Sunday, November 22, 2009

ஹஜ்ஜு பெருநாள்

கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.

ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை)

தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.

அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும்.

அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.

பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)

குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம்.

தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது.

இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.

அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.

மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று.

குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது.

ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும்.


***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி

***
சுட்டி :

ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)

Friday, November 13, 2009

ஞானியார் அப்பா(ரஹ்)

அழியா வெற்றி
‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது


‘பணமில்லாதவனுக்கு இவ்வுலகில்லை’ என்று சொல்லுகிறார்கள். பணத்தை ஒருவன் சம்பாதித்துவிடுகிறான். பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் குவித்து விடுகிறான். வீடு, மனை, நிலபுலன்கள், இன்னும் பரந்த சொத்துக்களுக்கு அதிபனாகி குபேர சம்பத்துப் படைததவனாகவும் ஆகிவிடுகிறான். தன் மனைவி மக்களுக்கு மட்டுமல்ல, தன் பிள்ளைகள், தன் பிள்ளைகளின் பிள்ளைகள் அனைவருக்கும், ஜன்ம ஜன்மத்திற்குச் சுகபோகத்தில் சுகித்திருக்கும் அளவுக்கு தனபாக்கியத்தை விட்டுச் செல்கிறான். அத்தகைய ஒருவனை வெற்றிகரமாக வாழ்ந்தவன், உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆயினும் நம்மிடையே வேறு சிலர் இருக்கின்றனர், இவர்கள் செல்வத்தால் வரும் வெற்றியை வெற்றி என்று கருதுவதில்லை. இவ்வுலக இன்பங்களில் திளைத்து உண்டு, உடுத்தி, உறங்கி பின்னொரு நாள் மறைந்து போகும் எந்த மனிதனும் வாழ்வில் வெற்றி கண்டவனல்லன் என்பது இவர்கள் கருத்து. இந்த பிரபஞ்சமே மாயை, இந்த மாயையில் சிக்குண்டு மண்ணில் வாழ்ந்து மடிந்து விடுபவர் பிறவிப் பயன் எய்தாதவராகி விடுகின்றனர். ஆகவே வாழ்வில் உண்மை வெற்றி காண விழைகிறவர் ஆசாபாசங்களைத் துறந்து, மண்ணுலக வாழ்க்கையை மறந்து மனிதப் பிறப்பெடுத்த பெரும்பயனை அனுபவிக்க , ஜன்ம சாபல்யம் பெற, யோகத்தில் ஆழ்ந்து விடவேண்டும்; நிஷ்டையில் இருந்துவிட வேண்டும்; வாழ்வின் பிறப்பினின்று விடுபட்டு, உலக பந்தங்களை அறுத்தொதுக்கி எங்கோ காட்டிலோ, மலையிலோ, குகையிலோ தவமிருந்து “நான்” எனும் அகந்தையை மாய்த்து இந்த கட்டையைத் தேயவிட்டுத் தேயவிட்டு முக்தி பெறவேண்டும். பரமாத்மா ஜீவாத்மாவோடு ஐக்கியமுற வேண்டும். இந்த ஐக்கியம் கைவரப் பெற்றவனே வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றவனாவான் என்று கருதுகின்றனர் பக்தரும், முக்தரும், சித்தரும், போதருமாகி, ஐம்புலன் அவித்து யோகத்திலும் ஞானத்திலும், சித்தாந்த, வேதாந்த வைராக்கிய, ஆன்மீகத் தத்துவார்த்த விசாரணையிலும் மூழ்கித் திளைக்கும் இந்த சிலவித்தகர்.

வாழ்வைத் துறந்து விடுவதையும், ஐம்புலன்களையும் அவித்துவிட்டு, சந்நியாசத்தை மேற்கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. பதி, பசு, பாசத் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சூஃபி ஞானிகளின் கோட்பாடுகளைக்கூட இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானவை என்று வைதீக இஸ்லாமிய ஞானிகள் எதிர்த்த சரித்திரம் உலகறிந்தது. ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹி காலம் தொடங்கி ஜலாலுதீன் ரூமி, இமாம் கஜ்ஜாலி, முஹைதீன் இபுனு அரபி அவர்கள் காலம் வரையுள்ள சூஃபி ஞான மேதைகளின் ஆன்மீகத் தத்துவங்கள் எவ்வாறு இறுதியில் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கும் இதர இஸ்லாமிய புனித கருத்துக்களுக்கும் இயைந்தவாறு அமைந்துகொண்டன என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளன.

இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஜீவாத்மா பரமாத்வாவோடு ஐக்கியப்படுவதென்பது இயலாத காரியம். ஏக இறைவன் வேறு, தனி மனிதனின் ஆன்மா வேறு, ஒன்றேதான் தெய்வம். அந்த ஒன்றோடு இன்னொன்று கலத்தல் என்பது என்றுமே சாத்தியமில்லை. ஒன்றோடு ஒன்று இயைந்து இரண்டாக முடியாது. ஏக தெய்வத்தைப் பொருத்தமட்டில் ஒன்றை இரண்டாகவோ அல்லது ஒன்றையும் இரண்டையும் சேர்த்து மூன்றாக்கி ஏக தெய்வத்திற்குப் பங்கம் விளைக்கும் பல தெய்வ தத்துவத்திற்கோ இஸ்லாம் இடம் கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது.

இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்த வரையில் இறைஞான காரியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுலக மனிதனுக்கு ஆன்மீகக் காட்சி வேண்டுமாயின் ஒருகால் சித்திக்கலாம். ஆனால் தனி மனிதனின் ஆன்மா இறைவனோடு கலந்து விடுவதென்பது மட்டும் ஒருபோதும் முடியாத காரியம்.

இந்த பின்னணியில் பார்க்கும்போதுதான் உலக வாழ்வில் உண்மையில் வெற்றி எனப்படுவது எது என்ற கேள்வி கூர்மையும் முனைப்பும் பெறுகிறது. மனிதராகிய நம் வாழ்வில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றையும் உண்மையான வெற்றி எனக் கருதிகிறோமே, அவை ஒவ்வொன்றும் உண்மையில் வெற்றி எனக் கொள்ளத்தக்கவைதாமா?

