Thursday, August 19, 2010

தலாயில் கைராத்

அல் ஜஜூலி(ரஹ்)
(807- 870 ஹிஜிரி)






உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.

அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறுவதில்லை, நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது.

அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.

விடை............!

இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.

"காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது.

இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். வெறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது.

"அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.

துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.

இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் அல் ஜஜூலி அவர்கள் "தலாயில் கைராத்" என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.

அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது.

இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.

ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் "தலாயில் கைராத்" தை நிறைவுப் படுத்தினார்கள்.

ஒருமுறை பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. மொள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.

ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள்.

இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக தி என் சைக்லோபீடியா ஆஃப் இஸ்லாம் 1957 லீடன் பதிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Sunday, March 7, 2010

பெரிய நூஹ் வலியுல்லாஹ்

வேத புராணம்


தலாக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன் மாஜி மாமனாரை அணுகி தான் செய்த இமாலயத் தவறை உணர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அந்தப் பெண்ணையே மணமுடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன் உள்ளக் கிடக்கையை சொன்னான். அவருக்கோ தலைச் சுற்றல் ஏற்பட்டது.

சடுதியில் சாத்தியப்படாத விசயத்தை சாதாரணமாகச் சொல்கிறானே என்று. தம்பி, கல்யாணம் என்பது கிள்ளுக்கீரை அல்ல இஷ்டத்துக்கு முடிக்கவும் எடுக்கவும், உங்களால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோமென்று தெரியுமா உங்களுக்கு? என்றார் பெண்ணின் தந்தை சற்று ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலுடன். அவனும் விடுவதாக இல்லை, என்னால் ஏற்பட்ட துன்பம் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்,
அவற்றை நிவர்த்தி செய்கிறேன், தயவு செய்து முடியாது என்று மறுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சினான். சரி என்னை மட்டும் சாந்த விஷயமல்ல எல்லோரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்.

மார்க்கச் சட்டப்படி தலாக் கூறப்பட்ட ஒரு பெண்ணை அதே மாப்பிள்ளை கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதானால் அந்தப் பெண்ணை வேரொருவருக்குத் திருமணம் செய்துக்கொடுத்து அவர் தலாக் கொடுத்து, நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்த பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் ஹமலாகிவிட்டால் குழந்தைப் பிறந்த பிறகே கல்யாணம் செய்யமுடியும்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதே மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால் அதற்கு முன் வேரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்து உடன் தலாக் கொடுக்கப்படவேண்டுமே! இதற்கு யார் சம்மதிப்பார்கள்? வாலிபன் ஒருவன் நிச்சயமாக சம்மதிக்கமாட்டான் எனவே வயோதிகராக யாராவதும் கிடைப்பார்களா என்று தேடலானர்.

அதுகால் அங்கு பள்ளிவாசலுக்கு வந்தார் ஒரு முதியவர். பழுத்தப் பழம், வயது மதிப்பிடமுடியாது, குடும்ப வாழ்க்கையைக் கடந்தவர்; லாயக்கற்றவர். அவரை அணுகினர், பெரியவருக்கு விருந்து படைத்தனர். பின் மெதுவாக செய்தியை சொன்னார்கள்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், நானோ மவுத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன், இந்த சமயத்தில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வித்தால் ஊர் சிரிக்கும் ஆகவே வேறு யாருக்காவது செய்து வையுங்கள் என்றார்.

அவர்கள் அவரை விடுவதாக இல்லை. ஒரு இரவு மட்டும், இன்று இரவு கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள் மறு நாள் காலை தலாக் கொடுத்துவிடுங்கள். மார்க்கச் சட்டப்படி நாங்கள் முதல் கணவனுக்கே மறுகல்யாணம் செய்து வைத்துவிடுகிறோம். தாங்கள் எப்படியாவது சம்மதியுங்கள் நீங்கள் கேட்கும் வெகுமதிகள் தருகிறோம் என்றனர்.

அவர் சற்று யோசித்துவிட்டு, சரி நான் சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்று பீடிகைப் போட்டார். என்ன, என்ன சொல்லுங்கள் என்றனர்.

மறுநாள் காலையே தலாக் கொடுத்துவிடுகிறேன், ஆனால் அந்தப் பெண் அதாவது உங்கள் மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தலாக் கொடுக்கமாட்டேன் என்றார். அதை அவர்கள் ஏற்றனர்.

விரைவாகவே திருமணம் நடந்தேறியது, மணமக்கள் தனி அறைக்குத் தள்ளப்பட்டனர், பொழுது விடிந்ததும் தலாக் பெறுவதற்கு எல்லோரும் தயாராகி அம்முதியவரை அணுகி தலாக் கொடுக்க நிர்பந்தித்தனர்.

அவர் அமைதியாக நான் சொன்ன நிபந்தனைப் படி அந்தப் பெண்ணை வரவழைத்து என் முன்னால் சம்மதம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றார்.

