Monday, August 24, 2009

தண்டனை.

ஹமீது ஜாஃபர்




"திட்டம்போட்டுத் திருடரக் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதை

சட்டம்போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது."

-பட்டுக்கோட்டையார்


இந்தியத் திருநாட்டில் நாற்பத்திரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒருவர் கொல்லப்படுகிறார், அதில் ஆறு சதவீதம் மட்டுமே விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. - (செய்தி: தினமணி, 30-11-2004.)


குற்றங்கள் நிகழக்கூடாது என்பது எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று. குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டிக்கப்படவேண்டும். குற்றங்கள் நிகழ்வதை அடியோடு ஒழிக்கமுடியாது, ஆனால் கட்டுப்படுத்தமுடியும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. குற்றம் புரிவது மனித இயல்புகளில் ஒன்று, என்றாலும் இப்பொதெல்லாம் குற்றம் புரிவதே வாழ்க்கையாகி பாவபுண்ணியமெல்லாம் வெறும் பிதற்றல், பைத்தியக்காரத் தனம் என்றாகிவிட்டது.


குற்றம் செய்யும் ஒருவர், அக்குற்றத்தை அவர்தான் செய்தார் என்று உறுதியாகிவிட்டபிறகு தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சட்டம் எப்போதுமே உறுதியாக இருந்துவருகிறது. நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதும் அதன் உறுதியானக் கொள்கை. ஆனால் தான் அளிக்கும் தண்டனையினால் குற்ற வாளிமட்டுமல்ல குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்களும் பயப்படவேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. மாறாக குற்றம் செய்தவர் திருந்த வாய்ப்பளிக்கவேண்டும் என்ற இரக்க சிந்தனையை தன்னுள் வைத்திருக்கிறது. இதனால் அது நினைக்கும் அளவுக்கு குற்றவாளிகள் திருந்தவுமில்லை, குற்றங்கள் குறையவுமில்லை. இந்த சிந்தனையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பல குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.


இப்படி ஒரு சாரார் என்றால் மறுசாரார் ஒரே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்து மீண்டும் மீண்டும் அதே தண்டனையை அனுபவித்து, அதை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இந்த வாழ்க்கையைவிட அந்த(தண்டனை) வாழ்க்கை மேலானதாக இருக்கிறது.


சுருங்கச் சொன்னால் நாம் உருவாக்கிய சட்டங்கள் பல திருத்தங்கள் செய்தபிறகும் தன் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இது ஒரு நாட்டுக்குமட்டுமல்ல உலகலவில் இந்த அவல நிலை நிலவிவருகிறது. இன்னிலையில்...


எக்காலத்தும் யாராலும் மாற்றமுடியாத இறைச் சட்டத்தைப் பற்றி அறியாமல், இஸ்லாத்தில் கையாளப்படுகின்ற ஷரீஅத் தண்டனைகளை தற்காலத்திலும் கையாள வேண்டுமா? இது மனிதாபிமானமில்லாததுமட்டுமல்ல மிருகத்தனதாயிற்றே, ஐந்து ரூபாய்க்காக ஒரு திருடனின் கையை துண்டிக்கமுடியுமா? விபச்சாரத்திற்காக கல்லெறிந்து கொல்ல வேண்டுமா? என்று கடந்த நூற்றாண்டிலிருந்தே உலகளவில் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது அவசியமா இல்லையா என்று தீர்மாணிக்குமுன் அவன் இழைத்த குற்றத்துக்கு அவன் எந்த அளவுக்கு பொறுப்பாளியாகின்றான் என்பதை தீர்மானிப்பதே மிக முக்கியமான பிரச்சினையாகும். இப்பிரச்சினைப் பற்றி அதாவது குற்றமும் தண்டனையும் பற்றிய பிரச்சினையில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் தாறுமாறாகத் தண்டனைகளை விதிக்கவுமில்லை, ஈவிரக்கமின்றி அவற்றை நிறைவேற்றவுமில்லை. இத்துறையில் இஸ்லாம் கடைபிடிக்கும் கொள்கையை கூர்ந்து பார்க்கவேண்டும்.