எது வெற்றி? திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகி இவ்வுலக வாழ்வை இன்ப லாகிரியாக்கி, தன் மனைவி மக்கள், சுற்றம் கிளையனைத்தும் சுகமாக வாழ வழி செய்துவிட்டுச் செல்கிறானே அவன் வெற்றி வெற்றியா? வறுமையில் சிக்கிச் சுழன்று வாழ்வதாக நினைத்து தினமும் செத்து செத்துக் கொண்டிருக்கிறானே அவனும் அவனைச் சார்ந்தோரும் வாழும் வாழ்வு வெற்றியின் அடைப்படையில் அமைந்ததா? உலகம் பொய், வாழ்வு மாயை என நினைத்து தெய்வத்தோடு கலந்துவிட துறவறம் பூண்டு கடுந்தவம் செய்கிறார்களே அவர்கள் வாழ்வு வெற்றி தர வல்லதா?

இஸ்லாமிய ஏகத்துவ வழிபாட்டின் அடிப்படையிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் பார்த்தால் மேற்கூறிய எவையும் உண்மையில் வெற்றிகள் ஆகமாட்டா.

தனக்காக, தன் குடும்பத்தினருக்காக, தன் ஊரார், நாட்டாருக்காக, தன்னலத்தையே அகத் தளத்திற்கு கொண்டு செயலாற்றும் எந்த தனி மனிதனின் சாதனையையும் இஸ்லாம் வெற்றி என ஏற்றுக் கொள்ளாது. இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி நோக்கின் தனிப்பட்டவனின் வெற்றி இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். உலகம் முழுவதற்குமே ஏற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் குறிக்கோளை நிறைவேற்றி அவனின் மகிமைகளை விளக்குவதாக மிளிர வேண்டும். மனிதன்பால் இறைவன் வைத்திருக்கும் அருள் நோக்கை அர்த்தமுள்ளதாக்கி தனி மனிதனுக்கு இறவா வாழ்வளிக்கத்தக்க தன்மைத் தானதாக வெற்றி விளங்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடித்துவிட்டு அதை நாம் முனைந்து பெற்ற வெற்றியென்றும் மற்றதெல்லாம் தோல்வி என்றும் கருதுவது போன்ற தவறு உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. வஞ்சனைக்கு வித்தூன்றி வரும் விளைவை வெற்றியெனக் கொள்வது நமது புத்தியின்மையையே காட்டும். மண் நாடி, பொன் நாடி, புலன் நாடும் பெண்நாடி பெறும் சுகத்தை வெற்றியென்று சொல்ல இயலுமா? சிந்தித்துப் பார்ப்போமாயின் வெற்றியின் தன்மை நமது சிந்தையில் எழும் எண்ணத்தின் தன்மையைப் பொறுத்தது. எண்ணம் சிறந்ததாக, உயர்ந்ததாக, இறைவனுக்கு உகந்ததாக இல்லாத வரையில் அவ்வெண்ணத்தின் விளைவை வெற்றி என்று கொள்ள இயலாது. எண்ணத்தில் ஈசன் ஒளி இல்லையெனில் வெற்றி இல்லை, எண்ணத்தில் நேர்மை இன்றேல் என்றைக்கும் எதிலுமே வெற்றியில்லை. எண்ணம் ஒரு பரம்பொருளாய், இதயம் ஒரு விண்ணகமாய் மாறாத வரையில் இந்த உலகில் எதிலும் வெற்றியில்லை. ஆகவே எண்ணத்தில் ஈசன் ஒளி ஏறிவிடில் தோல்வி இல்லை வெற்றிக்கு. தோல்வி இல்லாத வெற்றி சாகாத வெற்றி இந்தத் தரணியில் வேண்டும் எனில் நம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் தன்மைபெறப் பாடுபட வேண்டும். பரம்பொருளின் தன்மை பெற ஓயாமல் பாடும்படும் பொழுது நம்மை அறியாமலே நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வ குணங்கள் குடிபுகுந்து விடுகின்றன. தெய்வகுணம் குடிபுகுந்த இதயத்திலிருந்தெழும் எண்ணங்கள் நம்மை அழியாத வெற்றிக்கு இழுத்துச் செல்லுகின்றன.

இஸ்லாமிய ஏகத்துவத்தின்படி என்னதான் மனிதன் பாடுபட்டாலும், தவங்கிடந்தாலும் அவன் இறையோடு கலக்க முடியாது; ஐக்கியமாகிவிட முடியாது. ஆனால் அளவற்ற அருளாளனின் அடியார்களாக, சேவகர்களாக, அடிமைகளாக அந்த ஒப்பற்ற இறைவனின் அருள் வழியில் செயலாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, தொல்லையும் குழப்பமும் நிறைந்த உலகில் சாந்தியையும் ஒழுங்கமைதியையும் நிலை நாட்டி, மன்பதை உய்ய வழிவகுப்போமானால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக நம்மை ஆண்டவன் பக்கம் உயர்த்திக் கொண்டவர்களாகிறோம்.