வரவழைக்கப்பட்ட மணப்பெண் அமைதியாகச் சொன்னாள், "என் வாழ்நாள் முழுவது இம்முதியவரே என் புருஷன், இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

இது சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையையொட்டி கேரளத்திலிருக்கும் பூவாறு என்ற ஊரில் நடந்தேறியதாகவும் அந்த முதியவர் பெரிய நூஹ் வலியுல்லாஹ் என்றும் வாய்மொழி வரலாறு ஒன்று உண்டு. ஆனால் இதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இப்படியும் நடந்திருக்கலாம் என்று நம்பாதிருக்கவும் முடியாது.

நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை என்ற எமது சிற்றூரில் அடங்கியிருக்கும் செய்யது அப்துல் காதர் என்ற வலியுல்லாஹ் அவர்களின் புதல்வராக காயல்பட்டணத்தில் பிறந்த அவர்கள் சிறு வயதில் திருவடிக் கவிராயர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்றிருக்கிறார். நபிகள் நாயகத்தின் மீது 'திருப்புகழ்' பாடிய காசிம் புலவர்
அவர்களும் அதே திருவடிக்கவிராயரிடம் பாடம் கற்றிருப்பதால் இருவரும் சக மாணவர்கள், சமகாலத்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது.

இவர்கள் மஞ்சக்கொல்லையில் தம் தந்தையுடன் தங்கிருந்து அங்கு அடக்கமாயிருக்கும் செய்யது அஹமது வலியுல்லாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்றதாகவும் பின்பு பரங்கிப்பேட்டை சென்று மஹ்மூது தீபி(ரஹ்) அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றதாகவும் சொல்லப்படுகிறது. பின் அவர்கள் பொன்னானி சென்று அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், பின் தன் வாழ்நாள் முழுவதையும் ஞானப்பாட்டையில் செலவு செய்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது பூவாறு வந்தார்கள் என்ற செய்தி தெளிவாக இல்லை. அங்கேயே தம் இறுதி நாள்வரை தங்கியிருந்து வேதபுராணத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

வேதபுராணம் 27 படலமும் 910 பாடல்களும் கொண்ட பெரும் நூல். இதற்கு பாண்டி மண்டலம் செவ்வல்மா நகரம் வித்துவான் எம். ஏ. நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் முதலாவதாக கலிமாக் காரணப் படலத்தில் 22 பாடல்கள் இருக்கின்றன. இவை அகமியத்தின் அடிப்படையை விளக்குகின்றன. அடுத்து தொழுகைப் படலம், இன்னிசைப் படலம், குத்துபா படலம், மிஃராஜ் படலம், நோன்பு படலம் என்று நீண்டுக்கொண்டே போகிறது. ஒவ்வொன்றிலும் அதனதன் அகமியத் தாக்கமே உள்ளது புறச்செய்திகள் என்பது குறைவு. ஆத்மீக அறிவு சிறிதாகிலும் உள்ளவர்களே படிக்கமுடியும்
மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஆனால் எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படியாக இல்முனிசாப் படலம் என்ற பாடல் தொகுப்பை யாத்தளித்துள்ளார்கள். இதில் 15 பாடல்கள் உள்ள இத்தொகுப்பில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு இஸ்லாமிய முறைப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள். இஸ்லாத்தின் sexology பற்றிய ஒரே பாடலாகத்தானிருக்கும்.

"இருகண் முடித்தா னொருகண்னாலே
இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி
முருகு நூனிலே நுக்தாவிலே
முட்டுவ துமட்டும் சுல்புமட்டும்
பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப்
பாகமறியாத மானுடர் கேண்மோ
சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே
சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்"
- பாடல்: 1

என்று தொடங்கி மனைவி என்பவள் வெறும் போகப் பொருளல்ல; கூடல் என்பது வெறும் உணர்ச்சியின் வடிகாலல்ல; அது எத்தகைய புனிதம் வாய்ந்ததாக இறைவன் அமைத்துள்ளான் என இப்பாடல்களில் விளக்கியுள்ளார்கள் என்பது இக்கடைசி வரிகளில் தெளிவாகிறது

".....ஒளிவு லாநபி முஹம்மதைவு
முவந்து மனதிலே யுறுதியாக்கித்
தெளிவா மனதிலே திறமதாக்கிச்
சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே"
- பாடல்: 15

இதன் முழுப்பாடலும் விரைவில் ஆபிதீன் பக்கங்களில் காணலாம் காயல் மாநகரம் ஈன்றெடுத்த புலவர்கள் பலர், அவர்கள் வெறும் புலவர்களாக மட்டும் இருந்துவிடாமல் இறை நேசர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. வெறும் மார்க்கத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட இவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் மறந்துக்கொண்டிருக்கிறார்கள்.