இஸ்லாம் நீதியின் துலாக்கோலைச் சரியாகப்பிடித்துக் குற்றச்செயலுக்கு வழிகோலிய அனைத்து சந்தர்ப்பசூழ்நிலைகளையும் முற்றிலுமாக சீர்தூக்கிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு குற்றச்செயலை ஆராயும்போது அது ஒரே பார்வையில் இரண்டு அம்சங்களை நோக்குகிறது. ஒன்று குற்றவாளியின் நிலை, மற்றொன்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த சமூகத்தின் நிலை. இவ்விரண்டையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் நியாயமான தண்டனையை விதிக்கிறது. இஸ்லாத்தில் விதிக்கப்படும் தண்டனைகளை மேலெழுந்தவாரியாகவோ போதியளவு ஆழமாக ஆராயாமலோ நோக்கினால் அவை பயங்கரமானவையாகவும் கொடூரமானதாகவும் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் குற்றச்சாட்டு நியாமற்றதாகவோ குற்றவாளி அக்குற்றத்தைப் புரிவதற்கு எவ்வகையிலும் நிர்பந்திக்கப்படவில்லையெனவோ திட்டவட்டமாக முடிவு செய்யப்படாவிட்டால் இஸ்லாம் அத்தண்டனையை நிறைவேற்றுவதில்லை.


திருடனின் கையை துண்டிக்கவேண்டுமென்பது இஸ்லாத்தின் தண்டனையாகும். ஆனால் திருடனுக்குத் திருட்டைச் செய்யத்தூண்டியது அவனுடைய பசி, வேறு வழியில்லை என்ற காரணம் சிறிய அளவில் உண்டானால்கூட அவனுக்குத் தண்டனை அளிக்கப்படக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.


இஸ்லாத்தின் தலை சிறந்த ஆட்சியாளரும் ஷரீஅத் சட்டங்களை நிறைவேற்றுவதில் மிகக்கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றவருமான இரண்டாம் கலீஃபா ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஹாதிப் இப்னு அலீ பால்த்ஆவிடம் பணிபுரிந்த சில சிறுவர்கள் வேறொருவரின் பெண் ஒட்டகையைத் திருடி புசித்துவிட்டார்கள். இது ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது, தாங்கள் திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். கைகளை துண்டிக்குமாறு தீர்ப்பளிக்குமுன் காரணத்தை அராய்ந்து, 'இறைவன் மீது ஆணையாக, இப்பையன்களை வேலைக்கமர்த்தி அவர்களைப் பட்டினிப்போட்டதன் காரணமாக அவர்கள் ஒட்டகையைத் திருடிப்புசிக்க நீர் காரணமாயிருந்ததை நான் அறிந்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்களின் கைகளைத் துண்டிக்குமாறு தீர்ப்பளித்திருப்பேன்' எனக்கூறி திருடப்பட்ட ஒட்டகையின் விலையைப் போல் இருமடங்கு விலையை ஒட்டக உரிமையாளருக்குக் கொடுக்குமாறு அச்சிறுவர்களின் எஜமானருக்கு தீர்ப்பளித்துவிட்டு சிறுவர்களை விடுதலைச் செய்தார்கள். மேலும் அவர்கள் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டபஞ்சத்தின்போது பசியின் காரணமாக மக்கள் திருடக்கூடும் என்ற நிலை ஏற்பட்டிருந்ததால் அப்போது திருட்டுக்குரிய தண்டனையை நிறைவேற்றாது விட்டுவிட்டார்கள்.


இது, தண்டனை வழங்கப்படுவதற்குமுன் காரண காரியத்தை இஸ்லாம் எப்படி ஆராய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.


இதெல்லாம் அந்த காலத்திற்கு வேண்டுமானல் பொருந்தும், இன்றைய முன்னேற்ற உலகிற்கு உதவாது என்று சிலர் வாதிடுகிறார்கள். சிலரென்ன பலருடைய கருத்தும் கண்ணோட்டமும் அதுவாகத்தானிருக்கிறது.


இந்தியா சுதந்திரமுள்ள குடியரசு நாடு. பொது இடங்களில் துப்புவது குற்றம், 'பொது இடங்களில் துப்பாதே, மீறினால் ரூ.500/ அபராதம்' என்று எச்சரிக்கைப் பலகை வைத்தால், அந்த பலகையைப்பார்த்து துப்புவார்கள். இது சிலரின் இயல்பு. பிடிபட்டால், 'சார் சார் தெரியாமல் துப்பிட்டேன், அடுத்தவாட்டி துப்பமாட்டேன், வேணும்னா நூறோ எறநூறோ வாங்கிக்கிட்டு ஆளைவிடுங்க' என்று சொல்வார்கள். இதே எச்சரிக்கை சிங்கப்பூரில் இருக்கிறது. அதுவும் குடியரசு நாடுதான். அங்கே துப்புவார்களா? எச்சிலே வராது! காரணம் சட்டத்தின் வேகம். சுருங்கச் சொன்னால் மக்கள் பயப்படுவது சட்டம் என்ற புத்தகத்திற்கல்ல, அதன் கடுமையான தாக்குதலுக்கு.