மனிதன் தனிப்பட்டவன்; தனித்தவன். ஆண்டவனும் தனித்தவனே, அவன் ஏகன், தன்னந்தனியன். ஆனால் தனித்தியங்குவோருள் எல்லாம் முற்ற முற்ற முழுமை பெற்ற பூரணன் என இமாம் அஹமது இப்னு ஹன்பல் அவர்களின் வியாக்கியானம் சொல்லுகிறது. மனிதன் தனியன், தனித்தியங்குபவன் எனினும் முழுமை பெற்றவனல்லன். பூரணமாகத் தனித்தியங்கும் வழி வகையறியாது தயங்கித் தயங்கித் திகைத்திருப்பவன். இந்த பூரணத்துவத்தை நோக்கிச் செயலாற்றுவதே அவனது இலட்சியமாக இருக்க வேண்டும். இதுவே இயற்கையின் நியதியும் உயிர்வாழ்க்கையின் தாத்பரியமுமாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவன் தன் எண்ணத்தால், சொல்லால், செயலால், முயன்று முயன்று முன்னேற வேண்டும் என்ற வெறியால் முழுமை பெறும் இலட்சியத்தின் பக்கமாக முனைகிறானோ அந்த அளவிற்கு ஆண்டவன் பக்கமாக அண்டி அண்டி வருகிறான். எந்த அளவிற்கு அவன் இந்த இலட்சியத்தினின்றும் பிறழ்ந்து பின்னோக்கிச் செல்லுகிறானோ அந்த அளவிற்கு அவன் ஆண்டவனை விட்டும் வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுகிறான். ஆண்டவனுக்கு அவனுக்கு இடைவெளி, தூரம், அதிகரிக்க அதிகரிக்க அவன் கீழ்படியின் கீழ்ப்படியினருகே நிற்கும் தாழ்ந்த மனிதனாகி, பஞ்சை மனிதப் பதராகி, தரத்தில் குறைந்து மிகச் சாதாரண வெறும் மனிதனாகி விடுகிறான். அத்தககயவனால் சாகா வரம் பெற முடியாது, அழியா வெற்றியை அடையவும் முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறுகியும் அற்றும் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படியின் மேற்படியை நோக்கி உயர்கிறான்; முழுமையின் பக்கமாக வருகிறான். ஆண்டவனின் அண்மையிலும் அண்மை வந்துவிடப் பார்க்கிறான். காலத்தை வென்று சாகா வரம் பெற்று அழியா வெற்றியையும் பெற்றுவிடுகிறான்.

‘தெய்வ குணங்களையும் பண்புகளையும் உன்னுள் நீ சிருஷ்டித்துக்கொள், உண்டு பண்ணிக்கொள்’ என்னும் தத்துவம் தொனிக்க நம் நபிகள் கோமானும், “தகல்லஹு ஃபீ அக்லாக்கல்லாஹ்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இப்படி பரம் பொருளின் தன்மைபெற பாடுபட்டு, பாடுபட்டு நம்மை நாம் தெய்வத்தின் பக்கமாக உயர்த்திக் கொள்ளும்போது நாம் அந்த ஏகத் தனி இறைவனோடு கலந்துவிட முடியாது. ஆனால் இறையோனின் தன்மைகளை, பண்புகளை, கல்யாண குணங்களை, அம்சங்களை ஓரளவாவது நம்முள் வருவித்துக் கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் இயலும். அவற்றுள் தோய்ந்து நாம் சுகிர்தமடையவும் கூடும்.

இவ்வித கடவுள் தன்மை பெற பாடுபடுவது நமது சுயநலத்திற்காக அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இயற்கையையும் அதன் சக்திகளையும் வென்று, பஞ்ச பூதங்களையும் வெற்றிகொண்டு, மனித குலத்தின் சுபிட்சத்திற்கு வழிகோலுவதன் மூலம் இறைவனுக்குப் பணியாற்றுவதைவிட சிறந்த சேவை இருக்க முடியாதல்லவா? பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்ன? ஜடப்பொருள்களின் உள்ளுறைந்திருக்கும் இரகசியங்கள், அற்புதங்கள் யாவை? இவைபற்றி முழுவதும் அறியாது நாம் திகைத்திருந்தோம். இன்னும் திகைத்து நின்றோம். அணுவைத் துளைத்தோம், தகர்த்துத் தகர்த்துப் பிரித்தோம், பிளந்தெறிந்தோம். இதை மானிடத்தின் வெற்றி என்றும் கண்டோம்; கொண்டோம். இருப்பினும் காற்று, நீர், நெருப்பு, மண், வெளி ஆகியவற்றுள் மறைந்திருக்கும் சிருஷ்டியின் இரகசியங்கள் அனைத்தையும் நாம் அறிந்துவிட்டோம் என்றில்லை. அறியாத வரையில் அச்சக்திகள் அனைத்தும் மன்பதையின் முன்னேற்றத்திற்கும் உய்வுக்கும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. மனிதகுலம் இத்தடைகளைத் தகர்த்தெறிய இயற்கையின் கட்டுகளை அறுத்தொதுக்கி வெற்றி கொள்ள செயல்கள் செய்வின் அச்செயல் இறைவனின் மாண்பினையே காட்டும் அல்லவா? மனிதன் நெருப்பை இரவின் இருளுக்கு ஒளியேற்றும் விளக்காக மாற்றினான். நஞ்சை நோய் தீர்க்கும் அருமருந்தாக மாற்றுவித்தான். வெறுங் கல்லினுள் சுடர் திணித்து மணியாக்கினான், களிமண்ணை அடித்தெடுத்துக் குடமாக்கினான். சிருஷ்டித்தான். தான் எனும் அகந்தையை வளர்த்து, பஞ்ச பூதங்களையும் வெல்லும் முயற்சியில் ஆண்டவனின் மாட்சியையும் அருள் ஞானத்தையும் பறைசாற்றினான். இன்றோ பூமியின் இழுப்புச் சக்தியையே தாண்டிப்போய் இங்கிருந்து நாம் சந்திரனையும் உடுக்களையும் பார்ப்பதுபோல் வானவெளியில் நின்று பூமியையே பார்க்கும் பாக்கியம் அவனுக்கு சித்தித்திருக்கிறது. நாமும் சிருஷ்டிக்கிறோம் இறைவனால் ஏவப்பட்டு, அவனின் சேவகர்களாக, அடிமைகளாக சிருஷ்டிக்கிறோம். “சிருஷ்டி கர்த்தாக்களுள் எல்லாம் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா மாட்சி மிக்க ஆண்டவனே” என்னும் பொருள் தரும் திருமறையின் வசனம் நம்மை செயலாற்றத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அச்செயலினால் நாம் வெற்றி பெறுகிறோம். இறைமாண்பின் அடிப்படையில் தோன்றும் இவ்வெற்றி அழியா வெற்றி. இந்த வெற்றிக்காக நாம் ‘நான்’ என்ற நம்முள் அடங்கிக் கிடக்கும் சக்திகள வெளிக் கொணருகிறோம். நாம் உணர்வையும் அறிவையும் வளர்க்கிறோம். நம் உணர்ச்சிகள் வலுவடைகின்றன. நம் அறிவு கூர்மைப் பெறுகிறது. அசாதாரண அறிவும் அபரிமிதமான ஆற்றலும் பெற்று நாம் அதியுன்னத அமானுஷ்யமான மனிதர்களாக ஆகிவிடுகிறோம். காலத்தையே வென்று சாகா வரமும் பெற்றுவிடுகிறோம். இத்தகைய பண்புகள் பெற்றவர்களாக மனிதகுலத்தின் ஒவ்வொருவரும் மாறிவிடும் பொழுது இலட்சிய உலகமே தோன்றிவிடுகிறது. இறைவனின் இலட்சியமும் வெற்றிபெறுகிறது. இறைவனுக்கு உகந்த இந்த வெற்றிச் சாதனைக்காய்த் தன்னையே அடக்கி ஆண்டும், கட்டுப்படுத்தியும், தன்னுள்ளே உறைந்தும் மறைந்தும் இருக்கும் சக்திகளை வெளிக் கொணர்ந்தும் அதியுன்னத மானிடனாக மாறி வையத்தை உய்விப்பவன், என்றும் மாளாத முழுமை பெற்றவன். அத்தகையவனை இறைவனின் பிரதிநிதி என்றும் ‘கலீபா’ என்றும் கொள்ளலாம் அல்லவா?

