , மருவி , இப்போது அதிராம்பட்டினம் என்று அழைக்கபடுகிறது. அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.

அக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிராம்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. அண்ணாவியார் என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன (கிரியாவின் தமிழ் அகராதி). உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.

தம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள். தமிழறிவை மட்டும் போதிக்கவில்லை தகுதி உள்ளவர்களுக்கு இர்ஃபானுடைய ஞானத்தையும் போதனை மட்டும் செய்யவில்லை அதில் முதிர்ச்சியும் பெற்றுவந்தார்கள்.

'எதுவுமே இல்லை என்று நீ எதை சொல்கிறாயோ அதில் எல்லாமே இருக்கிறது, எல்லாம் இருக்கிறது என்று நீ எதை காண்பிக்கிறாயோ அதில் எதுவுமே நிரந்திரமில்லை'. இதை உணர்ந்தவர்கள்தான் சூஃபியாக்கள் என்ற ஞானிகள். அவர்களின் பயிற்சிப் பாதையில் 'கறாமத்' அல்லது சித்து என்ற அற்புதங்கள் நிகழும். அதனைத் துறப்பவர்களால்தான் 'விலாயத்' என்ற நிலையை அடைந்து இறைவனுடைய 'லிகா' வை தரிசிக்கமுடியும்.

அச்சமயத்தில் கதிர்வேல் உபாத்தியாயர் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் மாந்திரீகக்கலையிலும் சிறந்து விளங்கியவர். 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்ற அவ்வை மொழிக்கேற்ப அண்ணாவியாரின் தமிழறிவைக் கேள்வியுற்று நட்பு பாராட்ட வந்தார். இரண்டு ஒருமித்த கருத்துடைய மனங்களிலிருந்து வெளிப்படும் எண்ணம் நட்பாக பரிணமிக்கும். அந்த நட்பு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு இவைகளைக் கடந்து நிற்கும். அப்படிதான் அவ்விருவருடைய நட்பும் இருந்தது.

கதிர்வேல் உபாத்தியாயருக்கு ஆசை ஒன்று இருந்தது, பழனி மலை செல்ல வேண்டும் அங்கு முருகபெருமானுக்கு காவடி எடுக்கவேண்டும், இது நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்ற காலம் கனிந்துவந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின் தம் ந்ண்பரைக் கண்டு ஆசி பெற நினைத்தார் பயணத்திற்கு ஓரிரு நாள் முன்பாகவே காணவந்தார். வந்தவரை வரவேற்ற அண்ணாவியார் சிறிது நேரம் அளவளாவினர். பின்பு மெதுவாக தன் அவாவை வெளிப்படுத்தினார் உபாத்தியாயர்.

இப்போதுள்ளதுபோல் அக்காலத்தில் வாகன வசதி கிடையாது பெரும்பாலும் கால்நடையாகவே செல்லவேண்டும். வழியில் கள்வர் பயம்வேறு, பல இன்னல்களை அனுபவிக்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு 'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்ற வள்ளுவனின் சொல்லை மெய்ப்படுத்தி, தாங்கள் அங்குதான் செல்லவேண்டுமோ , இங்கு தரிசிக்கக்கூடாதோ என்று கேட்டதற்கு இல்லை அங்கு செல்வதாக உறுதியான முடிவெடுத்து விட்டேன் என்று உபாத்தியாயர் கூறினார்.

'அப்படியானால் முருகபெருமான் இங்கே தரிசனம் தந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறிவிடுமல்லவா?'

'அதெப்படி சாத்தியம்?'

'சாத்தியமில்லாததை நான் சொல்லமாட்டேன். ஆகவே இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்.'
காலம் குறிக்கப்பட்டது தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பூப்பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேல் உபாத்தியாயரும் வந்தார் அண்ணாவியாரும் வந்தார். தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து பாடும் நண்பரே என்றார் அண்ணாவியார்.

'சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்' என்ற பெயர்தாங்கிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற உபாத்தியாயர் தம் கம்பீரக் குரலில் பக்திப்பரவசத்துடன் உளம் உருகி...