கஞ்சா, பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருள்களை வைத்திருந்தாலோ அல்லது கடத்தல் செய்தாலோ சவுதி அரேபியாவைப் பொருத்தவரை பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்வது அங்குள்ள தண்டனை. இத்தகையத் தண்டனைகளால் குற்றங்களின் புள்ளிவிபரங்களை நோக்கினால் உண்மை புரியும்.


விபச்சாரம் செய்யும் ஆணையும் பெண்ணையும் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற தண்டனையை இஸ்லாம் வித்துள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகமானவர்களாகவும் அக்குற்றம் புரிவதை நேரடியாகக்கண்ட உண்மையான நான்கு சாட்சிகள் இல்லாமலிருந்தால் விபச்சாரத்திற்குரிய அத்தண்டனை அளிக்க அனுமதி இல்லை. அதாவது விவாகமான இருவர் வெட்கமற்ற முறையில் பகிரங்கமாக அக்குற்றத்தைப் புரிந்தால் மாத்திரமே மேற்படித் தண்டனை அளிக்கப்படவேண்டும்.


இஸ்லாம் பாலியல் ஊக்கத்தின் வலிமையையும் அதன் அவாவையும் மதிக்கின்றது. ஆனால் அவ்வூக்கத்தை திருமண பந்தத்தின் மூலம் சட்டப்பூர்வமாகப் பூர்த்தி செய்துக்கொள்வதையே விரும்புகிறது. இதற்காக இளம்வயதில் திருமணம் செய்துக்கொள்வதை அனுமதிக்கிறது. திருமணம் செய்துக்கொள்ள வசதியற்றவர்களுக்கு "பைத்துல்மால்" என்ற பொது நிதியிலிருந்து நிதியுதவி வழங்குமாறு உத்திரவிடுகிறது. இச்சைகளைத் தூண்டக்கூடிய சகல காரணிகளையும் (ஹராம் என்று) வெறுத்தொதுக்கியுள்ளது. உடல் வலிமையும் வசதியுமிருந்தால் நான்கு திருமணங்கள் செய்துக்கொள்ள அனுமதிக்கும் அதே நேரத்தில் ஒவ்வொரு மனைவியிடமும் நீதமாக நடந்துக்கொள்ளுங்கள் என்ற உத்திரவும் இடுகிறது. குற்றம் புரிவதற்கான தூண்டுதல்கள் அனைத்தியும் ஒழிப்பதற்கான வழிமுறைகளை தந்தபின்னும் ஒருவன் பகிரங்கமாக விபச்சாரம் செய்யுமளவுக்கு மிருகத்தன்மைக்கு தாழ்ந்துவிட்டாலொழிய அக்குற்றவாளிக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை விதிப்பதற்கு இஸ்லாம் அவசரப்படுவதில்லை.


இன்று நிலவும் சமூக, பொருளாதார ஒழுக்க சீர்கேட்டினாலும் பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய மீடியாக்கள் போன்றவற்றினால் வழி தவறிப்போக வாய்ப்புள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். அதனால் இஸ்லாம் தண்டனை வழங்குமுன் குற்றச் செயல்களுக்கு இழுத்துச்செல்கின்ற வழிமுறைகளை தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.


நிரபராதிகளுக்குத் தண்டனை வழங்கக்கூடாது என்பதில் இஸ்லாம் மிக எச்சரிக்கையாகவே இருக்கிறது. களங்கமற்ற பெண்மீது அவதூறு வழங்கி அது நிருபிக்கப்படவில்லையானால் அவதூறு பேசியவர்கள் மீது 80 கசையடி கொடுக்க வலியுறுத்துகிறது. தவிர அத்தகையவர்களின் சாட்சியங்களை எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறுகிறது.