இயற்கையின் சக்திகளை ஆட்கொண்டு ஆண்டவனின் அடியானாக இருந்து அவனின் பேரருள் கொடையை நிதர்சனமாக்கிக் காட்டவல்ல செயற்கரிய காரியங்கள் செய்து அதியுன்னத மனிதனாகி இறவா வரம் தரும் அழியாத வெற்றிக்காக தவம் கிடக்கிறார் முஸ்லிம் ஞானி ஒருவர். இவ்வுலக வாழ்க்கை எனும் சிறையில் சிக்கி இலட்சியத்தையும் குறிக்கோளையும் மறந்து கேவலம் பஞ்சை மனிதனாக உழன்று இவ்வுலக வாழ்வில் தன்னை இழந்து விடுகிறவர்களை இந்த ஞானியார் வெறுக்கிறார். அழியாத வெற்றி பெறுகிறவன் தன்னைத் தான் இழந்து விடமாட்டான். ஆனால் இந்த உலகம் தன்னை அவனில் இழந்து விடும் என்று கூறுகிறவர் இந்த ஞானியார். தன் உள்ளத்திலும் உடலிலும் தன்னுள் எங்கும் அந்த ஒப்பற்ற ரஹ்மானின் அருள் நிறைந்து ததும்ப வேண்டும்; அவனின் அருள் ஞான போதத்தால் ஆண்டவவனின் அடியானாகிய தான் அழியாத வெற்றி பெற வேண்டும் என்று தவிக்கிறார் இவர். நிலையாத காயத்திற்கு ரஹ்மான் துணை கொண்டு நித்தியத்துவம் அளித்து காலத்தையும் வென்று “பகுமானம்” மிக்க புத்தி நுட்பம் பெற்று அழியாத வெற்றிபெற இந்தக் கோட்டாற்று ஞானியார் சாஹிப் அவர்கள் அருளாளனிடம் எப்படி வரம் கேட்கிறார் பாருங்கள்:

‘ரஹுமானே யென்னுள் மணியா யுருண்டு
நினைவாகி யெங்கும் நிறைவாய்
நிலையாத காய மதிலே நிறைந்து
நிலைகொண்டு நின்ற பொருளே
பகுமான மென்ற திகழாத புந்தி
பலபேத மாயுன் னடியேன்
பரஞான ஜோதி யருளான வின்பம்
பரவாத பாவி யானுஞ்
செகமீதி லிந்த முறையா விருந்து
திருடான பாவ வலையுள்
தினமூழ்கி வந்து மதினூ டுழைந்து
சிறைபட் டிருந்த வடியேன்
அகமீதி லுன்றன் அருள்ஞான போதம்
அடியார்க்கு ளீந்து னருளால்
அழியாத வெற்றி தரவேணு மென்னுள்
அருள்வா யெழுந் தருள்வாய்’


கன்னியா குமரி மாவட்டத்தில் இன்றைக்கு 280 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் ஹஜ்ரத் ஷெய்கு ஞானியார் சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்கள். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்கள். தன் ஞான குருவிடத்திருந்து கிடைத்த அகக் காட்சியின் விளைவாக எழுந்த நூற்றுக் கணக்கான பக்தி ரசப் பாடல்களை தமிழில் தந்தவர்கள். இப்பாடல்கள் ‘திருமெஞ்ஞான திருப்பாடல் திரட்’டாக வெளியிடப்பட்டு இறைஞான நூலாகத் திகழ்கின்றது.

இந்த சூஃபி ஞான வள்ளலார் மாபெரும் முஸ்லிம் முனிவராக விளங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி தம் காலத்து முஸ்லிம்களாலும் அல்லாதாராலும் ஞானியார் சாஹிப் எனப் போற்றப்பட்டு வாழ்ந்தவர்கள். மாபெரும் ஷெய்காகவும் இறைநேசராகவும் விளங்கி தமிழ் நாட்டில் தீன் பயிர் வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர்களின் மக்பரா கோட்டாற்றில் உள்ளது. இவர் வம்சத்தினர் ஞானியார் குடும்பத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். காலஞ்சென்ற மகாமதி, சதாவதானி ஷெய்கு தம்பி பாவலர் அவர்கள் ஞானியார் அப்பா வழிதோன்றலே.

இவர்களது பக்தி ஞானப் பாடல்கள் அனைத்தையும் படித்துணர்ந்து பொருள் தெரிந்து கொண்டவர்களாக சொல்லத்தக்க முஸ்லிம்கள் இன்று எத்தனைபேர் இருக்கிறார்கள் ?

நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது
பாவலர் பதிப்பகம் - சென்னை

Friday, November 6, 2009

அண்ணாவியார் புலவர் - 6

செய்யது முஹம்மது அண்ணாவியார்
(இரண்டாம் செய்யது முஹம்மது)


கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடற்கரையோரங்களில் நுழைந்து கால தாமதமில்லாது உள் நாட்டிலும் பரவி நின்றது. கேரளத்தில் கொடுங்கல்லூரில் ஹஜ்ரத் மாலிக் பின் தினார்(ரலி) அவர்கள் வந்த அதே காலம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் ஹஜ்ரத் தமீமுல் அன்சாரி(ரலி) அவர்களும் ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களும் வந்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

[நபிமணித் தோழர்களான ஹழரத் உக்காஷா (ரலி) மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிப்பேட்டையிலும், ஹழரத் தமீமுல் அன்சாரி (ரலி) சென்னையை அடுத்த கோவளத்திலும், ஹழரத் வஹப் (ரலி) சீனத் துறைமுகமான காண்டன் நகரத்திலும் நல்லடக்கம் பெற்றுள்ளனர். இச்செய்தி மௌலானா அக்பர்ஷாஹ்கான் நஜீப் ஆபாதி எழுதிய ஆயினயே ஹகீகத்துன் நாமா (உண்மையான வரலாற்றுக் கண்ணாடி) எனும் உருது நூலில் (பக். 47&48) குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நஃபீஸ் அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘Saints of India’ (இந்தியாவின் துறவிகள்) எனும் ஆங்கில நூலிலும் (ப. 137) இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேரா.சா.அப்துல்ஹமீது குறிப்பிடுகிறார்.]

ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்கக்கூடிய 'முஜத்திது'கள் வருவார்கள என்ற நபி மொழிக்கேற்ப நபித்தோழர்களின் வருகைக்குப் பிறகு தென் இந்தியாவில் இசுலாம் பரவி நின்றாலும் அதன் பிறகு தன் வலுவிழந்திடாமல் இருக்க இறைநேசர்கள் வந்தார்கள். அவர்கள் வெறும் மார்க்கத்துடன் நின்று விடாமல் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்ற இறை சொல்லிற்கேற்ப எல்லா மதத்தவரையும் அரவணைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

தாம் பெற்ற ஞானத்தை சுவைத்து, அனுபவித்து பின் மக்களுக்கும் பகிர்ந்துக்கொடுத்தோடு நின்றுவிடாமல் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை வகுத்துக் கொடுத்து இஸ்லாத்திற்கு தங்கள் வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்த இறைநேசர்களை நினைவுகூறுவது சான்றோர்களின் பண்பாகும். இது மனித கலாச்சாரத்தில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகும்.

இதன் விளைவாக வந்ததுதான் மவுலிது, பைத்து, முனாஜாத்து, கஸீதா, பாமாலை போன்றவை. தமிழ் இலக்கியத்திற்கு சற்றும் சளைக்காத வண்ணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நின்று நிலவுகிறது. சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் வரை தமிழக முஸ்லிம்களால் சுபுஹான மவுலிது, முஹையிதீன் மவுலிது இன்னபிற பைத்துக்களும் ஓதப்பட்டு வந்தன. ஆனால் இன்று அவற்றைக் காணோம். "ஏட்டுச் சுரக்காய் ஆலிம்களின் வருகையால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இளையசமுதாயம் ஒருவித மாயையில் சிக்கி எங்கே இருக்கிறோம் என்றுகூட தெரியாமல் ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் சிக்கிய கலம் போல அல்லாடிக் கொண்டிருக்கிறது".

எனினும், உண்மை உணர்ந்த அறிஞர்கள் இந்த சலசலப்பைக் கண்டு அஞ்சாமல் தம் பணியை அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேட்டத்திற்குத் தகுந்தாற்போல் அறிவை ஊட்டி வருகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் தமிழ் புலமை நிறைந்திருந்தது. எனவே அப்போதைய ஆலிம்களும் புலவர்களாக இருந்தனர். அந்த வகையில் பரம்பரை ஞானத்துடன் வாழ்ந்தவர்தான் செய்யது முகம்மது அண்ணாவியார்(இரண்டாம் செய்யது முகம்மது). இவர். நவரத்தின கவி காதிர் முஹையிதீன் அண்ணாவியாரின் மூத்தப் புதல்வர். இவருக்கு ஹபீப் முகம்மது அண்ணாவியார் என்ற இளவல் உண்டு. இவர் 1857 நவம்பரில் பிறந்து 77 ஆண்டுகாலம் வாழ்ந்து 1934 செப்டம்பர் மாதம் இறையடி சேர்ந்தார்.

'கவிஞன் பிறக்கிறான் அறிஞன் உருவாக்கப் படுகிறான்' என்ற சொல்லிற்கேற்ப தம் முன்னோர் போலவே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். 'சரம கவிதை', 'வ,ழிநடைச் சிந்து', நபிகள் நாயகம் ரசூல்(சல்) அவர்கள் பெயரால் 'கீர்த்தனைகள்' போன்றவைகளை இயற்றியிருக்கிறார்கள்.

சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்துக்குச் சொந்தக்காரர்களாகி புலமைச் சிகரத்தில் கொடிக்கட்டிப் பரக்கவிட்டவர்கள் அண்ணாவியார் மரபினர் என்றால் அது மிகையாகாது. முத்துப்பேட்டை நாயகம் செய்கு தாவுதொலி மீது இவர் தந்தை, 'பிள்ளைத் தமிழ்' பாடி இருக்கிறார்களென்றால் பிள்ளையான இவர் நாகூர் நாயகத்தின் மீது 'புகைரதச் சிந்து' பாடியிருக்கிறார்கள்.

நாகூர்பதி வாழும் சாஹுல் ஹமீதொலி பாதுஷா நாயகம் மீது பாடாத புலவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்றும் பலர் பா இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுஷா நாயகத்தை தரிசிக்க ஒருவர் நாகூர்பதி செல்கிறார், ஆங்கு அவருக்கு சில அனுபவங்கள் ஏற்படுகின்றன, அந்த அனுபவத்தில் சுவைத்த உணர்ச்சியை பாடலாக வடித்தார். அவர் வேறு யாருமல்ல, பாமர முஸ்லிகள் உள்ளங்களில் பக்திக்கனலெழுப்பிய அப்துல் காதர் என்ற பழுத்த ஆலிமாக இருந்து பின் மஸ்தானாக மாறிய குணங்குடியார்.

'திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிங்காசனாதிபர்கள் அதையேந்தியே வந்து
ஜெயஜெயா வென்பர் கோடி
அக்கனருள் பெற்றபெரி யோர்கள்ஒலி மார்கள்அணி
அணியாக நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத்திட்டமெய் ஞானிகள்
அனைந்தருகு நிற்பர் கோடி
மக்கநகராளும் முஹம்மது ரசூல்தந்த
மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும் உம்
மகிமை சொல் வாயுமுண்டோ
தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!
தயையைவைத் தென்னையாள் சற்குணங்குடி
சாகுல் ஹமீத் அரசரே!'

நாளை மகுஷரில் நரக வாயிலில் நின்று இபுலீசை நொந்துக்கொள்ளும் நிலை நேராதிருக்க வேண்டுமெனில் கலி(குறை, அதர்மம்) தீரவேண்டும், கருத்தில் இபுலீசின் வலி தீரவேண்டுமெனில்-மறுமையில் நலம் சேரவேண்டுமெனில் துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தில் வாழும் நாகை துரையவர்களை நாம் என்னாளும் உயிர் துணையாகக் கொண்டாடிடுவோம். அவர்களை இயக்கிவைத்த இலட்சியம் நம்மையும் இயக்கட்டும்; நாமும் புனிதம் பெறுவோம் என சவ்வாது புலவர் பாடுகிறார்.

'கலிதீர வேண்டும் கருத்தில் இபுலீஸ்
வலிதீர வேண்டுமென வந்தால்-ஒலியான
நாகைத் துரையார்எந் நாளும் உயிர்துணையார்
நாகைத் துறையார் நமக்கு.'

இப்படி புலவர்களும், புரவலர்களும், பாமரர்களும் போற்றிப் புகழும் நாகூர் நாயகத்தை தரிசிப்பதற்காக நாயகன் தன் நாயகியுடன் செல்கிறார். அது கந்தூரி காலம், அப்போதுதான் இருப்புப் பாதைப் போடப்பட்டிருக்கிறது, எனவே புகை வண்டியில் செல்கிறார்கள். பயணம் செய்வது வேறு அந்த பயணத்தின் சுவையை அனுவித்துக்கொண்டு செல்வது வேறு. பயணத்தை சுவைப்பதென்றால் ஒன்று கப்பல் பயணமாக இருக்க வேண்டும் அல்லது ரயில் பயணமாக இருக்கவேண்டும். இரண்டுமே இரு வேறு வகையான இன்பத்தைத் தரக்கூடியது. அலைகடலில் அசைந்து செல்லும்போது கூடவே நம்முடைய அசைவும் ஒருவித மயக்கத்தைத் தரவல்லது; நான்கு திசைகளிலும் எங்கு பார்த்தாலும் தண்ணீர், அது திகிலை ஊட்டும்; பெரிய பெரிய மீன்கள் செல்லும் காட்சி, அதுவும் டால்ஃபின்கள் கூட்டமாக சென்றால் ஒரு கல்யாண ஊர்வலமோ! என்ற தோற்றத்தை அளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆனால் ரயில் பயணம் வேறு, அதன் சுவையை புலவர் பெருமானே சொல்கிறார், அவர் கொடுத்திருக்கும் தலைப்போ 'நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்து'. தலைப்பிலிருந்தே தெரிகிறது புலவர் கோமான் பயணத்தை மிக்க இன்பத்துடன் ஒயிலாக அனுபவித்திருக்கிறார் என்று. அவர் படைத்துள்ள விருந்தை நாமும் சுவைப்போமா?

'மேனகை ரம்பைமின் மானே - நாகை
மாநகர் பார்ப்போம் வா தேனே'


என நாயகன் நாயகியை அழைத்துக்கொண்டு ரயில் நிலயத்திற்கு வந்து டிக்கட் எடுக்கின்றர். சற்று நேரத்தில் ரயிலும் வருகிறது. ரயில் வருவது அச்சத்தைத் தருகிறதாம்; நெளிந்து நெளிந்து வருவது காட்டு மரவட்டை ஊர்ந்து வருவதுபோல் காட்சி அளிக்கிறதாம்; நூற்றுக்கணக்கான அதன் சக்கரங்கள் மரவட்டையின் கால்கள் போலுள்ளனவாம்; பாலைவனத்து கொள்ளிவாய் பிசாசு போல ஊளையிட்டுக்கொண்டு வருகிறதாம்; காதைத் துளைக்கும் கோடை இடி போல் அதன் 'கடபடா' ஒலி அச்சத்தைத் தருகிறதாம்; எனவே அஞ்சாமல் இருக்க தலைவியை தேற்றும் பாணியை பார்ப்போம்....

'கானுறு மட்டையின் கால்கள் எனவுருள்
ககனந்தூர்தல்இஞ் சீனே-கொடுங்
கனன்மலிந்திடும் பாலையின் கொள்ளிவாய்க்
கணத்தின் மூச்சிதோ தானே-கோடை
வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு
மயங்காதே மைடியர் மானே'


உவமான உவமேயங்களைக் கையாள்வதில் புலவர் பெருமக்களை விஞ்ச யாராலும் முடியாது. பெண்ணின் முகத்தை வெண்நிலவுக்கு ஒப்பிடும் புலவர்கள் அச்சம் தரக்கூடியதை பேய்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிப்பர். அரேபிய பாலைவனத்தின் கொடுமையைச் சித்தரிக்கும் பொறுப்பு உமறு புலவருக்கு வந்தபோது பாலை நிலத்து மரங்களை பேய்களாகவும், மரப்பொந்துக்களை பேய்களின் வாய்களாகவும் அவ்வாய்களிலிருந்து வெளிவருவதை பாலைவனப் பாம்புகளாகவும் காட்டி சித்தரிக்கிறார்.

'வற்றிப்பேய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே'

அதுபோன்றே அண்ணாவியார் புலவர் அவர்களும் ரயில் இஞ்சின் வருகைக்கு பாலைவனத்துக் கொள்ளிவாய்ப் பிசாசு என்ற உவமானத்தைக் கையாண்டிருக்கிறார்.