"பூவடியினில்லாதி சேஷசயனன் போற்ற
மாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே .... என்று தொடங்கி பதினான்காம் பாடலாகிய

'ஐயனார் கௌரிபயிரவி யாணையேவா
அஷ்ட பாலகராணை யதிசீக்கிரமேவா
மெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா
வீரபத்திர னாணை விரைவாகவேவா
கையேந்தினே னாணை கடுகவேவா
கந்த சுவாமிமே லாணையேவா
ஐயுற்ற மேருமே லாணையேவா
அரனாணை ஹரியாணை யதிசீக்கிரமேவா'

என்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் சுப்ரமணியர் தம்நாயகியருடன் பூரண அலங்காரமாய் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர்.'இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க' என்று கூறி பழனிக்குரிய எழிலர் மறைந்தார்.
இன்நிகழ்ச்சியை 'மகாபாரத அம்மானை' என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இவர்கள் பத்து புராணங்கள் வரை யாத்தளித்துள்ளதாக 'மகாபாரத அம்மானை' என்ற நூலில் தன்னைப் பற்றி கூறும் பாடலில் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் நூர் நாமா, அலி நாமா, சந்தாதி அசுவமகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதல்லாமல் குமார காவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம் முதலிய நூல்களும் உள்ளன.

ஹிஜ்ரி 1167 ( கி.பி. 1753) ம் ஆண்டு சந்தங்களாலும் உவமைகளாலும் சிறப்புற்று விளங்குமாறு 'அலி நாமா'வை இயற்றி அரங்கேற்றம் செய்தார்கள். இது நான்காம் கலிஃபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களைப் பற்றியது. ஏழை ஒருவரின் கடனைத் தீர்க்கவேண்டி ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடிமையாகத் தன்னை ஓர் அரசனிடம் விற்று கடனைத் தீர்க்கிறார். தம் முயற்சியாலும், திறமையாலும் அவ்வரசனின் படையில் சேர்ந்து பல போர்களில் தீரத்துடன் போரிட்டு வெற்றி வீரராகத் திகழ்கிறார். மன்னரின் எதிரிகளை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார். மன்னரின் நன்மதிப்பைப் பெற்ற அலி(ரலி) அவர்கள் மக்களின் நன்மதிப்பையும் பெற்றதால் அரசனுக்குப் பிறகு அரச பொறுப்பை ஏற்று நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்தார். இதனை செந்தமிழில் வடித்த அண்ணாவியார் போர்க்களக் காட்சிகளை போர் நடப்பதுபோலவே நம் கண்முன் கொண்டுவருகிறார்கள்.

எதிர்தோடிவரும் இரண்டு சுறாமீன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்றும்; விரைந்து பின்வாங்கி முன்னேறி மோதிக்கொள்ளும் செம்மறிக்கடா போன்றும்; தேரில் இவர்ந்து வரும் மன்னர்கள் வில்லை இழுத்து விடுகின்ற அம்புகள் இரத்தினம் அழுந்திய கொடிகள், குடைகள், வண்டிகள் முதலியவற்றையும் சிறுநொடியில் பொடி செய்தன. இதோ பாவலர் பாவில்...

'இரதம் உற்றுறு புரவலர் முனையொடும்
எதிர்கு தித்திடும் கயலொடு கயலடி கொளல் போலும்
விரைவில் உற்றிடு தகரொடு தகருகள்
வினைமிகுத்துர மொடும் எதிர் பொருதிடு வதுபோலும்
வரித னுக்கொடு சுடுகணை சொரிதலின்
மணிஅ ழுத்திய கொடி குடைசகடுகள் விடுதோடு
புரவி மற்றவும் ஒருநொடி யளவுபல்
பொடிய டுத்தின எவர்களும் இவைசொல அரிதாமே'

இதே நூலில் ஒரு பாட்டில் தம் பாட்டனர் பெயர் நூருதீன் லெப்பை என்றும் தந்தை பெயர் செய்கு மீரான் என்றும் தனது சொந்த ஊர் தென் மதுரை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது என்று 'காலச்சுவடு' என்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இவர்கள் உ.வே.சாமிநாதய்யருக்கு முற்பட்டவராகவும் 1750 ம் ஆண்டு வாக்கில் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வாழ்ந்ததாகவும் குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடியபின் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் நாட்டின் அமைதிக்கு வேண்டி யாகம் செய்கிறார் இந்த கருப்பொருளை மையமாக வைத்து "சாந்தாதி அசுவமகம்" என்ற காப்பியம் அமிர்தகவி அண்ணாவியாரால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாக கிடைக்காத காலமாதாலால் ஒலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார் என்று 'பெருங்குத்தூசி' என்பவர் குறிப்பிடுகிறார். இது உலக வெற்றி முரசு என்ற வாரப்பத்திரிக்கையில் 2006 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி இதழில் வந்துள்ளது.