இத்தகைய தண்டனைகள் அளிப்பதின் நோக்கமே இதுபோன்ற குற்றங்கள் நிகழக்கூடாது என்பதற்காகத்தான். (ஆனால் இதைவிட மிக மோசமான தண்டனை ஒன்று மிக அமைதியாக உலகமுழுவதும் நடந்துகொண்டிருக்கிறதே? ஆம்! AIDS என்ற தண்டனை. அது இருவரைமட்டும் தாக்கவில்லை தொடர்புள்ளவர்கள் அனைவரும் அனுபவிக்கிறார்களே! உறை போட்டுக்கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்களே ஒழிய 'விபச்சாரம் ' செய்யாதீர்கள் என்று சொல்ல வில்லையே!). கொலைக் குற்றங்களுக்காகக் கொடுக்கப்படும் மரண தண்டனையை மறைவாக கொடுக்காமல் பொதுமக்கள் முன்னிலையில் கொடுங்கள், குற்றங்களின் எண்ணிக்கை குறைவதை நீங்களே பார்க்கலாம்.


உதாரணமாக கூலிப்படைகளை வைத்து சிலரைக் கொலை செய்கிறார்கள். கொலையாளிகளுக்கும் கொல்லப்படுவர்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் கிடையாது, முன்பின் விரோதமும் கிடையாது, சந்தர்ப்பவசமாகக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருந்தும் கொடூரமான முறையில் கொலை செய்கிறார்கள். எதற்காக ? வெறும் கூலிப்பணம்! ஒரு சில லட்சம்! ஒருவரின் உயிரைப் பற்றியோ அல்லது அவதிப்படப்போகும் குடும்பத்தைப் பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அத்தகையவர்களை விசாரித்து ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை கொடுப்பதைவிட பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்யுங்கள். அதுவும், எப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதோ காலதாமதப் படுத்தாமல் விரைவாக தண்டனையை நிறைவேற்றுங்கள். மற்ற குண்டர்கள் எங்கே போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, தண்டணைகள் அளிக்கும் விஷயத்தில் உற்றார், உறவினர், அரசியல் தலைவர், சமூக அமைப்பின் தலைவர் என்ற பாரபட்சம் காட்டக்கூடாது என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் உறுதிப்பட்டை கடைபிடிக்கவும் வேண்டும்.


அதேபோல் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கப்படுத்தும் காவலர்களை, சில அமைப்புகள் அல்லது அந்த சமூகம் போர்கொடி தூக்கியதன்பின் தற்கால பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இதனால் குற்றம் செய்த அவர்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாவதில்ல, ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடல்லாமல் சிலர் தற்கொலைகூட செய்துகொள்கின்றர். அதனால் அவருடைய குடும்பத்தவர் எந்த அளவுக்கு பாக்திக்கப்படுகின்றனர் என்று சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


மோசடி, திருட்டுக் குற்றம் போன்றவைகள் மேம்போக்காகப் பார்த்தால் சாதாரணமான குற்றமாகத் தெரியலாம். ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களின் கனவுகள், கற்பனைகள், திட்டங்கள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப்போய் வாழ்க்கையின் போக்கே திசைமாறி விபரீத விளைவுகளுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள் என்பதை கண்கூடாகக் காணும்போது அவைகள் எவ்வளவு கொடுமையானது என்பது புரியும்.


'திருட்டுத் தொழில் உள்பட பயங்கரமான குற்றங்களுக்கு திருக்குர்ஆன் வழங்கும் தண்டனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் உலகமே குற்றமற்று வாழமுடியும்.' என்று சட்ட நிபுணர் ஸர் சி.பி.ராமசாமி ஐயர் அவர்களும், 'சாதாரண மனிதனிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் வரை இஸ்லாமிய சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆழ்ந்த அறிவு, நுட்பம், அபூர்வமான மிகச் சிறந்த சட்டவியல் ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டு உலகத்தில் இதுவரை காணப்படாத சிறப்புமிகு சட்டமாக இஸ்லாமிய சட்டம் திகழ்கிறது.' என்று எட்மண்டு பர்க் என்ற அறிஞரும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றி கூறுகிறார்கள்.