ரயிலும் வந்தது, தலைவன் தலைவிக்குக் கிடைத்ததோ முதல் வகுப்புப் பெட்டி, ஆனால் தலைவிகோ எப்போது சென்றடைவோம் என மனதுக்குள் ஓர் தவிப்பு; அதை தலைவன் தீர்த்து வைப்பதை புலவர் பெருமான் தீட்டுகிறார் கவிதையில்.

'பஸ்டுக் கிளாஸான வண்டியும் வாய்த்தது
மானே செல்லிநகர் ஸ்டேஷன் கழித்தது
மயிர் சூடிய
மலர் வாடுமுன்
ஒயில் நாகையில்
ரயில் ஏகிடும்'


அதிவீர ராமப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரயில் நாகூரை வந்தடைவதற்குள் எத்தனை ஊர்களில் ஸ்டேஷன்கள் இருக்கின்றன, எந்தெந்த ஆறுகள் குறுக்கிடுகின்றன என்று வரிசைப் படுத்தும் புலவர் சில முக்கிய ஊர்களின் சிறப்புகளையும் சொல்கிறார். திருவாரூர் ஜங்ஷனுக்குப் பிறகு அடியக்கமங்களம், கூத்தூர், கீவலூர், சிக்கல், நாகப்பட்டினம் எனக் குறிப்பிடும் புலவர் வெளிப்பாளையம் நாகூருக்குமிடையில் காடம்பாடி என்றொரு ஸ்டேஷன் இருந்ததை(இப்போதில்லை) இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. அதுபோல் சிக்கலுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அந்தனப்பேட்டை இருக்கிறது, அதை காணமுடியவில்லை,
ஆனால் அது மஞ்சக்கொல்லை வாழ்ந்த முஸ்லிம் தனவந்தர்களின் கடும் முயற்சியால் பின்னால் வந்தது.

நன்நாகை வந்தடையும் நாயகனும் நாயகியும் அங்கிருந்து புறப்படும் கந்தூரி ஊர்வலத்தைப் பார்வை இடுகின்றர். இப்போது நடப்பது போலவே அப்போதும் சிறப்பாக நடந்திருக்கிறது. கொடியூர்வலத்தில் செட்டிப் பல்லக்கு என்ற ஒரு அலங்கார வண்டி சற்றுத் தாமதமாகத் தனியே வரும், அது ஒரு தனிப்பட்ட செட்டியார் குடும்பத்தால் செய்யப்படுகிறது, எவ்வளவு காலமாக நடத்திவருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஒருவேளை அந்த குடும்பத்தாருக்குக்கூட தெரியுமா என்பது சந்தேகம், அது நூறு வருடங்களுக்கு மேலாக நடத்திவருகின்றனர் என்பதை பாட்டின்மூலம் அறியமுடிகிறது.

'கோட்டுச் சிமிழ்க்கிண்ண மாமுலை மாதே
கொடியலங் காரத்தின் வருக்கம்- வெகு
கூட்டத்து டன்செட்டிப் பல்லக்கு வேடிக்கை
குஞ்சரத் திரளின் நெருக்கம்- புகை
போட்டுகளுங் கப்பற்சீனக் கண்ணாடிப்
பொழுதை யளக்குறார் சுருக்கம்- ரத்ன
ஷேட்டுத் தெருவெங்குங் கோலியும் நாகூரு
செல்வழியை நோக்கிப் போவதையும் பாரு'


கும்பினிகளின் ஆட்சிக் காலத்தில் நாகையும் தரங்கம்பாடியும் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்தது, இடையிலுள்ள காரைக்கால் பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்தது. எனவே நாகைக்கும் நாகூருக்கும் பலர் வந்து போய்க் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாகூருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்ததாகப் புலவர் பெருமான் குறிப்பிடுகிறார் இங்கே..

'பாரிசு மக்கா மதிநா றூம் மிசுறு
பைத்துல் முக்கத்திசு வாசி- சீனா
பங்காளங் கொச்சி மலையாள மும்டில்லி
பம்பாய் மைசூர் மதராசி- என்னும்

ஊர்பல வாசிகள் வந்து ஹத்தம் மௌ
லூதுக ளோதியுங் காசி- இதோ
உண்டியல் போடுங் குடங்கள் நிறைந்தங்கு
ஓய்வில்லை பார்மக ராசி- ஒலி

வாரிசு செய்யிது செய்குமார் சடையர்
வாணருந் தாயிராக் கூட்டமும் மிடியர்
சாரிசன் வில்லை வெள்ளித் தடிக் காரியர்

சனமுந் தரி
சனமும் விமோ
சனமும் பெறத்
தினமும் வரும்'


சிந்து இலக்கியம் நாட்டுப்புற இலக்கிய வகையை சார்ந்ததாக இருப்பதால் அப்பகுதி மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவைகளை எடுத்துக்கூறுகிறது. தவிர பெண்கள் மல்லிகை, முல்லை, சண்பகம், தாமரை, ரோசா முதலிய மலர்களை சூடும் செய்தி நமக்கு கிடைக்கிறது. மேலும் நெற்றியில் பதியும் நெற்றிச் சுட்டி, நெற்றியை சுற்றி பூட்டப்படும் வட்டவணி, தலையில் இருபுறமும் சூட்டும் பிறைச் சுட்டிகள், காதுக் கொம்பிலிருந்து கொண்டை வரை மாட்டப்படும் மயிர் மாட்டி, இன்றைய வாளியரசலை போன்ற அணிகலன்கள், கொடிபோன்ற காதணியான வள்ளை வல்லிடை, ஒன்னப்பூ, ஜிமிக்கி, தொங்கல், மூக்கில் சிறு வளையம்போல் அணியும் நத்து, புல்லாக்கு, கழுத்தில் அணியும் பதக்கம், கண்டிகை, முத்துமாலை, பூசாந்தரத் தாலி, புயத்தில் பூட்டும் கடகம், மணிக்கட்டி அணியும் கங்கணம், கைவளையல்கள், மோதிரம், கால்களில் அணியப்படும் காப்பு போன்ற தண்டை, ஒலிக்கும் சிலம்பு, பொன்னால் செய்யப்பட்ட கொலுசு, கால் விரலில் அணியும் சல்லா எனப்படும் மெட்டி ஆகிய நகைகளை தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கடற்கரை நகரங்களில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. அவைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள் இன்றும் நம் பெண்கள் அணிகின்றனர்.