தகவல்கள்:

1. அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா
2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்

Sunday, October 18, 2009

அண்ணாவியார் புலவர்கள் - 1





ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார்
(மூன்றாம் செய்யது முஹம்மது)


அதிவீர ராமப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். அழைக்கப்படுவதோ அதிராம்பட்டினம்; சுருக்கப்பெயர் அதிரை. தமிழகத்தில் இசுலாம் நுழைந்தகாலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் (ANNAVIYAR) என்று அழைக்கப்படும் பெரும் சூஃபி புலவர் குடும்பங்கள் தமிழிலக்கிய உலகிற்கு பெரும்பங்காற்றிருக்கின்றனர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முஹையித்தீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902 ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், பாடும் திறன் பெற்ற பாவலர், இறையருள் பெற்ற தொண்டர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர். இவைகளுக்குமேல் மிகச்சிறந்த மனை நூல் நிபுணர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப் படுத்தியது. அண்ணாவியார் புலவர்களை உலகுக்குக் காட்டிய உத்தமர் இவர்களே ஆவார்.


இவர்களின் அறிய முயற்சியால் வெளிவந்த நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அசுவமேத யாகம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்."

ஜீவரத்தின கவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார் எழுதிய "மதீனக்கலம்பகம், மகுடி நாடகம்."

சொர்ண கவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "மழைப் பாட்டு, செய்கு தாவூதொலி பிள்ளைத்தமிழ், விடுகதை பாடல்கள்."

நவரத்தினகவி காதிர் முஹையிதீன் அண்ணாவியார் எழுதிய "ஃபிக்ஹு மாலை."

செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "ஆலிம் சாஹிபு சமரசகவிகள், நாகூர் புகைரத வழிச்சிங்கார ஒயிற்சிந்து."


வெளிவர இருக்கும் நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அலி நாமா, நூறு நாமா, மகாபாரத அம்மானை, வாட்சா ராவுத்தர் திருமண பவனி."

சொர்ணகவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "கொம்புரவ்வு இல்லாத வண்ணம், பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து."

இன்னும் வரும்.

நன்றி: அண்ணாவியார் பேரர்கள் அப்துல் வாஹித் மற்றும் அஷ்ரஃப் அலி, அதிராம்பட்டினம்.

குறிப்பு: எனக்கு கிடைத்த செய்திகளை வைத்து ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களைப் பற்றி எழுதியுள்ளேன். இவர்கள் ஆற்றிய தொண்டுக்கள் நிறையவே உள்ளன. இவர்கள் அமிர்தகவியின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். தாம் பாட்டனார் எழுதிய கவிதைத் தொகுப்புக்கள் அனைத்தும் ஒலைச் சுவடிகளாகவே உள்ளன. அவற்றை
சேகரித்து, பாதுகாத்து வைத்துள்ளார்கள். அவற்றில் சில புத்தகவடிவமாக ஆக்கப்பட்டதைத் தவிர வேறு சிலவற்றை தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக அளித்துள்ளார்கள். அவற்றுள் சந்தாதி அசுவகம் அல்லாமல் வேறு எவையெல்லாம் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. இவர்களைப் பற்றிய செய்தி "உலக வெற்றி முரசு" என்ற பத்திரிக்கையில் கடந்த 14-2-2006ல் வெளிவந்திருந்தது. அதை தம்பி ஆபிதீன் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை அவர்கள் உறவினரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளேன். அவை கிடைத்ததும் இத்துடன் சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்,
ஹமீது ஜாஃபர்
துபை
21-10-2009.