எங்கெல்லாம் இஸ்லாமிய ஷரீஅத் குற்றவியல் தண்டனை செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் குற்றங்கள் குறைவாகவே நிகழ்கின்றன. எனவே குற்றங்கள் குறையவேண்டுமானல் ஷரீஅத் குற்றவியல் தண்டனை அமுல் படுத்துவது சாலச் சிறந்ததாகும். இதை சட்டத்துறை நிபுணர்களும், மனிதநேய அமைப்புகளும், அரசுகளும் 'இஸ்லாம்' என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் பொதுவான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.


---oo0oo---

25-2-2005 திண்ணை

அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்



ஹமீது ஜாஃபர்



வரலாற்று நிகழ்வுகளில் கண்டறியப்படும் உண்மைகள் இஸ்லாத்துக்கு ஆதரவாக இருந்தால் அது கட்டுக்கதை; சொன்னவர்கள் இடது சாரிகள், தாலிபான்கள், ஸ்டாலினிஸ்டுக்கள் etc., etc., பாதமாக இருந்தால் அவைகளே உண்மை; சொன்னவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள். இது ஆர் எஸ் எஸ் காரர்களின் ஓயாத ஒப்பாரி. இஸ்லாத்தைப் பற்றி தாக்கி எழுதினால் அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்; அதுவும் ஒரு முஸ்லிம் எழுதினால் இவர்களுக்கு அல்வா தின்பது மாதிரி. மார்க்க அறிஞர்கள் சிலர் செய்த தவறை சுட்டிக்காட்டி 'இவர்கள் அறிவீனர்கள்' என்ற தலைப்பில் எழுதியதை தன் வலைப்பக்கத்தில் இட்டு மகிழ்ச்சியடைந்த மஹா புருஷர் திரு அரவிந்தன் நீலகண்டன். இவரால் எப்படி நடுநிலையாகப் பார்க்கமுடியும் ? முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதும் எல்லோருமே இடதுசாரிகள்தான் Nationaly and Internationaly. நல்ல Concept!


மொகலாய மன்னர்களில் அவுரங்கசீப்பை வம்புக்கு இழுக்காவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராது. பாவம் அவுரங்கசீப் செய்த ஒரே குற்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது. புனிதமான ஆலயத்தில் பகவான் முன்பு மகா புனிதமான காரியம் நடந்தேறியுள்ளது.. அது ஒன்றும் பிசகல்ல! வர்ணாசிரமத்தில் பிராமணர் எதுவும் செய்யலாம், ராணியை கைங்காரியம் செய்தாலும் புனிதமானதுதான். ஏன்? மனு தர்மப்படி அவாள் பிரம்மாவின் வாயிலிருந்து படைக்கப்பட்டவாள் ஆச்சே! அதனால்தான் பிரம்மானந்தாக்கள் பிரம்மாநந்தமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.


இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் மதவெறியர்கள் அதிலும் குறிப்பாக அவுரங்கசீப் மதவெறியன்; இந்துக்களை கொடுமைப் படுத்தினான்; இந்து கோயில்களை இடித்தான்; ஜெஸ்யா வரி விதித்து இந்து மக்களை கொடுமைக்கு ஆளாக்கினான் என்றெல்லாம் இந்துத்துவாக்களின் குற்றச்சாட்டு.


ஐயா, உங்கள் கூற்றுபடி அவர்கள் மதவெறியர்களாக இருந்திருந்தால், அவர்களின் 1000 ஆண்டுகால ஆட்சியில் இந்தியத் திருநாட்டில் ஒரு அரவிந்த சாமியையோ ஒர் நீலகண்ட சாஸ்திரிகளையோ காணமுடியாது மாறாக ஒரு அப்துல் காதரையும் ஒரு அஹமது ஹஸனையும்தான் காண முடியும். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பண்பாட்டைக் கட்டிக்காத்ததினால்தான் இன்று வாய் கிழியப் பேசுகிறீர்கள்.


நீங்கள் சொல்வதுபோல் அவ்ரங்கசீப் மதவெறியன்தான். எப்படிப்பட்ட மதவெறியன் என்று பார்ப்போம். ஆனால் எங்கள் பாஷையில் அதற்கு மதஇனக்கம் என்று சொல்வார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் அவருக்கு மனத்ததால் மத நெறியாளர் என்றுகூட சொல்லலாம்.


1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள்' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.


சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது. இதுவும் இடதுசாரி வரலாறாக இருக்குமோ?


திரு P. N. பாண்டே (தாலிபானிஸ்ட்?) அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.


மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும்? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது

மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-


Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti... பேராசிரியர் எந்தசாரி என்பது நமக்கு விளங்காத விஷயம்!


கோயிலுக்கு மானியம் வழங்கும் மன்னன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைமட்டும் ஏன் இடிக்கவேண்டும்? அதை இடித்து பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்தான் என்று வரலாற்றில் காணப்படவில்லை; இல்லை அணு ஆயுதம் chemical weapon அப்படி இப்படி என்று பொய்யை உலகிற்கு சொல்லி புஷ் மஹாராஜா ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போல் அங்கு வைரங்களும் வைடூரியங்களும் நிறைந்துகிடக்கின்றன என்ற பேராசையில் கோயிலை இடித்தான் என்றும் வரலாறு இல்லை. பின் ஏன் இடிக்கவேண்டும்? தலைமைப் பூசாரி திருவாளர் பண்டிட் மகந்த்ஜி கட்ச் ராணியை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்று பரமபதம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதை பூசிமெழுகினால் எப்படி? ஆனால் ஒரு திருத்தம், பூசாரி சாரின் செயலால் கோயிலின் தூய்மைக் கெட்டுவிட்டது எனவே அங்குள்ள விக்ரகத்தை எடுத்துவிட்டு வேறு இடத்தில் வைக்குமாறு ராஜாக்கள் humbly கேட்டுக்கொண்டதால் அந்த கோயிலை இடித்துவிட்டு இப்போதிருக்கும் இடத்தில் கோயில் கட்டிக்கொடுத்தார் என்பதுதான் வரலாற்று நிகழ்வு. ஆனால் இந்த தகவலை ஆராய்ந்துச் சொன்ன மிஸ்டர் பாண்டே இடதுசாரியாச்சே! யாரோ ஊர்பேர் தெரியாத முல்லா நசுருதீன் சொன்ன கதையை நம்பியவரை நம்பி மோசம் போய்விட்டார், அவர் என்ன நம்மைப் போல் அறி வாளியா?


அவுரங்கசீப் ஆலயத்தை இடித்ததை நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் பல கோயில்கள் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளதே! அதை ஏன் நாம் கண்டுக்கொள்வதில்லை? சாசங்கன் என்ற மன்னன் குப்த கோயில்களை இடித்துத்தள்ளியிருக்கிறான் என்பது வரலாற்று உண்மை; ஹர்ஷ்பேறு என்ற மன்னன் கோயில்களை இடித்து அங்குள்ள பொன்னும் பொருளைகளையும் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அதற்கென்று தனிப்படை அமைத்து தனி மந்திரியும் அமைத்திருந்தான்; பார்மரா நாட்டு மன்னன் குஜராத்திலுள்ள சமணக்கோயில்களை இடித்து தள்ளியுள்ளான்; இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறதே! ஏன் நம்ம காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்கூட சமணக் கோயிலாக இருந்ததாக வரலாறு கூறுகிறதே!! ஆனால் இவைகள் புளுகு மூட்டைகளே, இந்து மன்னர்கள் எல்லாம் பக்திமான்கள்.


பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி'கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.


அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார். அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.


இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும்? இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.'


'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா.' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).


பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.


இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது?


எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.


வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:


ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)


அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு? ஒரு புள்ளி விபரம்:


1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.


அவுரங்கசீப்புக்கு யார் யார் எதிரி:-


சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.


மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.


காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள்' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.


மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.


ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)


காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் இந்துக்கள் மீது ஜெஸ்யா வரியை விதித்து கொடுமைப் படுத்தியதினால் 340 ஆண்டுகளுக்குப் பின் ஆர். எஸ். எஸ், சங் பரிவார் இத்யாதி இத்யாதி + அரவிந்தன் நீலகண்டன் எதிரி.


அவுரங்கசீப், தான் முடி சூட்டிய நாளிலிருந்து இறுதி நாள் வரை போராட்டங்களை சந்திக்க வேண்டியவராக இருந்தார். அவர் பதவி ஏற்றதும் இறந்ததும் போர்களத்தில். அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக 'கிஸ்ஸா யே ஆலம்கீர் ' என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.


'மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். அவை இல்லாதவரை அவுரங்கசீப் அல்ல எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.


----oo0oo----

Friday February 24, 2006 திண்ணையில் வெளிவந்தது