கந்தூரி விழா எப்படி நடக்கிறது, என்னென்ன வேடிக்கைகள் இருக்கின்றன, எத்தனை வகையான கனிவர்க்கங்கள் முதல் உணவு வகைகள் வரை கிடைக்கின்றன என்பதை புலவரவர்கள் தவறாமல் குறிப்பிடுவது ஒரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித்தெளித்து படிப்பவர்களைப் பரவசமூட்டுவது மற்றொரு சிறப்பு.

அறுபத்தாறு பாடல்கள் கொண்ட இந்நூல் நாகூர் மீரான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் அவர்கள் தர்பாரில் நற்றமிழ் அறிஞர் குலாம் காதிறு நாவலர் முன்னிலையில் 1902 ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது.

'காரண நாயகர் தர்ஹாமகாவித்வான்
கற்றோர் துதிக்கும் உஸ்தாது- குலாம்
காதிறு நாவலர் தரிசனத் தில்நம்
கவியறங் கேற்று மாது- புகழ்

தாரணி மாணிக்கப் பூர்ஹஸன் குத்தூசு
சந்ததி ஷாஹுல் ஹமீது- அவாள்
சன்னி தானத்தினும் ஈசுபொலி மக்காம்
சியாரத் தோதி வா இப்போது- நித்தம்

சீரணித் திலங்கும் செய்யது முகம்மது
செந்தமிழ் பாடியும் வந்தோம் ரயில்மீது
பேரணி யூர்அதி வீர ராமன் இது

பிந்தா தர
விந்தந்திரு
எந்தன்மனை
வந்தேயிரு'


என்று புலவர் பெருமானே கூறி தம்முடைய 'நாகூர் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்தை' முடிக்கிறார். அன்னவர்களைப் பாராட்டி....

'இனம்பெருகும் படைப்(பு) எவைக்குங் கருவானார்
குலமணியாய் இலங்கு தாய
மனம்பெருகும் ஒலிகள்பிரான் அமர்நாகைப்
பதியேகி வருமோர் சிந்தாய்க்
கனம்பெருகு பெரும்புலமைப் பரம்பரையிற்
பெயர்தாங்கிக் கல்வி ஆய்ந்த
தனம்பெருகு செல்லிநகர் செய்யிது
முகம்மதென்பார் சாற்றன் மாதோ'

என்று அதிவீரராமப் பட்டினம் லெ.மு. முஹையிதீன் பக்கீர் அவர்களும்

'செந்தமிழில் வழிநடையாஞ் சிந்தெனவோர்
பூமாலை திரட்டி வாயால்
தந்தவலான் அவனெவனென் உசாத்துணைவன்
நல்லன்பன் தன்மைக் கேற்பப்
பந்தமுளான் செய்துமுகம் மதுவெனும்பே
ராகியருள் பன்னும் வாக்கிற்
சந்தமுளான் செல்லிநகர் சொந்தமுளான்
யாவர்மெச்சுந் தகைமை யோனே'

என்று இராமநாதபுரம் முத்தண்ண பிள்ளை அவர்களும்

'பூதலமெ வாம்புகழும் ஹமீதொலிசந்
நிதிகாணப் புகழ்ந்து பேசிக்
காதலனுங் காரிகையும் ரெயிலேறிப்
பலசிறப்புங் காட்டி வந்த
தீதகலும் வழிச்சிந்தை யெடுத்துரைத்தான்
செல்லிநகர் சீர்பெற் றோங்கு
மாதவன்செய் யிதுமுகம்ம துரைதெரிந்த
வானவரு மகிழ்கொள் வாரே'

என்று இளையான்குடி பண்டிதம் முகம்மது அபூபக்கர் அவர்களும்

'தரார் வளர்நாகை ஷாஹுல்ஹமீ தண்ணல்மேற்
பேரார் நடைச்சிந்து பேசினார்- சீராருஞ்
செல்லிநகர் ஓங்குகவி செய்யித் முகம்மதெனும்
வல்லபுகழ் சேர்நா வலர்'

என்று ப.கா. பண்டிதம் செய்யிது அப்துல் காதிர் அவர்களும்

'நவரத்தி னக்கவிஞர் நற்குலம தோங்கும்
தவரத்ன மாகவந்த தக்கோர் - புவனத்திற்
செய்யதிரு நாகைவழிச் சிந்தினிய தாய்விளம்பும்
செய்யித் முகம்மதெனுஞ் சேய்'

என்று செல்லிநகர் அ.ரு. கந்தசாமி உபாத்தியாயர் அவர்களும் சாற்று கவிகள் பாடி பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நாம் எப்படி பெருமைப் படுத்தமுடியும்?

'இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய
ஆலிம்களெல்லாம்
கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கோ
கற்றதில் ஐயம்
கல்லாததில் தெளிவு'


குறிப்பு:

அண்ணாவியார் புலவர்களைப் பற்றி எழுதுவதற்கு ஏதுவாக குறிப்புக்களும், செய்திகளும், நாகூர் புகைரதச் சிந்தும் தந்துதவிய அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித் அவர்களுக்கும், அப்புத்தகத்தின் தோரணவாயில் எழுதிய புலவர் அதிரைப் புலவர் அ. அஹமது பஷீர் எம்.ஏ.,பி.எட் அவர்களுக்கும், ஆய்வு முன்னுரை எழுதிய பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கும், 'இஸ்லாமிய ஆய்வு இலக்கியத் திரட்டு' எழுதிய அதிரை தாஹா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர இரண்டாம் செய்யது முகம்மது அண்ணாவியாரின் இளவல் ஹபீபு முகம்மது அண்ணாவியார் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன் கிடைத்ததும் தொடரப்படும். - ஹமீது ஜாஃபர்